Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Thursday, January 10, 2013

'பகவத் கீதை' உரைக்கு மகாகவி பாரதி எழுதியுள்ள முன்னுரை.


தன்னுடைய 'பகவத் கீதை' உரைக்கு
மகாகவி பாரதி எழுதியுள்ள முன்னுரை.

"புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு, நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறந்து விடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக. யோகம் செயல்களிலே திறமையாவது"
-- பகவத் கீதை 2ஆம் அத்தியாயம் 50ஆவது ஸ்லோகம்.

இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக்கெல்லாம் அடிப்படையாகும். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலுந் தெளிவாக மாசுமறுவின்றி வைத்திருந்தல். தெளிந்த புத்தியே மேற்படி ஸ்லோகத்திலே புத்தி என்று சொல்லப்படுகிறது. அறிவைத் தெளிவாக நிறுத்திக் கொள்ளுதலாவது யாதென்றால், கவலை நினைப்புக்களும், அவற்றுக்காதாரமான பாவநினைப்புக்களுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்.

'நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்தமாட்டீர்கள்' என்று ஏசு கிறிஸ்து சொல்லியதும் இதே கருத்தைக் கொண்டுதான்.

'குழந்தைகளைப் போலாய்விடுங்கள்' என்றால், 'உங்களுடைய லெளகீக அனுபவங்களையெல்லாம் மறந்து விடுங்கள்; நீங்கள் படித்த படிப்பையெல்லாம் இழந்துவிடுங்கள்; மறுபடி சிசுக்களைப் போலே தாய்ப்பால் குடிக்கவும், மழலைச் சொற்கள் பேச்வுந் தொடங்குங்கள்; என்பது கொள்கையன்று. 'ஹிருதயத்தைக் குழந்தைகளின் ஹிருதயம்போலே நிஷ்களங்கமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்' என்பது கருத்து.

ஹிருதயம் தெளிந்தாலன்றி புத்தி தெளியாது. ஹிருதயத்தில் பரிபூரணமான சுத்த நிலை ஏற்படும்வரை, புத்தி இடையிடையே தெளிந்தாலும், மீண்டும் மீண்டும் குழம்பிப் போய்விடும்.

ஹிருதயம் சுத்தமானால், தெளிந்த புத்தி தோன்றும். பகவான் சொல்லுகிறான்: "அந்த அறிவுத் தெளிவிலே நிலைபெற்று நில், அர்ஜுனா" என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும், அது நற்செய்கையாம். நீ ஒன்றும் செய்யாதே. மனம்போனபடி இருப்பின் அஃதும் நன்றாம். நீ நற்செய்கை, தீச்செய்கை என்ற பேதத்தை மறந்து, உனக்கு இஷ்டப்படி எது வேண்டுமாயினும் செய்யலாம். ஏனென்றால், நீ செய்வதெல்லாம் நன்றாகவே முடியும். உனக்கு புத்தி தெளிந்துவிட்டதன்றோ? புத்தி தெளிவுற்ற இடத்தே உனக்குத் தீயன செய்தல் ஸாத்தியப்படாது. ஆதலால், நீ நல்லது தீயது கருதாமல் மனம் போனபடியெல்லாம் வேலை செய்யலாம்.

இனி, இங்ஙனம் உரை கொள்ளாதபடி, 'நற்செய்கை தீச்செய்கை, அதாவது எல்லாவிதமான செய்கையையுந் துறந்துவிட்டு, அர்ஜுனா, நீ எப்போதும் தூங்கிக் கொண்டேயிரு' என்று கடவுள் உபதேசம் பண்ணியதாகக் கருதுதல் வெறும் மடமையைத் தவிர வேறொன்றுமில்லை.

ஏனென்றால், கடவுளே மேலே மூன்றாம் அத்தியாயத்தில் பின்வருமாறு சொல்லுகிறார்: "மேலும், எவனும் ஒரு க்ஷணமேனும் செய்கையின்றி இருத்தல் இயலாது. எல்லா உயிர்களும் இயற்கையில் தோன்றும் குணங்களால் தமது வசமின்றியே தொழிலில் பூட்டப்படுகின்றன" என.

ஆதலால் மனிதன் தொழில் செய்துதான் தீரவேண்டும். எப்போதும் தூங்கக் கும்பகர்ணனாலே கூட இயலாது. அவனுக்குக்கூட ஆறு மாஸகாலம் விழிப்பு உண்டு. ஆனால் நீ தொழில் செய்யுமிடத்தே, அதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு மனமுடைந்து ஓயாமல் துன்பப்பட்டுக் கொண்டே தொழில் செய்யாதே. ஸ்ரீபகவான் சொல்லுகிறான்; "அர்ஜுனா! உனக்குத் தொழில் செய்யத்தான் அதிகாரமுண்டு, பயன்களில் உனக்கு எவ்வித அதிகாரமும் எப்போதுமில்லை" என.

ஆதலால், கடவுள் சொல்லுகிறார், "கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்கிறானோ, அவனே துறவி; அவனே யோகி" என்று.

அறிவுத் தெளிவைத் தவறவிடாதே. பின் ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும். நீ சும்மா இருந்தாலும், அப்போது உன் மனம் தனக்குத்தான் ஏதேனும் நன்மை செய்து கொண்டேயிருக்கும். உடம்பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலன்று. மனத்தால் செய்யப்படும் தொழிலும் தொழிலேயாம். ஜபம் தொழில் இல்லையா? படிப்பு தொழில் இல்லையா? மனனம் தொழில் இல்லையா? சாஸ்திரங்களெல்லாம், கவிதைகளெல்லாம், நாடகங்களெல்லாம், சட்டங்களெல்லாம், வேதங்களெல்லாம், புராணங்களெல்லாம், கதைகளெல்லாம், காவியங்களெல்லாம் தொழில்கள் அல்லவா? இவையெல்லாம் உடம்பாற் செய்வதின்றி மனத்தாற் செய்யப்படுவன அன்றோ?

அறிவுத் தெளிவைக் கலங்க விடாதே!

அப்பால், "யோகம் பண்ணு. எதன் பொருட்டெனில் யோகமே செய்கைகளில் திறமையாவது" என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்லுகிறான்.

தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும்.

யோகமாவது சமத்துவம். "ஸமத்துவம் யோக உச்யதே" அதாவது, பிறிதொரு பொருள கவனிக்குமிடத்து, அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும், சலிப்பேனும், பயமேனும் இன்றி, அதை ஆழ்ந்து, மனம் முழுதையும் அதனுடன் லயப்படுத்தி கவனிப்பதாகிய பயிற்சி.

நீ ஒரு பொருளுடன் உறவாடும்போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவமாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.

"யோகஸ்த: குரு கர்மாணி" என்று கடவுள் சொல்லுகிறார். "யோகத்தில் நின்று தொழில்களைச் செய்" என.

யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவுபோல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக் கவனிக்கும் வழக்கம் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய்விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது.

எனவே, அவன் கடவுள் எங்கும் இருப்பதைக் காண்கிறான்.

(இதன் இரண்டாம் பகுதி தொடர்ந்து வெளியாகும்)


Saturday, January 5, 2013


வேண்டுகோள்!

என் அன்பிற்கினிய நண்பர்களே, பாரதி பயிலகம், இலக்கிய பயிலகம், தமிழ் நாடு சுதந்திரப் போர் தியாகிகள் தவிர கம்பராமாயணம் உரை நடை ஆகியவற்றை எனது வலைப்பூக்களில் படித்துவரும் அன்பர்களே! உங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன். என்னுடைய கீழ்கண்ட வலைப்பூக்களுக்கு விஜயம் செய்யுங்கள். படித்தபின் தங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள். அவை எனக்கு மேலும் ஊக்கத்தையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் என்பதால் தங்களது கருத்துக்களை தயவு செய்து பதிவு செய்யுங்கள்.

எனது வலைப்பூக்கள் விவரம் இதோ:--

1.http//www.bharathipayilagam.blogspot.com
2.http//www.ilakkiyapayilagam.blogspot.com
3.http//www.tamilnadythyagigal.blogspot.com
4.http//www.kambaramayanam-thanjavooraan.blogspot.com


நன்றி நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்!
தஞ்சை வெ.கோபாலன்

Friday, January 4, 2013

தமிழ்நாட்டு மாதருக்கு.

                                              தமிழ்நாட்டு மாதருக்கு......1

இந்தியா தேசத்து ஸ்திரீகள் இங்குள்ள ஆண் மக்களால் நன்கு மதிக்கப்படுவதற்குள்ள பல உபாயங்களில் வெளிநாட்டாரின் மதிப்பைப் பெற முயல்வதும் ஒரு உபாயமாம். திருஷ்டாந்தமாக, சில வருஷங்களுக்கு முன்பு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 'இந்தியா நாகரீகக் குறைவான தேசம்' என்ற எண்ணம் வெகு சாதாரணமாகப் பரவியிருந்தது. மேற்றிசையோர்களுக்குள்ளே சில விசேஷ பண்டிதர்கள் மட்டும் நம்முடைய வேதங்கள், உபநிஷத்துக்கள், ஸாங்கியம், யோகம் முதலிய தர்சனங்கள் (அதாவது ஞான சாஸ்திரங்கள்) காளிதாஸன் முதலிய மஹா கவிகளின் காவியங்கள், ராமாயணம், பாரதம், பஞ்ச தந்திரம் முதலிய நீதி நூல்கள் -- இவற்றை மூலத்திலும், மொழிபெயர்ப்புக்களின் வழியாகவும் கற்றுணர்ந்தோராய் அதிலிருந்து ஹிந்துக்கள் பரம்பரையாகவே நிகரற்ற ஞாத் தெளிவும் நாகரிகமும் உடைய ஜனங்கள் என்பதை அறிந்திருந்தனர்.

Rabindranath Tagore

இங்ஙனம் மேற்கு தேசங்களில் பதினாயிரம் அல்லது லக்ஷத்தில் ஒருவர் இருவர் மாத்திரம் ஒருவாறு நமது மேன்மையை அங்கீகாரம் செய்தனர். எனினும், அந்நாடுகளிலே பொது ஜனங்களின் மனதில் 'இந்தியா தேசத்தார் ஏறக்குறைய காட்டு மனிதரின் நிலையிலுள்ளோர்' என்ற பொய் கொள்கையே குடிகொண்டிருந்தது. அப்பால், ஸ்வாமி விவேகானந்தரும், பின்னிட்டு ரவீந்திரநாத் தாகூர், ஜகதீச சந்திர வஸு முதலிய மஹான்களும் மேற்றிசையில் விஸ்தாரமான யாத்திரைகள் செய்து தம்முடைய அபார சக்திகளைக் காண்பித்த பின்னரே, மேற்றிசைவாசிகளில் பலர், 'அடா! ஹிந்துக்கள் நாகரிகத்திலும், அறிவிலும் இவ்வளவு மேம்பட்டவர்களா?' என்று வியப்பெய்தினர்.

தவிரவும், மேற்கத்தியார் நம்மைக் குறைவாக நினைக்கிறார்கள் என்பதை அவ்விடத்துப் பத்திரிகைகளின் மூலமாகவும் புஸ்தகங்களின் மூலமாகவும் தெரிந்து கொண்டவர்களால் நமது தேசத்துக் கல்விப் பெருமையால் இந்தியாவின் உண்மையான மாட்சியை அறியாது நின்ற இங்கிலிஷ் படிப்பாளியாகிய நம்மவரின் பலரும் வெளி நாட்டாரின் எண்ணத்தையோ உண்மையெனக் கருதி மயங்கி விட்டனர். காலச் சக்கரத்தின் மாறுதலால், இந்நாட்டில் அறிவுத் துறைகள் பலவற்றிலும் மேற்படி இங்கிலிஷ் படிப்பாளிகளே தலைமை வகிக்கும்படி நேர்ந்து விட்டதினின்றும், இந்தியா தன் மாண்பை முற்றிலும் மறந்துபோய் அதோகதியில் விழுந்து விடுமோ என்று அஞ்சக்கூடிய நிலைமை அநேகமாய் ஏற்படலாயிற்று.
Swamy Vivekanandar

இப்படிப்பட்ட பயங்கரமான சமயத்தில் ஸ்வாமி விவேகானந்தர் முதலாயினோர் தம்முடைய ஞானபராக்கிரமத்தால் மேற்றிசை நாடுகளில் திக்விஜயம் பண்ணி மீண்டனர். இதினின்றும், இங்குள்ள இங்கிலிஷ் படித்த சுதேச தூஷணைக்காரர் தமது மடமை நீங்கி ஹிந்து நாகரிகத்தில் நம்பிக்கை செலுத்துவாராயினர். மேற்றிசையோர் எது சொன்னாலும் அதை வேதமாகக் கருதிவிடும் இயல்பு வாய்ந்த நம்மவர், முன்பு இந்தியாவை அந்த அந்நியர் பழித்துக் கொண்டிருந்த போது தாமும் பழித்தவாறே, இந்தியாவை அவர்கள் புகழத் தொடங்கியபோது தாமும் சுதேசப் புகழ்ச்சி கூறலாயினர்.

விவேகானந்தர் முதலானவர்கள் ஐரோப்பிய அமெரிக்கர்களால் போற்றப்படுவதன் முன்பு அம் மஹான்களை நம்மவர் கவனிக்கவேயில்லை. அப்பெரியோர் மேற்றிசையில் வெற்றி பெற்று மீண்ட மாத்திரத்தில், அவர்களை நம்மவர் தெய்வத்துக் கொப்பாக எண்ணி வந்தனை வழிபாடுகள் செய்யத் தலைப்பட்டனர். இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாக கவனித்தறிந்து கொள்ளுதல் நன்று.

அறிவின் வலிமையே வலிமை. அறிவினால் உயர்ந்தோர்களை மற்றொர் இழிவாக நினைப்பதும் அடிமைகளாக நடத்துவதும் ஸாத்யப்படமாட்டா. அறிவின் மேன்மையால் வெளித் தேசங்களில் உயர்ந்த கீர்த்தி படைத்து மீள்வோரை அதன் பிறகு இந்தத் தேசத்தார் கட்டாயம் போற்றுவார்கள். சில ஹிந்து ஸ்திரீகள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்ந்த கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வர்வார்களாயின்; அதினின்றும் இங்குள்ள ஸ்திரிKஅளுக்கெல்லாம் மதிப்பு உயர்ந்து விடும். இந்த விஷயத்தை ஏற்கனவே நம்முடைய மாதர் சிலர் அறிந்து வேலை செய்து வருகிறார்கள்.
Sarojini Naidu

வங்காளத்துப் பிராமண குலத்தில் பிறந்து ஹைதராபாத் நாயுடு ஒருவரை மணம் புரிந்து வாழும் ஸ்ரீமதி ஸரோஜினி நாயுடு என்ற ஸ்திரீ இங்கிலீஷ் பாஷையில் உயர்ந்த தேர்ச்சி கொண்டு ஆங்கிலேய அறிஞர்கள் மிகவும் போற்றும்படியாக இங்கிலீஷில் கவிதை எழுதுகிறார். இவருடைய காவியங்கள் பல இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு அங்குள்ளோரால் மிகவும் உயர்வாகப் பாராட்டப் படுகின்றன. மேலும், இந்த ஸ்திரி இங்கிலாந்தில் பல இடங்களிலே நமது தேசத்து முன்னேற்றத்தையொட்டி அற்புதமான பிரஸங்கங்கள் செய்து சிறந்த கீர்த்தியடைந்திருக்கிறார். மேலும், வங்காளி பாஷையிலே கவிதை எழுதுவோராகிய ஸ்ரீமதி காமினி ராய், ஸ்ரீமதி மனகுமாரி தேவி, ஸ்ரீமதி அனங்கமோஹின் தேவி என்ற மூன்று ஸ்திரிகளுடைய பாட்டுக்களை இங்கிலீஷில் மொழிபெயர்த்து அமெரிக்காவிலுள்ள பத்திரிகையொன்று புகழ்ச்சியுரைகளுடன் சிறிது காலத்துக்கு முன்பு பிரசுரம் செய்திருப்பதினின்றும் இம்மாதர்களுக்கு அமெரிக்காவில் நல்ல கீர்த்தி ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

(பாரதியின் இந்தக் கட்டுரை தொடரும்.....)

பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது?


பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது?
(மகாகவி பாரதியார் எழுதி அவருடைய பெண் தங்கம்மாவால் புதுச்சேரியில் ஒரு கூட்டத்தில் படிக்கப்பட்டது)

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டுமன்று, பெண்ணுக்கும் அப்படியே.

ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ விரும்புதல் மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம் விடுதலை. அடிமைக்கு இன்பம் கிடையாது. தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்தார் படுங்கஷ்டங்களைக் குறித்து 1896-ம் வருஷத்தில் கல்கத்தாவில் கூடிய பன்னிரண்டாம் ஜனசபைக் (காங்கிரஸ்) கூட்டத்தில் செய்யப்பட்ட தீர்மானமொன்றை ஆதரித்துப் பேசுகையில் வித்வான் ஸ்ரீ பரமேச்வரன் பிள்ளை பின்வருமாறு கூறினார்:-

"மிகவும் உழைப்பாளிகளாகிய ஹிந்து தேசத்தார் அந்த நாட்டில் பரம்பரை முறியடிமைகளாக வாழும்படி நேர்ந்திருக்கிறது. அங்கு நம்மவர் உத்திரவு சீட்டில்லாமல் யாத்திரை செய்யக் கூடாது. இரவு வேளையில் வெளியே சஞ்சரிக்கக் கூடாது. நகரங்களுக்கு நடுவே குடியிருக்கக் கூடாது. ஒதுக்கமாக நமக்கென்று கட்டப்பட்டிருக்கும் சேரிகளில் வசிக்க வேண்டும்.

ரயில் வண்டியில் மூன்றாவது வகுப்பிலேதான் ஏறலாம்; முதலிரண்டு வகுப்புகளில் ஏறக்கூடாது. நம்மை டிராம் வண்டியிலிருந்து துரத்துகிறார்கள். ஒற்றையடிப் பாதையினின்று கீழே தள்ளுகிறார்கள். ஹோட்டல்களில் நுழையக்கூடாதென்கிறார்கள். பொது ரஸ்தாக்களில் நடக்கக் கூடாதென்று தடுக்கிறார்கள். நம்மைக் கண்டால் காறி உமிழ்கிறார்கள். "ஹூஸ்" என்று சித்காரம் பண்ணுகிறார்கள். நம்மை வைகிறார்கள். சபிக்கிறார்கள். மணுஷ்ய ஜந்துக்களினால் சகிக்கக்கூடாத இன்னும் எத்தனையோ அவமானங்களுக்கு நம்மை உட்படுத்துகிறார்கள். ஆகையால் நம்மவர் இந்த நாட்டிலேயே இருந்து பஞ்சத்திலும் கொள்ளை நோயிலும் அழிந்திட்டாலும் அன்னியர் காலின்கீழ் போட்டு மிதிக்காதபடி ராஜாங்கத்தாரால் நம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால், நம்மவர் வேற்று நாடுகளுக்குக் குடியேறிப் போகாமல் இங்கிருந்து மடிதலே நன்று" என்றார். என்ன கொடுமையான நிலை பார்த்தீர்களா?

ஆனால் சகோதரிகளே! தென் ஆப்பிரிக்காவில் மாத்திரமே இவ்விதமான கொடுமைகள் நடக்கின்றன என்று நினைத்து விடாதீர்கள்!

சகோதரிகளே! ஒளவையார் பிறந்தது தமிழ் நாட்டில்; மதுரை மீனாக்ஷியும், அல்லி அரசாணியும் நேற்று மங்கம்மாளும் அரசு புரிந்த தமிழ் நாட்டிலே நம்முடைய நிலைமை தென்னாப்பிரிக்காவில் ஹிந்து தேசக் கூலிகளுடைய நிலைமையைக் காட்டிலும் கேடு கெட்டிருக்கிறதா? இல்லையா? உங்களுடைய அனுபவத்திலிருந்து நீங்களே யோசனை பண்ணிச் சொல்லுங்கள்.

நாமும் ஸ்வேச்சைப்படி வெளியே சஞ்சரிக்கக்கூடாது. நம்மைச் சேரிகளில் அடைக்காமல் சிறைகளில் அடைத்து வைக்க முயற்சி செய்கிறார்கள். ரயில் வண்டிகளில் நமக்கென்று தனிப்பகுதி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். நம்மைக் கண்டாலும் ஆண் மக்கள் நிஷ்காரணமாய் சீறி விழுகிறார்கள். காறி உமிழ்கிறார்கள்; வைகிறார்கள்; அடிக்கிறார்கள்; நாம் நமதிஷ்டப்படி பிறருடன் பேசக்கூடாதென்று தடை செய்கிறார்கள். மிருகங்களை விற்பதுபோல, நம்மை விலைக்கு விற்கிறார்கள். நம்முடைய நூல்களிலும் ஸம்பாஷணைகளிலும் ஓயாமல் நம்மைத் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கத்தால் நாம் இத்தனை பாடுக்கும் ஒருவாறு ஜீவன் மிஞ்சியிருக்கிறொ மெனினும், இந்த நிலைமிக, இழிதானதென்பதிலும், கூடிய சீக்கிரத்தில் மாற்றித் தீரவேண்டியதென்பதிலும் சந்தேகமில்லை. இதற்கு மருந்தென்ன?

தென் அப்பிரிக்காவில் ஹிந்து தேசத்துக் கூலியாட்களுக்கு ஸ்ரீமான் மோஹனதாஸ் கரம்சந்த் காந்தி எந்த வழி காட்டினாரோ, அதுவே நமக்கும் வழி. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையரை ஹிந்துக்கள் ஆயுத பலத்தால் எதிர்க்கவில்லை. கைத்துப்பாக்கி, வெடிகுண்டு முதலியவற்றை உபயோகிக்க விரும்பினர். சில இளைஞரைக்கூட அது செய்யலாகாதென்று மஹாத்மா காந்தி தடுத்து விட்டார். "அநியாயத்தை அநியாயத்தால் எதிர்த்தலென்பது அவசியமில்லை. அதர்மத்தை அதர்மத்தால்தான் கொல்ல வேண்டுமென்பது அவசியமன்று. நாம் அநியாயத்தை நியாயத்தால் எதிர்ப்போம்; அதர்மத்தை தர்மத்தால் ஒழிப்போம்" என்று காந்தி சொன்னார்.

சகோதரிகளே, நாம் விடுதலை பெறுவதற்கும் இதுவே உபாயம். நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத் தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவராகவும் மூண்டிருக்கையிலே, இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும் போது என்னுடைய மனம், குருக்ஷேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ஜுனனுடைய மனது திகைத்தது போல திகைக்கிறது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத்தகாத காரியம் அதுபற்றியே, 'சாத்வீக எதிர்ப்பி'னால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று நான் சொல்கிறேன்.

'அடிமைப்பட்டு வாழமாட்டோம்; ஸமத்வமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம்' என்று அவர்களிடம் வெளிப்படையாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டு, அதினின்றும், அவர்கள் கோபத்தால் நமக்கு விதிக்கக்கூடிய தண்டனைகளையெல்லாம் தெய்வத்தை நம்பிப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுப்பதே உபாயம். இந்த சாத்வீக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத் தொடங்க வேண்டுமாயின், அதற்கு அந்தக் காலமே சரியான காலம் இந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாஸமே நல்ல மாஸம். இன்றே நல்ல நாள். இந்த முஹீர்த்தமே தகுந்த முஹுர்த்தம்.

சகோதரிகளே! இப்போது பூமண்டலமெங்கும் விடுதலைப் பெருங்காற்று வீசுகிறது. கொடுங்கோலரசர்களுக்குள்ளே கொடியவனாய் ஹிரண்யனைப் போல ஐரோப்பாவின் கிழக்கே பெரும் பகுதியையும் ஆசியாவின் வடக்கே பெரும் பகுதியையும் ஆண்ட ட்ஸார் சக்ரவர்த்தி இப்போது ஸைபீரியாவில் சிறைபட்டுக் கிடக்கிறான். 'பாரத நாட்டைக் காப்பதிலே எனக்குத் துணை புரிய வாருங்கள்' என்று ஆங்கிலேயன் ஹிந்துக்களைக் கூப்பிடுகிறான். விடுதலைக் காற்று 'விர், விர்' என்று வேகமாக வீசுகிறது.

ஒரு ஸ்திரியானவள் இந்த ஸாத்வீக எதிர்ப்பு முறையை அனுசரிக்க விரும்பினால் தனது கணவனிடம் சொல்லத் தக்கது யாதெனில்:-

"நான் எல்லாவகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போடமாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன்" என்று கண்டிப்பாகச் சொல்லி விடவும் வேண்டும். இங்ஙனம் கூறும் தீர்மான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணை முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற உயிர் வாழ்வைப் பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக்கூடாது. "சிறிது, சிறிதாக, படிப்படியாக ஞானத்தை ஏற்படுத்திக் கொள்வோம்" என்னும் கோழை நிதானக் கட்சியாரின் மூடத்தனத்தை நாம் கைக்கொள்ளக் கூடாது. நமக்கு ஞாயம் வேண்டும். அதுவும் இந்த க்ஷணத்தில் வேண்டும்.

இங்ஙனம், 'பரிபூரண ஸமத்வமில்லாத இடத்திலே ஆண் மக்களுடன் நாம் வாழ மாட்டோம்' என்று சொல்வதனால், நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புருஷ சமூகத்தாராலும் ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மையுடையனவாயினும் அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்சக்கூடாது. ஸஹோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால் ஸஹோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம், நமக்கு மஹாசக்தி துணை செய்வாள். வந்தேமாதரம்!

Thursday, January 3, 2013

"வழி வழி பாரதி"


"வழி வழி பாரதி"

தஞ்சை நகரம் தமிழகத்துக்கு அளித்த பெரும் புலவர்களில் சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் ஒருவர். நல்லதொரு குடும்பத்தின் வாரிசு. தொழிலால் வழக்கறிஞர். தமிழ், ஆங்கிலப் புலமை மிக்கவர். பாரதியை முழுமையாக மொழியாக்கம் செய்தவர். மாணிக்கவாசகரின் திருவாசகத்தை ஆங்கிலத்தில் அருமையாக நாநிலம் போற்றும் வகையில் மொழிபெயர்ப்புச் செய்தவர். இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் 'முதுமுனைவர்' எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர். பாரதி அறிஞர், கவிஞர் திருலோக சீத்தாராம் அவர்களின் ஞானச் சீடர். பழகுதற்கு இனியர். நடமாடும் பல்கலைக் கழகம். பல நூறு முனைவர்கள் உருவாக அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர். அவர் பாரதி குறித்து "வழி வழி பாரதி" என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒரு பகுதியை இப்போது தருகிறேன். பாரதி உலகக் கவிஞர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவனா, அல்லது நம் உடன் பிறந்தவர்களாலேயே குறைவாக மதிப்பிடப்பட வேண்டியவனா என்பதை இந்தப் பகுதி ஆணி அறைந்தாற்போல அறிவிக்கும். தமிழ்நாடு செய்த தவப் பயன் பாரதி இங்கு வந்து பிறந்தான். அவன் புகழை அறியாதோரைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அறிந்தோர் மேலும் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.

இனி "வழி வழி பாரதி"யிலிருந்து:--

..."பாரதிதாசன் கூறியதைக் கேளீர்: "என்னுடைய கவிதைகளில் காணப்படுகிற முற்போக்குக் கருத்துக்களுக்குப் பாரதியாரே காரணம் ஆவார்." பாரதியாரின் தொடர்பே தம் பழக்க வழக்கங்களிலும் சிந்தனையிலும், தாமே அறியாதவாறு சில மாற்றங்களைச் செய்தது என்றும் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பொதுவுடமை வாதி. நல்ல கவிஞர். அவர் சொல்லுகிறார்:--

"பாரதிக்கு நிகர் பாரதியே மண்ணில்
யார் எதிர்த்தாலும் மக்கள்
சீர் உயர்த்தும் பணியில்
பாரதிக்கு நிகர் பாரதியே."

பாரதியார் வேதத்தைப் போற்றியவர். வேதம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளாத, அறிந்து கொள்ள விரும்பாத அன்பர்களே, அதைப் பழித்தும், தெழித்தும், இழித்தும் பேசத் தலைப்படுகின்றனர். வேதம் காட்டும் ஆயிரமாயிரமாம் அறிவியற் செய்திகளை உணர்ந்து, மேலை நாட்டோர் இன்றும் அடைந்து வரும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.

வேதம் என்றால் அறிவு, அறிதல் என்று பொருள்.

ஞானம் வேண்டாம் என்று கூறலாமா? காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பர். பாரதி "வேதம் புதுமை செய்" என்று ஆணையிடுகிறார். அப்படியென்றால் என்ன பொருள்? பழைய உண்மைகளுக்குப் புதிய துலக்கங்கள் தருதல் வேண்டும் என்பதே. வேதமறிந்தவன் பார்ப்பான். பார்ப்பான் வேதமறிந்தவன் என்று கூறவில்லை. நன்றாகக் கவனியுங்கள். வேதம் அறிந்தவன் பார்ப்பான், அதாவது யார் வேதம் அறிந்திருந்தாலும் அவன் அந்தணன். ஆக, பாரதி வேதம் புதுமை செய்தார். வேதம் சொன்னபடி 'பார்ப்பான்' என்றால் யார் என்பதை எடுத்துக் காட்டினார்.

"நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தினரேனும் - உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்."

எவையெல்லாம் வேதம் அல்ல என்பதையும் அவர் காட்டுகிறார்.

"உண்மையின் பேர் தெய்வம் என்போம் - அன்றி
ஓதிடும் வேதங்கள் பொய்யெனக் கண்டோம்;
உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்."

உலகில் பற்பல வேதங்கள் உள. தெய்வம் என்று ஒன்று கிடையாது என்று சாற்றிடும் மீமாஞ்சகர் வேதம், வேதம் இல்லை என்கிறார் பாரதி. ஸ்மிருதிகள் மாறிப் பயிலும் இயல்பின என்கிறார் அவர். யார் மேலோர் என்பதற்கு அவர் தரும் விடை.

"வையகம் காப்பவரேனும் - சிறு
வாழைப்பழக்கடை வைப்பவரேனும்
பொய்யகலத் தொழில் செய்தே - பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்"

தவம் என்றால் என்ன? இதற்கு பாரதி தரும் விடை.

"உற்றவர் நட்டவர் ஊரார் - இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் - இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை."

'யோகி' என்பவன் யார்? கேளுங்கள், அதற்கு பாரதி தந்த விடை.

"பக்கத் திருப்பவர் துன்பம் தனைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி
ஒகத் திருந்தி உலகோர் நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி."

'யோகம்', 'யாகம்', 'ஞானம்' இவற்றை விளக்குக என்றால் பாரதி தந்த விடை:

"ஊருக்குழைத்திடல் யோகம் - நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் - உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்."

'முக்தி' என்கிறார்களே அப்படியென்றால் என்ன? அதற்கு பாரதியின் பதில்.

