Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Sunday, June 19, 2011

சின்ன அண்ணாமலை


Chinna Annamalai with Rajaji & MKT Bhagavathar

திருவாடனை சிறை உடைப்பு

உங்களுக்குச் சின்ன அண்ணாமலையைத் தெரியுமா? தெரியாதா? தெரிந்திருக்க வேண்டுமே. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவருக்காக இருபதாயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து அவர் அடைக்கப்பட்டிருந்த திருவாடனை சப் ஜெயிலை உடைத்து அவரை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். இப்போது அல்ல 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது. கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களின் உறவினர். தேவகோட்டை வாசி. நல்ல தமிழ் அன்பர். சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் நெருங்கிய தோழர். ராஜாஜியின் தொண்டர், 'சிறிய திருவடி' என்று அன்போடு அழைக்கப் பட்டவர். தமிழ்ப் பண்ணை எனும் புத்தக வெளியீட்டகம் நடத்தியவர். தமிழரசுக் கழகத்திற்காக "சங்கப் பலகை" எனும் பத்திரிகை நடத்தியவர். கம்பீரமான தோற்றம். சிறந்த பேச்சாளர். நகைச்சுவை உணர்வு அதிகம். அப்படிப்பட்டவரைப் பற்றி பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜ் அவர்கள் சொன்னதைப் பார்க்கலாம்.

"நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை.

இவரைக் கைது செய்ய முடியாமல் இவரது பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் சொல்லொணாக் கொடுமைகள் செய்தது ஆங்கில ஏகாதிபத்யம். போலீசாரின் துப்பாக்கி முன் அஞ்சாது மார்பைக் காட்டி நின்று 'வந்தேமாதரம்' என்று முழங்கியவர் சின்ன அண்ணாமலை.

ஆங்கில அரசாங்கம் 1942 ஆகஸ்டில் இவரைக் கைது செய்து திருவாடனை சிறையில் அடைத்தது. 24 மணி நேரத்தில் மக்கள் ஒன்று திரண்டு அச்சிறையைப் பட்டப் பகலில் உடைத்து இவரை விடுதலை செய்து விட்டார்கள்.

இப்படி மக்களே சிறையை உடைத்து விடுதலை செய்தது உலக சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய சிறந்த தியாகி சின்ன அண்ணாமலை. இன்றும் இவரது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடத்தில் தழும்பு இருப்பதைக் காணலாம்.

இவர் நான்கு முறை சிறை சென்றிருக்கிறார். பல ஆண்டுகள் சிறைவாசம் செய்திருக்கிறார். தனிப்பட்ட நபர் சத்தியாக்கிரகத்தின் போது மகாத்மா காந்தி அவர்களால் சத்தியாக்கிரகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவகோட்டையில் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்தார். இவரை அங்கு கைது செய்யாததால் அங்கிருந்து சென்னை வரை நடந்தே வந்து வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்து கொண்டு வந்தார். சென்னையில் கைது செய்யப் பட்டார். நாட்டுக்குச் சுதந்திரம் வந்த பின்னும் இவர் போராட்ட மனப்பான்மையை விடவில்லை.

தமிழ்நாடு தனி மாநிலமாக அமையவும், தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்றும், திருப்பதி, கன்னியாகுமரி பகுதிகள் தமிழ் நாட்டோடு சேரவேண்டுமென்கிற எல்லைப் போராட்டத்திலும், சென்னை தமிழ்நாட்டின் தலைநகராக இருக்க வேண்டும், ஆந்திராவுக்குக் கொடுக்கக்கூடாது என்ற போராட்டத்திலும் முக்கியப் பங்கேற்று சிறை சென்றிருக்கிறார். இப்படி வாழ்க்கையில் பெரும் பகுதி போராட்டம், சிறை என்றே கழித்து விட்டார். இவ்வளவு தியாகம் செய்தும் கட்சியிலோ, அரசாங்கத்திலோ எந்தப் பதவியையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

இவருடைய தியாகத்தையும், பட்டம் பதவியில் ஆசையில்லாத மனப் பக்குவத்தையும் ஒவ்வொரு காங்கிரஸ் ஊழியரும் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

(திரு சின்ன அண்ணாமலை எழுதிய "தியாகச்சுடர்" எனும் நூல் வெளியீட்டு விழாவில் பேசியது)

இனி திரு சின்ன அண்ணாமலை அவர்களின் வாயால் 1942இல் திருவாடனையில் என்ன நடந்தது என்பதைக் கேட்போம். நமக்காக அவர் எழுதிவைத்திருக்கிறார். நாம்தான் அதைப் படிக்கவோ, தெரிந்து கொள்ளவோ முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. இப்போதாவது தெரிந்து கொள்வோம்.

"1942 ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி அன்று இரவு 12 மணிக்கு போலீஸார் என்னைக் கைது செய்தனர். பகல் நேரத்தில் எப்போதும் பெரும் கூட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தபடியால் ஒரு வார காலமாக முயற்சி செய்தும் கைது செய்தால் பெரும் கலகம் ஏற்படும் என்று போலீஸார் கைது செய்வதைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர்.

