Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Wednesday, April 21, 2010

பத்திரிகையாளர் பாரதி


திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
வழங்கும் மகாகவி பாரதி பற்றிய இலவச அஞ்சல் வழிப்பயிற்சி - பாடம்
பத்திரிகையாளர் பாரதி

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக நான்கு மாதகாலம் பணியாற்றிய பாரதியாரை ஜி.சுப்பிரமணிய ஐயர், அவருடைய திறமைகளைக் கண்டு சென்னைக்கு அழைத்து வந்து தனது 'சுதேசமித்திர'னில் பணிக்கு அமர்த்தினார். அது முதல் மகாகவி பாரதியார் ஓர் தலைசிறந்த பத்திரிகையாளராகத் திகழ்ந்த வரலாறு அனைவரும் அறிந்த வொன்று. பாரதியார் எட்டையபுரம் ஜமீனைவிட்டு விலகிய பிறகு வேறு பணிக்குச் செல்ல முயன்ற சமயத்தில் மதுரை நேடிவ் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த கோபாலகிருஷ்ணய்யர் என்பவரின் உதவியால் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தார். 1-8-1904-ல் பணியில் சேர்ந்த அவர் 10-11-1904 வரையில் அங்கு பணிபுரிந்தார். மதுரையிலிருந்து பாரதி சென்னை சென்றதற்கு மூன்று காரணங்களை முனைவர் பா.இறையரசன் தனது "இதழாளர் பாரதி" எனும் நூலில் குறிப்பிடுகிறார். இந்த நூல் நியு செஞ்சுரி புத்தக நிறுவனத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அவர் கூறும் காரணங்களாவன:-

1) 'சுதேசமித்திரன்' பத்திரிகை நிறுவனர் ஜி.சுப்பிரமணிய அய்யர் மதுரை வந்தபோது மதுரை நேடிவ் கல்லூரி தமிழாசிரியர் கோபாலகிருஷ்ண அய்யரின் அறிமுகத்தால் பாரதியைச் சந்தித்து அவரது திறமையையும் அறிவாற்றலையும் உணர்ந்து தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் சென்று அங்கு தன் பத்திரிகையில் பணிக்கு அமர்த்தினார்.

2) பாரதி தனது உறவினர் லட்சுமண அய்யர் என்பவர் சென்னை சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி யொன்றில் முதல்வராக இருந்ததால் அவருக்கு ஒரு கடிதம் எழுதி தனக்குச் சென்னையில் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து தருமாறு வேண்ட, அவருடைய முயற்சியால் 'சுதேசமித்திர'னில் சேர்ந்தார்.

3) மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பாரதியாருடன் பணியாற்றிய அய்யாசாமி அய்யர் என்பவர், 'இந்து' பத்திரிகை செய்தியாளராக இருந்த தனது மாமா மூலம் 'சுதேசமித்திர'னில் வேலை வாங்குவதற்கு உதவினார்.

இப்படிப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், பாரதியை சென்னைக்கு ஜி.சுப்பிரமணிய ஐயர் அழைத்துச் சென்றார் என்பதுதான் பரவலாக அனைவராலும் பேசப்படும் செய்தியாகும்.

"சுதேசமித்திரன்"
எது அப்படியோ, இவற்றில் ஏதோ ஒரு வழியில் பாரதி சென்னைக்குச் சென்று 'சுதேசமித்திர'னில் பணிக்குச் சேர்ந்தார். *சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பதினேழரை ரூபாய் சம்பளத்துக்குப் பணியாற்றிய பாரதி 'சுதேசமித்திர'னில் மாதம் நாற்பது ரூபாய் ஊதியமாகப் பெற்றார் என்று முனைவர் இறையரசன் தன் நூலில் குறிப்பிடுகிறார். 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் பாரதியின் வேலை தந்தி மூலம் வரும் செய்திகளையும், ஆங்கில இதழ்களில் வரும் செய்திகளையும், ஆங்கில சொற்பொழிவுகளையும் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்வது; அச்சுப்பிழை திருத்துவது முதலியன. சுதேசமித்திரனில் கதை, கவிதை, கட்டுரை, தலையங்கம் இவை எழுதும் வாய்ப்பு அவருக்கு அப்போது கொடுக்கப்படவில்லை. (*சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் பாரதி பணியாற்றிய காலத்தில் அவர்களுடைய சம்பளப்பட்டியலின் பிரதியொன்று இளசை மணியன் அவர்களிடம் இருக்கிறது. அதில் சி.சுப்பிரமணிய பாரதி, தமிழ் பண்டிட் என்று எழுதப்பட்டு அதில் பாரதியார் தன் மணியான எழுத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்)

'சுதேசமித்திர'னில் அவர் சுமார் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்தபின், அதிலிருந்து ஜி.சுப்பிரமணிய அய்யரின் அனுமதியோடு விலகிக்கொண்டு 'இந்தியா' பத்திரிகையை வேறு சிலரின் உதவியோடு தொடங்கி அதில் ஆசிரியராகப் பணியாற்றினார். இதற்கிடையே இவர் 'சக்கரவர்த்தினி' இதழின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்று சிலகாலம் அதன் ஆசிரியராக இருந்திருக்கிறார். இந்த 'சக்கரவர்த்தினி' எனும் பத்திரிகை பெண்கள் முன்னேற்றத்திற்காக நடத்தப்பட்ட பத்திரிகை, அதிலிருந்து இவர் நீங்கியபின் வேறொருவர் அதன் ஆசிரியராக இருந்தார் என்பதும் தெரிய வருகிறது.

அறிஞர் வ.ரா. என அழைக்கப்பட்ட திருப்பழனம் வ.ராமசாமி ஐயங்கார் பாரதியாரின் அன்பிற்குப் பாத்திரமானவர். பாரதியார் 'சுதேசமித்திரனை' விட்டு நீங்கியதற்கு இவர் கூறும் காரணம் கவனிக்கத்தக்கது. "பாரதியார் ஜி.சுப்பிரமணிய ஐயரோடு ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 'சுதேசமித்திர'னை விட்டு நீங்கவில்லை. மாறாக ஜி.சுப்பிரமணிய அய்யர் கோபாலகிருஷ்ண கோகலேயைப் போல மிதவாதி அல்ல என்றாலும், காந்தியைப் போல புரட்சிக்காரரும் இல்லை. எனவே அரசியலில் அதிதீவிரரான பால கங்காதர திலகரின் சீடரான பாரதியார் 'சுதேசமித்திர'னை விட்டு நீங்கியதில் வியப்பொன்று மில்லை" எனும் கருத்தினை வெளிப்படுத்துகிறார். ஆரம்ப காலத்தில் 'சுதேசமித்திர'னில் பாரதி பணியாற்றிய போது அதன் அலுவலகம் அரண்மனைக்காரன் தெரு (அர்மேனியன் தெரு) வில் இருந்தது. இவர் அருகிலுள்ள தம்புச் செட்டித் தெருவில் ஒரு வீட்டில் குடியிருந்தார்.

"சக்கரவர்த்தினி"
பாரதியார் 'சுதேசமித்திர'னில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே 1905-ல் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட "சக்கரவர்த்தினி" எனும் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்தப் பத்திரிகையை பி.வைத்தியநாதய்யர் என்பவர் நடத்தி வந்தார். "சக்கரவர்த்தினி" எனும் பெயரே இங்கிலாந்தின் மாட்சிமை பொருந்திய மகாராணியார் விக்டோரியாவின் பெயரால் அவருடைய ஆட்சியின் பொன்விழாவை முன்னிட்டுத் துவக்கப்பட்டது என்பது தெரிகிறது. இந்த இதழ் 32 பக்கங்களில் ஆண்டுச் சந்தா ரூ.2 என்றும் தனியிதழ் 3 அணா என்றும், நோக்கம் 'பெண்கள் முன்னேற்றம்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்த பத்திரிகையில் பாரதியார் குழந்தைத் திருமணம், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம், வரதட்சணை, கைம்பெண் கொடுமை ஆகிய நடைமுறைகளை கடுமையாக எதிர்த்துக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பெண் கல்வி பற்றி இவர் வலியுறுத்தி எழுதியதாகவும் தெரிய வருகிறது. 'சுதேசமித்திர'னில் பணியாற்றியபோது அடக்கி வைக்கப்பட்டிருந்த இவரது எண்ணங்கள் அனைத்தும் 'சக்கரவர்த்தினி'யில் வெளிப்படலாயிற்று. 1906-ல் ஓராண்டு பணிக்குப் பிறகு பாரதியார் இந்தப் பத்திரிகையிலிருந்தும் வெளியேறினார். 'சக்கரவர்த்தினி' பத்திரிகையில் பத்திரிகையின் நோக்கமாக ஒரு குறள் வெளியாகியது, அது:

"பெண்மை யறிவோங்கப் பீடுயரும் பெண்மைதான்
ஒண்மையுற வோங்கும் உலகு"

இது பாரதியார் எழுதியதாக இருக்க வேண்டுமென்று பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். முன்பே குறிப்பிட்டபடி இது பெண்களுக்காக நடத்தப்பட்ட பத்திரிகையாதலால் இந்த இதழ்களில் இப்போதைய பெண்கள் பத்திரிகை போல கதைகள், தொடர்கதை, சமையல் குறிப்பு, அழகுக் குறிப்புகள் இவைகள் இல்லாமல் தனது கட்டுரைகள், கவிதைகள் இவற்றோடு பெண்கள் முன்னேற்றத்திற்காக பலருடைய கருத்துக்களையும் இடம்பெறச் செய்தார். இந்த இதழில் ஆங்கில ஆண்டு, மாதங்கள்தான் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டது. இதற்குப் பிறகு இந்தியா பத்திரிகையில் பொறுப்பேற்ற போது, அந்தப் பத்திரிகையில் ஆங்கில ஆண்டு மாதம் இவற்றோடு தமிழ் ஆண்டும் மாதமும் குறிக்கப்பட்டன. இவ்வாறு தமிழ் ஆண்டை முதன்முதலில் பத்திரிகைகளில் வெளியிட்ட பெருமை பாரதியைச் சேர்ந்தது என்கின்றனர். இந்தப் பத்திரிகையை விட்டு நீங்கிய பின் பாரதியார் 'இந்தியா' பத்திரிகையில் சேர்ந்து எழுதத் தொடங்கினார்.

