Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Saturday, December 31, 2011


நாள் காட்டியில் ஒவ்வொரு நாளும் ஒரு தேதியைக் கிழிக்கிறோம். மாதாந்திர நாள் காட்டியில் ஒவ்வொரு மாதமும், ஆண்டுக்கொரு முறை புதிய ஆங்கில ஆண்டு பிறக்கிறது. எந்த நாளும் நல்ல நாளாக இருக்க வேண்டும். அது போன்றே புதிதாய்ப் பிறக்கிற ஆண்டும் நமக்கு நல்லதைச் செய்ய வேண்டும். அதற்காக நமது புருனெய் தனுசு அவர்கள் எழுதியிருக்கும் இந்தக் கவிதை நமக்கெல்லாம் நன்மையைக் கொண்டு வந்து தரவேண்டும்.


       இனிய 2012 புதிய ஆண்டே வருக!





 விடியும் விடியலுக்கு வாழ்த்துக்கள் 
         +++++++++++++++++
புத்தாண்டின் விடியலிலே
புது பாதை தேடும்  என்தோழா- உனக்கான 
முகவரிகள்  செய்யும்  பொழுதினிலே ...

முட்டுக்கட்டை போடும்-எந்த 
முகம்தெரியா தடைகண்டும் 
மூச்சடைத்து நிற்காதே. உன் பார்வையை மாற்றாதே.

நித்தமும் தடைகள். 
மொத்தமும்  தோல்விகள் .  
எதிலும்   ஏமாற்றங்கள். 

இந்த வேதனை எனும் சோதனையை
 நீ சோதித்தால்
அவைசொல்லாமல் ஓடிவிடும்.

விடாமுயற்சி எனும் சூத்திரங்கள் 
தெரிந்து கொண்டால் 
பாதைகள் பணிந்துவிடும்.

 உன்னை சூழும் நெருப்பை-நீ 
 அள்ளிப் போட்டு தின்றால்  -அங்கோர்
 உலகம் உன்னைக் கண்டு உதித்துவிடும்    .

எண்ணித் துணிந்தால் கருமம் .
உன்னுள் தேவை  வன்மம்-இருந்தால் 
ஜெயமே  இந்த ஜென்மம்.

 - புருனெய் தனுசு-

Tuesday, December 6, 2011


தஞ்சையில் பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா

Besant Lodge, Venue of the Festival

தஞ்சையில் பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா

அகில இந்திய வானொலி, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையமும் திருவையாறு பாரதி இயக்கமும் இணைந்து தஞ்சையில் மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார். விழாவிற்கு வழக்கறிஞர் வீ.சு.இராமலிங்கம் தலைமை தாங்கினார். திருவையாறு கட்டளைத் விசாரணை முனைவர் குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் அருளாசி கூறி துவக்கி வைத்தார். அகில இந்திய வானொலியின் திருச்சிராப்பள்ளி நிலைய இயக்குனர் திரு வி.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
Dr.Umamaheswari, Dr.Kumarasamy Thambiran, Prof.Kaliaperumal & AIR Station Director V.Srinivasan

காலையில் நடைபெற்ற "வான்புகழ் கொண்ட பாரதி" எனும் தலைப்பிலான கருத்தரங்கத்திற்கு முனைவர் இரா.கலியபெருமாள் தலைமை வகித்தார். கருத்தரங்கில் 'பாரதியாரின் பாஞ்சாலி' எனும் தலைப்பில் வெ.கோபாலன், 'பாரதியார் விரும்பிய சமூகம்' என்ற தலைப்பில் குப்பு.வீரமணி, 'பாரதியாரும் இசையும்' எனும் தலைப்பில் முனைவர் ப.உமாமகேஸ்வரி, 'பாரதியின் தேசியம்' எனும் தலைப்பில் ந.விச்வநாதனும் உரையாற்றினர். தலைவர் இரா.கலியபெருமாள் 'தமிழிலக்கிய வழியில் பாரதி' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
Dr.Kumaraswamy Thambiran Swamigal

பிற்பகல் மூன்று மணிக்கு திருவையாறு அரசு இசைக்கல்லூரி முதல்வர் ப.உமாமகேஸ்வரி தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் பங்குகொண்ட இசை அரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. மகாகவி பாரதியாரின் பாடல்களை இசைக்கல்லூரி ஆசிரியர்களும் மாணவிகளும் இணைந்து பாடியது கேட்போர் மங்களை நெகிழ வைப்பதாக அமைந்திருந்தது.
V.Gopalan, Director, Bharathi Ilakkiya Payilagam speaks