ஆனால் அன்று 144 தடை உத்தரவை மக்கள் முன்னிலையில் நான் கிழித்தெறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டரை மக்கள் விரட்டி அடித்ததாலும் அதற்குமேல் என்னை வெளியில் வைத்திருப்பது பெருத அபாயம் என்று கருதி போலீஸார் அன்றிரவே என்னைக் கைது செய்வது என்று முடிவு செய்து விட்டனர்.

இரவில் அதிகம்பேர் என்னைச் சுற்றி இருக்க மாட்டார்கள், சில பேர்தான் இருப்பார்கள். இருப்பவர்களைச் சமாளித்துக் கொள்ளலாம் என்று போலீஸார் எண்ணி அன்றிரவு என்னைக் கைது செய்வதற்குச் சுமார் பத்து லாரி ரிசர்வ் போலீசைக் கொண்டு வந்து நான் தங்கி இருந்த ஐக்கிய சங்கம் என்ற கட்டடத்தைச் சுற்றி வளைத்து நிறுத்திக் கொண்டு உள்ளே படபடவென்று குதித்தார்கள்.

அப்பொழுது இரவு மணி 12 இருக்கலாம். சப்தம் கேட்டதும் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தபோது என்னைச் சுற்றிப் பல ரசர்வ் போலீஸ் நின்றது தெரிந்தது. "உங்களைக் கைது செய்திருக்கிறோம்" என்று போலீசார் சொன்னார்கள்.

இன்ஸ்பெக்டர் என் கையில் விலங்கை மாட்டி, பல நூற்றுக்கணக்கான ரிசர்வ் போலீஸார் சூழ "இராமவிலாஸ்" பஸ் ஒன்றில் என்னை ஏற்றிக் கொண்டு முன்னும் பின்னும் பல போலீஸ் வண்டிகள் தொடர தேவகோட்டையில் இருந்து 22 மைல் தொலைவில் உள்ள திருவாடனை என்ற ஊருக்குக் கொண்டு சென்றார்கள்.

திருவாடனையில் உள்ள சப்-ஜெயிலில் என்னைக் கொண்டுபோய் அடைத்தார்கள். மறுநாள் காலையில் என்னைக் கைது செய்த விஷயம் ஊர் முழுவதும் பரவி மக்கள் கும்பல் கும்பலாகச் சேர்ந்து ஊரே ஒன்றாகத் திரண்டு என்னை விடுதலை செய்யும்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். கடைகள் அனைத்தையும் மூடும்படியும் செய்து போலீசைத் திக்குமுக்காட வைத்து விட்டார்கள்.

என்னை ஏற்றிக் கொண்டு சென்ற இராமவிலாஸ் பஸ்ஸை சூழ்ந்து கொண்டு தீ வைத்துக் கொளுத்தி மேற்படி பஸ்ஸைச் சாம்பலாக்கி விட்டார்கள். அதன் பின்னர் தேவகோட்டையில் உள்ள சப்-கோர்ட்டை நடத்தக் கூடாது என்று மக்கள் கோஷம் போட்டிருக்கிறார்கள்.

அதையும் மீறி கோர்ட்டை நடத்தியதால் மக்கள் கோபம் கொண்டு பக்கத்திலிருந்த பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் பிடித்து கோர்ட் கட்டடத்தின் மீது ஊற்றி தீ வைத்து விட்டார்கள். போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் கூட்டம் கலையவில்லை.

பல பேர் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தார்கள். அங்கிருந்த கூட்டம் கோபங்கொண்டு புறப்பட்டு திருவாடனையை நோக்கி வந்தது. திருவாடனை வரும் வழியில் உள்ள கிராமங்களில் எல்லாம் இளைஞர்களும், பெரியோர்களும் உற்சாகமாக இக்கூட்டத்துடன் சேர்ந்து அவர்களும் திருவாடனையை நோக்கி வந்தார்கள்.

சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து திருவாடனை சப்-ஜெயிலுக்கு என்னை விடுதலை செய்ய வந்துகொண்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் சப்-ஜெயிலைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களான மாஜிஸ்திரேட் கோர்ட், தாசில்தார் காரியாலயம், கஜானா அதிகாரி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் கான்ஸ்டபிள்கள் அனைவரும் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலுக்கு முன்பு வந்தார்கள். எல்லோரும் என்னிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்கள்.

நான் சொன்னேன், 'இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஜனங்கள் வருவதால் அவர்களைத் தடுத்து நிறுத்துவதோ, வன்முறையை உபயோகிப்பதோ இப்போது உள்ள சூழ்நிலைக்குச் சரியாக இருக்காது. இது சுதந்திரப் போராட்ட வேகம். மக்களிடம் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியை மதித்து அவர்களுக்கு வழிவிட்டு நில்லுங்கள். அனைவரும் ஒதுங்கிக் கொள்வதுதான் இந்த நேரத்தில் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான காரியம்' என்று அவர்களுக்கு ஆலோசனை கூறினேன்.

அவர்கள் சொன்னார்கள், 'நாங்களும் எங்கள் குடும்பமும் குழந்தை குட்டிகள் அனைவரும் பக்கத்திலுள்ள லையனில்தான் குடியிருக்கிறோம். வருகின்ற கூட்டம் எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் கோபப்பட்டுத் தாக்கினால் என்ன செய்வது?' என்று கேட்டார்கள்.

'அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கு நான் பொறுப்பு' என்று சொன்னேன். அப்போது அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் 'சூரப்புலி' சுந்தரராஜ ஐயங்கார் என்பது ஆகும்.

என் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு நான் சொன்னபடி போலீசார் தங்கள் உடைகள் அனைத்தையும் கழற்றி நான் இருந்த சப்-ஜெயிலுக்கு முன்னால் போட்டார்கள். எல்லோரையும் அவரவர் வீட்டுக்குப் போய் நிம்மதியாக இருக்கும்படி கூறினேன். அதன்படி அவர்கள் அனைவரும் செய்தார்கள்.

இது நடந்த சிறிது நேரத்துக்கெல்லாம் பல ஆயிரக் கணக்கான மக்கள் கையில் கடப்பாரை, கோடாரி, அரிவாள், ஈட்டி முதலிய ஆயுதங்களுடன் பலத்த கோஷம் போட்டுக் கொண்டு சப்-ஜெயிலை நோக்கி வந்தார்கள். பலர் ஜெயிலை உடையென்றும், கட்டடத்திற்கு தீ வை என்றும் பலவாறாகச் சத்தம் போட்டார்கள்.

கூட்டத்திற்குத் தலைமை வகித்து வந்தவர்களில் ஒருவரான எனது நண்பர் திருவேகம்பத்தூர் பாலபாரதி செல்லத்துரை அவர்கள் எல்லோரையும் அமைதிப்படுத்தி நான் இருந்த சிறைக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். அவர் சொற்படி அனைவரும் சப்-ஜெயிலுக்கு முனால் இருந்த மைதானத்தில் உட்கார்ந்தார்கள்.

பின்னர் செல்லத்துரை அவர்கள் என்னிடம் வந்து "இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.

"நீங்கள் என்ன முடிவுடன் வந்திருக்கிறீர்கள்?" என்று நான் திருப்பிக் கேட்டேன்.

"இந்தச் சிறையை உடைத்து உங்களை விடுதலை செய்ய வந்திருக்கிறோம்" என்று பதில் சொன்னார்.

"சரி, அப்படியே செய்யுங்கள்" என்று நான் சொன்னதும், அங்கு நின்ற சிறை வார்டன் ஓடிவந்து இதோ சாவி இருக்கிறது என்று சாவியைக் கொடுத்தார். சாவி வேண்டியதில்லை, உடைத்துதான் திறப்போம் என்று மக்கள் பெரும் முழக்கம் போட்டார்கள்.

அதன்படியே அவர்கள் கொண்டு வந்திருந்த கடப்பரை முதலிய ஆயுதங்களால் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயில் பூட்டை உடைத்துத் தகர்த்து கதவைத் திறந்தார்கள்.

பட்டப்பகல் 12 மணிக்குப் பல ஆயிரக் கணக்கான மக்கள் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இம்மாதிரி சிறைக் கதவை உடைத்து ஒரு அரசியல் கைதியை விடுதலை செய்தது சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை.

அந்தச் சரித்திரச் சம்பவத்துக்கு நான் காரணமாக இருந்தேன் என்று நினைக்கும்போது இன்றும் நான் பெருமைப் படுகிறேன். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை எளியேனுக்குக் கிடைத்தது.

மக்களுடைய மாபெரும் சுதந்திர எழுச்சியின் வேகத்தில் நடைபெற்ற சக்தி மிகுந்த இந்தத் திருவாடனை ஜெயில் உடைப்புச் சம்பவம், தமிழகத்தின் ஒரு கோடியில் ராமேஸ்வரம் அருகில் நடைபெற்றதால் இந்தியா முழுவதும் விளம்பரம் இல்லாமல் அமுங்கி விட்டது.

தமிழ்நாட்டுத் தலைவர்களும், இச்சம்பவத்தின் பெருமையை உணரவில்லை.மதிப்பிற்குரிய ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் 1942இல் சிறையிலிருந்து தப்பியதே பெரிய வீரச்செயல் என்று நாடு போற்றிக் கொண்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் திருவாடனையில் மக்கள் திரண்டு வந்து சிறைச்சாலையை உடைத்து ஆங்கில ஏகாதிபத்தியம் கைது செய்து வைத்திருந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை விடுதலை செய்ததை நாடு முழுமையாக அறிந்து கொள்ளவுமில்லை, பாராட்டவும் இல்லை.

விடுதலை செய்யப்பட்ட என்னைச் சுற்றி இருந்த மக்கள் என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள். சிலபேர் நான் இருந்த சப்-ஜெயிலுக்குத் தீ வைத்தார்கள். வேறு சிலர் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும் தீ வைத்தார்கள்.

அதன் பின்னர் போலீஸ் லைனை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். அப்போது நான் குறுக்கிட்டு, "அங்கு ஓடாதீர்கள். அவர்கள் அனைவரும் நமக்காக வேண்டிய ஒத்தாசை செய்திருக்கிறார்கள்" என்று அவர்களிடம் சொன்னேன். சில பேர் போலீஸ்காரர்களை சும்மாவிடக் கூடாது என்றும் அவர்கள் வீடுகளுக்குத் தீ வைக்க வேண்டும் என்றும் சத்தம் போட்டார்கள்.