"இந்தியா"
இந்த பத்திரிகையை மண்டையம் திருமலாச்சாரியார் தொடங்கி பாரதியாரை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் செய்திருந்தாலும், பத்திரிகையில் ஆசிரியர் என்று மண்டையம் திருமலாச்சாரியாரின் உறவினர் சீனிவாசன் என்பவர் பெயர்தான் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் வரும் எழுத்துக்கள்தான் பாரதியாருடையதே தவிர, ஆசிரியர் என்ற பெயர் சீனிவாசனுக்கே. சிலர் இந்த இதழை பாரதியார் தொடங்கினார் என்று கூறுவார்கள். ஆனால் அந்த அளவுக்கு பாரதியாரிடம் நிதிவசதி இல்லை என்பது ஊரறிந்த விஷயம். மண்டயம் குடும்பத்தார் தொடங்கி அதில் பாரதியார் பணியாற்றினார் என்பதே சரியான செய்தி. அதே மண்டயம் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசாச்சாரியார் "இந்தியா பத்திரிகை சென்னையில் வெளிவர ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்கெல்லாம் பாரதியார் அதில் வந்து சேர்ந்தார்" என்று குறிப்பிடுவதிலிருந்து மேற்கண்ட செய்தியை நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

'இந்தியா' பத்திரிகையில் பாரதியாரின் எழுத்துக்கள் ஆங்கில ஏகாதிபத்தியத்தை மிகக் கடுமையாகத் தாக்கின. இந்தியா 4-8-1906 இதழில் பாரதியார் "வேதாந்தி" எனும் புனைபெயரில் 'சுவாமி அபேதானந்தா' பற்றிய ஓர் கவிதையை எழுதி வெளியிட்டிருந்தார். பிறகு 6-10-1906ல் ஓவியர்மணி ரவிவர்மா பற்றிய கவிதையை வெளியிட்டார். இந்தக் கவிதையும் அதன்பிறகு வெளிவந்தனவும் எல்லாம் பாரதியின் பெயரிலேயே வெளிவந்தன. இதே 1906-ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டுக்கும் பாரதியார் சென்று வந்திருக்கிறார். வார இதழாக ஒவ்வோர் சனிக்கிழமையிலும் வெளிவந்த 'இந்தியா' இதழின் ஓராண்டு சந்தா ரூ.3, ஆறு மாத சந்தா ரூ.1 அணா 12. இது சாதாரண மக்களுக்கு உரிய சந்தா. அரசாங்கத்தாருக்கும், ஜமீன்தார்களுக்கும், ரூ.200க்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கும் சந்தாத் தொகை அதிகம். இந்தப் பத்திரிகையில் குறிக்கோளாக "சுதந்திரம்" "சமத்துவம்" "சகோதரத்துவம்" என குறிப்பிடப்பட்டிருந்தது. 'இந்தியா' இதழின் எழுத்துக்களில் வெளியான உஷ்ணத்தைப் பொறுக்க மாட்டாத ஆங்கில அரசாங்கம் அதன் உரிமையாளர் திருமலாச்சாரியாருக்கும் ஆசிரியராகப் பதிவு செய்யப்பட்டிருந்த சீனிவாசன் என்பவருக்கும் வாரண்ட் பிறப்பித்தது. 20-8-1908-ல் ஆசிரியர் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

சீனிவாசன் கைது செய்யப்பட்ட ஆறாவது நாள் மகாகவி பாரதியாரை அவருடைய நண்பர்கள் பலர் சேர்ந்து அடுத்ததாக அவரும் கைது செய்யப்படலாம் என்றும், சிறைவாசம் மிகக் கொடுமையானது அந்தக் கடுமையை பாரதியாரால் தாங்கமுடியாது என்பதாலும், அவருடைய எழுத்துக்கள் சுதந்திரப் போருக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்து மக்களை எழுச்சிக் கொள்ளச் செய்ய வல்லது, அப்படிப்பட்ட எழுத்து சிறையில் முடங்கிவிடுமானால் சுதந்திரப் போரின் கூர் மழுங்கிவிடலாம் என்று எண்ணி அவரை எப்படியாவது அப்போது ஃப்ரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரிக்கு அனுப்பிவிட வேண்டுமென்று முயற்சி செய்து அனுப்பி விட்டார்கள். அவருடைய நெருங்கிய சகாவும் வக்கீலுமான துரைசாமி அய்யர் முழு முயற்சியால் பாரதியார் சைதாப்பேட்டை ரயில் நிலையம் சென்று புகைவண்டியில் புதுச்சேரி அனுப்பப்பட்டார் என்று வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. பலரும் அப்படித்தான் எழுதுகின்றனர். ஆனால் சமீபத்தில் அவர் மைலாப்பூரில் இருந்த பழம்பெரும் தேசபக்தரும் வைத்தியருமான டாக்டர் நஞ்சுண்ட ராவ் என்பவர் இவரை ஓர் படகில் ஏற்றி பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக புதுச்சேரி அனுப்பினார் என்று 'தினமணி'யில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. இவ்விரண்டு செய்திகளில் எது சரியானது என்பதை ஆய்வாளர்கள்தான் சொல்ல வேண்டும்.

புதுச்சேரிக்குச் சென்ற பிறகும் பலவித கஷ்டங்களை அனுபவித்த பாரதி, அங்கிருந்து மண்டையம் குடும்பத்தாரின் உதவியோடு தொடங்கப்பட்ட 'இந்தியா' பத்திரிகையில் மீண்டும் பணியாற்றத் தொடங்கினார். ஃப்ரெஞ்சு பகுதியில் இருந்துகொண்டு ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக பாரதியார் ஏறக்குறைய நெருப்பு மழை பொழிந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த பத்திரிகையைக் கண்டு ஆங்கில அரசாங்கம் கடும் கோபம் கொண்டு சட்டப்படியாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் பாரதியாருக்கு எதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவருடைய பத்திரிகைகள் பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் நுழைய முடியாத அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டும், அஞ்சல் அலுவலகங்களிலிருந்து கொண்டு போய் அழித்தும் அட்டூழியம் புரிந்தனர். பத்திரிகைக்கு வந்த மணியார்டர்கள் கொடுக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டன. பத்திரிகையை மக்கள் படிக்க முடியாமல் ஒரு புறம், நிதி நெருக்கடி ஏற்படும்படி மணியார்டர்கள் பறிமுதல் இப்படி பிரிட்டிஷ் அரசு முடிந்தவரை தீமை இழைத்தது. இதன் விளைவு 'இந்தியா' பத்திரிகை பொதுமக்களுக்குச் சரியாகப் போய்ச்சேர முடியாத நிலை ஏற்பட்டது. நஷ்டமோ ஏராளம், தாங்கமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் 1910 செப்டம்பரோடு 'இந்தியா' இதழ் நின்று போனது. அப்படி அது நின்று போன காலத்தில் பத்திரிகை சுமார் நாலாயிரம் பிரதிகள் விற்றன. இதில் வெளியிடப்படும் கார்ட்டூன்கள் பாரதியார் வடிவமைத்துக் கொடுத்தவை. அந்தப் படங்களும் ஆங்கில அரசாங்கத்தை நிலைகுலைய வைத்தன என்பதில் ஐயமில்லை. எது எப்படியிருந்த போதிலும் 'இந்தியா' பத்திரிகை மகாகவி பாரதியாரின் வரலாற்றோடு இரண்டறக் கலந்து விட்ட பெயர் என்பதும், இந்த பத்திரிகையில் வெளிவந்த காரசாரமான கட்டுரைகள், கார்ட்டூன்கள் காரணமாகத்தான் பாரதியார் கைது செய்யப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதும் மறுக்கமுடியாத செய்திகள். வார இதழாக வெளிவந்த 'இந்தியா' பத்திரிகையின் அளவை நாளிதழ் அளவில் வெளியிட்டுப் புதுமை செய்தார். செய்திகளை வெளியிடும்போது அவற்றை பெருநகரங்கள் வாரியாகப் பிரித்து, பம்பாய், கல்கத்தா, லாகூர், சென்னை என்ற தலைப்புகளிட்டு வெளியிட்டதோடு ராய்ட்டர் எனும் செய்தி ஸ்தாபனம் அனுப்புகின்ற தந்திகளை தமிழாக்கம் செய்தும் வெளியிட்டு வந்தார்.

