Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Saturday, October 15, 2011

ஸத்ய லோக சிந்தனை


"ஞானரதம்" நூல் பற்றிய கட்டுரையின் ஒரு பகுதி .....

(அறிஞர் பெ.சு.மணி அவர்களின் "பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள்" நூல் கட்டுரையிலிருந்து)

ஸத்ய லோக சிந்தனைகளில் பாரதியாருக்கு ஒளவையார் பற்றிய சிந்தனை வந்தது மகிழ்ச்சி கலந்த வியப்பைத் தருகின்றது. ஒளவையார் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை; அவருடைய பாடல் ஒன்றிற்கு புதுமையாக விளக்கம் கொடுக்குமிடத்தில் "கவி" என்று மட்டுமே குறிப்பிடுகின்றார். விளக்கத்தைக் கொண்டு பாடலையும், கவிஞரையும் இனங்காண முடிகிறது.

ஒளவையார் சீர் பரப்புவதில் முன்னணியில் நிற்பவர் பாரதியார். கட்டுரைகளில் ஒளவையார் கவித்திறம் குறித்து, ஆன்மீக ஞானம் குறித்து புகழ்மாலை சூட்டியவர் பாரதியார். மெக்காலே பாணியில் ஒளவையார் பற்றி பின்வருமாறு பாரதியார் கூறியது, ஒளவையார் இலக்கியத்தில் அவருக்கிருந்த நிகரற்ற ஈடுபாடு விளக்கமுறுகின்றது.

"தமிழ் நாட்டின் மற்றச் செல்வங்களை யெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஒளவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா? என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், "மற்ற செல்வங்களை யெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக் கொள்ள வல்லது. ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒரு போதும் சம்மதப்பட மாட்டோம். அது மீட்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்" என்று நாம் மறுமொழி உரிக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்."

'மெக்காலே பாணி' என்பது என்ன என்பதை பாரதியார் வாக்காலேயே பின்வருமாறு அறிவோம்.

"நாங்கள் இந்தியா தேசத்து ராஜ்யாதிகாரத்தை இழக்க ஒருப்பட்டாலும் ஒருப்படுவோமேயன்றி ஷேக்ஸ்பியரை இழக்க ஒரு நாளும் ஒருப்பட மாட்டோம்" என்று நாம் மறுமொழி சொல்வோமென்று 'மெக்காலே' என்னும் ஆங்கிலேய ஆசிரியர் சொல்லுகின்றார்."

பொருள் தேடலையும் உழைப்பையும் வலியுறுத்தியுள்ளார் பாரதியார். காந்தியடிகளின் பதினெட்டு நிருமாணத் திட்டங்களைக் குறிப்பிட்டு அத்துடன் பத்தொன்பதாவதாக பொருள் ஈட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்று பாரதியார் எழுதியுள்ளார்.

ஸத்யலோக சிந்தனைகளில் ஒன்றாக வரும் பின்வரும் சிந்தனை ஒளவையார் பாடலொன்றுடன் தொடர்புடையது.

"மண்ணுலகத்துப் பொருளும் பெருமையும் மிக இழிவுடையனவாயினும், அவற்றைக்கூட சோம்பரால் துறந்திருப்பவன் நற்கதியடைய மாட்டான். உழைத்துத் தேடி அவற்றின் இயற்கையை அனுபவித்துப் பார்த்தப் பின்பு துறக்க வேண்டும். பாடுபட்டுத் தேடிப் பணத்தை அடைபவனைக் கவி நிந்தனை செய்யவில்லை. அதைப் போற்றுதற்குரியதோர் பெருமையுடைய தென்றெண்ணிப் புதைத்து வைப்பவனையே நிந்தை செய்கின்றார். அதை நன்கு செலவிடுகிறானா அல்லது துர்வினியோகம் செய்கிறானா என்பதைப் பற்றி இங்கு விவகாரமில்லை. அது வேறு விஷயம். அதைத் தேடிக் கண்டு அனுபவித்துணர்ந்த பிறகுங்கூட அதன் சிறுமையை அறிந்து வெறுத்துத் தள்ளிவிடாமல், அதில் மேன்மேலும் ஆசை கொண்டு ஆதரிப்பவனே - கேடுகெட்ட பாவியாவானென்று கவி சொல்லுகிறார்."

மேலே 'கவி' என்று பாரதியார் குறிப்பிடுவது ஒளவையார் என்பதை பின்வரும் ஒளவையாரின் பாடலைக் கொண்டு முடிவு செய்யப்படுகின்றது.