தொடர்ந்து மாலை 4-30 மணிக்கு "பாரதியாரின் ஆன்மீகப் பாடல்களில் மேலோங்கியிருப்பது, வேண்டுதலா, விடுதலையா" எனும் தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறது. பட்டிமன்றத்துக்கு புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமை தாங்கினார். வேண்டுதல் எனும் தலைப்பில் பேராசிரியர் மாது, முனைவர் தமிழரசி, மற்றும் இராமநாதன் ஆகியோரும், விடுதலையே எனும் தலைப்பில் பாரதிநேசன், கவிஞர் சாமி.நிர்மலா, முனைவர் இரா.காமராசு ஆகியோர் உரையாற்றினர். பாரதியார் ஆன்மீகப் பாடல்களில் மேலோங்கியிருப்பது விடுதலையே என்று தீர்ப்பளித்து தலைவர் முத்துநிலவன் உரையாற்றினார்.
VGopalan speaks, Kuppu.Veeramani, Prof.Kaliyaperumal & Keezhappavoor Shanmugaiah of AIR watching

மாலை நடந்த நிறைவு விழாவுக்கு சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அவர் "பாரதியின் தத்துவப் பார்வை" எனும் தலைப்பில் ஒரு அருமையான சொற்பொழிவினை நிகழ்த்தினார். விழாவின் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த "அமுதசுரபி" பத்திரிகையின் ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் "எக்காலத்துக்கும் பாரதி" எனும்தலைப்பில் பேசினார். தமிழ் எழுத்துலகில் பாரதிக்கிருந்த சிறப்பிடத்தையும், பாரதி எந்த காலத்துக்கும் பொருந்துபவனாக பரந்த விசாலமான பார்வை கொண்டவன் என்றும் அவர் பேசினார். எந்தக் காலத்திலும் பாரதி தான் வறுமையில் இருப்பதாக உணர்ந்தவனுமில்லை, அதற்காக வருந்தியவனுமில்லை என்றார் அவர். ஆனால் இன்று பல சிறந்த எழுத்தாளர்களின் இறுதிக் காலம் வறுமையில் முடிவடைகிறது. தமிழ்கூறு நல்லுலகம் எழுத்தாளர்களை அந்த நிலைமைக்குத் தள்ளிவிடக்கூடாது என்பதை பல நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டி விளக்கிப் பேசினார்.
Sekkizhar Adippodu Dr.TNR & Tiruppur Krishnan

திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் கீழப்பாவூர் சண்முகையா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார். திருவையாறு பாரதி இயக்கத் தலைவர் நீ.சீனிவாசன் நன்றி கூறினார்.
Chief Guest Tiruppur Krishnan speaks

Monday, November 21, 2011

மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா

இந்திய ஒலிபரப்புக் கழகம்
அகில இந்திய வானொலி நிலையம், திருச்சிராப்பள்ளி
பாரதி சங்கம், தஞ்சாவூர், பாரதி இயக்கம், திருவையாறு
இணைந்து நடத்தும்

மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா
நாள்: 04-12-2011 ஞாயிறு காலை 10-00 மணி முதல்
இடம்: பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்.

அன்புடையீர்!
மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா தஞ்சை பெசண்ட் அரங்கில் 4-12-2011 ஞாயிற்றுக் கிழமை காலை 10-00 மணிக்குத் தொடங்கி நடைபெற விருக்கிறது. அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பாரதி அன்பர்களும், பொதுமக்களும் திரளாக வந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்

காலை 10-00 மணி: தொடக்க விழா.

தலைமை: திரு வீ.சு.இராமலிங்கம்,
தலைவர், பாரதி சங்கம், தஞ்சாவூர்.
தொடக்க உரை:
திரு வெ. ஸ்ரீநிவாசன்,
நிலைய இயக்குனர், அகில இந்திய வானொலி, திருச்சிராப்பள்ளி.
சிறப்புரை
முனைவர் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள்
கட்டளை விசாரணை, திருவையாறு

கருத்தரங்கம்
பொருள்: "வான்புகழ் கொண்ட பாரதி"

தலைவர்: முனைவர் இரா.கலியபெருமாள்,
முதல்வர், ந.மு.வே.நாட்டார் கல்லூரி
பங்கேற்போர்:

திரு வெ.கோபாலன், பாரதியின் பாஞ்சாலி
திரு குப்பு. வீரமணி, பாரதி விரும்பிய சமுதாயம்
முனைவர் ப.உமாமகேஸ்வரி, பாரதியும் தமிழிசையும்
திரு ந.விச்வநாதன், பாரதியின் தேசியம்