பாரதியார் 'இந்தியா' இதழின் மூலமாக மிகத் திறமையாகப் பணியாற்றி அரசியலிலும், பத்திரிகைத் துறையிலும் முன்னணியில் விளங்கினார். இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில்தான் இவர் 1906ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்று வந்தார். அதுபோலவே 'பாலபாரதா' இதழின் ஆசிரியர் என்ற முறையில்தான் 1907 சூரத் காங்கிரசுக்கும் இவர் சென்று வந்தார். ஆக, இவர் பத்திரிகையாளராகத்தான் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு பெற்றார் என்பதும் இந்தத் துறையின் மீதுதான் பாரதி ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் தெரிகிறது. மேலும் 1908ல் திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்த போது, இவர் திருநெல்வேலிக்குச் சென்று அங்கிருந்து பத்திரிகைக்குச் செய்தி அனுப்புகையில் தன்னை "திருநெல்வேலிக்குச் சென்றிருக்கும் நமது பிரதிநிதியின் அறிக்கை" என்றுதான் செய்திகளை வெளியிட்டார். தமிழ்நாட்டில் பாரதியின் புகழ் பத்திரிகைத் துறையில் பெருமைபட விளங்கிய நிலையில், இவர் இந்தியாவின் மற்ற மாகாணங்களில் இருந்த பல பத்திரிகையாளர்களோடு தொடர்பு வைத்திருந்தார். அந்த வகையில் பால கங்காதர திலகர், விபின் சந்த்ர பால், அரவிந்தர் போன்றவர்களோடு இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

வாசகர்கள் எழுதும் மடல்கள் பகுதியில் அரசியல் விழிப்பூட்டும் கடிதங்கள் வெளியிடப்பட்டன. இந்திய சுதந்திரப் போர் குறித்து இங்கிலாந்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து அப்போது அங்கு வசித்து வந்த வ.வெ.சு.ஐயர், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோர் எழுதும் செய்திக் கடிதங்களை "லண்டன் கடிதம்" எனும் தலைப்பில் வெளியிட்டு வந்தார். 'இந்தியா' இதழில் இலக்கியம், ராஜரீகம் (அரசியல்), கைத்தொழில் இவைகள் பற்றியும் பல தலைப்புகளில் செய்திகளை வெளியிட்டு வந்தார்.

"பாலபாரதா" ஆர் "யங் இந்தியா"
'இந்தியா' இதழ் நடந்து கொண்டிருந்த போதே "பாலபாரதா" எனும் ஆங்கில ஏட்டைத் தொடங்கினார் பாரதி. இது வார இதழா, மாத இதழா என்பதில் குழப்பம் நிலவிய போதிலும் பாரதி ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் இது வாரப் பத்திரிகை என்றும் இதன் பொறுப்பாசிரியராக பாரதி பொறுப்பேற்றார் என்றும் தெரிவிக்கிறார். முதலில் இது வாரப்பத்திரிகையாக இருந்து 1907 நவம்பர் முதல் மாத இதழாக வெளிவந்தது. 'இந்தியா' 1906 அக்டோபர் 27ம் தேதி இதழில் "நமது ஆபீசிலிருந்து "பாலபாரத்" என்ற ஆங்கில வாரப் பத்திரிகை பிரசுரமாகப் போகின்றது" என்று விளம்பரப்படுத்தப் பட்டிருக்கிறது. இது 'இந்தியா' பத்திரிகையின் துணை ஏடாக வெளிவந்திருக்கிறது. இதனைப் பின்னர் மைலாப்பூர் டாக்டர் எம்.சி. நஞ்சுண்ட ராவ் வாங்கி நடத்தியதாகத் தெரிகிறது.

புதுச்சேரியில் 'பாலபாரதா' இதழ் 'இந்தியா' அலுவலகத்திலிருந்தே வெளிவந்தது. பாரதியார் ஈஸ்வரன் தர்மராஜா கோயில் வீதியில் தான் குடியிருந்த 22-ம் எண் இல்லத்திற்கு "பாலபாரத மந்திரம்" என்று பெயரிட்டிருந்தார் என்பதை 'இந்தியா' இதழில் வந்துள்ள ஒரு விளம்பரத்திலிருந்து தெரிகிறது. 1910 வாக்கில் இந்த 'பாலபாரதா' பத்திரிகைக்கு உள்நாட்டு ஆண்டுச் சந்தா ரூ.3 என்றும், மாணவர்களுக்கு ரூ. 2 என்றும், வெளிநாட்டுக்கு 6 ஷில்லிங் என்றும் விளம்பரப்படுத்தி யிருந்தனர்.

இந்த பத்திரிகையின் முகப்பு அட்டையில் 'பாலபாரதா ஆர் யங் இந்தியா' (Balabharata or Young India) என்ற பெயர் அச்சிடப்பட்டு அதன் கீழ் சுவாமி விவேகானந்தரின் "Arise, Awake and stop not till the Goal is reached" எனும் வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். அதற்குக் கீழே குண்டலினி சக்தியைக் குறிக்கும் படமும், பாலபாரதக் கொடி ஏந்திய இளைஞனின் படமும் இருக்கும். கீழே ஒரு தாமரையின் படம். அதன் இதழ்களில் Unbounded Light of Liberation என எழுதப்பட்டிருக்கும். இந்தப் பத்திரிகை தொடக்கத்தில் எட்டுப் பக்கங்களோடு வார இதழாகவும், பிறகு மாத இதழாக மாறியபின் முன்பின் அட்டைகளைச் சேர்த்து 24 பக்கங்களோடும் வெளிவந்தது.

இந்த இதழில் சுவாமி விவேகானந்தரின் உரைகள், அரவிந்தரின் எழுத்துக்கள் இவை அதிகம் இடம் பெற்றன. பாரதியாரும் பிற இதழ்களில் வரும் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார். பாரதியாரின் ஞானகுரு நிவேதிதா அம்மையார் அடிக்கடி தனது ஆலோசனைகளை வழங்கி வந்தார். இந்திய விஞ்ஞானி ஜகதீச சந்திர போஸ், சாக்ரடீஸ் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளும் வெளியாகின.

"விஜயா"
'விஜயா' இதழும் சென்னையிலிருந்து பாரதியோடு புதுச்சேரிக்கு வந்து அங்கிருந்து வெளியாகத் தொடங்கியது. பாரதியார் ஆசிரியராக இருந்த ஒரே நாளிதழ் 'விஜயா'தான். 1909 - 1910 காலகட்டத்தில் இது புதுச்சேரியிலிருந்து வெளிவந்தது. பாரதியார் நடத்திய பத்திரிகைகள் அனைத்தும் குரல்வளை நசுக்கப்பட்டுக் கிடந்த இந்த காலகட்டத்தில் அவரது கருத்துக்களை, கட்டுரைகளைத் தாங்கி வந்த ஒரே இதழ் 'விஜயா' தான். சமீப காலம் வரை 'விஜயா' இதழ் எதுவும் கிடைக்காமல் இருந்தது. ஆய்வாளர்கள் அனைவரும் 'விஜயா' என்றொரு பத்திரிகை வெளிவந்தது என்றுதான் எழுதினார்களே தவிர அந்த பத்திரிகை இதழ்கள் எதையும் எடுத்துக்காட்டாகக் காட்ட முடியாமல் இருந்தது. இந்த நிலையில் பாரதி ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும் Madras Institute of Development Studies எனும் நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகவும், தமிழ்ச் சமூக வரலாறு பற்றிய குறிப்பிடத்தக்க ஆய்வுகளை நடத்தியவருமான ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் பெருமுயற்சி மேற்கொண்டு பாரிஸ் நகரத்தில் 'விஜயா' இதழ்கள் இருப்பதைக் கண்டுபிடித்து அதனை வெளிக் கொணர்ந்திருக்கிறார். நாகர்கோயிலில் உள்ள 'காலச்சுவடு' பதிப்பகம் இதனை நூலாக வெளியிட்டிருக்கிறது. ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வரலாற்றாய்வு மையத்தில் பி.ஹெச்.டி. பட்டம் பெற்றவர். இவர் வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோருடைய படைப்புக்களை ஆய்வு செய்து நூல்கள் வெளியிட்டிருக்கிறார். தற்போது மகாகவி பாரதியார் 1906 முதல் 1916 வரையிலான காலகட்டத்தில் 'தி ஹிந்து' பத்திரிகையில் எழுதிய ஆங்கில கடிதங்களை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். அந்த நூலில் அவர் எழுதியுள்ள முகவுரையைத் தனி புத்தக வடிவில் பாரதி இலக்கியப் பயிலகம் தனது இரண்டாவது அஞ்சல் வழிப் பயிற்சி நிறைவு விழாவின்போது 11-9-2008 அன்று வெளியிட்டிருக்கிறது.