நான் அவர்களைத் தடுத்து அவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள், நமது சுதந்திரப் போராட்டத்திற்கு உறுதுணையாக உள்ளவர்கள், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம். இதோ அவர்களது உடைகள் என்று கூறி, போலீஸ்காரர்களுடைய உடைகள் அனைத்தையும் மக்களுக்குக் காண்பித்தேன். அவர்கள் அந்த உடைகளை வாங்கித் தீயில் போட்டுப் பொசுக்கித் தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

பின்னர் கூட்டத்தினர் அனைவரும் என்னைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றார்கள். அப்பொழுது என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலும், அதைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களும் கொழுந்து விட்டு எரிந்தன. அச்சமயம் சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே புகுந்து அங்கிருந்த துப்பாக்கிகளை ஒருவரும், துப்பாக்கிக் குண்டுகளை இன்னொருவரும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். சிலர் துப்பாக்கிகளை கையில் ஏந்திக் கொண்டு சிப்பாய்களைப் போல நடந்தனர்.

மக்கள் என்னை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே செல்லும்போது தூரத்தில் போலீஸ் லாரிகள் வருவது தெரிந்தது. போலீஸ் லாரியைப் பார்த்து மக்கள் கோபாவேசப் பட்டார்கள். பலர் போலீஸ் லாரியை அடித்து நொறுக்க வேண்டும் என்று கூச்சல் போட்டார்கள். சிலர் போலீஸ் லாரியை நோக்கி அரிவாளை வீசிக்கொண்டு ஓடினார்கள்.

எல்லோரையும் சமாதானப் படுத்தி ரோட்டுக்கு பக்கமாக இருந்த பனங்காட்டுக்குள் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி மக்கள் இரு கூறாகப் பிரிந்து ரோடின் இரு மருங்கிலும் உள்ள பனங்காட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.

போலீஸ் லாரிகள் மெதுவாக ஊர்ந்து கொண்டு வந்தன. மக்கள் மறைந்திருப்பதை யூகித்தவர்கள் போல் போலீசார் சுடுவதற்குத் தயார் நிலையில் லாரியில் நின்று கொண்டு இருந்தார்கள். ரோடு ஓரமாக மறைந்திருந்த ஒருவரை போலீசார் பார்த்து விட்டனர். உடனே அவரை நோக்கிச் சுட்டனர். அவர்கள் சுட்ட குண்டு மேற்படி நண்பரின் தொடையை தொட்டுக் கொண்டு சென்றுவிட்டது.

உடனே மேற்படி நண்பர் பெரும் கூச்சல் போட்டு "எல்லாம் வெத்து வேட்டு, வெளியே வாங்கடா" என்று கலவரப்படுத்தி விட்டார். மறைந்திருந்த மக்கள் அனைவரும் பெருங்கூச்சல் போட்டுக் கொண்டு வெளியே வந்து போலீசாரைத் தாக்க ஓடினார்கள்.

இச்சமயம் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் ஒரு பக்கமும் குண்டு வைத்திருந்தவர்கள் மறு பக்கமும் பிரிந்து இருந்தார்கள். அதனால் மக்களிடம் இருந்த துப்பாக்கியினால் போலீசாரைச் சுட இயலாமல் போய்விட்டது. குண்டுகளைக் கையில் வைத்திருந்த கிராமவாசிகள் மட்டும், மேற்படி குண்டுகளை எறிந்தால் வெடிக்குமா, வெடிக்காதா என்று தெரியாததால் அவைகளைச் சரமாரியாக வீசிக் கொண்டு இருந்தார்கள்.

இந்நிலையில் போலீசார் தங்களைக் காத்துக் கொள்ளச் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். குண்டுகளைப் பொழிந்து தள்ளினர். என் இடது கையில் ஒரு குண்டு பாய்ந்தது. மக்களின் முன்னால் நின்ற என் மீது மேலும் குண்டு படக்கூடாது என்று பலபேர் மாறி மாறி என் முன்னால் நின்று தங்கள் மார்பில் போலீசாரின் குண்டுகளை ஏற்று வீரமரணம் எய்தினார்கள். இம்மாதிரி தியாகம் செய்த பெரு வரலாற்றை நான் படித்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இந்த மாபெரும் தியாகத்தை இன்று நினைத்தாலும் எனது மெய் சிலிர்த்து விடுகிறது.

ஒரு தேசபக்தனைக் காப்பதற்காகப் பல பேர் உயிரைக் கொடுப்பது என்பது வீரகாவியமாகப் பாட வேண்டிய அத்தியாயமாகும். எவ்வித பிரதி பிரயோசனமும் கருதாமல் தங்கள் இன்னுயிரை ஈந்த அந்த மாபெரும் தியாகிகளுக்கு இந்த நாடு என்றும் தலை தாழ்த்தி வணங்கக் கடமைப் பட்டுள்ளது.