"தோன்றி அழிவது வாழ்க்கை - இதில்
துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும்
மூன்றில் எது வருமேனும் - களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி."

"நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?" என்ற வினாவுக்கு பாரதி தரும் விடை.

"நன்றே செயல் வேண்டும் - அதை
நாளை செய்வோம் என்று போக்காமே
இன்றே செயல் வேண்டும் - அதை
இப்பொழுதே செய்திடல் வேண்டும்
அன்றிப் புன் சோம்பரினால் - இதை
ஆற்றுவம் நாளை என்றிருப்பீரேல்
கொன்றுமை நாளைக்கே - நமன்
கொண்டு சென்றால் பின்னர் ஏது செய்வீர்!"

செய்கின்ற தொழில்களில் எந்தத் தொழில் நல்ல தொழில்?

"யாதானும் தொழில் செய்வாம்
யாதும் அவள் தொழிலாம்."

செய்யும் தொழிலில் இழிவு கிடையாதா?

"தொழில் சோம்பரைப் போல் இழிவு இல்லை."

பாரதியிடம் போய் "உங்களுடைய தொழில் என்ன?" என்று கேட்டால்

"நமக்குத் தொழில் கவிதை" என்றார்.

சரி! கடமைதான் யாது?

"கடமையாவன தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடை முடியனாய்
பிற நட்டிருப்போர் பெயர் பலகூறி
அல்லா, யெனோவா எனத் தொழுது அன்புறும்
தேவரும் தானாய், திருமகள், பாரதி
உமை யெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்......"

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். பாரதியாரிடம் நாம் கற்க வேண்டியவை. தமிழ்ப் பற்று, தாய்மொழிப் பற்று, பிறமொழிப் பயிற்சி, தமிழ்நாட்டுப் பற்று, பாரத தேசப் பற்று, உலக நேயம்.

"நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்"

இந்நாள் வரை நான் சரியாக வாழவில்லையே. கவலைகள் என் மனத்தை மொய்க்கின்றனவே. என்ன செய்ய?

"சென்றது இனி மீளாது, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர், சென்றதனைக் குறித்தல் வேண்டா,

எழு, விழி, உணர்வு உறு!

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று, விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!

"செத்த பின் சிவலோகம், வைகுந்தம் சென்றிடலாம் என்று எண்ணாதே இத்தரை மீதினிலே இந்த நாளினிலே, இப்பொழுதே முத்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையில் களித்திடு, ஏங்கும் மனத்தை இளைப்பாற்றச் செய்" இவைதான் பாரதி நமக்களித்த அறிவுச் செல்வம். வேதம் புதுமை செய்தது.





Monday, December 31, 2012

'அங்ஙனே யாகுக'

                                    'அங்ஙனே யாகுக' என்பாய் ஐயனே!


மகாகவி பாரதியாரின் இந்த வரிகளை புதிதாய்ப் பிறந்துள்ள இந்த ஆங்கில புத்தாண்டு தினத்தில் மனதில் கொள்வோம். கூடியவரையில் இனி வருங்காலங்களில் இந்தப் பொன்வரிகளை மனத்தில் ஆழப் பதித்துக் கொண்டு செயல்படுவோம். இறைவன் 'அங்ஙனே ஆகுக! (ததாஸ்து) என்பான். அதுதானே நாம் விரும்பும் வரம்!


"கடமை யாவன தன்னைக் கட்டுதல்*
பிறர்துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
நாராய ணனாய் நதிச்சடை முடியனாய்
பிற நாட்டிருப்போர் பெயர்பல கூறி
அல்லா! யெஹோவா! எனத் தொழுதன்புறும்
தேவருந் தானாய், திருமகள் பாரதி
உமையெனுந் தேவியர் உகந்தவான் பொருளாய்
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
இந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும்
கடமை யெனப்படும், பயனிதில் நான்காம்
அறம், பொருள், இன்பம், வீடெனுமுறையே
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்
மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா!
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்
அசையா நெஞ்சும் அருள்வாய்; உயிரெலாம்
இன்புற் றிருக்க வேண்டி நின் னிருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே."

"புகழ்வோம் கணபதிநின் பொற்கழலை நாளும்
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே - இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யையெலாம் ஈங்கிதுகாண்
வல்லபைகோன் தந்த வரம்."

"நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் -உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே இம்மூன்றும் செய்."

"பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு மரங்கள்,
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந் திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
'பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும், நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க' என்பேன் இதனைநீ!
திருச்செவிக் கொண்டு திருவுளம் இரங்கி
'அங்ஙனே யாகுக' என்பாய் ஐயனே!
இந்நாள் இப்போழு தெனக்கிவ் வரத்தினை
அருள்வாய் ஆதிமூலமே! அநந்த
சக்திகுமாரனே! சந்திர மவுலி
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே!

"செய்கதவம்! செய்கதவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு!"

"மொய்க்குங் கவலைப் பகைபோக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
உடலை இரும்புக் கிணையாக்கிப்
பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விதியிஃதே"

".................................................
..............................................
உடலைக் கட்டு, உயிரைக் கட்டலாம்*
உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம்
உள்ளத்தைக் கட்டு, சக்தியைக் கட்டலாம்
அநந்த சக்திக்குக் கட்டுப்படுவதிலே வருத்தமில்லை
என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது
அதற்கு ஒரு வடிவம், ஓரளவு ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது
இந்த நியமத்தை அழியாதபடி சக்தி பின்னே நின்று
காத்துக் கொண்டிருக்கிறாள்
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவெய்
யாதபடி காக்கலாம்
அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருந்தால், அந்த
வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும்.
புதுப்பிக்காவிட்டால் அவ்'வடிவம்' மாறும்
அழுக்குத் தலையணை, ஓட்டைத் தலையணை, பழைய
தலையணை, அதிலுள்ள பஞ்சை யெடுத்துப் புதிய
மெத்தையிலே போடு, மேலுறையைக் கந்தையென்று
வெளியே எறி, அந்த 'வடிவம்' அழிந்து விட்டது
வடிவத்தைக் காத்தால்
சக்தியைக் காக்கலாம்
அதாவது சக்தியை அவ்வடிவத்திலே காக்கலாம்
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை
எங்கும், எதனிலும் எப்போதும் எல்லாவிதத் தொழில்களும்
காட்டுவது சக்தி
வடிவத்தைக் காப்பது நன்று. சக்தியின் பொருட்டாக
சக்தியைப் போற்றுதல் நன்று. வடிவத்தைக் காக்குமாறு
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை
இழந்து விடுவர்!






Monday, December 24, 2012

"வாக்தேவி" ஸரஸ்வதி


"வாக்தேவி" ஸரஸ்வதி

வேதத்தில் 'வாக்கை' ஒரு தெய்வமாகச் சொல்லியிருக்கிறது. திருஷ்டாந்தமாகப் பின் வரும் மந்திரங்களை நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம்.

"நம்மைப் பரிசுத்தம் செய்வாள் ஸரஸ்வதி; வளங்களிலே மிகுந்தாள், அறிவுச் செல்வமுடையவள், (நமது) வேள்வியைத் தாங்குக"

"உண்மையொளிகளைத் தூண்டுவாள், நல்ல மதிகளை விளங்கச் செய்வாள், ஸரஸ்வதி வேள்வியைக் காக்கின்றாள்."

"பெரு வெள்ளமாகிய ஸரஸ்வதி ஞானவொளியால் விளக்குவாள்; எல்லா அறிவுகளிலும் கதிர் செய்கிறாள்."

"வாக்" என்பது, மூலத்திலே, படைத்தல் என்று பொருள்படும். ஸரஸ்வதியை இந்திரணுடைய மறைவுயிர் என்று சொல்வதுண்டு. ஸ்ருஷ்டியே வாக்கு; ஸ்ருஷ்டியே சக்தியானபடியாலேதான் புராணக்காரர் ஸரஸ்வதியைப் பிரம்மாவின் சக்தியென்றார். பைபிள் புஸ்தகத்திலே, 'ஆரம்பத்தில் வாக்கு' இருந்தது; அந்த வாக்கு ஈசனோடிருந்தது; அந்த வாக்கே ஈசன்' என்று சொல்லப்படுகிறது. சக்தி பரமபுருஷனோடு இருப்பதையும், அவ்விரண்டும் ஒன்று என்பதையும் அந்த வாக்கியம் காடுகிறது.

ஸரஸ்வதி பூஜை - உண்மை வழி.

சொல்லை ஸாதாரணமாக நினைத்து விடலாகாது. உண்மைச் சொல் க்ஷேம மந்திரமாகும். பொய்ச்சொல் அழிந்துவிடும். "வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணி பூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்".
இவளை அறிஞன் தனக்குள்ளே ஞான வெள்ளமாகக் காண்கிறான். அவளுடைய அறிவு கதிர் விடுகின்றது. இவளுடைய பூஜைக்கு முக்கிய வழிகள் எவை? தான் எப்போதும் எவ்விடத்திலும் உண்மை சொல்லுதல், பிறர் உண்மை சொல்வதை எப்போதும் எவ்விடத்திலும் விருப்பத்தோடு கேட்டல் என்ற இவ்விரண்டுமேயாம். தான் உண்மை சொல்வது மிகவும் சிரமமாய்விட்டது. பிறர் உண்மை சொல்வதைக் கேட்கும்போது நாராசவாணமாய்விட்டது. ஸாதாரண நிலையில், மனித வாழ்க்கை அத்தனை கோணலாகிவிட்டது; மனித அறிவு அவ்வளவு குழப்பமடைந்து நிற்கின்றது.

தேவ வாக்கு அவதாரம்: ஸரஸ்வதி

வேத மார்க்கமாகிய வேள்வியின் ரஹஸ்யப் பொருளை உணர்ந்து நடந்தால், உண்மை சொல்வதிலும் துன்பமிராது; கேட்பதிலும் துன்பமிராது. உலக வாழ்க்கையே தேவருக்குச் செய்யப்படும் வேள்வியல்லவா? அதனை ஸரஸ்வதியே தரிக்க வேண்டுமென்று மதுச்சந்த ரிஷி வேண்டுவதை மேலே கண்டோம். உண்மைச் சொல்லே ஸரஸ்வதி வசம் நமது வேள்வியை ஒப்புக் கொடுப்பதற்கு முக்கிய வழியென்றோம். இதனுடன் நிந்தை, பழி, சாபம், பயம், அசுசி -- இவற்றினால் வாக்கை மாசுபடுத்தாதிருக்க வேண்டும். அமங்கள வார்த்தைகளும் அவச்சொற்களும், பய வசனங்களும் தீமை தரும். பரிபூரண தீரமும் வலிமையும் உண்மையும் திருத்தமும் தெளிவும் பொருந்திய வாக்கே, தேவ வாக்கென்று சொல்லப்படும். மனித ஜாதிக்கு தேவ வாக்குப் பிறந்திடுக.

ஸரஸ்வதியும் இலக்கியமும்

உலக நடையிலே, உண்மை முதலிய குணங்கள் ஸரஸ்வதி தேவியின் கருணைக்கு நம்மைப் பாத்திரமாக்கி, நம்மிடத்திலே வேத வாக்கைத் தோற்றுவித்து, நமது வேள்வியைக் காக்கும் என்பது கண்டோம். இலக்கியக்காரருகோவென்றால், இத் தெய்வமே குலதெய்வம், அவர் இதனைச் சுடர்செய்யும் உண்மையுடனே போற்றவேண்டும். எதுகை மோனைகளுக்காகச் சொல்லவந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் ஸரஸ்வதி கடாக்ஷத்தை இழந்துவிடுவான். யமகம், திரிபு முதலிய சித்திரக் கட்டுகளை விரும்பிச் சொல்லுக்குத் தக்கபடி பொருளைத் திரித்துக் கொண்டு போகும் கயிறுபின்னிப்புலவன் வாணியின் திருமேனியை நோகும்படி செய்கிறான். அவசியமில்லாத அடைமொழிகளோ கோப்போன் அந்தத் தெய்வத்தின் மீது புழுதியைச் சொரிகிறான். உலகத்தாருக்குப் பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய்வோன் அந்தச் சக்தியைக் கரித்துணியாலே மூடுகின்றான்; 'வெள்ளைக்கலை' யுடுத்துவதில்லை. மனமறிந்த உண்மைக்கு மாறு சொல்லும் சாஸ்திரக்காரனும் பாட்டுக்காரனும் ஸரஸ்வதிக்கு நிகரில்லாத பாதகம் செய்கின்றனர். இலக்கியத்துக்குத் தெளிவும் உண்மையுமே உயிரெனலாம். இவ்வுயிருடையவர்க்கே அருள்வாக்கென்று சொல்லப்படும்.

முடிவுரை

வேதரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது; விக்ரஹாரதனை கிடையாது; ஸந்யாஸம் கிடையாது; அத்வைதத்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடயா; பக்தி மாத்திரந்தானுண்டு.

கோவிலும் மடமும், பெளத்த மதப் பழக்கத்தால் வெளிநாடுகளிடமிருந்து நமக்குக் கிடைத்த பேறுகள் என்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். ஆனால் இப்போது ஹிந்து மதத்திலிருந்து கோயிலைப் பிரிக்க முடியாது. கோயில்களுக்குள்ளே பரஸ்பரம் பொறாமையும் சண்டையும் இல்லாதபடி எல்லாக் கோயில்களும் ஸாக்ஷாத் ஸூரியனாகவும், அக்நி குமாரனாகவும், ருத்ரனாகவும், இந்த்ரனாகவும், வாயுவாகவும், விஷ்ணுவாகவும், வருணனாகவும் விளங்குகிற பரமாத்மாவின் கோயில்கள் என்றும், கோயில்களுக்குள்ளே கக்ஷி பேதங்கள் கிடையாவென்றும் பண்டித-பாமரர்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ப்ரகிருதி இயற்கைத் தோற்றம்; காணப்ப்டுகிற உலகம் விஷ்ணுவுடைய சரீரம். இதற்குள்ளே வ்யாபித்து நிற்கும் ஆத்மாவே விஷ்ணு. விஷ்ணுவைச் சிலையிலும் வணங்கலாம்; மலையிலும் வணங்கலாம்; தூணிலும் திரும்பிலும் வணங்கலாம். சிலைகளிலே வணங்குதல் ஒருவகை யோகம். வேதரிஷிகள் இந்த விஷ்ணுவை, இந்த்ரனை, ஸூர்யனை, ருத்ரனை நேராகக் கண்டு வணங்கினார்கள். உலகமே இவனுடைய உடம்பாதலால் அவர்கள் உலகத்தை வணங்கினர். அறிவுக்குள்ளே வானமும் ஸூர்யனும் இருப்பது போல, வெளியுலகத்திலும் இருக்கின்றன. உள்ளும் புறமும் ஒன்று.

மற்றொரு முறை விளங்கச் சொல்லுகிறேன். வேத ரிஷிகள் அதன் முன்னே போய் நின்றார்கள். ஆயிர மின்னல்கள் வாள் போல வீசின. உலகம் குலுங்கிற்று. அண்டங்கள் இடிவதுபோலே சத்தம் கேட்டது. மேற்படி ரிஷிகள் பயப்படவில்லை. மந்திரங்களைப் பாடினார்கள். ருத்ரனுடைய உடம்புதானே உலகம்? வாயுவே ருத்ரன். வாயுவினுடைய உடற்செய்கைதானே புயற்காற்று? இந்திரன் மின்னலையும் இடையையும் காட்டுகிறான். மேகங்கள் சிதறுகின்றன. பூமிக்குத் தன்ணீர் கிடைக்கிறது. இதில் பயத்துக்கு இடமெங்கே? ரிஷி புயற்காற்றைத் துதிக்கிறார். பிறகு, இரவு நீங்கி ஸூர்யோதயம் உண்டாகிறது; ஒளி தோன்றுகிறது. அதைப் பார்த்து நேரே கைகூப்பி ரிஷி, மந்திரம் பாடுகிறார். பக்ஷிகள் பாடுகின்றன; பூக்கள் மலர்கின்றன. நீரும் காற்றும் சிரிக்கின்றன. இஃதத்தனையும் இயற்கைத் தெய்வத்தின் காட்சி. இதை ரிஷி போற்றும்போது ப்ரத்யக்ஷ நாராயணனைப் போற்றுகிறார்.