'விஜயா' பத்திரிகையில் மகாகவி பாரதியார் உலக நாடுகளில் நிலவிய பிரச்சினைகள் குறித்தெல்லாம் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சென்ற 2007-08ம் ஆண்டில் பாரதி இலக்கியப் பயிலகம் நடத்திய அஞ்சல் வழிப் பயிற்சியில் ஏழாவது பாடமாக "பாரதியாரின் 'விஜயா' பத்திரிகை கட்டுரைகள்" எனும் தலைப்பில் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகளைப் பாடமாக வெளியிட்டு மகிழ்ந்தது. சென்ற முறை இந்த அஞ்சல் வழிப் பயிற்சியில் பங்கு கொண்டோர் அதன் 7-வது பாடத்தை இப்போது எடுத்துப் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். 'விஜயா' கட்டுரைகளில் நமது நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலவரங்களை நன்கு தெரிந்து கொள்ளலாம். அந்த நூலில் காணப்படும் அனேக கட்டுரைகளின் கருத்துக்கள் இன்றைக்கும் நமக்குப் பொருந்தக் கூடியதாக இருப்பதை நாம் காணமுடியும்.

இந்த பத்திரிகையின் முதல் பக்கத்தில் "விஜயா" என்று பெரிய எழுத்துக்களால் தலைப்பு காணப்படுகிறது. அதன் கீழே ஆங்கிலத்திலும் VIJAYA என எழுதப்பட்டிருக்கிறது. தலைப்பில் 'ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம்' என்று காணப்படுகிறது. இதன் ஃப்ரெஞ்சு வடிவத்தையும் மேற்புறத்தில் காணலாம். இப்பத்திரிகை பிரதி தினம் மாலையில் பிரசுரிக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. மக்களால் மிகவும் விரும்பி படிக்கப்பட்ட இந்த பத்திரிகை 1910-ம் வருஷம் பத்திரிகைகள் சட்டம் பிரிவு 4, உட்பிரிவு 1ன் படி தடை செய்யப்பட்டது. அதுமுதல் இந்த இதழ் நிறுத்தப்பட்டு விட்டது.

"கர்மயோகி"
மகரிஷி அரவிந்தர் கல்கத்தாவிலிருந்து "கர்மயோகின்" எனும் தலைப்பில் ஓர் வார இதழை நடத்தி வந்தார். அவர் சதி வழக்குகளிலிருந்து விடுதலையான பின் சந்திரநாகூரிலிருந்து கப்பல் மூலம் புதுச்சேரி வந்த நாளோடு அந்த பத்திரிகை நின்று போய்விட்டது. மகான் அரவிந்தர் நடத்தி வந்த அந்த பத்திரிகையின் பெயரிலேயே பாரதியார் தமிழில் "கர்மயோகி" எனும் வாராந்தர பத்திரிகையை வெளியிட்டார். சைகோன் சின்னையா என்பவரின் அச்சுக்கூடத்தில் இந்தப் பத்திரிகை அச்சிடப்பட்டதாக எல்லா ஆய்வாளர்களும் எழுதியிருக்கிறார்கள். இந்த இதழில் பாரதியார் "ஆரிய நாகரிகம்", "நமது சொந்த நாடு", "ஒற்றுமையே வலிமை" என்றெல்லாம் கட்டுரைகள் எழுதினார். இந்தப் பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதுவோர் சொந்தப் பெயரில் எழுதாமல் புனைபெயரில் எழுதுமாறு பாரதியார் வெண்டுகோள் விடுத்திருந்ததாக போலீஸ் இரகசியக் குறிப்புகளில் காணப்படுவதாகக் கூறுகின்றனர்.

அறிஞர் வ.ரா. அவர்கள் தன்னுடைய 'மகாகவி பாரதியார்' எனும் நூலில் கூறியுள்ள செய்தியைப் பார்க்கலாம். "கர்மயோகி" பத்திரிகையைப் பாரதியார் தொடங்கி நடத்திய காலத்தில் (1910-ல்) இந்தியா முழுதும் அரசியல் கிளர்ச்சி அதிகம். இதனிடையே லோகமான்ய திலகருக்கு ஆறு வருஷம் சிறைவாசம். அவர் பர்மாவுக்குக் கொண்டு போகப்பட்டார்.

அரசாங்கத்தார் இரண்டு வித உபாயங்களைக் கையாண்டார்கள்; அடக்கு முறையை வலக்கையால் உபயோகப் படுத்திக் கொண்டார்கள்; இடக்கையால் சீர்திருத்தம் வழங்கினார்கள். இதற்கு மிண்டோ மார்லி சீர்திருத்தம் என்று பெயர்.

இந்தச் சீர்திருத்தத்தின் மூலமாய், மாகாணச் சட்டசபைகளில் ஜனங்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையில் இருப்பார்களென்று மார்லி பிரபு சத்தம் போட்டு, சீமையிலிருந்து சொன்னார். இது தவறு என்று அரவிந்தர் தமது 'கர்மயோகின்' பத்திரிகையில் தெளிவாக எடுத்துக் காண்பித்தார்.

சட்டசபையில் கேள்வி கேட்கும் உரிமைதான் ஜனப்பிரதிநிதிகளுக்கு மிச்சப்படும் என்றும், கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சர்க்கார் பிரதிநிதிகளிடமிருந்து பெற முடியாது என்றும் அரவிந்தர் எழுதியிருந்தார். அரவிந்தர் 1909ஆம் ஆண்டில் எழுதியதை, தேசமக்கள் இருபது வருஷங்களுக்குப் பிறகு அனுபவத்தில் தெரிந்து கொண்டார்கள்.

சில்லறைச் சீர்திருத்தங்கள், புரட்சிகரமான பெரிய சீர்திருத்தங்களுக்கு விரோதிகள் என்று மார்லி பிரபு ஓரிடத்தில் கூறிய உண்மையைத் தேசபக்தர்கள் எடுத்துக் காண்பிப்பதற்கு அப்பொழுது சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்தச் சர்ந்தர்ப்பத்தைப் பாரதியார் கை நழுவ விடவில்லை. 'கர்மயோகி'யில் அழுத்தமாக எழுத்து வேலை நடந்து கொண்டு வந்தது.

'பதஞ்சலி யோக சூத்திரம்' சமஸ்கிருதத்தில் இருந்ததைச் சுவாமி விவேகானந்தர் இங்கிலீஷில் மொழிபெயர்த்தார். மூலத்துக்கும் விவேகானந்தருடைய மொழிபெயர்ப்புக்கும் சில இடங்களில் முரண் இருக்கிறது என்பது பாரதியாரின் எண்ணம். மூலத்திலிருந்தே அவர் யோக சூத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்து, பகுதி பகுதியாகக் 'கர்மயோகி' பத்திரிகையில் வெளியிட்டார்.

பத்திரிகைத் தொழில் நின்று, பட்டினி கோர உருவத்துடன் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது". இப்படி எழுதுகிறார் வ.ரா.

'கர்மயோகி' தொடங்கி சுமார் இரண்டு வருஷங்கள் நடந்தது. இந்தப் பத்திரிகையும் நாட்டுப் பற்றைத் தூண்டும் விதத்தில் எழுதி வந்தது. பின்னர் மற்ற பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட கதியே இதற்கும் ஏற்பட்டு மூடுவிழா கண்டது.


"தர்மம்"
'கர்மயோகின்' போலவே அரவிந்தர் கல்கத்தாவில் 'தர்மா' என்றொரு இதழையும் நடத்தி வந்தார். அவரது வழியைப் பின்பற்றியே பாரதியாரும் 'தர்மம்' என்ற பெயரில் ஒரு இதழைத் தொடங்கி நடத்தினார். இந்த பத்திரிகை வெளியீட்டில் ஒரு விசேஷம் என்னவென்றால், இது இலவசமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பத்திரிகைக்கு சந்தா கிடையாது எனினும் நன்கொடை கொடுத்தால் வாங்கிக் கொண்டார். இந்த பத்திரிகையை நாகசாமி என்பவரும் வ.ரா. அவர்களும் மேலும் சிலரும் சேர்ந்து நடத்தியதாகத் தெரிகிறது. சைகோன் சின்னையா என்பவர் தான் திரும்பவும் சைகோன் செல்லுகையில் பாரதியிடம் கொடுத்த பணத்தில் இந்த இலவச பத்திரிகையைத் தொடங்கியதாக நாகசாமி என்பவர் சொல்லுகிறார். 'தர்மம்' இதழின் ஆசிரியராகப் பதிவு செய்யப்பட்டவர் ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் என்பவர். இது ஒரு மாத இதழ். வ.வெ.சு.ஐயரின் வீட்டு முகவரியைத் தாங்கி இந்த இதழ் வெளியானதாகத் தெரிகிறது. இந்த பத்திரிகையும் நின்று போனது.