இப்படிப் பல பேரைச் சுட்டு வீழ்த்திவிட்டு போலீசார் தப்பி ஓடிவிட்டார்கள். சிலர் இறந்து வீழ்ந்ததும் பலர் உடம்பிலிருந்து ரத்தம் தெறித்தும், அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு நிமிடத்தில் எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் ஓடிவிட்டனர்.

நானும் எனது நண்பர் ராமநாதனும் பிணக்குவியலின் மத்தியில் நின்று கொண்டிருந்தோம். உயிர் போன பலரும், உயிர் போகும் தருவாயில் சிலரும், கை, கால், கண் போன சிலரும் ஒரே இரத்தக்காடாக முனகலும், மரணக்கூச்சலும் நிறைந்திருந்த அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்து பத்து நிமிடத்துக்கும் மேல் நின்று கொண்டிருந்தேன். இரவு மணி 7 ஆயிற்று. வெளிச்சம் மங்கி இருள் பரவிற்று. பனங்காடு, சலசலவெற சத்தம். மரத்தினுடன் மரங்கள் உராயும் போது எற்படும் பயங்கரமான கிரீச் எனும் அச்சமூட்டும் சத்தம். இந்நிலையில் நரிகளின் ஊளை வேறு. சுற்றிலும் இறந்து கிடந்த தேசபக்த தியாகிகளைப் பார்த்து ஒரு முறை அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு நகர்ந்தேன்.

இருட்டில் மேடு பள்ளம் முள் கல் இவைகளில் தட்டுத் தடுமாறி நடந்தோம். காலெல்லாம் கிழிசல் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது. கையில் குண்டு பாய்ந்த இடத்தில் ரத்தம் வழிந்தது. சுமார் நான்கு மைல் வந்ததும் தலை சுற்றியது. மயக்கமாக இருந்தது. அதே இடத்தில் கீழே தடால் என்று விழுந்து விட்டேன். என் நண்பரும் மயங்கிப் படுத்து விட்டார். மயங்கிய நிலையில் நன்றாகத் தூங்கி விட்டோம்.

தூங்கிக் கொண்டிருந்த எங்களைச் சிலர் தட்டி எழுப்பினார்கள். சுமார் பத்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். போலீசார் என்று நினைத்து விட்டோம். ஆனால் அவர்கள் போலீசார் அல்ல. அதற்கு முன் தினம் இறந்து போன உறவினர் ஒருவருக்குப் பால் ஊற்றி அஸ்தி எடுத்துப் போக வந்தவர்கள். அது சரி! அவர்கள் ஏன் நாங்கள் படுத்திருந்த இடத்திற்கு வந்தார்கள்? எதற்காக எங்களை எழுப்பினார்கள்?

சொன்னால் நம்ப மாட்டீர்கள்! நாங்கள் அவர்கள் உறவினரைப் புதைத்திருந்த இடத்திற்கு மேல்தான் அவ்வளவு நேரம் அந்த இரவு முழுவதும் படுத்திருந்தோம். இதை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படி இருந்திருக்கும்?
                                                              Devakottai Sivan Koil

(பிறகு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படித் தெரிந்து கொள்ள விரும்பினால் உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள். மேற்கொண்டு நடந்தவற்றையும் எழுதுகிறோம்.)

நன்றி: குமரன் பதிப்பகம், சென்னை வெளியிட்ட சின்ன அண்ணாமலை எழுதிய "சொன்னால் நம்பமாட்டீர்கள்" நூல்.

Saturday, June 18, 2011

பாரதியும் யுகப் புரட்சியும் எழுதியவர் தோழர் தா.பாண்டியன்

பாரதியும் யுகப் புரட்சியும்

எழுதியவர் தோழர் தா.பாண்டியன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு.
நன்றி: "பாரதியும் யுகப் புரட்சியும்" நிவேதிதா பதிப்பகம், அசோக்நகர், சென்னை 83.

பாரதி 1882 டிசம்பர் 11ஆம் நாளன்று தமிழ் நாட்டிலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.

அவர் பிறப்பதற்குப் பல்லாண்டுகட்கு முன்னரே, புலித்தேவன், முத்துவடுகநாதர், கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோர் அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போராடி வெற்றி வெற முடியாமல் வீர மரணம் எய்தி விட்டனர்.

இவ்வீரர்கள் நெல்லை மாவட்டத்திலும், சிவகங்கைச் சீமையிலும், புலித்தேவன் மறைவுக்குப் பின்பும்தான் தங்களது போரை நடத்தினார்கள். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்பும் இவர்கள் கதை கிராமங்களில் பாடப்பட்டு வந்தன.

இது 1857க்கு முன்னரே நடந்து விட்டது.

கேரள மாநிலத்தில் வேலுத்தம்பி என்ற வீரன் வெள்ளையரை எதிர்த்துப் போராடி மாண்டான்.

இவர்களது போர்களுக்குப் பின்னர் 1857இல் இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கிய முதல் சுதந்திரப் போராட்டம் எழுந்தது. ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் பெயர், பெண் தெய்வமான லக்ஷ்மியின் பெயரைக் காட்டிலும் உணர்வூட்டுகிற பெயராக நாட்டில் பரவியிருந்தது. பிறந்த பெண் குழந்தைகளுக்கு ஜான்சிராணி லக்ஷ்மி என்றே பெயர் சூட்டியும் வந்தனர்.