வீட்டிலே நெருப்பு வளர்த்து, அதிலே தெய்வத்தைக் கண்டு தொழும் வழக்கம் அக்காலத்தில் மிகுதிப்பட்டது. பொதுவாக, இயற்கை வணக்கம் வழக்கமில்லாமல் போன பிறகும் அக்நி பூஜையும் ஸூர்ய பூஜையும் இன்றுவரை நமக்குள்ளே மிஞ்சி நிற்கின்றன. ஸந்த்யாவந்தனாதிகளில் ஸூர்ய பூஜை நியதமாக நடந்து வருகின்றது. ஸர்வ வைதிக கிரியைகளும் ஹோமம் வளர்த்துப் பூஜை பண்ணாமல் நடப்பதில்லை.

ப்ரகிருதியை நேரே தொழும் வழக்கம் மிகுதிப்பட்டால் வேதம் ஒளிபெறும்.

சரணாகதியே வழி.

வேத ரிஷிகள் வேறு வழி காட்டியதாக ஸம்ஹிதைகளிலே தெரியவில்லை.

குருவுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்றும், பரமாத்மா ஒருவனுக்கே சரணாகதி தகும் என்றும் என்னுடைய அபிப்பிராயம்.

மனத்தைக் கட்டி ஆளுவதற்கு மந்திரத்தை உச்சரிப்பதே வழி. மந்திரத்தின் ஒலியைத் தியானம் செய்வதில் பயன் கிடைக்குமென்று தோன்றவில்லை. அதன் பொருளைத் தியானிக்க வேண்டும். பின்வரும் பாட்டில் பரம்பொருளாகிய நாராயணனுக்குச் சக்திநாமம் வழங்கப்படுகிறது.

பாட்டு
('தனத, தனத, தனத, தனத, தனத தாம்' என்று தாளம் போட்டுக்கொண்டு இந்தப் பாட்டை இஷ்டமான ராகத்தில் பாடலாம் - பாரதியார்)

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாமிவள்
பார்வைக்கு நேர்பெருந் தீ,
வஞ்சக மின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென் றேயுரைப் பீரவள் பேர், சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.

நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்
அல்லது நீங்குமென் றேயுல கேழும்
அறைந்திடு வாய்முர சே!
சொல்லத் தகுந்த பொருளன்று காணிங்கு
சொல்லு மவர்தமை யே
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.

நம்புவ தேவழி யென்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம்;
கும்பிட்டெந் நேரமும் நக்தியென் றாலுனைக்
கும்பிடு வேன்மன மே,
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில் லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.

பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு
போற்றி யுனக்கிசை தோம்
அன்னை பராசக்தி யென்றுரைத் தோம்; தளை
யத்தனை யுங்கலைத் தோம்
சொன்ன படிக்கு நடந்திடு வாய்மன
மேதொழில் வேறில்லை காண்;
இன்னும தேயுரைப் போம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்;
தெள்ளு கலைத்தமிழ் வாணி, யுனக்கொரு
விண்ணப்பஞ்ச் செய்திடு வேன்;
எள்ளத் தனைபொழு தும்பய னின்றி
யிராதென்ற நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய், சக்தி வேள் சக்தி
வேல், சக்தி வேல், சக்தி வேல்.

(இந்தப் பாடல் பிறந்த விதம், இந்தப் பாடலுக்கு மகாகவி கொடுத்த விளக்கம் இவற்றோடு புரிந்து கொண்டு பாடினால்தான் நமக்குப் புரியும்.)


Sunday, December 23, 2012

மாதாவின் கட்டளை"


"இந்தியா" பத்திரிகை கட்டுரை

"மாதாவின் கட்டளை" "இந்தியா" 1909 பிப்ரவரி 6.

காலை 9 மணி நாம் காலைக் கடன்களை முடித்துவிட்டு நமது தொழிலிடத்திற்குப் புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தோம். வெளியிலிருந்து அமிருத மயமான பாட்டுத் தொனிகள் காதிலே விழுந்தன. முதலில் 'நா........" என்று நீண்டதாய் இன்பத்தால் இழைக்கப்பட்டதாய் ஒரு தீர்க்க ஸ்வரம் வந்தது. பிறகு, அதிலே மனம் செலுத்திய போது சொல்ல முடியாத இன்பத்துடன் பின்வரும் பதங்கள் அடுக்கடுக்காய் வரலாயின:

"நா.......டு செ.........ழிக்க வேணும் ........... நல்ல மழை .......பெய்ய வேணும்"

இந்த வார்த்தைகள் காதில் பட்டவுடனே, வெளியில் போய் யார் பாடுகிறார்கள் என்று கேட்க வேண்டுமென்ற எண்ணம் நமக்குண்டாயிற்று. நமது தெருவிலேயே கீழ்ப்புறம் நான்கு வீடுகளுக்கு அடுத்த வீட்டு வாசலில், சில தொழிலாளி ஸ்திரீகள் வயது முதிர்ந்தவர்களாகவும், ஏழமை பற்றிய பசி முதலிய கஷ்டங்களால் மலினத் தன்மையுடையவர்களாகவும் நின்று, வீடு செப்பனிடுவதற்காகவும் சுண்ணாம்போ வேறெதோ குத்திக் கொண்டே இந்தப் பாடலைச் சேர்ந்து பாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். நாற்பது வயதுடைய ஒரு ஸ்திரீ முதலில் வரிவரியாகப் பாடுகிறாள். மற்றவர்கள் அதைத் திரும்பச் சொல்லுகிறார்கல். திரும்பச் சொல்லுகிறவர்களுடைய குரல் உருக்கமால இல்லை. முதலில் பாடும் ஸ்திரீக்குத்தான் ஈசன் அருமையான கண்டம் கொடுத்திருக்கிறார்.

"நா.........டு..... செழிக்க வேணும்"

என்று மறுபடியும் தொனி பிறந்தது. நாமும் நம்முடன் இருந்த பிறரும் இது மாதாவின் ஆக்கினையென்பதை அறிந்து கொண்டோம். தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்குமே பூமி சொந்தமானது; மனித சமூகத்தில் இவர்களே தேனீக்கள். மற்ற நம் போன்றோரெல்லாம் பிறர் சேகரித்து வைத்த தேனை உண்டு திரியும் வண்டுகள்.

தொழிலாளிகளையும் விவசாயிகளையுமே நாம் "வந்தேமாதரம்" என்ற மந்திரத்தால் வணங்குகிறோம். இவர்களுடைய எண்ணங்களும் ஆசைகளும் பிரார்த்தனைகளும் மற்றோர்களால் கட்டளைகளாகப் பாராட்டிப் போற்றத்தக்கனவாகும்.

மாதாவின் கட்டளையைக் கேளுங்கள்.

(ஹா! அந்த இசையினிமையை நாம் காகிதத்தின் மேலே எப்படி எழுதிக் காட்டுவது?)

நா..........டு..............செழிக்க வேணும்,
நல்ல மழை பெய்ய வேணும்
நெல்........லு......விளைய வேணும்
ரெண்டு படி விற்க வேணும்.

இந்தக் கட்டளையை நாமனைவரும் பின்பற்றக் கடமைப் பட்டிருக்கிறோம். "நெல் விளைய வேண்டும்" என்று ஆணை பிறக்கிறது. மணிலாக்கொட்டையும் (நிலக்கடலை) பருத்தியும், அவரியும் ஆஹாரமாட்டாது. பணம் எப்போதும் அரிசிக்கு நிகராக மாட்டாது. கையில் பணம் சேரவேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் நிலத்திலே உணவுத் தானியங்களல்லாத பிறவற்றைப் பயிரிடுபவர்கள் நீடித்த யோசனையில்லாதவர்கள். உணவுப் பொருள்களின் விலை அதிகப்பட அதிகப்பட உன் பணத்துக்கு விலை குறைவுதானே? பணத்துக்கு (அதாவது புதுச்சேரியில், 2 அணாவுக்கு 2 படி அரிசி விற்கவேண்டுமென்று தாய் கட்டளையிடுகிறாள். கீழ்ப்பங்காளத்தில் பெரும்பகுதி ஜூட்டு (சணல்) விளைவாய்ப் போய்விட்டது. தென்னிந்தியா முழுதும் மணிலாக்கொட்டையும், அவுரியுமாய்விட்டால், அரிசி 2 அணாவுக்கு 2 படி எப்படி விற்கும்? தக்க கிரகஸ்தன் என்பவன் ஒரு வருஷ செலவிற்கேனும் வீட்டில் அரிசி தயாராக வைத்திருக்க வேண்டும்.

அவுரி விற்ற காசு அவலம். அதை வைத்துக் கொண்டிருப்பவன் கிரகஸ்தனாக மாட்டான். மேலும், இந்தச் சமயத்தில் மணிலாக்கொட்டை, அவரி - இவற்றிற்கு விலை எப்போதும் கிடைகுமென்றெண்ணுவது பிழை! நாட்டிலே இந்தப் பயிர்கள் பரவி அதிகப்பட இவற்றிற்கு விலை குறைந்துவிடுமல்லவா? ஜுட் முதலியவை விதைப்பினால், கம்பு, கேழ்வரகு, சோளம், அரிசி முதலியவை பிறகு அச்செய்களில் விளைக்க யோக்கியதையில்லாமற் போய்ட்விடுகின்றது.

"நெல்லு...............விளைய வேணும்"

"இந்தியா" பத்திரிகை கட்டுரை:


"இந்தியா" பத்திரிகை கட்டுரை:

தலைப்பு: "முதற்பிரயத்தனம்" 21 நவம்பர் 1908.

ஒரு ஜாதியார் ஸ்வதந்திரத்தின் பொருட்டுத் தலைமுறை தலைமுறையாகக் கஷ்டமடைவது இறுதி வரையில் வெற்றி கொண்டே முடியுமென்ற கருத்தை "பைரன்" என்ற ஆங்கிலேய மகாகவி அழகிய மொழிகளிலே புனைந்திருக்கின்றார். அவரது மொழிகளை ஒருவாறு தமிழில் பெயர்த்துத் தருகின்றோம்.

தந்தையர் குருதியிற் சாய்ந்துதாம் மடியினும்
பின்வழி மக்கள் பேணுமா றளிக்கும்
சுதந்தரப் பெரும்போர் ஓர்காற் தொடங்குமேற்
பன்முறை தோற்கும் பான்மைத் தாயினும்
இறுதியின் வெற்றியொ டிலகுதல் திண்ணம்.

இதன் உரை யாதெனில்:--

"பரம்பரையாகத் தந்தையார் தாம் இரத்தத்தில் வீழ்ந்து மாய்வாரேனும் தமது சந்ததியார் நடத்திச் செல்லுமாறு தந்துவிட்டுப் போகின்ற சுதந்தர யுத்தமானது பல முறை தோற்றுப் போயினும் கடைசிவரை ஜயங்கொண்டே முடிவதாகும்."

கவிரத்தினமாகிய 'பைரன்'.

கவிரத்தினமாகிய 'பைரன்' எழுதியிருக்கும் இம்ம்மொழிகளை நமது நாட்டில் ஒவ்வொருவனும் பொன்னெழுத்துக்களிற் புனைந்து எப்போதும் கழுத்திலே தரித்துக் கொள்ளுதல் தகும். நமது செவிலித்தாய் என்று கருதுதற்குரியதாகிய பிரான்ஸ் தேசத்தின் சரித்திரத்தைப் படித்துப் பார்த்தால் மேற்கூறப்பட்ட கருத்தின் உண்மை நன்கு விளங்கும். நிற்க, நமது தாய் நாடாகிய பாரத தேசத்திலுள்ளோர் இரண்டு வருஷங்களாக சுதந்தரப் பிரயத்தினம் தொடங்கி நடத்தி வருகின்றார்கள்.

வங்காளத்து மகாஜனங்களின் பிரதிக்கினை

1905ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 16 ஆந்தேதியன்று கல்கத்தாவில் ஐக்கிய மண்டல ஸ்தலத்திலே பெங்காளத்து மகாஜனங்கள் ஒருங்கு சேர்ந்து ஏக சிந்தனையுடன் 'பரமேசுவரன் சாட்சியாக இனி நாம் அன்னிய தேசத்து வஸ்திராதிகளைத் தீண்டுவதில்லை' என்று பிரதிக்கினை செய்து கொண்டார்கள். அப்போது 'வந்தேமாதரம்' என்ற தொனி எங்கிருந்தோ பிறந்தது. சுதந்தரப் போர் பாரத நாட்டிலே 'ஓர் கால் தொடங்கி'விட்டதென்பதற்கு இவை சின்னங்களாகும். அது முதல் ஸ்ரீ திலகருக்குத் தீவாந்தர சிக்ஷை விதித்ததோட் பாரத தேசத்தாரின் சுதந்தரப் போரிலே முதற் சருக்கம் முடிவு பெற்றது. சிறிது காலத்திற்கு இரு திறத்தாரும் இளைப்பாறுவார்கள். இளைப்பாறுதற்கென்றமைந்த இந்தச் சமயத்திலே தேசாபிமானிகள் செய்ய வேண்டிய கடமை யாது? அதை ஒரு திருஷ்டாந்த மூலமாக விளக்குவோம்:

'மாஜினி'

'மாஜினி' என்னும் பெயர் கொண்ட இத்தாலி தேசபக்தரைப் பற்றிப் பல முறை பிரஸ்தாபம் செய்திருக்கிறோம். அவர் தமது வாழ்நாளிலேயே தம்முடைய நாடு சுயாதீன நிலையடைந்ததைக் காண்பதற்குப் பாக்கியம் பெற்றிருந்தார். அதுவும் பெரும்பாலும் இவரது சொந்த முயற்சியாலேயே நிறைவேறிற்று. இவர் 'பால இத்தாலி' என்ற சங்கம் தொடங்கி வேலை செய்து வந்தார். இவரது முயற்சிகளிலேயும் முதல் சருக்கத்தில் தேச பக்தர்களின் பக்கம் தோல்வியடைந்து போய் கொடுங்கோலரசாகிய ஆஸ்திரியாவின் பக்கமே வெற்றி வாய்த்து நின்றது. அந்தச் சந்தர்ப்பத்தைக் குறிப்பிட்டு மாஜினி பின்வருமாறு எழுதுகின்றார்.

"பால இத்தாலி" சங்கத்தாரின் முயற்சியிலே முதற் பருவம் எங்கள் பக்கம் தோல்வியோடு முடிவு பெற்றது. எனவே, அப்பால் நான் செய்தற்குரியது யாது? ராஜ்ய சம்பந்தமான முயற்சியையே விட்டுவிட்டு, என்னைக் காட்டிலும் திறமையேனும் துணிவேனும் மிகுதியாகவுடைய மனிதர்கள் இத்தாலி தேசத்தைப் பக்குவப்படுத்தும் வரை காத்திருக்கலாமா? நான் என் சொந்த அபிவிருத்தியிலேயே கருத்தைச் செலுத்தி எனது பிரகிருதிக்கு அனுகூலமாகிய படிப்புகளிலே காலத்தைச் செலவிடலாமா?