"சூரியோதயம்"
1908-ம் வருஷத்தில் 'சூரியோதயம்' எனும் தமிழ் வார இதழ் புதுச்சேரியிலிருந்து வெளிவந்தது. இந்த பத்திரிகை 300 பிரதிகள் வரை விற்றதாகவும் தெரிகிறது. 5-7-1908ல் நின்று போன இந்த இதழ் மீண்டும் பாரதியாரால் 1910 லிருந்து வெளியிடப்பட்டது. இந்த இதழின் ஆசிரியர் நீலகண்ட பிரம்மச்சாரி என்றாலும் பாரதியாருடைய கட்டுரைகள் இந்தப் பத்திரிகையில் வெளிவந்தன. பரலி சு.நெல்லையப்பர் இந்த இதழில் உதவி ஆசிரியராக இருந்து பணியாற்றினார். 'சூரியோதயம்' இதழும் ஆங்கில ஆட்சியாளர்களின் தடையுத்தரவினால் நிறுத்தப்பட்டது.

இந்த 'சூர்யோதயம்' பத்திரிகையைப் பற்றியும் அறிஞர் வ.ரா. அவர்கள் குறிப்பிடுகிறார். அவர் கூறுவதாவது:- "நீலகண்ட பிரமச்சாரி என்பவர் புதுச்சேரிக்கு வந்தார். இவர் பாரதியாருக்கு எப்படிப் பழக்கமானார் என்பது எனக்குத் தெரியாது. பின்னர், திருநெல்வேலி சதியாலோசனை வழக்கில் இவர் முக்கிய எதிரியாயிருந்ததைச் சர்க்கார் தஸ்தாவேஜில் காணலாம். இந்த நீலகண்டர் - இவருக்குக் கண்டம் மட்டும் கறுப்பல்ல; உடம்பு முழுவதுமே அட்டைக் கரி (அந்த மாவீரனை இப்படி வர்ணித்திருக்க வேண்டுமா?) - புதுச்சேரியில் 'சூர்யோதயம்' என்ற பத்திரிகையை நடத்தினார். இந்தப் பத்திரிகைக்குப் பாரதியார் கட்டுரை தந்து உதவி செய்து வந்தார்."

மீண்டும் "சுதேசமித்திரன்"
1910 முதல் 1914 வரையிலான காலகட்டத்தில் பாரதி தொடங்கிய அனைத்துப் பத்திரிகைகளும் அரசாங்கத்தின் கெடுபிடியால் மூடப்பட்ட நிலையில் அவர் வறுமை நிலை எய்தினார். அவருடைய தீப்பிழம்பினைக் கக்கும் எழுத்துக்கள் நின்று போயின, எப்போதாவது ஏதாவதொரு சிறு பத்திரிகையில் வெளிவருவதைத் தவிர. நண்பர்கள் வற்புறுத்தவே பாரதியார் மீண்டும் 'சுதேசமித்திர'னுக்கு எழுதத் தொடங்கினார். என்றாலும் இது ஒன்றுதான் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பத்திரிகை, இதற்கும் நான் எழுதுவதால் ஆபத்து நேராமல் இருக்க வேண்டுமே என்று பாரதி கவலைப் பட்டாராம். 1915ல் ஜி.சுப்பிரமணிய அய்யர் 'சுதேசமித்திரனை' ஏ.ரங்கசாமி ஐயங்காருக்கு விற்று விட்டார். இவர் பாரதியின் எழுத்துக்களை தைரியமாக 'சுதேசமித்திர'னில் வெளியிட்டு அவருக்கு பணமும் அனுப்பலானார்.

ஆனால் ரங்கசாமி ஐயங்கார் பாரதியிடம் அரசியல் கலப்பில்லாத கட்டுரைகளையும் பாடல்களையும் தந்து உதவும்படி கேட்டுக் கொண்டார். கட்டுரை பாட்டு இவற்றுக்கு இவ்வளவு பணம் என்ற நிர்ணயம் கிடையாது. மாதம் முப்பது ரூபாயைக் கொடுத்து விடுவார். மாதம் முழுவதும் பாரதியார் எதுவும் எழுதாவிட்டாலும் இந்த முப்பது ரூபாய் புதுச்சேரிக்கு மணியார்டரில் சென்று விடும். 1915 லிருந்து பாரதியார் 'சுதேசமித்திர'னில் தொடர்ந்து எழுதலானார். புதுச்சேரி வாழ்க்கைக்கு இந்த முப்பது ரூபாய் பாரதிக்குப் பெரிதும் பயன்பட்டது.

1918 டிசம்பரில் பாரதியார் புதுச்சேரியை விட்டு வெளியேறி கடலூரில் கைதாகி, பிறகு 21 நாட்களுக்குப் பின் விடுதலையான பின் தன் மனைவியின் ஊரான கடையம் சென்றார். அங்கு இருந்தபோதுதான் பாரதி தம்முடைய நூல்களைப் பிரசுரம் செய்வதற்கு பெரிதும் முயற்சி செய்தார். நூல்களை வெளியிட பணம் வேண்டுமென பலருக்கும் கடிதங்கள் எழுதினார். இந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து விட்ட நிலையில் மீண்டும் 1920 ஆகஸ்ட் மாதத்தில் பாரதியார் சென்னை வந்து சேர்ந்தார். அவருடைய நண்பர் எஸ்.துரைசாமி அய்யர் பாரதியை அழைத்துக் கொண்டு சென்று 'சுதேசமித்திரன்' ரங்கசாமி ஐயங்காரிடம் மீண்டும் சேர்த்து விட்டார்.

ரங்கசாமி ஐயங்கார் பாரதியாரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருக்கையில் 'இப்போதெல்லாம் நமது பேப்பரின் பாலிசி தெரியுமோல்லியோ? அதை அனுசரித்து எழுத வேண்டியிருக்கும்' என்றாராம். அதற்கு பாரதியார் 'அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. என்னை நீங்கள் நாமம் இல்லாத ரங்கசாமி ஐயங்காராகவே எண்ணிக் கொள்ளலாம்' என்றாராம். இப்படி பாரதியாரின் தம்பி சி.விஸ்வநாத ஐயர் எழுதுகிறார்.

பாரதியார் 'சுதேசமித்திரனில்' அரசியல் கலப்பில்லாத பொதுச் செய்திகளையே பெரிதும் எழுதினார். ஆயினும் விடுதலை உணர்வும் தேசபக்தியும் அவர் எழுத்துக்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் வெளிப்படவே செய்தது. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் போன்ற பல புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் அப்போது பாரதியாருடன் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.

'சுதேசமித்திரன்' பத்திரிகைதான் பாரதியாரை முதன்முதலில் பத்திரிகை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது. அவர் காலமாகும்போதும் அந்த பத்திரிகையில்தான் பணியாற்றி வந்தார். புதுச்சேரியில் இருந்த காலத்தில் அவ்வப்போது அவர் 'சுதேசமித்திர'னுக்கு எழுதி வந்தார். இந்த காலகட்டம் பற்றி அறிஞர் வ.ரா. தனது நூலில் கூறும் சில செய்திகளைப் பார்ப்போம்.

அவர் சொல்கிறார், "நாங்கள் (பக்தர்களும், நண்பர்களும் கூடி) ஒரு நாள் பாரதியாரோடு வாதாடினோம். "நீங்கள் ஏன் உங்கள் பழைய 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு எழுதப்படாது?" என்று கேட்டோம். "எழுதலாம்" என்றார். "எழுதுகிறதுதானே?" என்றோம். எழுத முடியாது என்று முடித்து விடுவதைப் போலக் கண்டிப்பாய்ப் பேசினார்.

பாரதியாரிடம் எங்களுக்கு அன்பு பாத்தியம், பக்திபாத்தியம் ஏராளமாய் உண்டு. அவர் சொன்ன ஜவாப்பு எங்களுக்குத் திருப்தி உண்டாக்கவில்லை. மறுபடியும் கிளறிக் கேட்டோம். "பதில் சொல்லித்தான் ஆக வேண்டுமோ?" என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டார். "ஆமாம்" என்று சொல்லி, நாங்கள் இன்னும் அழுத்தமாக வாயை மூடிக் கொண்டோம்.

"நீங்கள் பச்சைக் குழந்தைகள்; உங்களுக்குச் சங்கதி தெரியாது; 'சுதேசமித்திரன்' பழைய காலத்துப் பத்திரிகை. பாரதி எழுத்தைப் பிரசுரித்து, அது தன் கெளரவப் பெயரைக் கெடுத்துக் கொள்ளும்" என்று சொல்லிச் சிரித்தார். இந்தக் கேலி சமாதானத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; அடுத்த கேள்விக்கு இடம் வைத்துக் கொள்ளாமல் பாரதியார் சொன்னார்; "எனக்கும் 'சுதேசமித்திர'னுக்கும் கொள்கையில் வேறுபாடு. என் எழுத்தை உங்கள் பத்திரிகையில் போடுங்கள் என்று நான் அவர்களிடம் சொல்வது நியாயமாகுமா? மேலும் இப்பொழுதோ தமிழ்ப் பத்திரிகைகளுக்கு 'நித்திய கண்டம்'. என் ஓர் எழுத்தின் மூலமாய்ச் சுதேசமித்திரனுக்கு ஆபத்து வந்தால் என்ன செய்கிறது? நான் எங்கெங்கே எழுதுகிறேனோ அதையெல்லாம் சர்க்கார் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். 'சுதேசமித்திரன்' பேரில் அவர்கள் 'லபக்'கென்று பாய்ந்தாலும் பாய்வார்கள். இப்பொழுது ஒழுங்காக நடக்கிற பத்திரிகை 'சுதேசமித்திரன்' ஒன்றுதான். என்னால் அதற்கு ஏன் ஆபத்து வர வேண்டும்?"