இதற்குப் பின்னர் விக்டோரியா மகாராணியின் பிரகடனம் வந்தது. வெள்ளையர்கள் ஆட்சியை விரிவுபடுத்தியும் உறுதிப்படுத்தியும் வந்தனர். வெள்ளையர்களை எதிர்த்துக் கிளம்பிய போராட்டங்கள் இரக்கமின்றி மிருகத்தனமாக நசுக்கப்பட்டன.

வெள்ளையர்கள் அடக்குமுறையை மட்டும் நம்பியிராமல் இந்நாட்டில் காணப்பட்ட பலவீனங்களைப் பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியையும் கடைப்பிடித்தனர்.

பாரதி பிறந்த 1882க்குள் வெள்ளையர் ஆட்சி இந்தியாவில் நன்றாக வேரூன்றி கோட்டையில் கொடிகட்டி உட்கார்ந்து விட்டது. ரயில் பாதை, சில புதிய தொழிற்சாலைகள், ஆங்கிலக் கல்வி, மேல் நாட்டுத் தொடர்பு, நடை உடை நாகரிகம், கிறிஸ்தவ மதம், கப்ப, ஆகியன இந்தியாவுக்கு வந்துவிட்டன.

இந்திய வெள்ளையர்கட்கு மூலப் பொருட்களை விளைவிக்கும் காடாகவும், உற்பத்தியான பொருள்களை விற்பதற்கான பெரும் சந்தையாகவும் மாறிவிட்டது. பொழுதெல்லாம் இந்தியாவின் செல்வம் கொள்ளை போய்க்கொண்டிருந்தது.

பிரான்ஸ் நாட்டில் 1789இல் புரட்சி நடந்தது. அது உறுதிப்படுத்திக் கொள்ள இயலாமல் சிதறிப் போய்விட்டது. இரண்டாம் முறையாக 1871இல் வெடித்த பாரிஸ் கம்யூன் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு விட்டது.

ஆனால், பிரெஞ்சுப் புரட்சி பற்றிய செய்தியின் வீச்சு உலகம் முழுமையிலும் பரவி இருந்தது. வால்டேர், லாக், ரூசோ ஆகியோர் எழுதிய நூல்கள் மேற்கத்திய நாடுகளில் புதிய எழுச்சிகளை ஏற்பட்த்தின. அந்நூல்கள் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் பிரெஞ்சு புரட்சி என்ற நிகழ்ச்சியும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கங்களும் மின் ஒளி போல உலகம் முழுவதிலும் பளிச்சிட்டுத் தெறித்தன.

இந்தியாவைப் பொறுத்த மட்டில் அது தேக்கம் நிறைந்த சமூக அமைப்புடன் மெல்ல உடலை வளத்து, முறுக்கிக் கொண்டு எழ முயன்று கொண்டிருந்தது. காங்கிரஸ் தோன்றிவிட்டாலும், அது படித்தோர் நடத்தும் மாநாடாக மட்டுமே இருந்து வந்தது. மக்கள் இயக்கமாக மாறப் போராடிக் கொண்டிருந்தது.

பாரதி பிறந்த எட்டயபுரமோ ஜமீந்தாரின் ஆட்சியில் இருந்தது. எட்டயபுரம் இன்றைக்கும்கூட வளமான செல்வம் கொழிக்கும் பூமி என்று கூறிவிடமுடியாது. எப்பக்கம் நோக்கினாலும் ஒரே கரிசல்மண். சூரிய வெப்பத்தால் வெந்தே கருகிப் போனது மாதிரி கிடக்கிறது. மழைக் காலத்தில் நடக்கவிடாமல் கரிசல் மண் களி மண்ணாக கால்களில் ஒட்டிக் கொள்கிறது. இதற்குச் சவால் விட்டு முளைக்கும் (உகண்டான்) பருத்தி ஒன்றரை அடி உயரத்தில் தன் ஆயுள் வளர்ச்சியை முடித்துக் கொள்கிறது.சுண்டைக்காயளவில் பருத்தி வெடிக்கிறது. பாக்கைத் தேடுவது மாதிரி அதனைப் பெண்கள் தேடிச் சேகரிக்கின்றனர்.

"கட்டுக் களங் காணும்,
கதிர் உழக்குக் காணும்,
மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
ஆனைகட்டிப் போரடிக்கும்
அழகான தென் மதுரை"

என்ற பாடலுக்கும் எட்டயபுரம் பகுதிக்கும் சம்பந்தமே இல்லை.