அநேகர் அவ்வாறு செய்யும்படி எனக்குப் போதனை செய்வார்கள். நெடுங்காலத்து அடிமை வாழ்க்கையில் இத்தாலி தேசமானது வேர் வரை அழுகிப்போய்விட்டது. ஆகையால், அத்தேசம் நாம் காட்டுகின்ற ஆதர்சத்தை அங்கீகரித்து, தனது முயற்சியைக் கொண்டே தான் வெற்றி பெறுவதற்குரிய வழி தேடிக் கொள்ளப் போவதே கிடையாது என்றனர் சிலர். வேறு சிலர் போராட்டத்தின் தொடக்கத்திலேயே எய்ப்புற்றவராய், தமக்கு மேலே தோன்றிக் கறுத்து வரும் புயற்காற்றையொத்த விபத்துகளைக் கண்டு நடுக்கமுற்று, தன் சொந்த நலத்தையே நாடிக் காலஞ் செலவிட விருப்பம் கொள்வாராயினர். துரதிருஷ்டமாக முடிந்த 'ஸேவாய்' படையெழுச்சிக்கு அப்பால் நிகழ்ந்த செய்திகள் இவர்களுடைய அபிப்பிராயங்களுக்கு ஓர் பலம் ஆயின. எந்தப் பக்கத்தார் வெற்றி கொள்கிறார்களோ அவர்களையே தொழும் வழக்கமுடைய சாமானிய ஜனங்கள் எங்கு பார்த்தாலும் தேசத்தார்களின் மீது பழி தூற்றுவாராயினர். பாறைகளின்மீது அடித்துத் தாக்கிய அலைகள் அது பயனில்லையென்று உணர்ந்தபோது பின்வாங்கிச் செல்லத் தொடங்கின.

மாஜினியும் அவருடைய நண்பர்களும் இத்தருணத்தில் ஸ்விஜர்லாந்து தேசத்திலே போய் வாசஞ்செய்து வந்தார்கள். இத்தாலி தேசத்திலிருந்து மனம் சோர்வதற்குரிய வர்த்தமானங்களே கிடைப்பதாயின. தேசபக்தர் கூட்டத்திலே பலர் ஓடிப்போய்விட்டார்கள் என்றும், ஸபைகள் உடைந்து துண்டு துண்டாய்ப் போயினவென்றும் தெரிய வந்தது. ஸ்விஜர்லாந்து தேசத்திலோ ஆரம்பத்தில் எங்களை விருப்புடன் நடத்திய ஜனங்கள், வரவர எங்கள் மீது வெறுப்புறத் தொடங்கினர். (ஸ்விஜர்லாந்து தேசத்தின் ராஜதானியாகிய) ஜெனிவா நகரத்தில் மற்ற ராஜாங்கத்தாரிடமிருந்து உடனே எங்களைத் துரத்திவிடச் சீட்டுக்கள் வந்து குவியத் தொடங்கின. நாங்கள் தாழ்ந்த நிலைக்கு வந்துவிடவே, அந்நாட்டிற் பெரும்பான்மையோர் தேசத்தின் அமைதியைக் கெடுக்க வந்தவர்கள்; 'ஸ்விஜர்லாந்து மற்ற ஐரோப்பிய அரசுகளுக்கும் உள்ள சமாதானத்தையும் நேசப்பான்மையையும் அழிக்கவந்த அன்னியர்' என்று பலவாறாகச் சபிக்கத் தொடங்கி விட்டார்கள். அதிகாரிகள் எங்களைப் பற்றி பலவிதமான விசாரணைகள் செய்யலாயினர். எங்களுடைய யுத்த ஸாமக்கிரியைகளையெல்லாம் பற்றிக் கொண்டனர். எங்கள் கையிலிருந்த பொருள் பெரும்பாலும் செலவாகிவிட்டது. அந்நிய தேசத்திலே சரணாக வந்திருந்த தேசபக்தர் கூட்டத்தில் பெரும் பகுதியோருக்கு உணவுக்கும் உடைக்குங்கூட வழியில்லாமல் எங்கள் நிலைமை மிகக் கேவலமாகிவிட்டது. மிகுந்த கஷ்டத்தாலும் ஆசாபங்கத்தினாலும் எங்களுக்குள்ளே பிரிவுகளும் பரஸ்பர விரோதங்களும் கிளைக்கத் தொடங்கின. எங்களைச் சூழ நான்கு திசையிலும் இருள் நிரம்பி விட்டது.

எனக்குப் பலரும் செய்த போதனைகளிலும் எவ்விதமான ஆபத்துக்களிலும் அதிகமாக எனது தாயாருடைய வருத்தமும் கவலையுமே பொறுக்க முடியாமல் இருந்தன. எனக்கு எவ்வகையிலேனும் தளர்ச்சியுண்டாயிருத்தல் சாத்தியமானால் எனது தாயைப் பற்றிய நினைவு ஒன்றுதான் அத்தளர்ச்சியை விளைத்திருக்கும்.

ஆனால், எனது ஆத்மாவிலே வெளி மாறுபாடுகளால் வசப்படாத ஒரு சக்தி விளங்கின்றது. எனது ஆத்ம நிலை தன்னிலே தானடங்கியதாய் வெளித் தோற்றங்களினால் சலனமடையும் இயற்கையில்லாதது. ஆத்மா தன்னைச் சூழ்ந்திருக்கும் உலகை அடக்கி ஆளவேண்டியது; உலகத்தின் ஆட்சிக்குத்தான் உட்படக்கூடாது என்ற நம்பிக்கை அக்காலத்திலேயே எனக்கு இருந்தது. எனது ஜீவமுறை உள்ளிருந்து வெளியே வீசும் தன்மையுடைத்தன்று.

நாங்கள் எடுத்த பிரவிருத்தியானது முந்தோன்றிய தொன்றை மாற்றுவது மட்டுமே நோக்கமாக உடையதன்று. நோயாளி தன் வருத்தம் நீங்கும்பொருட்டு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் புரண்டு படுப்பது போன்ற தன்மையும் உடையதன்று. நாங்கள் ஸ்வதந்தரத்தை நாடுவதில் அதனையே ஒரு லட்சியமாகக் கருதி நாடவில்லை. அதனினும் உயர்ந்ததும் ஸத்துவமுடையதுமாகிய லட்சியமொன்றை அடைவதற்கு ஸ்வதந்தரத்தை ஓர் உபகரணமாகக் கருதி நின்றோம். எங்களுடைய கொடியின்மீது "ஒருமை கொண்ட குடியரசு" என்ற பதங்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஓர் ஜாதியை ஸ்தாபனம் செய்டல் -- ஓர் ஜன அமைப்பைப் புதிதாகப் படைத்தல் -- இப்பெருநோக்கத்தோடு முயற்சி புரிந்தோம். இத்தனை உயர்ந்த நோக்கமுடையவர்க்கு ஒரு முறை தோல்வியடைந்தது ஓர் பொருட்டாகுமா? கஷ்டம் வந்தபோது அமைதியுடன் பொறுத்திருக்க வேண்டும் என்ற பாடத்தை நம் கட்சியாருக்குக் கற்பித்தல் எங்களுடைய போதனைத் தொழிலில் ஓர் பகுதியல்லவா? இதை எங்களுடைய சொந்த நடைமூலமாக அந்தப் பாடத்தைத் திருஷ்டாந்தப் படுத்துவதைக் காட்டிலும் அதனைப் போதிப்பதற்கு வேறொரு வழியுண்டோ? இத்தருணத்தில் நாங்கள் எங்களுடைய கடமையைக் கை நழுவ விட்டுவிடுவோமானால் இத்தாலிக்கு ஐக்கியம் ஒருபோதும் ஏற்படாதென்று சொல்வோருக்கு எங்கள் செய்கையே ஒரு பலமாகுமன்றோ?

இத்தாலி ஜாதியை துர்ப்பல நிலைக்குக் கொண்டு வந்த முக்கியமான குறை யாதெனில், அது ஸ்வதந்தரத்திலே விருப்பமில்லாமையன்று, அந்த ஜாதியாருக்குத் தமது சொந்த திறமையிலே நம்பிக்கை யில்லாமையும் எளிதில் சோர்வடைந்து விடுதலும் ஸ்திர சித்தமில்லாமையும் முக்கிய குறையாகும். (ஸ்திர சித்தமில்லாவிடின் தர்மம் கூடப் பயனற்றதாய் முடியும்) நம்மவரிடையே உள்ளக் கருத்திற்கும் புறச் செய்கைக்கும் லயமில்லாதிருக்கின்றன. இந்த லயமின்மை மஹா விநாசகரமானது. இதுவே நமது ஜாதியாரின் முக்கிய குறையாகும்.

இந்தப் பெருநோயைத் தீர்க்க ஒரு வழியுண்டு. அதாவது, இதனளவுக்குத் தக்கபடி விஸ்தாரமாக லிகிதங்கள் மூலமாகவும் உபந்நியாசங்கள் மூலமாகவும் தேச ஜனங்களுக்கு உபதேசங்கள் புரிவதேயாகும். ஆனால், இத்தாலியில் போலீஸ் நிஷ்டூரத்தினால் இம்மார்க்கத்தை அநுசரிக்க ஸாத்தியமில்லாது போய்விட்டது. எனவே ஆவேசம் நீங்காததொரு பக்தி ஸமாஜம் ஏற்படுத்துதல் அவசியமாயிற்று. மன உறுதியிலேயும் கடைப்பிடிப்பிலேயும் திண்மையுற்று மனச்சோர்வுக்கு வசப்படாத மனிதர்கள் நிஷ்டூரத்தை உல்லங்கனம் செய்து ஓர் பெரிய தர்மத்தின் பொருட்டு அபஜயத்தையும் புன்சிரிப்போடு ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள், இன்று தளர்ச்சியடைந்தாலும் மறுநாள் உயிர்த்தெழுவர். எப்பொழுது பார்த்தாலும் மனோயுத்ததிற்குச் சன்னத்தமாகிக் காலத்தையும் விதியையும் இகழ்ந்து இறுதி வெற்றியிலே நீங்காத பக்தி நிரம்பியவர் இத்தன்மை கொண்ட பக்தர்களின் சமாஜம் ஒன்று இன்றியமையாததாயிற்று. நாங்கள் கைக்கொண்டது ஓர் தேசபக்தி கக்ஷியன்று, தேசபக்திமார் சங்கம். கட்சிகளைக் கொடுமையினால் நசிக்கச் செய்யலாம். மார்க்கங்களை ஒரு போதும் நசிக்கச் செய்தல் இயலாது.

(இவ்வாறு சிந்தித்து) நான் எனது சந்தேகங்களையெல்லாம் உதறிவிட்டு அடுத்த காரியத்தை விடாது நடத்த வேண்டுமென்ற உறுதி செய்து கொண்டேன். இத்தாலியில் எங்கலுடைய வேலையை இன்னம் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்பது தெளிவாக நின்றது. எமது ஜனங்கள் கலக்கம் தெளிவதற்கும், அரசு புரிவோர் தமது வெற்றியை உறுதியாக நம்பி, மறுபடியும் கண்ணயர்வதற்கும் சிறிது காலம் கடந்தே தீர வேண்டும் எனினும், உள்நாட்டில் எங்களுக்கேற்பட்ட நஷ்டங்களை வெளி தேசங்களில் சென்று பிரயத்தனங்கள் புரிந்து ஒருவாறு ஈடு செய்து கொள்ள முடியும். நாம் இரண்டாவது முறை ஓர் எழுச்சி தொடங்கும் போது நமக்கு அன்னிய தேசத்தாரின் அனுதாபம் இருக்குமாறு செய்து கொள்ளக்கூடும்."

மேலே மாஜினி கூறியிருக்கும் வசனங்கள் நமது தற்கால நிலைமைக்கு முற்றிலும் பொருந்தியனவாகும். நமது தேசபக்தர்களிலே அன்னியர்கலின் சரீர பல உதவியைச் சிறிதேனும் எதிர்பார்க்காத விபின் சந்திரர், காபர்தே முதலியவர்கள்கூட இப்போது ஐரோப்பிய்ற்குப் போயிருக்கிறவர்கள் நோக்கமும் மேலே கூறிய வசனங்களினின்றும் நன்கு விளங்கும்.

"இந்தியா" பத்திரிகையில் மகாகவி


"இந்தியா" பத்திரிகையில் மகாகவியின் கட்டுரை

மகாகவி பாரதியார் இந்தியா பத்திரிகையின் ஆசிரியராக இருந்து பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்த கட்டுரை 1908ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி வெளியானது. 104 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கட்டுரையை இப்போது படித்துப் பார்ப்போம். கட்டுரையின் தலைப்பு "கன்னித்தமிழ்" நிலைமையை நன்கு புரிந்து கொள்வோம்.

"தமிழ்ப் பாஷை இறந்து போய்விடும் என்றும், நமது தமிழ் நாட்டில் எல்லா பாஷைகளுக்குமே பிரதியாக இங்கிலீஷ் பாஷை ஏற்படுமென்றும் நம்பிய மூடர்கள் சுமார் 100 வருஷங்களின் முன்பு நமது ஜனங்களிலே பலர் இருந்தார்கள். இப்போதுங்கூட அந்த நம்பிக்கையுடையவர் ஆங்கிலேயர்களிலே அனேகர் இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள பாஷைகள் எல்லாம் மடிந்து போய் அவற்றின் இடத்திலே இங்கிலீஷ் நிலவிவரும் என்பது இவர்களுடைய எண்ணம். இஃதிவ்வாறு இருப்ப, மகாவித்வான் ஸ்ரீ உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் சில தினங்களின் முன்பு இவ்விஷயத்தைப் பற்றிப் பேசியபோது பின் வருமாறு கூறியிருக்கிறார்:--

"அன்னியர்களைக் குறை கூறிப் பயனில்லை. தமிழ்ப் பாஷையின் செல்வங்களையெல்லாம் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளாத குற்றம் நம்மவர்களையே சார்ந்ததாகும். எவ்வாறாயினும் நமது தாய்மொழி ஸாமானியத்தில் இறந்துவிடக்கூடியதன்று. பெரியோர்கள் இதனைக் 'கன்னித் தமிழ்' என்று பெயரிட்டழைத்திருக்கிறார்கள். இது எக்காலமும் வனப்பும் இளமையும் மாறாத கன்னிகையாகும். இதற்கு முதுமையே கிடையாது. மரணமும் இல்லை" என்றார்.

கன்னித் தமிழ் மொழியை முற்காலத்தில் ஆதரித்து வளர்த்தவர்களின் பெருமையைப் பற்றி, ஸ்ரீ சாமிநாதய்யர் பல அரிய விஷயங்கள் பேசினார். ஆசன், சீடன் என்போர் பண்டைக் காலத்தில் எங்ஙனம் ஒழுகி வந்தார்கள் என்பதை இனிது விளக்கினார். இறுதியில் திருவாரூரைப் பற்றித் தமிழ் நூற்களிலே தாம் செய்த ஆராய்ச்சியினின்றும் விளங்கிய பெருமைகளை வாசித்துக் கூறினார். தமிழ் வளர்ப்பதன் பொருட்டு முற்காலத்தில் இடத்துக்கு இடம் "திருக்கூட்டங்கள்" அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுள்ளே, புகழ் மிஞ்சிய திருக்கூட்டமொன்று திருவாரூரிலே இருந்தது. 'இலக்கண விளக்க' நூலாசிரியராகிய ஸ்ரீ வைத்தியநாத தேசிகர் இத்திருவாரூர்க் கூட்டத்திலே ஓர் அவபவியாக விளங்கினார்.