எங்களில் ஒருவருக்கு வாய்த்துடுக்கு கொஞ்சம் ஜாஸ்தி; "அவர்கள் உங்களை எழுதும்படி கேட்டார்களா?" என்றார் அவர். கேட்காதவற்றைச் 'சுதேசமித்திரன்' நிர்வாகிகளின் பேரில் போட்டாலொழிய, அந்த நண்பருக்கு மனச்சமாதானம் உண்டாகாது போலத் தோன்றியது.

பாரதியார் நேருக்கு நேராக யாருடனும் சண்டை போடுவார்; யாரையும் கண்டிப்பார், ஆனால், எதிரில் இல்லாதவர்களைப் பற்றி அவதூறு பேசும் கெட்ட வழக்கம் அவரிடம் துளிகூடக் கிடையாது. 'சுதேசமித்திரன்' ஆபீசிலிருந்து எனக்கு ஏன் எழுத வேண்டும்? நீங்கள் அவர்கள் பேரில் வீண் பழி சுமத்தப் பார்ப்பது தவறு. பாரதி உங்களுக்குப் பெரியவன். அவர்களுக்கும் பெரியவனாயிருக்க வேண்டுமென்பதுண்டோ? உலகமறியாத பச்சைக் குழந்தைகள்" என்று முடித்தார்.

இந்தப் பதில் எங்களுக்கு ஒருவாறுதான் சமாதானத்தைத் தந்தது. பாரதியார் 'சுதேசமித்திரன்' நிர்வாகிகளை ஆதரித்துப் பேசினாலும் அவருக்கிருந்த மனக்குறையை அந்தப் பேச்சு ஒருவாறு வெளிக் காண்பித்து விட்டது. எங்களுக்கோ ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது. ஆனால் என்ன செய்கிறது?"

பாரதியாரின் எழுத்துக்களைத் தாங்கி வந்த பிற பத்திரிகைகள்

பாரதியார் பணிபுரிந்த பத்திரிகைகள் அனைத்தும் ஆங்கில அரசாங்கத்தின் அடக்கு முறையினால் மூடப்பட்ட பிறகு 1913 லிருந்து Freelance Journalist ஆக வெளியிலிருந்து எல்லா பத்திரிகைகளுக்கும் எழுதத் தொடங்கினார். 'தி ஹிந்து' பத்திரிகையில் இவரது கடிதங்கள் பிரசுரமாகின. அவற்றைத் தொகுத்து தற்போது ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் ஒரு நூலை, 'காலச்சுவடு' பதிப்பகத்தின் வெளியீடாக எழுதியிருக்கிறார். அந்த நூலை ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும். பாரதியாரின் ஆங்கிலப் புலமைக்காகவும், உலக அரசியல் நடவடிக்கைகளை அவர் எவ்வளவு துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும் அந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். இது தவிர சுதேசமித்திரனிலும் அவர் கடிதங்கள் வெளியாகியுள்ளன.

"விவேகபானு".
அப்படி பாரதியார் வெளியிலிருந்து எழுதிய பத்திரிகைகளில் ஒன்று "விவேகபானு". அவர் சென்னைக்கு வந்து பிரபலமான பத்திரிகையாளராக ஆவதற்கு முன்பாக மதுரையில் இருந்தபோது, முதன் முதலில் அவருடைய இந்த கவிதை வெளியானது, மேலும் இந்தக் கவிதை அவருடைய மற்ற கவிதைகளைப் போலன்றி பண்டிதத் தமிழில் அமைந்திருந்தது என்பதையும் நாம் கவனிக்கலாம். திருநெல்வேலியிலிருந்து சுவாமி வள்ளிநாயகம் என்பவரால் நடத்தப்பட்டு வந்த இந்தப் பத்திரிகை சமயம் சார்ந்த பத்திரிகை. 1904ல் இந்த இதழில் மகாகவி பாரதி எழுதி "தனிமை இரக்கம்" எனும் கடுமையான பண்டிதத் தமிழில் எழுதப்பட்ட கவிதை வெளியாகியது. அந்தப் பாட்டில் அடியில் இங்ஙனம் எட்டயபுரம் ஸி.சுப்பிரமணிய பாரதி என்று கையெழுத்திட்டு வெளியிடப்பட்டது.

"சர்வஜனமித்திரன்"
அடுத்ததாக பாரதியாரின் எழுத்துக்கள் வெளிவந்த பத்திரிகை "சர்வஜனமித்திரன்" என்பதாகும். இதுவும் திருநெல்வேலியிலிருந்து வெளியாகியது. அதன் ஆசிரியராக இருந்தவர் வேதமூர்த்தி முதலியார் என்பவராகும். இது வாரம் இருமுறை பத்திரிகை. சென்னைக்கு வந்து பிரபலமான பத்திரிகையாளராக ஆவதற்கு முன்பாக இந்த இதழில் 1904ம் ஆண்டில் பாரதியார் கட்டுரை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரையில் பொதுவாகச் செல்வந்தர்கள் செய்யும் அநியாயங்களைக் கண்டித்திருந்ததாகவும், இந்த விஷயம் எட்டயபுரம் ஜமீன்தாருக்குச் சொல்லப்பட அவர் பாரதியிடம் மன வேறுபாடு கொண்டார் என்றும் பாரதியாரின் தம்பியான சி.விஸ்வநாத ஐயர் எழுதியிருக்கிறார்.

'தி ஹிந்து'
அடுத்ததாக பாரதி எழுதியது 'தி ஹிந்து' பத்திரிகையில். நாம் முன்பே இந்தப் பாடத்தில் குறிப்பிட்டபடி 1904 முதல் 1914 வரையிலான காலகட்டத்தில் பாரதியார் 'தி ஹிந்து' பத்திரிகையில் எழுதிய ஆங்கில கடிதங்களைத் தேடி ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்து ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். பாரதியாரின் ஆங்கிலப் புலமை ஆங்கிலேயரே படித்து ஆச்சரியப்படும்படியாக இருந்தது.

"ஞானபானு"
"ஞானபானு" எனும் பெயரில் ஒரு பத்திரிகையை விடுதலை போராட்ட வீரரும், வ.உ.சியின் நண்பருமான சுப்பிரமணிய சிவா ஆசிரியராக இருந்து நடத்தினார். 1913 ஏப்ரலில் தொடங்கப்பட்ட இந்த பத்திரிகை சென்னை மைலாப்பூரிலிருந்து வெளியானது. பாரதியார் 1913ல் தொடங்கி 1915ல் பத்திரிகை நின்று போகும் வரை இதில் எழுதினார். இதில் பாரதியார் தனது சொந்தப் பெயரிலும், புனைபெயரிலும் எழுதியுள்ளார். மற்ற பத்திரிகைகள் பாரதியாரின் கட்டுரைகளை வெளியிடத் தயங்கிய நேரத்தில் அச்சமின்றி அவற்றை சுப்பிரமணிய சிவா வெளியிட்டார். பாரதியாரின் கவிதைகள் பல இந்த 'ஞானபானு'வில்தான் வெளியாயிற்று. முன்பு எழுதி காணாமல் போன 'சின்னச் சங்கரன் கதை'யை மீண்டும் இதில் தொடராக எழுதினாலும், அது 6 பகுதிகளோடு நின்று போனது. தொடர்ந்து அவர் அதை எழுதி முடிக்கவில்லை.

"காமன்வீல்".
அன்னிபெசண்ட் 1914ல் தொடங்கிய ஆங்கில வார இதழ் "காமன்வீல்". இதில் பாரதியார் எழுதிய ஆங்கில கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன. இதே அன்னிபெசண்டை கேலி செய்து பாரதியார் முன்பு "A Fox with Golden Tail" எழுதியிருந்தாலும், அவர்களுக்குள் இருந்த நட்பு முறியவில்லை. அடுத்ததாக "ஆர்யா" எனும் ஆங்கில இதழ். இதனை புதுச்சேரி வந்த பிறகு அரவிந்தர் நடத்தினார். அரவிந்த அன்னை இதனை ஃப்ரெஞ்சு மொழியில் வெளியிட்டார். 1914 ஆகஸ்ட் 15, அரவிந்தரின் பிறந்த நாளில் இதன் முதல் இதழ் வெளியானது.