இந்தப் புண்ணிய பூமியில் அவதரித்தவர்தான் பாரதி. கடுமையாக உழைத்து வாழும் மக்கள் மத்தியில் பிறந்து வளர்ந்த காரணத்தால், அவர்களை அவர் நன்கறிந்திருந்தார். அப்பகுதியில் மறவர்களும், நாயக்கர்களும் தாழ்த்தப் பட்டோரும் அதிகம். சமஸ்தானத்து வேலையில் மட்டும் சில பிராமணர்கள் இருந்தனர். சமஸ்தானத்தில் தமிழறிந்த புலவர்கள் பலர் இருந்தனர். அவர்கள் மன்னனை அறிந்திருந்த அளவிற்கு மக்களைத் தெரிந்திருக்கவில்லை. பாரதிக்கு அவர்களுடைய பழக்கத்தால் தமிழ்ப் புலமையும், மக்களோடு பழகியதால் விசாலப் பார்வையும் துணிச்சலும், முயற்சியும், சமூக நீதிகளும் நன்கு புலப்பட்டன. பாரதியாரின் குடும்பம் அனுபவித்த பொருளாதாரச் சீரழிவும், துன்பங்களும் அவருக்கு, சமூகப் பொருளாதாரக் கேடுகளைப் பற்றிச் சிந்தித்து உண்மைகளைக் காணத் தூண்டுதலாக அமைந்திருக்கக்கூடும்.

பாரதி பிறந்து வளர்ந்து வந்த காலத்தில் தேசிய இயக்கமும் பரவி, வளர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்த இயக்கமாக வளர்ந்து வந்தது. இயற்கையாக, துடிப்புள்ள பாரதிக்கு தேசிய இயக்கத்தில் நாட்டம் பிறந்தது.

போராடும் தேசிய இயக்கத்தில் ஈடுபடுகிறவர்கட்கு வருகிற தொல்லைகள் பாரதிக்கும் வந்தன. அவை பாரதியை மேலும் புரட்சிகரச் சிந்தனைக்கே இட்டுச் சென்றன.

பாரதி பிறந்த வட்டாரச் சோழ்நிலை, பழகிய மக்களின் தன்மை, சார்ந்த இயக்கத்தின் போக்கு, சேர்ந்த பத்திரிகைத் தொழில் மூலம் கிடைத்த உலகச் செய்திகள் ஆகியன அனைத்தும் அவரை புரட்சிகரச் சிந்தனையை நாடுகிற மனிதனாக ஆக்கியிருக்கின்றன என்று கொள்ளலாம்.

பாரதிக்கு இருபத்திமூன்று வயதாகும்போது இந்தியா பத்திரிகையில் ஆசிரியராகப் பொறுப்பேறார். இருபத்தியிரந்தாம் வயதிலேயே அதாவது 1904இல் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார்.

1905இல்தான் ரஷ்யாவில் ஜார் மன்னனை எதிர்த்த முதல் புரட்சி எழுந்தது. அது வெற்றி பெறவில்லை என்பது உண்மை. ஆனால், இது குறித்து 1906இல் பாரதியார் உற்சாகமாக 'இந்தியா' பத்திரிகையில் எழுதியிருப்பது வியப்புக்குரியது.

ரஷ்யாவில் இப்புரட்சிக்குப் பின்புதான் கறுப்பு நூற்றுவரின் கொடுங்கோன்மை அடக்குமுறை தாண்டவமாடியது. அதற்குத் தலைமை தாங்கிய காவலதிகாரி ஸ்டோலிபின் இறந்து போன செய்தியை பாரதி மகிழ்ச்சியுடன் வெளியிடுவது, அவர் ரஷ்யப் புரட்சிகர இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்து வந்துள்ளதைக் காட்டுகிறது.

அதன் பிறகு 1914இல் முதல் உலகப் போர் தொடங்கி விடுகிறது.

1917இல் ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்று விடுகிறது. லெனின் தலைமையில் முற்றிலும் புதிஅ அரசு ஒன்று தோன்றுகிறது. ஆனால் அப்புரட்சி பற்றிய முழுச் செய்தி இந்திய மக்களுக்கு எட்ட விடாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

அப்புரட்சியை இழிவுபடுத்தவும் அதைப் பயங்கரமாகப் படம் பிடித்துக் காட்டவும் அன்றைய ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் பிரச்சாரத்திலிருந்து எதிர் மறையாகப் பொருள் கொண்டு சிலர் சில விஷயங்களைக் கிரகித்துக் கொண்டனர்.

ரஷ்யப் புரட்சி பற்றி பாரதி பாடியுள்ள பாடல் ரஷ்யப் புரட்சியின் மையமான போக்கைப் பாரதியார் புரிந்திருப்பதைக் காட்டுகிறது. அது நமக்கு இன்றைக்கும் வியப்பூட்டுவதாக இருக்கிறது.

புதுச்சேரியில் பல தீவிரவாதிகள் தஞ்சம் புகுந்திருந்த காரணத்தால், அவர்களுடன் பல புரட்சிகர இயக்கங்கள் சம்பவங்களைப் பற்றிப் பாரதியார் விவாதித்திருக்கக் கூடும்.

பாரதியார் புதுச்சேரியில் அரசியல் அடைக்கலம் புகுந்திருந்த காலத்தில் அரவிந்தரோடு நெருங்கிப் பழக்கமிருந்தது. பிரெஞ்சு நாட்டுப் பத்திரிகைகளும், புத்தகங்களும் இந்தியாவில் கிடைக்காது தடுக்கப்பட்ட செய்திகளையும் சேர்த்துத் தருவதாக இருந்தன. எனவே பிரெஞ்சுப் பத்திரிகைகள் வாயிலாக பல புரட்சிகர செய்திகளை பாரதி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் நாட்டிலிருந்து முதன் முதலாக ரஷ்யாவிற்குப் போனவர் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அகப்படமால், அனுமதி பெறாமல், ரஷ்யாவுக்குள் நுழைந்து லெனினைச் சந்தித்தவர். அப்போது ரஷ்யாவிலிருந்த எம்.என்.ராயுடன் சேர்ந்து தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவ முயன்றவர்.