பசுங்கன்றைக் கொன்றதன் பொருட்டு, தன் சொந்த மகனை உருளையின்கீழே போட்டு மேலே தேரோட்டிய மனு நீதி கண்ட சோழன் முதலிய மேலோர் திருவாரூரிலே வாசம் புரிந்தவர்கள் என்பதைத் தற்கால அதிகாரிகளின் நீதியைக் கண்டு மகிழ்ந்திருக்கும் அவ்வூரினருக்கு ஸ்ரீ அய்யரவர்கள் நினைப்பூட்டினர். பின்னர், அவ்வூர்ச் சிறப்புகளைப் புராணக் கதைகளினின்றும் பல திருஷ்டாந்தங்கள் கூறித் தெளிவாக்கி, அவ்வூரார் தமது பண்டை மாண்புக்குத் தக்கவாறு வாழ்வதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதை வற்புறுத்தினர். இவ்வுபதேசத்தைத் திருவாரூர்ப் பிறந்தார்கள் மட்டுமேயன்றித் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மக்கலும் மனத்தே கொண்டு நலமுறுவாராக!

நன்றி: "புதுவையில் பாரதி" ஆசிரியர் திரு ப.கோதண்டராமன், M.A.,B.L.,
வெளியீடு, பழநியப்பா பிரதர்ஸ்.

Saturday, December 22, 2012

உன் பெயர் சொல்லி வாழ்வோம்!


உன் பெயர் சொல்லி வாழ்வோம்!

11-12-2012 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் வானவில் பண்பாட்டு இயக்கத்தார் நடத்திய மூன்று நாள் பாரதி விழாவில், அப்போதே சொல்லி கவிபாட வைத்தனர். அப்போது நான் எழுதி வாசித்த கவிதை (?) இது. பிழை இருந்தால் பொருத்தருள்க!


                                        உன் பெயர் சொல்லி வாழ்வோம்!

எட்டப்பன் செய்த துரோகச் செயலுக்கு
ஈடுசெய்ய நினைத்தானோ இறைவன் இன்று!
கரிசல்மண் நிறைந்த தென்பாண்டிபூமியிலே, பாரதி!
பெருமைமிகு குடியிலே உன்னைப் பிறக்கவைத்தான்! 1.

அச்சமில்லை என்றுசொல்லி மனத்துள் அச்சம்நீக்கி
இச்சைமிகு வாழ்க்கைமுறை அறவே நீக்கி
உச்சியிலே விடுதலையின் விதை விதைத்து
அச்சமின்றி தலை நிமிர்ந்து வாழவைத்தாய்! 2.

காலனை அழைத்துச் சற்றேமிதிப்பேன் என்றாய்!
காளியிடம் சென்றென்னைச் சோற்றுக்கு அலையவிட்டால்
பாடவே மாட்டேனுன்னை, நாத்திகனாய்விடுவேன் என்று
சூளுரைத்த உந்திறத்தை என்னவென்று நானுரைப்பேன்! 3.

என்ன அவசரமோ? இளமையிலே மாண்டுபோனாய்!
அந்தணனாம் சங்கரனும், அயோத்தியின் இராமபிரான்
கண்ணபிரான் முதலான அனைவருமே மாண்டபோதும்
நான்மட்டும் சாகாமல் இருந்திடுவேன் என்றாய்! 4.

தேடிதினம் சோறுதின்று ஒயாமல் சுகத்தை நாடும்
வேடிக்கை மனிதர்களின் முகத்திரையை நீகிழித்தாய்!
சின்னஞ்சிறு கதைகள்பேசி துன்பத்தைப் பிறர்க்குத் தந்து
கூற்றுக்கு இரையாகப் போவோரைச் சாடுகின்றாய்! 5.

பிறர்துன்பங் கண்டுமனம் வாடுபவன் புண்ணியனாம்
ஊருக்கு உழைத்திடுதல் யோகத்தின்பாங்கு என்றாய்,
ஊர்நன்மை நாடுவதே யாகம்எனச் சொல்லியென்றன்
வேருக்கு நீர்வார்த்த வழிகாட்டி நீயன்றோ? 6.

குப்பையிலே குருக்கத்திப் பூமலர்ந்தார்ப் போல்
கெளரவர் குலத்துதித்த விதுரன் பெருமைசொல்லி
ஏச்சாலும், இழிவாலுமவன் நிலைகுலையா குணம்சொல்லி,
ஏற்றமிகு நீதியை உலகுக்கு எடுத்துரைத்தாய்! 7

நரம்பெல்லாம் முறுக்கேற மனத்துள் உரமூட்டி
எரிதழலால் உள்ளத்து தீமையெல்லாம் எரித்திட்டாய்
ஊருக்கு நல்லவையும் உண்மையையும் எடுத்துச்சொன்னாய்
பேருக்கு வாழாமல், பாரதியே! பார்வாழ வாழ்ந்திட்டாய்! 8.

வாழ்க நீயே!

தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.

வாழ்வு ஓர் கனவு!


வாழ்வு ஓர் கனவு!

வாழ்வு ஓர் கனவு!

"உலகெலாமோர் பெருங்கனவு அஃதுளே
     உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்
 கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
     கனவினும் கனவாகும் இதனிடை
 சிலதினங்கள் உயிர்க்கு அமுதாகிய‌
     செப்புதற்கரிதாக மயக்குமால்
 திலத வாணுதலார் தரு மையலாம்
     தெய்விகக் கனவன்னது வாழ்வே."

பாரதியின் இந்தக் கருத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தது பட்டினத்தாரின் பாடல்: "பொய்யாய் பழங்கதையாய் மெல்லப் போனதுவே".

காந்திமதிநாதரும் மகாகவியும்


                                           காந்திமதிநாதரும்   மகாகவியும்

எட்டயபுரம் சமஸ்தானத்தில் காந்திமதிநாதன் என்பார் தமிழ்ப் புலவர். பாரதியினும் வயதில் மூத்தவர். மன்னர் அவையில் பாரதியின் புலமையைச் சோதித்துக் கொண்டு அவரை ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச் சொன்னார்கள். காந்திமதிநாதன் "பாரதி சின்னப் பயல் ," எனும் ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னார். அதில் பாரதியை ஏளனம் செய்யும் நோக்கமும் இருந்திருக்கிறது. பாரதி உடனே பாடினார்.

"ஆண்டில் இளையவன் என்ற‌ந்தோ அகந்தையினால்
 ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் ‍ மாண்பற்ற‌
 காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
 பாரதி சின்னப் பயல்"

"காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப் பயல்" எனும் பொருள்படும்படி அமைந்தது இந்தப் பாடல். உடனே வயதில் மூத்தவரை அப்படி ஏளனம் செய்தது தவறு என்றுணர்ந்து பாரதி, மறுபடி பாடலை மாற்றிப் பாடினார். எப்படி?

"ஆண்டில் இளையவன் என்றுஐய அருமையினால்
 ஈண்டின்று என்றன்தன்னை நீயேந்தினையால் மாண்புற்ற‌
 காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்கு
 பாரதி சின்னப் பயல்"

வயதில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்தார். அதுதான் பண்பாடு.

வயதில் மூத்த காந்திமதிநாதனை பாரதி அவமதித்து அவரைச் சின்னப் பயல் என்று பாடிவிட்டார் எனும் செய்தியை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்கள், உடனே அவன் மாற்றிப் பாடி அவரைப் பெருமைப் படுத்தியதையும் எடுத்துரைக்க வேண்டும்.

நாவடக்கம்

நாவடக்கம்

நம்முள் பல பிரச்சனைகள் தோன்றுவதற்கு நம்முடைய பேச்சே காரணம். அவசியத்துக்கு மட்டும் பேசினால் போதாதா? சிலருக்கு எப்போதும் யாரிடமாவது ஏதாவது பேச வேண்டுமென்கிற அரிப்பு. அப்படி பேசுவதும் அறிவு பூர்வமாகவும், அவசியமானதாகவும் இருந்தால் நன்று. இல்லாவிட்டால் தீது. இப்போதெல்லாம் எந்தப் பிரச்சனையானாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர். அரசியல் கட்சியார் நாங்கள் விவாதத்திற்குத் தயார் என்கின்றனர். ஒரு பிரச்சினையைப் பேசிப் பேசித் தீர்க்க முடியுமானால் உலகில் எந்தப் பிரச்சினையும் பூதாகாரமாக வளர வாய்ப்பில்லையே. வாசாலகத்தால் பேசியே பிறரை மடக்கி விட முடியும், அவர்களுடைய நியாயமான கருத்துக்களைக் கூட பொசுக்கி விட முடியும் என நினைப்பவர் பலர். இந்த விவாதம் அதாவது "தர்க்கம்" குறித்து பாரதி சொல்வதைப் பார்ப்போம்.

"விரைந்து கேட்க; மெல்லச் செல்லுக" (இது பைபிள் வாசகம்)

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்: "பிறர் குணதோஷங்களைப் பற்றித் தர்க்கிப்பதிலே பொழுது செலவிடுவோன், பொழுதை வீணே கழிக்கிறான். தன்னைப் பற்றி சிந்தனை செய்தாற் பயனுண்டு. ஈசனைப் பற்றிச் சிந்தனை செய்தாற் பயனுண்டு. பிறரைப் பற்றி யோசித்தல் வீண்."

'ஹெர்மஸ்' என்ற புராதன மிசிர (எகிப்து தேசம்) ஞானி: "மகனே! விவாதத்தில் நேரங்கழித்தல் நிழலுடன் போராடுவதற்கு நிகராகும்."

'ஸொக்ராதெஸ்' (சாக்ரடீஸ்) என்ற கிரேக்க ஞானி: "அறியாதார் பேச்சை நிறுத்தினாற் கலகமில்லை"

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்: "வாதாடுவதனால் பிறன் தனது பிழைகளை அறிந்துகொள்ளும்படி செய்ய முடியாது. தெய்வத்தின் திருவருள் ஏற்படும்போது, அவனவன் பிழைகளை அவனவன் தெரிந்து கொள்வான்."

திருவள்ளுவர்: "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு."

"பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றாதவர்."

சித்தக்கடல்


சித்தக்கடல்

மகாகவி பாரதியார் 1915இல் "சித்தக்கடல்" எனும் சிறு நூலில் 1915 ஜூலை 1ஆம் தேதி என்று தேதியிட்டுக் கீழ்வருமாறு எழுதுகிறார்.

"இந்த மனமாகிய கடலை வென்றுவிடுவேன். பல நாளாக இதை வெல்ல முயன்று வருகிறேன். இந்த மனத்தை வெல்ல நான் படும் பாடு தேவர்களுக்குத்தான் தெரியும். இதிலே ப்ராண பயம், வியாதி பயம், தெய்வ பக்திக் குறைவு, கர்வம், மமதை, சோர்வு முதலிய சம்ஸ்காரங்கள் மிகுதிப்பட்டிருக்கின்றன. இவற்றை ஒழித்துவிட வேண்டும்.

'சலோ! தெய்வமுண்டு. அது அறிவு மயம். அந்த அறிவுக் கடலில் நான் என்பது ஒரு திவலை. அதற்கும் எனக்கும் ஒரு குழாய் வைத்திருக்கிறது. அந்தக் குழாயை அஹங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. இந்த அஹங்காரத்தை நீக்கிவிட்டால் தெய்வ சக்தியும் தெய்வ ஞானமும் எனக்கு உண்டாகும்."
----

புகையிலைச் சாற்றினால் தலை குறுக்கிறது. 20 தரம் புகையிலையை நிறுத்தி விடுவதாக ப்ரதிக்கினை செய்திருக்கிறேன். இதுவரை கைகூடவில்லை. ஸம்ஸ்காரம் எந்தனை பெரிய விலங்கு பார்த்தாயா? மகனே, ஸம்ஸ்காரங்களைச் சக்தியினால் வென்றுவிடு.
----

உடல் படுத்துக் கொண்டது. உடலை வைரம் போல இலாகவமுடையதாகவும், சிங்கத்தைப் போல வலியுடையதாகவும் செய்ய வேணும். உடனே வசப்படாவிட்டால் இந்த உலகத்தில் வாழ்க்கை பெருந்துன்பந்தான். உடம்பே! எழுந்து உட்காரு. உடம்பு எழுந்துவிட்டது. முதுகு கூனுகிறது. அந்த வழக்கத்தைத் தொலைத்துவிட வேண்டும்.
----

வயிறு வேதனை செய்கிறது. உஷ்ண மிகுதியால், நோயற்று இருப்பதற்குச் சக்தியை ஓயாமல் வேண்டிக்கொள். நோயில்லையென்று மனத்தை உறுதி செய். மனம் போல் உடல்.
----

மகனே! உடல் வெற்றி கொள். அது எப்பொழுதும் நீ சொன்னபடி கேட்க வேண்டும். அது சொன்னபடி நீ கேட்கலாகாது. அது மிருகம். நீ தேவன். அது யந்திரம், நீ யந்திரி.

ஜூலை 2.

வியாதி பயம், சோம்பர். இன்று காலைப் பொழுதையும் இவை வந்து வீணாக்கிவிட்டன. செ... வழக்கம்போல் வந்தான். பரமேஸ்வரி, மகாசக்தி - உன்னிடத்தில் அமரத்தன்மை கேட்கிறேன். என்னை மனக்கவலையிலிருந்து விடுவிக்க வேண்டும். உன்னை எப்போதும் சிந்தனை செய்து கொண்டும், உனது மஹா அற்புதமான உலகத்தை எப்போதும் கண்டு தீரா மகிழ்ச்சியடைந்து கொண்டும், தர்மங்களை இடைவிடாமல் நடத்திக் கொண்டும் வருந்திறமை எனக்கு அருள் செய்ய வேண்டும்.

மனமாகிய குரங்கு செய்வதையெல்லாம் எழுதிக்கொண்டு போனால் காலக்கிரமத்தில் அதை வசப்படுத்தி விடலாம் என்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்கு முன்பாக அதன் இயல்புகளையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்மால் நன்றாக அறியப்படாததை நாம் வசப்படுத்த முடியாது. சித்தத்தை வசப்படுத்துமுன் சித்தந்தை அறிய வேண்டும். அதன் சலனங்களை ஓயாமல் கவனித்து எழுதிக்கொண்டு வன்ஹால் அதன் தன்மை முழுவதையும் அறிய ஹேதுவுண்டாகுமென்பது என்னுடைய தீர்மானம்.

பராசக்தீ! ஒவ்வொரு கணமும் எனது சித்தம் சலிக்கும் முறைகளை அப்போதப்போது பொய்மையில்லாமலும் வஞ்சகமில்லாமலும் எழுதுவதற்கு எனக்குத் தைரியம் கொடுக்க வேண்டும்.

நாம் எழுதுவதைப் பிறர் பார்க்க நேரிடும் என்று கருதி நமது துர்ப்பலங்களை எழுத லஜ்ஜை உண்டாகிறது. பராசக்தீ! என் மனத்தில் அந்த லஜ்ஜையை நீக்கிவிட வேண்டும்.

பாரதியினுடைய மனநடைகளை எழுதப் போகிறேன். நான் வேறு, அவன் வேறு. நான் தூய அறிவு. அவன் ஆணவத்தில் கட்டுண்ட சிறு ஜந்து. அவனை எனக்கு வசப்படுத்தி நேராக்கப் போகிறேன். அவனுடைய குறைகளை எழுத அவன் லஜ்ஜைப்படுகிறான். அந்த லஜ்ஜையை நான் பொருட்டாகாதபடி அருள் செய்ய வேண்டும்.