சென்னையில் கணேஷ் அண்டு கோ எனும் புத்தக வெளியீட்டாளர் சேஷையர் என்பவர் "Madras Standard" எனும் ஆங்கில நாளிதழை நடத்தினார். இந்த இதழில் நடந்த விசேஷம் என்ன வென்றால், பாரதியாருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தரராமையர் எனும் பேராசிரியருக்கும் நடந்த 'அத்வைதம்' பற்றிய சர்ச்சைதான். இவ்விருவருக்கும் நடந்த பகவத் கீதை பற்றிய விவாதத்தில் அரவிந்தர் பாரதியை ஆதரித்தார். பேராசிரியர் இந்த விவாதத்தை மோசமான நிலைக்குக் கொண்டு போனதும், பாரதியார் நிறுத்திக் கொண்டார் என்று வ.ரா. எழுதியிருக்கிறார்.

'நியு இந்தியா'
அறிஞர் வ.ரா. எழுதுகிறார்: "முன்னொரு காலத்தில் சென்னையில் 'ஸ்டாண்டர்ட்' என்ற ஆங்கிலத் தினசரி ஒன்று நடந்து வந்தது. அதற்கு ராமசேஷய்யர் என்பவர் அதிபர். இந்தப் பத்திரிகையைத்தான் பின்னர் 'நியு இந்தியா' என்ற பெயருடன் ஸ்ரீ அன்னிபெசண்டு நடத்தி வந்தார். 'ஸ்டாண்டர்டு' பத்திரிகையில் பாரதியாருக்கும் கும்பகோணம் புரொபஸர் சுந்தரராம ஐயர் அவர்களுக்கும் அத்வைதத் தத்துவ தரிசனத்தைப் பற்றிச் சுமார் நான்கு மாத காலம் வரையில் வாதம் நடந்து வந்தது.

இந்த வாதத்தில் ஒரு ஸ்வாரஸ்யம். தத்துவத்தின் வியாக்கியானத்தில் இரண்டு பேருக்கும் அபிப்பிராய பேதம் வந்து விட்டது. சுந்தர ராமய்யருக்கு சாஸ்திர ஆராய்ச்சிப் பழக்கம் நிரம்பவும் உண்டு. பாரதியாருக்கு அவ்வளவு பழக்கமில்லை. இவர்களுடைய வாதம் எப்படி நடைபெறுகிறது என்பதைக் கவனிக்க இந்த கட்டுரைகள் வரும் பத்திரிகை இதழ்களை எதிர்பார்த்த வண்ணமாய், நாங்கள் துடித்துக் கொண்டிருப்போம்.

சுந்தர ராமய்யருக்கு பக்க பலம் அவருடைய நூல் பயிற்சி. பாரதியாருக்குப் பக்க பலம் அவருடைய நுண்ணிய அறிவும் மேதையும் ஆவேசமுமாகும் இரண்டு மத்த கஜங்கள் மோதிக் கொண்டால் அது எப்படி இருக்கும்? வீரனுடைய தன்மையை இன்னொரு வீரன்தான் அறிய முடியும்; சுந்தரராமய்யர் படித்த புலவர்; பாரதியாரோ மேதாவி. ஆச்சாரியர் சங்கரருடைய தத்துவம் எளிதிலே பாரதியாருக்குப் பிடிபட்டுப் போய்விட்டது.

சுந்தரராமய்யர் பாரதியாரின் ஆங்கிலப் புலமையைப் போற்றினாரே யொழிய, பாரதியாரின் வாதத்தை ஒப்புக் கொள்ளவில்லை. இதே சுந்தரராமையர், அரவிந்தர் எழுதிய 'கீதைக் கட்டுரைகளை' அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார். வாதமும் கண்டனமும் புலவர்களின் பொழுதுபோக்கு. உண்மையை நாடுவதும் அதற்காக உயிரை விடுவதும் மேதாவிகளின் கடமை" என்று இப்படி வ.ரா. அவர்கள் எழுதுகிறார்.

பாரதியார் காங்கிரசில் திலகர் தலைமையிலான தீவிரவாதக் கட்சியில் அங்கம் வகித்தார் என்பது அனைவரும் அறிந்த வொன்று. அவர் எழுதுகின்ற கட்டுரைகளில் சிலவற்றில் தன் சொந்தப் பெயரையும், வேறு சிலவற்றில் புனை பெயர்களையும் பயன்படுத்தியுள்ளார். பொதுவாக அரசியல் கலப்பில்லாத 'சக்கரவர்த்தினி', 'பாலபாரதா', 'கர்மயோகி' ஆகிய பத்திரிகைகளில் பாரதியார் தன்னுடைய பெயரையே ஆசிரியர் என்று குறிப்பிட்டிருக்கிறார். மற்ற இதழ்களிலெல்லாம் இவர் ஆசிரியருடைய பணிகளையெல்லாம் செய்தாலும், ஆசிரியர் என்று வேறொருவர் பெயர்தான் இடம்பெற்றிருக்கிறது. இவர் இங்கிலாந்து தொழில்கட்சித் தலைவர் ராம்சே மக்டனால்டு என்பவருக்கு 1914ல் ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் தான் எந்தப் பத்திரிகையிலும் இல்லாமல் வெளி எழுத்தாளனாக இருந்து பல இதழ்களுக்கு விஷய தானம் செய்து வருவதாக எழுதுகிறார். அப்படித் தான் எழுதிய கட்டுரைகளில் எதிலொன்றிலாவது ராஜத்துரோகக் கருத்து இருப்பதாகச் சென்னை அரசாங்கம் சொல்ல முடியுமா அன்றும் வினா எழுப்புகிறார்.

பத்திரிகைத் துறை தலையெடுத்து வந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அதன் வளர்ச்சிக்கும் வீச்சுக்கும் முழுமுதல் காரணமாக விளங்கியவர் பாரதி. தொடக்க காலத்திலேயே பழைய பத்தாம்பசலித் தனத்தை உதறி எறிந்துவிட்டு பல புதுமைகளைச் செய்து காட்டியவர் பாரதி. இப்பொழுதெல்லாம் Cover Story என்றும் Feature என்றும் செய்திக் கோர்வை சுவையாக வெளியிடப்படுவதற்கு வித்திட்டவர் பாரதி. அன்றாட சுவையான நிகழ்ச்சிகளை நேரடியாகச் சொல்லாமல் 'தராசு' என்ற தலைப்பில் மிக அழகாக வெளியிட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் இடிப்பள்ளிக்கூடம் என்ற தலைப்பில் வாத்தியார் சுப்பிரமணிய ஐயர் என்பவரது வீட்டுத் திண்ணையில் நடக்கும் பேச்சுக் கச்சேரியின் சுவாரசியத்தையும் சுவை குன்றாமல் அளித்து வந்தார். அதில் பங்கு பெறுவோர் பற்றிய வர்ணனை பாரதியாரின் நகைச்சுவை உணர்ச்சிக்குச் சான்று பகரும்.

உலக வரலாற்றில் 'கார்ட்டூன்' எனப்படும் கருத்துப்படம் அல்லது கேலிச் சித்திரம் பல கிளர்ச்சிகளை உண்டாக்கியிருக்கிறது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் இங்கிலாந்து நாட்டின் 'லோ' எனும் கார்ட்டூனிஸ்ட் வரைந்த சித்திரம் கூட பிரச்சினைக்கு உள்ளாகியது. இந்தியாவில் சங்கர் என்பவர் கார்ட்டூன்களைக் கொண்டே ஒரு பத்திரிகையை "சங்கர்ஸ் வீக்லி" எனும் பெயரில் நடத்தினார். இவற்றுக் கெல்லாம் முன்னோடியாக கார்ட்டூன் வரையும் பழக்கத்தைப் பத்திரிகைத் துறைக்கு அறிமுகம் செய்தவர் பாரதி. கார்ட்டூனுக்குத் தேவையான கருத்தை அவரே சொல்லி, அதன்படி வரையச் சொல்லி 'இந்தியா' இதழில் வெளியிட்டார். பாரதியாரின் சீடர் பாரதிதாசன் தன் ஆசானுடைய கார்ட்டூன் பற்றி இவ்வாறு எழுதுகிறார்: "இந்தியா" பத்திரிகையில் படம் வெளிவரும். சித்திர விளக்கமும் தெளிவாக எழுதப்பட்டிருக்கும். படங்கள் ராஜீய சம்பந்தமானவை. அர்த்த புஷ்டியுள்ளவை. பத்திரிகை எப்போது வெளிவரும் என்று வாசகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். அவருடைய கார்ட்டூன்களை கத்தரித்து அட்டையில் ஒட்டி வீட்டில் மாட்டி வைத்திருப்பார்கள், இப்படிச் சொல்லுகிறார் பாரதிதாசன்.

இவை தவிர, பாரதி பத்திரிகைக்கு விதிக்கப்பட்ட சந்தாத் தொகையிலும் பல்வேறு தரப்பினருக்கும் வெவ்வேறு தொகை நிர்ணயித்தார். புதுச்சேரியிலிருந்து வெளிவந்த 'இந்தியா' பத்திரிகைக்கு சந்தா விகிதம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் எல்லா கவர்மெண்டாருக்கும் வருஷம் ஒன்றுக்கு ரூ. 50 என்றும், ஜமீன்தார்கள், ராஜாக்கள் முதலான பிரபுக்களுக்கு வருஷம் ஒன்றுக்கு ரூ. 30 என்றும், மாதம் 200க்கு மேற்பட்ட வருமானம் உடையவர்களுக்கு வருஷம் ஒன்றுக்கு ரூ. 15 என்றும், உள்நாட்டுக்கு வருஷம் ஒன்றுக்கு தபால் கூலி உட்பட்டது ரூ. 3 என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் துணிச்சல் வேறு யாருக்காவது வருமா தெரியவில்லை.