ஆனால் எம்.என்.ராயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரதிவாதி பயங்கரம் எம்.பி.திருமலாச்சாரி இந்தியா திரும்பி விட்டார். இவர் வெள்ளைக்காரப் பெண்ணை மணந்து கொண்டு, பலாத்காரப் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டதால் இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலையில் இருந்ததாக வ.ரா. எழுதியுள்ளார். ஆனால் அவர் இந்தியாவுக்குத் திரும்ப வந்தார். அரசியலைத் துறந்தார். இவர் புதுச்சேரியிலிருந்துதான் ரஷ்யாவுக்குச் சென்றார் என்று கூறப்படுகிறது.

திருவல்லிக்கேணியிலிருந்த இன்னுமொரு எஸ்.எண்.திருமலாச்சாரியும், சுரேந்திரநாத் ஆர்யா எனும் தெலுங்கரும், வி.சக்கரைச் செட்டியாரும், கோபால ஐயங்காரும், ஸ்ரீநிவாச அய்யங்காரும் துரைசாமி அய்யரும் பாரதியாரின் நண்பர்களாய் இருந்துள்ளனர். விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா தேவியாருடன் பாரதி பேசியதிலிருந்தும் பல விவரங்களைத் தெரிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான ம.சிங்காரவேலருடன் பாரதியாருக்கு 1914 முதல் 1921 வரை நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது.

இத்தகைய நண்பர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தாலும் நடத்திய விவாதங்களினாலும் புரட்சி, ரஷ்யா, பொது உடைமை ஆகியன பற்றிப் பல புதிய விவரங்களைப் பெற்றிருக்கக்கூடும்.

உலகில் எங்கு புரட்சி நடந்தாலும், எங்கு விடுதலை முழக்கம் எழுந்தாலும் அவற்றை ஆவலோடு வரவேற்கிற துடிப்பு, தேசிய இயக்கத்தில் இருந்த ஒரு பிரிவினர்க்கு இருந்தது. அதற்குக் குரல் கொடுக்கும் மகா கவினனாக பாரதி இருந்திருக்கிறார்.

அயர்லாந்தின் விடுதலைப் போராட்டம், துருக்கியில் கமால் பாட்சா தலைமையில் நடந்த புரட்சி போன்றவை சுதந்திரப் போராட்ட வீரர்களை வெகுவாகக் கவர்ந்தன.

ஆனால், பாரதி மட்டுமா எட்டயபுரத்தில் அல்லது அது போன்ற சூழ்நிலையில் பிறந்தார்?

பாரதி மட்டும்தான் பத்திரிகை உலகில் ஈடுபட்டதால் உலகச் செய்திகளைத் தெரிந்து கொண்டார்.

பாரதி மட்டும்தானா பல நண்பர்களுடன் பழகினார்?

இக் கேள்விகலுக்கு விடை கூற முயன்றால் பாரதிக்கென்று ஒரு தனித்துவம் இருந்தது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

பாரதி ரஷ்யாவைப் பற்றியும் கம்யூனிஸ்ட் கட்சி பற்றியும் கூறியிருப்பதைத் தொகுத்துக் கொடுத்துவிட்டு அதன் மீது நமது ஆய்வை வெளியிடுவதே நோக்கமாகும்.

"புரட்சி என்ற சொல்லையும், புதுவுடைமை என்ற சொல்லையும் தமிழுக்குத் தந்தவர் பாரதியார்" என்று ஜீவா பலமுறை கூறியிருக்கிறார். வேறு புலவர்கள் இதுகாறும் இதனை மறுக்காததால் இது சரி என்றே தோன்றுகிறது.

நான் கற்றவரையில் இவ்விரு சொற்களையும் பாரதிக்கு முன்னர் எந்தக் கவிஞனும் பயன்படுத்தி இருப்பதாகத் தெரியவில்லை. இவை இரண்டும் வெறும் சொற்கள் மட்டுமா? ஒரு மாபெரும் தத்துவத்தின் பெயருக்குத் தக்கதொரு தமிழ்ச் சொல்லை "பொதுவுடைமை" என உருவாக்கித் தந்த பெருமையை பாரதியார் பெற்றுவிட்டார்.

அது போன்றே "புரட்சி" என்ற சொல்லையும் தமிழுக்கு வழங்கி விட்டார். பாரதியார் இச்சொற்களை உருவாக்கியதுடன் சரியா? அல்லது இவற்றின் சாரத்தைப் புரிந்திருந்தாரா?

ரஷ்யாவைப் பற்றி புரட்சி பற்றி, பொதுவுடைமை பற்றி அவர் கொண்டிருந்த முழுமையான கருத்துதான் என்ன? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும்.

(இதன் தொடர்ச்சி அடுத்தடுத்த கட்டுரைகளில் வெளியிடப்படும்)