எழுது. பராசக்தியின் புகழ்ச்சிகளை எழுது. அடா! பாரதீ, அதைக்காட்டிலும் உயர்ந்த தொழில் இவ்வுலகத்தில் வேறொன்று இல்லை. பராசக்தி வாழ்க. அவள் இந்த அகில உலகத்துக்கு ஆதாரம். அகிலம் நமக்கு மூன்று வகையாகத் தெரிகிறது. -- ஜடம், உயிர், அறிவு என இவை தம்முட் கலந்தன. அறிவுலகத்திலே பல படிகள் இருப்பதாக யோகிகள் நிச்சயித்திருக்கிறார்கள்.

இவற்றுள் ஜடத்துக்கு உயிரும், உயிருக்கு அறிவும் காரணமாமென்று யோகிகள் சொல்லுகிறார்கள்.

இவை அனைத்திற்கும் மூலப் பொருளாய், இவையனைத்தையும் தனது உறுப்புக்களாகக் கொண்டு, இவையனைத்தும் தானாய், இவையனைத்தின் உயிர்நிலையாக ஒரு பொருள் உண்டு. அதனை மஹாசக்தி என்கிறோம். அதை இடைவிடாமல் தியானம் செய்வதால் உனது குறைகள் எல்லாம் நீங்கும். பெரிய பொருளை இடைவிடாது பாவனை செய்யும் அறிவுதான் பெருமையடைகிறது.

சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் பராசக்தீயை த்யானம் செய்யுமானால் அவளுடைய சாயை இதிலே படும். அதிலே சுகமுண்டு. ----


பத்திரிகைகளுக்கு வியாஸங்கள் எழுதவேண்டும், கடிதங்கள் எழுதவேண்டு. சோம்பர் உதவாது. வெற்றிலை போடுவதைக் குறைக்க வேண்டும். பணமில்லாததைப் பற்றிக் கவலைப் படலாமா? மூடா, மூடா, மூடா, நாம் சுத்த அறிவில்லையா? உலக வ்யவஹாரங்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆணவக் காட்டிலே அகப்பட்ட சித்தத்தின் விருப்பப்படி இந்த உலகில் ஏதாவது நடக்கிறதா? சாகாத ஜந்து உண்டா? எல்லா ஜந்துக்களும் உயிரை ஓயாமல் காக்கின்றன. அதில் பயனுண்டா? உயிரே ஜீவனுடைய வசமில்லாதபோது வேறெதைப் பற்றிக் கவலைப்படுவதிலேயும் என்ன பயன்? பராசக்தியின் கட்டளைப்படி உலகம் நடக்கிறது. உனக்கு வேண்டிய இன்பங்களை அவளிடம் வேண்டிக் கொள். அவல் கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு சுகமாக இரு.

எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப் பேய்களெல்லாம் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப்போய்விடும்.

"உத்யோகினம் புருஷஸிம்ஹ முபைதி லக்ஷ்மீ"

பராசக்தியைத் தியானம் செய்து கொண்டேயிருந்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கிவிடும். உடலும் உயிரும் ஒளி பெற்று வாழும். நூறு வயதுக்குக் குறைவில்லை. இது ஸத்தியம். நூறு வயது நிச்சயமாக வாழ்வாய். மனிதனுக்கு இயற்கையிலே நூறாண்டு ஏற்பட்டது. இயற்கை தவறாமல், மூடக் கவலைகளில்லாமல் இருந்தால் நூறு வயது அவசியம் வாழலாம். மகனே! அச்சத்தைப் போக்கு.

மண்ணையும், காற்றையும், கடலையும் எத்தனை யுகங்கள் ஒரே வடிவத்தில் வைத்துக் காப்பாற்றுகிறாய்? பராசக்தீ, எனது கருவிகரணங்களிலே நீ பரிபூரணமாக ஸந்நிதி கொண்டு என்னையும் அங்ஙனமே காக்க வேண்டும்.

இன்பமில்லையா?

பராசக்தீ, இந்த உலகத்தின் ஆத்மா நீ.

உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக்கூடாதா?

முதலாவது எனக்கு என்மீது வெற்றி வரவேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாகிவிட்டது. இரண்டு மாதகாலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளும் புழு துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை. இருவருக்கும் எப்போதும் சஞ்சலம், பய, பயம், பயம்! சக்தி உன்னை நம்பித்தான் இருந்தோம். நீ கடைசியாகக் காப்பாற்றினாய், உன்னை வாழ்த்துகிறேன்.

கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம் -- தீராத குழப்பம். எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!

பராசக்தீ, ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி திருவருள் செய்ய மாட்டாயா? கடன்கள் எல்லாம் தீர்ந்து தொல்லையில்லாதபடி எனது குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை ஆயிரவிதமான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன். உலகில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச்சிவப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும்.

தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?

மனைவியைப் பிரிந்து செல்லும்படி சொல்லுவதில் பயனில்லை. அவளும் உன் சரணையே நம்பி, என்னுடன் எப்போதும் வாழ்ந்துகொண்டு, உனது தொழும்பிலே கிடைக்கும் புகழில் பங்கு பெற்று மேன்மையுற விரும்புகிறாள்.இயன்றவரை உண்மையோடுதான் இருக்கிறாள். அவளையும் நீ சம்ரக்ஷணை செய்ய வேண்டும்.

அவளுக்கு நோயின்மை, கல்வி, கவலையின்மை, பக்தி, ஞானம் முதலிய சோபனங்களெல்லாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

குழந்தையை உனது குழந்தையாகக் கருதி, இவ்வுலகில் நீடித்துப் புகழுடன் வாழும்படி திருவருள் செய்ய வேண்டும். காசியிலிருக்கும் குழந்தையையும் நீதான் காப்பாற்ற வேண்டும்.

எனது க்டும்ப பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது. உன்னைப் புகழ்ச்சி புரியும் தொழில் என்னைச் சேர்ந்தது. தாயே! ஸம்மதந்தானா?

மஹாசக்தீ! என்னுள்ளத்தில் எப்போதும் வற்றாத கவிதையூற்று ஏற்படுத்திக் கொடு.

ஓயாமல் வியாதி பயங்கொண்டு உளைகின்ற நெஞ்சமே! தூ! தூ! தூ! கோழை!

புகையிலை வழக்கம் தொலைந்துவிட்டது, பராசக்தியின் அருளால். இனிக் 'கஸரத்' வழக்கம் ஏற்பட வேணும். நெஞ்சு விரிந்து, திரண்டு, வலிமையுடையதாக வேணும். இரத்தம் மாசு தீர்ந்து, நோயின்றி, நன்றாக ஓடி, உடலை நன்கு காத்துக் கொண்டிருக்க வேணும் - பராசக்தியின் அருளால்.

செட்டி பணத்துக்கு எத்தனை நாள் பொய் சொல்லுகிறது? பொய் வாயிதா, பொய் வாய்தா, பொய் வாய்தா - தினம் இந்தக் கொடுமைதானா? சீச்சீ!

மஹாசக்தீ, நீயிருப்பதை எவன் கண்டான்? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான்? இந்த உலகம் - சரி! இப்போது உன்னை வையமாட்டேன். என்னைக் காப்பாற்று, உன்னைப் போற்றுகிறேன்.

பிறருக்கு நான் தீங்கு நினையாதபடி நீ அருள் புரிந்தால் நல்லது. துஷ்டர்களைக்குட நீ தண்டனை செய்து கொள். எனக்கு அதிலே சந்தோஷமில்லை. எனக்குப் பிறர் செய்யும் தீங்குகளை நீ தவிர்க்க வேண்டும். நான் உன்னையே சரணடைகிறேன்.

சொல்லு! மனமே, சொல்லு, பராசக்தி
வெல்க, பராசக்தி வெல்க!
----



மகாகவி பாரதியாரின் இசைக்கோட்பாடுகள்


மகாகவி பாரதியாரின் இசைக்கோட்பாடுகள்

முன்னுரை:

மகாகவி பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற கவிஞர். தினந்தினம் 'உண்டு உறங்கி பிறருக்கு இடர்செயும் கலக மானுடப் பூச்சிகள்' போலன்றி அவன் தனித்துவங்களுடன் வாழ்ந்தவன். அவனுடைய சிந்தனைகள் மிகவும் உன்னதமான வைகள். தான் உயர்ந்த அளவுக்குப் பிறரும் உயரவேண்டும் எனும் கருத்துடையவன் பாரதி. அவன் எழுதிய ஒவ்வொரு எழுத்தும், அவனது கவிதைகள், கட்டுரைகள், கதைகள், பத்திரிகைக் குறிப்புகள் என அத்தனையும் அமரத்துவம் வாய்ந்தவை.

"தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"

என்று இறைவனிடம் எக்காளமிட்டவன். பொதுவாகக் கவிஞர்கள் ஏதேனுமொரு அமர காப்பியத்தைப் படைத்து அதனால் புகழ் பெறுவார்கள். ஆனால் பாரதியோ அவன் வாழ்ந்த காலத்தின் கண்ணாடியாக இருந்தான். அவன் வாழ்ந்த காலத்திய சமூகம் எப்படியிருந்தது; அரசியல் எப்படி இருந்தது; மனிதர்கள் எப்படி இருந்தார்கள்; அவர்தம் மனோபாவம் எப்படி இருந்தது என்பதையெல்லாம் இவன் படைப்புகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அதனால்தான் அவன் இன்றைக்கும் போற்றிப் புகழப்படுகிறான்.

மகாகவி பாரதிக்குப் பல துறைகளில் நல்ல புலமை இருந்தது. இசையும் கவிதையும் அவனது மூச்சுக் காற்றாக விளங்கியது. இசையின் நுணுக்கங்களை நன்குணர்ந்த இசை மேதை பாரதி. அவன் குரலைக் கேட்கும் பாக்கியம் நம் தலைமுறையினருக்குக் கிடைக்க வில்லையாயினும், வீரக்கனல் வ.வெ.சு.ஐயர் ஒரு நூலுக்கு எழுதிய முன்னுரையில் சொல்லு கிறார், "புதுச்சேரி கடற்கரையில் பாரதி தனது கவிதைகளைத் தேனினும் இனிய அவனது அற்புதக் குரலெடுத்து உரத்தக் குரலில் பாடுகின்றபோது கேட்கக் கொடுத்து வைத்தவர்கள் புண்ணியவான்கள்" என்கிறார் அவர். இனி மகாகவியின் இசைக் கோட்பாடுகள் குறித்த சில செய்திகளைப் பார்க்கலாம்.

குயிலின் இசை:

மகாகவி இயற்றிய முப்பெரும் காப்பியங்களில் "குயில் பாட்டும்" ஒன்று. இந்த குயில்பாட்டு அரிய பல செய்திகளை உள்ளடக்கியது. புதுவை கடற்கரையில் அலைகள் எழுப்பும் ஓசை கவிஞருக்கு இசையாக, அதிலும் வேதப் பொருளை எடுத்துரைக்கும் இசையாக வந்து காதில் கேட்கிறது. அருகேயுள்ள மாந்தோப்பிலிருந்து தேவகானம் இசைக்கும் குயிலின் இசை அவரது சிந்தைக்கு அரிய பொருளையெல்லாம் எடுத்து இயம்புகிறது. அப்படி அந்தக் குயிலின் இசை சொன்ன வரலாற்றைத்தான் குயில் பாட்டாக அவர் தந்திருக்கிறார்.

புதுவை கடற்கரையில் காலை இளம்பரிதியின் கதிர்வீச்சில் காணப்படும் விந்தைகளை யெல்லாம் அடுக்கடுக்காக இசையால் எடுத்தியம்புகிறார் பாரதியார். அவர் சொற்களைச் சிறிது செவி மடுப்போம் வாரீர்.

"காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்
தங்க முருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?"

எழுஞாயிறின் வண்ணக் கதிர்களும், அவைகளின் தங்க நிற காட்சிகளும் கவிஞர் நெஞ்சில் கவிதையாக மட்டுமல்ல இசை வெள்ளமாகவும் வந்து பாய்கிறது. குயிலின் இன்னிசைக் குரல் தேவலோகத்து அமுதமாக ருசிக்கிறது கவிஞருக்கு. அவர் சொல்கிறார்.

"இன்னமுதைக் காற்றினிடை எங்கும் கலந்ததுபோல்
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகைனிதாய் வந்து பரவுதல் போல்"

மின்னலுக்குச் சுவையுண்டா? அமுதத்தைக் காற்றில் கலந்துவிட்டால், அந்தக் காற்றிலெழும் ஓசையும் இனித்திடுமா? ஆம், பாரதிக்கு இனிக்கிறது அந்த இசை. இந்த இசைதான் எத்தனை வகை? அவற்றில் மயங்காதார் யார்? மனிதன் மட்டுமா இசைக்கு இணங்குகிறான், இல்லையில்லை. "காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும், பாட்டின் சுவையதனை பாம்பறியும் என்றுரைப்பார்" என்கிறார். இந்த மேற்கோள் ஒரு சம்ஸ்கிருத வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு. புதுவை நகர் மாந்தோப்பில் வேடர் வராத விருந்துத் திருநாளில் ஒருநாள், மரக்கிளை ஒன்றில் அமர்ந்திருந்த குயில் தன் இனிய குரலெடுத்துப் பாடுகிறது. மின்னலின் சுவை என்று முன்பு சொன்ன பாரதி இங்கு நெருப்புச்சுவை மிகுந்த பாடல் என்கிறார். காதல் அப்படி சுடுகிறதாம். அந்தக் குயில் எழுப்பும் நாதக் கனலிலே நம் உயிரைப் போக்கிடலாம் என்றுகூட எண்ணத் தலைப்படுகிறார் கவிஞர். இப்படி இசையின் இனிய பெட்டகமாகத் தன் குயில் பாட்டைப் பாடியிருக்கிறார் பாரதியார்.

இசையுணர்வு:

இந்த பூமியில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்குள், இசையின் மூலம் தனது மன உணர்வுகளை வெளிப்படுத்தும் இயல்பு மனிதனுக்கு மட்டும்தான் இருக்கிறது. பறவைகளும் அவைகளுக்குரித்தான குரலில் இனிய இசையை வெளிப்படுத்துகிறது. அவற்றின் குரல் களில்தான் எத்தனை எத்தனை உணர்வுகள். ஆடி மாதம் தொடங்கிய நேரத்தில் 'அக்கா'க் குருவிகள் "அக்கோ" என்று இனிய குரலெழுப்ப, மற்றொரு குரிவியும் அதற்கு பதிலளித்து அக்கோ குரல் எழுப்புவதைக் கேட்கதார் யார்? மிருகங்களுக்கு இல்லாத இந்த இசை ஞானம் பறவைகளுக்கு மட்டும் எப்படி ஏற்பட்டிருக்கும். இந்த பூமியிலிருந்து வெகு தூரம் மேலே மேலே சென்று பறந்து வரும்போது இவ்வுலகம் கனவுலகம் போலத் தெரிகின்றதோ? அந்த மகிழ்ச்சியில் விட்டுவிடுதலையாகி நிற்கும் உணர்வில்தான் இசை பிறக்கிறதோ? இருக்கலாம். வானம்பாடி, குயில் போன்ற பறவைகள் இயல்பில் வானவெளியில் பறக்க முடிகிறது. மனிதனுக்கு அப்படி பறக்க இயலாமல் போனாலும், உணர்வால், மனத்தால் வான வெளியில் பறந்து திரிகிறான். அதனால் அவன் மனத்திலும் இயல்பாக உணர்ச்சிகளை வெளிப் படுத்தும் விதமாக இசை வெளிவருகிறது.