இந்தப் பாடத்தை நிறைவு செய்ய ஓர் சுவையான நிகழ்ச்சியைச் சொல்லி முடித்துக் கொள்வோம். பாரதியார் புதுச்சேரியில் இருந்த காலத்தில் பிரிட்டிஷ் வேவுகார இரகசிய போலீசார் பலவேறு வேடங்களிட்டு பாரதியாரை அணுகினர். அதில் சங்கீதம் கற்றுக் கொள்வதற்கென்று சிலர், தமிழ் படிக்கவென்று சிலர், பாரதியாருடைய கவிதைகளின் இரசிகர் என்று சிலர், எழுத்தாளர் என்று சிலர் இப்படிப் பல விதம். இவர்களெல்லாம் போலீஸ் தரப்பில் தன்னை வேவு பார்க்க அனுப்பப்பட்டவர்கள் என்பது பாரதிக்குத் தெரியும்.

ஒருநாள் பாரதியாருக்கு ஓர் கடிதம் வந்தது. அதில் 'ஹே! கவிச்சக்கரவர்த்தி! தங்களுடைய திவ்விய முக மண்டல ஜோதியைக் கண்டும், தங்களுடைய அமிர்த வர்ஷ தாரைகளான பாடல்களைக் கேட்டும் ஆனந்தப்படுவதற்காகக் கையில் காசில்லாமல், ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன் தாண்டி டிக்கெட் இல்லாமல் கடைசியாகப் புதுச்சேரி வந்து சேர்ந்தேன். இப்பொழுது ஓர் இடத்தில் மறைந்து கொண்டிருக்கிறேன். இரவு ஏழு மணிக்குத் தங்கள் வீட்டுக்கு வருகிறேன். வெளிச்சத்தைச் சிறிதாக்கி வைத்துக் கொண்டிருந்தால் நல்லது, தங்கள் பக்தன், இலக்கியப் பிரியன், திருநெல்வேலி அன்பன்" என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன் தாண்டி வந்த பக்தன், இலக்கியப் பிரியன், திருநெல்வேலி அன்பன் ஏழு மணிக்கு வந்தார். ஆனால், பாரதியார் வெளிச்சத்தைச் சிறிதாக்கி வைக்கவில்லை. 'மண் வெட்டி கூலி தினலாச்சே, நமது வாள்வலியும் தோள் வலியும் போச்சே' என்று தொடங்கும் "மறவன் பாட்டு" எனும் பாடலை உரக்கப் பாடிக் கொண்டிருந்தார். அந்தப் பாட்டில் " சீ! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு" என்று ஓர் அடி இருக்கிறது. ஏழு மணி அடிக்கிற சமயத்தில், இந்த அடியைப் பாரதியார் பாடிக் கொண்டே இருந்தார். வந்தவரும் இதைக் கேட்டுக் கொண்டே வந்தார்.

"நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு! சீ சீ சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு" என்று உரக்கப் பாடினார் பாரதியார்.

வந்தவர் நல்ல தேக அமைப்பு உள்ளவர், தலை மொட்டை. விவேகானந்தரைப் போல, கழுத்து முதல் கால்வரையில் காவிச்சட்டை, முகத்திலே நேர்த்தியான குங்குமப் பொட்டு. அவர் வந்து பாரதியாரை வணங்குகிறார்.

பாரதியார் பாட்டை நிறுத்தினார். வந்தவர் கும்பிட்டார். "ஆஹா! தர்மம் நாசமாய்ப் போகிறதே! கிருஹஸ்தன் நமஸ்காரம் செய்யணும், சந்நியாசி ஆசீர்வாதம் செய்யணும். தலைகீழ்ப் பாடமாய்ச் செய்து விட்டீர்களே!" என்று அவரைப் பார்த்துப் பாரதியார் கேலி செய்தார்.

வந்தவர் சிரிக்கவேயில்லை. மடியில் கனம் போலிருக்கிறது. பாரதியாரின் சந்தேகம் ஊர்ஜிதப்பட்டது. "சரி! என்னைப் பார்த்தாய் விட்டது. போய்விட்டு வாருங்கள்!" என்றார் பாரதியார். அன்பர் லேசிலே விடுகிற பேர்வழியல்ல. ஹிந்தி, இங்கிலீஷ், தமிழ், மலையாளம் முதலிய பாஷைகளில் ஒன்று விடாமல் பேசித் தீர்த்து விட்டார். பாரதியாருக்கு அடங்காத கோபம்.

அரவிந்தரை எப்பொழுது பார்க்க முடியும்? என்றார் அன்பர். 'அய்யரைப் பார்த்தாகி விட்டதோ, இல்லையோ?' என்று பாரதியார் ஆத்திரத்துடன் கேட்டார். வந்தவருக்கு அப்பொழுதுதான் பாரதியாரின் ஆத்திரமும், சூட்சுமப் பேச்சும், பாட்டும் விளங்கின. வந்தவர் உத்தரவு கேட்டுக் கொண்டு வெளியே போகுமுன், "ஓய்! அர்ஜுன சன்னியாசி! உசிதமாய் வாழும்! உயரமாய் வாழும்! மட்டத்திலே ஆசை வைக்காதேயும்!" என்று சொல்லிப் பாரதியார் அவரை வழியனுப்பினார். பாரதியாருக்குத் தெரியும் வந்தவர் ஓர் போலீஸ் உளவாளி என்று. இதுபோல பற்பல வேஷங்கள் தாங்கி அவர்கள் பாரதியாருக்குப் பல தொல்லைகளைக் கொடுத்து வந்தனர்.

இப்படி பாரதியாரின் பத்திரிகை உலகச் சேவை தொடர்ந்து இல்லா விட்டாலும், பல பத்திரிகைகளில், பல்வேறு காலகட்டங்களில் நடந்திருக்கிறது. இன்று நமக்கு அவை முழுமையாகக் கிடைக்காவிட்டாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக பல கட்டுரைகள், கவிதைகள் கிடைத்திருக் கின்றன. கிடைத்தவற்றைப் படித்துப் பயன்பெறும் பாக்கியம் நமக்கெல்லாம் கிடைத்திருப்பதற்காக, இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிட்ட அத்தனை பெரியோர்களுக்கும் இந்த பாடத்தைத் தயாரிக்க உதவிய நூலாசிரியர்கள் அனைவருக்கும் நமது இதயபூர்வமான நன்றியறிதலை உரித்தாக்குகிறோம். பத்திரிகைத் துறையில் பிற்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாகவும், இன்று கடைப்பிடிக்கப்படும் பல தொழில்முறை உத்திகளுக்கு முன்னோடியாகவும் பாரதி விளங்கியிருக்கிறார். அந்த மகானுடைய பத்திரிகைத் துறைப் பணி வருங்கால சந்ததியினருக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்க பத்திரிகையாளர் பாரதி!

வினாக்கள்.

1. பாரதியார் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியை விட்டு நீங்கி சென்னைக்கு வந்ததற்குகூறப்படும் காரணங்கள் எவை?
2. 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் சேர்ந்த பாரதிக்குக் கொடுக்கப்பட்ட வேலைகள் எவை?
3. 'சக்கரவர்த்தினி' பத்திரிகையின் நோக்கம் என்ன? பாரதி எவ்வளவு காலம் அதில் ஆசிரியராக இருந்தார்?
4. 'இந்தியா' பத்திரிகை புதுச்சேரியிலிருந்து வெளிவருவதைத் தடுக்க பிரிட்டிஷ் ஆட்சி கொடுத்த தொல்லைகள் எவை?
5. 'விஜயா' நாளிதழ்களின் பழைய பிரதிகள் எங்கே யாரால் கண்டுபடித்து வெளியிடப்பட்டது?
6. “பாரதி ஓர் இதழாளர்” எனும் தலைப்பில் ஒரு சிறு கட்டுரை வரைக.


இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகள் ஏராளம்!
அது நம்மிடம் எதிர்பார்க்கும் கடமைகள் இரண்டே இரண்டுதான்!!
ஒன்று வரிகளை ஒழுங்காகச் செலுத்துதல் இரண்டாவது
வாக்குரிமையைப் பயன்படுத்துவது
நமது ஜனநாயகம் வாழ கண்டிப்பாக வாக்களியுங்கள்!!

1 comment:

  1. வணக்கம் ஐயா. தயை கூர்ந்து பாரதியின் 'பதஞ்சலி யோக சூத்திரம்' தமிழ் மொழிபெயர்ப்பை இங்கே வெளியிட வேண்டுகிறேன்.

    ReplyDelete

You can send your comments