"பாடுபட்டு தேடிப்பணத்தை புதைத்து வைத்து
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்."

ஸத்யலோகம் பயண முடிவில் தமக்கேற்பட்ட அனுபவத்தைப் பாரதியார் பின்வருமாறு வருணித்துள்ளார். திருவல்லிக்கேணியில் தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான ராயர் ஒருவரின் குடும்பத்தை நோவாத ஹாஸ்ய ரசத்துடன் பின்வருமாறு பாரதியார் வருணித்துள்ளார்.

"முன்பகுதியில் ஒரு ராயர் பெரிய குடும்பத்தோடிருந்தார். அவருக்கும் பகல் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும்படியாகத் தபால் கச்சேரியிலோ, எங்கேயோ ஓர் உத்தியோகம். உடம்பிலே கோபி முன் முத்திரைகள் எத்தனையோ, அத்தனை குழந்தைகள். அவள் மனைவி மறுபடியும் கர்ப்பம்."

நயமான நகைச்சுவைக்கு மேலும் ஒரு சான்று, பின்வருவது.

"திருவல்லிக்கேணியிலே 'செ ..... சங்கம்' என்பதாக ஓர் தேசபக்தர் சபை உண்டு. அதில் தேசபக்தர்கள்தான் கிடையாது. நானும் சிற்சில ஐயங்கார்களுமே சேர்ந்து 'காரியங்கள்' -- ஒரு காரியமும் நடக்கவில்லை - நடத்தினோம். நாங்கள் தேசபக்தர்கள் இல்லையென்று அந்தச் சபை ஒன்றுமில்லாமற் போனதிலிருந்தே நன்கு விளங்கும்."

மேலே, "செ ..... சங்கம்" என்று குறிப்பிடப்பட்டிருப்பது சென்னை ஜனசங்கம் எனும் அரசியல் அமைப்பாகும். 1908இல் அமைக்கப் பெற்றது இந்த ஜன சங்கம்.

பாரதியார், அவருடைய சிறிய தாயார், மனைவி, மைத்துனிப் பெண், தம்பி சி.விசுவநாதன், அவருடைய முதல் குழந்தை தங்கம்மா ஆகியோரைக் கொண்டது பாரதியார் குடும்பம் எனும் குறிப்பும் இந்தப் பகுதியில் உள்ளது.

"கண்கள் சுழன்றன. சிறிது மயக்கமுண்டாயிற்று. பின் மயக்கம் தெளிந்தது. கண்ணை விழித்துப் பார்த்தேன். 'மறுபடி மண்ணுலகத்திலே, திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் கிழக்கு முகமுள்ள வீட்டு மேன் மாடத்தில், - நானும் என் பக்கத்திலே சில வர்த்தமானப் பத்திரிகைகள், எழுதுகோல், வெற்றிலை பாக்கு முதலிய என்னுடைய பரிவாரங்களும் இருப்பது கண்டேன்' என முடிக்கின்றார்.

1910இல் வெளிவந்த மேல்வரும் வருணனை 1923இல் வெளிவந்த பாரதியாரின் "குயில் பாட்டிலும் அதே அநுபவம் சில சொற்களில் மாறுபட்ட வகையில் வெளிவந்திருப்பது ஓர் ஒற்றுமை அம்சத்தைக் காட்டுகின்றது. "குயில் பாட்டு" 1914-15 களில் எழுதப் பெற்றது. 'பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றும் நெட்டைக் கனவின் நிகழ்ச்சி" என்ற பெயரில் தோன்றிய கற்பனைக் காவியத்தை முடித்து வைத்தப் பாங்கும், 'ஞானரதம்' - சத்யலோக வருணனையின் இறுதிப் பகுதியும் பெருமளவில் ஒத்திருப்பதை பின்வருமாறு அறியலாம்.

"வீழ்ந்தேன் பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல்
பத்திரிகைக் கூட்டம் பழம்பாய் வரிசையெல்லாம்
ஒத்திருக்க நாம் வீட்டில் உள்ளோம்! எனவுணர்ந்தேன்."

நன்றி: பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் திரு பெ.சு.மணி.

2 comments:

  1. தேடித்தேடி குருவி சேர்ப்பதை போல பாரதிச் செல்வத்தை சேர்க்கிறீர்கள். வாழ்க!

    ReplyDelete
  2. எம் பெருமான் கண்ணன் துனணயால், உஙகளின் படைப்பு அனைவராலும் பாராட்டப்படும்.
    நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete

You can send your comments