மகாகவி பாரதி 'சங்கீத விஷயம்' என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் சங்கீதம் எனும் இசை பற்றி விரிவாக விவாதித்திருக்கிறார். இசையைப் பற்றி அறிந்த அனைவருமே படிக்க வேண்டிய அரிய கட்டுரை அது. அதில் 'நவரஸங்களை'ப் பற்றி விளக்கு கிறார். மனித உணர்வுகள் வெளிவரும்போது அதில் இந்த நவரஸங்களில் ஏதாவதொன்று இருந்தே ஆகவேண்டும். அவை:-

1. வீரம் 2. ரெளத்ரம் (கோபம்) 3. அத்புதம் (ஆச்சர்யம்) 4. சாந்தம் (அமைதி) 5. பயாநகம் (பயம்) 6. பீபத்ஸம் (வெறுப்பு) 7. ஹாஸ்யம் (நகைச்சுவை) 8. கருணை, சோகம் (துயரம் அல்லது அவலம்) நிறைவாக 9. சிருங்காரம் (காதல்)

இந்த ஒன்பது உணர்வுகளும் மனிதனின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் இசை வடிவில் பாடலாக அது வெளிவரும் போது அந்தந்த பாடலின் கருத்து மட்டுமல்ல, அந்தந்த ராகங்களேகூட இந்த ரஸங்களில் ஏதாவதொன்றைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

நல்ல கவிஞன் இந்த ரஸங்களை உணர்ந்தவனாக இருப்பான் என்கிறார் பாரதி. அவர் சொல்கிறார், பிறர் துன்பம் கண்டு பொறாத 'புண்ணியமூர்த்தி' ஒருவனையும், மற்றவர் உணர்வுகளை மதிக்காத ஒருவனையும் கவிதை எழுதச் சொன்னால், முதலவன் எழுதுவது கவிதையாக இருக்கும், மற்றவனுடையது சொற்களைப் பின்னிய எழுத்து வடிவங்களாக இருக்குமென்கிறார் பாரதி.

ரஸஞானம்.

எந்தவொரு பாடலிலும் ரஸஞானம் இருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடு. அப்படி ரஸஞானமில்லாதபடி பாடல்களைப் பாடுவோர் யாராயினும், அவர்கள் சங்கீதத்தின் உயிரைநீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தை மட்டும் காட்டுகிறார்கள் என்று கடுமையாகச் சொல்கிறார். ஆகவே சங்கீதம் பாடுவோர் இந்த ரஸ உணர்வு படைத்த வர்களாக இருத்தல் வேண்டுமென்பது அவரது கூற்று.

பற்பல மகான்களுடைய பாடல்களைப் பாடுவதால் மட்டுமே ஒருவன் நல்ல சங்கீத வித்வானாக ஆவதில்லை. அந்தப் பாடல்களில் அவற்றை இயற்றிய மகான்கள் புகுத்தியிருக்கும் ரஸம் வெளிப்படும்படி பாடவேண்டுமென்பது பாரதியின் கட்சி. எந்த இசை நிகழ்ச்சிக்குப் போனாலும் குறிப்பிட்ட ஒருசில பாடல்களை மட்டும்தான் வித்வான்கள் பாடுகிறார்கள் என்று பாரதி குறைப்பட்டுக் கொள்கிறார். புதிய புதிய பாடல்களை உருவாக்க வேண்டும். அதற்காக பூர்வீக மகான்களின் பாடல்களை மறக்கச் சொல்லவில்லை. அவற்றையும் பொருள் புரிந்து பாட வேண்டும், அதோடு புதிய பாடல்களை இயற்ற முயற்சி செய்தல் வேண்டும் என்கிறார் பாரதி.

பூர்வ காலத்து மகான்களுக்குத் தெய்வ அனுக்கிரகம் இருந்தது, எங்களுக்கில்லையே என்று சாக்கு போக்கு சொல்வதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. நீயும் பக்தியாலும், ஜீவதயையாலும், நேர்மையாலும், உண்மையாலும் இடைவிடாத உழைப்பினாலும் அப்படி அமரத்துவம் வாய்ந்த ரஸம் மிகுந்த பாடல்களை இயற்ற முடியும் என்கிறார் பாரதி. முற்காலத்தில் அரசர்களும், செல்வந்தர்களும் இருந்தார்கள் பாடகர்களை ஆதரிக்க. இப்போது நம் நாட்டில் மக்கள்தான் ராஜாக்கள். அவர்கள் இசைக் கலைஞர்களை ஆதரிக்க வேண்டுமென்பது பாரதியின் கருத்து.

பாட்டும் பாடகர்களும்

ஒரு பாடலென்று எடுத்துக் கொண்டால், அந்தப் பாட்டுக்குத்தான் தாளம் அமைய வேண்டுமே தவிர தாளத்திற்கேற்ப பாடல் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் பாரதியார். திரைப்படங்களில் இப்போதெல்லாம் சொல்லும் வார்த்தைகள், 'மெட்டுக்குப் பாட்டு' என்பது. இது சுத்த அபத்தம் என்பது பாரதியாரின் எண்ணம். 'சக்கனி ராஜ மார்க்கமு' என்றொரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை. 'அகண்ட ராஜபாட்டைகள் இருக்கும்போது ராமா! என்னை சந்திலும் பொந்திலும் வரும்படி செய்யலாமா?' என்ற பொருளில் வரும் இந்தப் பாடலின் ராகத்தைப் பாடும்போது அந்த தொனி ராகத்தில் இருக்கும் என்கிறார் அவர்.

பாடகர்கள் தங்கள் குரல் வளத்தைப் பேணிக் காக்க வேண்டுமென்பது பாரதியாரின் அறிவுரை. அவர் சொல்கிறார்:--

"சுமார் 12 வருஷங்களுக்கு முன்பு (அவர் எழுதிய காலத்தில்) நான் இரண்டு மூன்று வருஷம் ஸ்ரீகாசியில் வாசஞ்செய்தேன். அங்கே, பாட்டுக் கச்சேரி செய்ய வரும் ஆண்களுக்கெல்லாம் நேர்த்தியான வெண்கலக் குரல் இருந்தது. பெண்களுக்கெல்லாம் தங்கக் குரல். அங்கிருந்து தென்னாட்டிற்கு வந்தேன். இங்கே ஓரிரண்டு பேரைத் தவிர மற்றபடி பொதுவாக வித்வான் களுக்கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வியப்பு உண்டாயிற்று. ஒன்றுபோல எல்லோருக்கும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும் நயம் குறைந்தும் இருப்பதன் காரணமென்ன? இதைப் பற்றி சில வித்வான்களிடம் கேட்டேன். 'வட நாட்டில் சர்க்கரை, பால், ரொட்டி, நெய் சாப்பிடுகிறார்கள். புளியும், மிளகாயும் சேர்ப்ப தில்லை. இங்கே புளி, மிளகாய் வைத்துத் தீட்டுகிறோம். அதனாலேதான் தொண்ட கெட்டுப் போகிறது' என்றனர். அது ஒரு சிறிது வாஸ்தவம்தான் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் அதுவே முழுக்காரணம் அன்று. நம்மவர் தொண்டையை நேரே பழக்குவதில்லை. காட்டு வெளிகளிலே போய், கர்ஜனை செய்ய வேண்டும். நதி தீரங்கள், ஏரிக்கரை, கடற்கரைகளிலே போய்த் தொண்டையைப் பழக்க வேண்டும். சாஸ்திரப்படி ஆகார சாதனம் செய்யும் வழக்கம் தென்னாட்டிலே குறைவு பட்டிருக்கிறது."

நல்ல சங்கீதம் பழக, உள்ளத்திலே வீரம் இருக்க வேண்டுமென்கிறார் பாரதி. "உள்ளத்தில் 'சத்து' இல்லாதவர்களுக்கு ஒரு தொழிலும் நேரே வராது. கலைகள் நேர்ப்படுவதைப் பற்றி பேசவேண்டியதில்லை" என்கிறார் அவர்.

பாட்டு வகைகள்:

தமிழ் நாட்டில் பெண்கள் பாடுவதற்கு பல வகையான பாடல்கள் உண்டு. அவை கும்மி, பல்லிப்பாட்டு, கிளிப்பாட்டு, நலுங்குப் பாட்டு, அம்மானை, தாலாட்டு முதலியன. தமிழ்ப் பெண்கள் பாடல்களுக்கு கையெடுத்துக் கும்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு, அவற்றில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் பல உண்டு என்கிறார் அவர்.

வாத்திய இசை கற்க விரும்பும் பெண்கள் வீணையைப் பழகவேண்டும் என்பது பாரதியின் விருப்பம். வீணை கற்பது சற்று சிரமம் என்றாலும் போகப் போக அது பழகிவிடும் என்கிறார். இந்தக் கருவியை வாசிக்கக் கற்றுவிட்டால் அதுதான் உண்மையான சங்கீத தேர்ச்சி என்கிறார் அவர்.

ஆணாயினும் பெண்ணாயினும் தங்களுக்கு அமைந்த தொண்ட குரல் வளத்தோடுதான் பாடவேண்டுமே தவிர பொய்த்தொண்டை எனும் குரல் மாற்றிப் பாடுவதை அவர் ஏற்கவில்லை. சங்கீதத்தில் ஆண்களுக்குப் பெண்களுக்கு என்று பல வசதியான பிரிவுகள் இருந்தபோதும், இருபாலரும் பாடத்தக்கப் பல பாடல்கள் உண்டு என்று பாரதி குறிக்கிறார். நமது வேதாந்தக் கருத்துக்களில் ஜீவாத்மா, பரமாத்மா கருத்துக்கள் உண்டு. அப்படி ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் பக்தி மார்க்கப் பாடல்கள் பல உண்டு என்று சொல்லி அவற்றை அவர் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

திருவாசகத்தில் எம்பாவை, அம்மானை, தும்பி, குயில், கிளி இவைகளின் தூது, தெள்ளேணம், சுண்ணம் இடித்தல், சாழல், உந்தி, பூவல்லி, தோணேக்கம், ஊசல், துயிலெழுப்புதல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். இவற்றில் தெள்ளேணம் என்பது நடுவில் ஒரு முரசை வைத்து பெண்கள் அதைச் சுற்றியிருந்து இரு கைகளிலும் கோல் வைத்துக் கொண்டு அதனைக் கொட்டி அந்தத் தாளத்துக் கேற்ப இசையமைத்துப் பாடுதல். பூவல்லி என்பது பூ தொடுத்துக் கொண்டே பாடுவது. தோணேக்கம் என்பது, பெண்கள் வட்டமாக நின்றுகொண்டு ஒருவர் தோள் மீது கைபோட்டுக் கொண்டு பாடுவது. இவையெல்லாம் காலவோட்டத்தில் இல்லாமலே போய்விட்டது வருந்துதற்குரியது. தோணேக்கம் என்பது இப்பொழுதும் வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் குறிப்பாக மேகாலயா, நாகாலாந்து போன்றவிடங்களில் ஆடப்படுகின்றன.

குழந்தைகளுக்குரிய தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பணி முதலிய பாடல்களையும் பாரதி குறிப்பிட்டுச் சொல்கிறார். குடும்பத்துப் பெண்கள் திருமணங்களில் நலுங்கு, பத்யம், ஊஞ்சல் போன்றவற்றையும், இளஞ்சிறார்கள் கும்மி, அம்மானை, தூது, மாலை, சோபனம் போன்றவற்றைப் பாடவேண்டுமென்கிறார்.

இசையை வளர்க்க பெண்கள் செய்ய வேண்டியவை.

பெண்கள் பொது இடங்களில் பாட நேரும்போது கூச்சப்பட்டுக் கொண்டு பாடாமல் இருந்துவிடக் கூடாது. இசை, நடனம் போன்ற வித்தைகளைக் கற்பதில் கூச்சத்திற்கு இடமில்லை. பெண்கள் கல்வியில் தேர்ச்சி அடைவதைப் போலவே நமது பாரம்பரியக் கலைகளிலும் தேர்ச்சியடைய வேண்டுமென்பது பாரதியின் விருப்பம். குறிப்பாக நம் தமிழ் நாட்டுப் பெண்களுக்காகவே அவர் ஒரு அறிவுரையைக் கூறியிருக்கிறார். அதனை பெண்கள் அனைவரும் தங்கள் மனங்களில் வாங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக அந்த அறிவுரையை அப்படியே தருகிறேன். அது:--

"தமிழ் நாட்டுப் பெண்கள், திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் ஆரத்தி எடுக்கும்போது பார்சி மெட்டில் பாடி ஆரத்தி எடுப்பது; இங்கிலீஷ் பாடி நலுங்கு நடத்துதல் முதலான கோரமான விவகாரங்களுக்குத் துணை செய்யக் கூடாது. நமது நாடக சாலைக்குள்ளே கல்வியறிவும், சாஸ்திரப் பழக்கமும், நாகரீகமும் நுழையும் காலம் வரை, நமது பெண்கள் நாடகப் பாட்டுகளை கவனியாமல் இருப்பது நன்று. வேதாந்தக் கொடுமையையும் கொஞ்சம் குறைத்துவிட்டால் பெரிய உபகாரம்".

இங்கு அவர் குறிப்பிடம் நாடகப் பாட்டுகள் என்பது அன்றைய தினம் திரைப்படம், தொலைக்காட்சி இவைகள் இல்லாத காரணத்தால்தான் இன்றைய சூழ்நிலையில் எவையெவையெல்லாம் இந்த வரையரையுள் வருகின்றன என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, பாரதியின் இசைக் கோட்பாடுகளைக் குறித்த சில உரத்த சிந்தனைகளை உங்கள் முன்பு வைக்கிறேன். நன்றி.












Saturday, December 31, 2011


நாள் காட்டியில் ஒவ்வொரு நாளும் ஒரு தேதியைக் கிழிக்கிறோம். மாதாந்திர நாள் காட்டியில் ஒவ்வொரு மாதமும், ஆண்டுக்கொரு முறை புதிய ஆங்கில ஆண்டு பிறக்கிறது. எந்த நாளும் நல்ல நாளாக இருக்க வேண்டும். அது போன்றே புதிதாய்ப் பிறக்கிற ஆண்டும் நமக்கு நல்லதைச் செய்ய வேண்டும். அதற்காக நமது புருனெய் தனுசு அவர்கள் எழுதியிருக்கும் இந்தக் கவிதை நமக்கெல்லாம் நன்மையைக் கொண்டு வந்து தரவேண்டும்.


       இனிய 2012 புதிய ஆண்டே வருக!





 விடியும் விடியலுக்கு வாழ்த்துக்கள் 
         +++++++++++++++++
புத்தாண்டின் விடியலிலே
புது பாதை தேடும்  என்தோழா- உனக்கான 
முகவரிகள்  செய்யும்  பொழுதினிலே ...

முட்டுக்கட்டை போடும்-எந்த 
முகம்தெரியா தடைகண்டும் 
மூச்சடைத்து நிற்காதே. உன் பார்வையை மாற்றாதே.

நித்தமும் தடைகள். 
மொத்தமும்  தோல்விகள் .  
எதிலும்   ஏமாற்றங்கள். 

இந்த வேதனை எனும் சோதனையை
 நீ சோதித்தால்
அவைசொல்லாமல் ஓடிவிடும்.

விடாமுயற்சி எனும் சூத்திரங்கள் 
தெரிந்து கொண்டால் 
பாதைகள் பணிந்துவிடும்.

 உன்னை சூழும் நெருப்பை-நீ 
 அள்ளிப் போட்டு தின்றால்  -அங்கோர்
 உலகம் உன்னைக் கண்டு உதித்துவிடும்    .

எண்ணித் துணிந்தால் கருமம் .
உன்னுள் தேவை  வன்மம்-இருந்தால் 
ஜெயமே  இந்த ஜென்மம்.

 - புருனெய் தனுசு-