பிற்பகல் 4-00 மணி
இசை அரங்கம்
திருமதி உமாமகேஸ்வரி, முதல்வர்
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு
தலைமையில்
பங்கேற்போர்: இசைக்கல்லூரி மாணவியர் & பேராசிரியர்கள்

பிற்பகல் 5-00 மணி
பட்டிமன்றம்
தலைப்பு: மகாகவியின் ஆன்மீகப் பாடல்களில் மேலோங்கியிருப்பது
வேண்டுதலா? விடுதலையா?

நடுவர்: கவிஞர் ந.முத்துநிலவன்,
புதுக்கோட்டை

வேண்டுதலே! விடுதலையே!
திரு இரா. மாது திரு பாரதிநேசன்
முனைவர் ந.தமிழரசி, கவிஞர் சாமி மல்லிகா,
திரு டி. இராமநாதன் முனைவர் இரா.காமராஜ்
.
மாலை 6-30 மணி
நிறைவு விழா

தலைவர்: சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர்
தி.ந.இராமச்சந்திரன் அவர்கள்

வரவேற்புரை: திரு சண்முகையா, நிகழ்ச்சி அமைப்பாளர்,
அகில இந்திய வானொலி, திருச்சி.

சிறப்புரை: திரு திருப்பூர் கிருஷ்ணன்,
ஆசிரியர், "அமுதசுரபி", சென்னை.
'எக்காலத்திற்கும் பாரதி'

போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசளித்து பாராட்டுபவர்
திரு சே.ப.அந்தோணிசாமி
தாளாளர், பரிசுத்தம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, தஞ்சாவூர்.

நன்றியுரை: திரு நீ.சீனிவாசன், தலைவர், பாரதி இயக்கம் திருவையாறு.

Friday, November 11, 2011

பாஞ்சாலங்குறிச்சி வீரன் சுந்தரலிங்கம்


வீரன் சுந்தரலிங்கம்

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கரைத் தெரியுமா? ஓகோ! வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொன்னால்தான் தெரியுமா. சரி. இந்தப் பெயரை சிலம்புச் செல்வர் அளித்தது. பாஞ்சாலாங்குறிச்சியின் பாளையக்காரர் பெயர் கட்டபொம்மு நாயக்கர் தான். இவருடைய தம்பி ஊமைத்துரை. இவ்விருவரும் மாபெரும் வீரர்கள். இவருக்கு ஒரு அமைச்சர் இருந்தார், அவர் பெயர் தானபதி பிள்ளை. இப்படிப்பட்ட தன்மானம் மிக்க ஒரு பாளையக்காரரிடம் அமைந்த தளபதிகள் எப்படி இருந்திருப்பார்கள். வெள்ளையத் தேவன் என்று ஒரு மாவீரன். சுந்தரலிங்கம் என்று மற்றொரு சூரன். இப்படிப்பட்ட வீரசிகாமணிகளைத் தன்னுடன் வைத்திருந்த கட்டபொம்மு நாயக்கர் வெள்ளையனை எதிர்த்து வீரமுழக்கம் செய்ததில் என்ன வியப்பு?

இந்த தளபதிகளில் சுந்தரலிங்கம் பற்றி சிறிது பார்ப்போம். இந்த சுந்தரலிங்கத்தின் முழுப்பெயர் என்ன தெரியுமா? கட்டக் கருப்பண்ணன் சுந்தரலிங்கம் என்பது அவன் முழுப் பெயர். சுந்தரலிங்கக் குடும்பனார் என்றும் அழைப்பது உண்டு. கட்டபொம்மு நாயக்கரின் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகிலுள்ள வெள்ளைவாரணம் எனும் கிராமத்தில் பிறந்தவர் இவர். 

கட்டபொம்மு நாயக்கர் பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டையைக் கட்டி, படை, குடிகளுடன் கம்பளத்தார் ஆட்சியை நிறுவிய காலத்தில் பலதரப்பட்ட வேலைகளுக்கு ஆட்களை நியமித்தார். அப்படி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளைக் கொண்டு சேர்க்கும் பணிக்கு நம்பகமான ஆட்களை நியமனம் செய்தார்கள். அப்படிப்பட்ட பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதாரண வீரனாகத்தான் சுந்தரலிங்கம் ஆரம்பத்தில் பணியைத் தொடங்கினார். 

கட்டபொம்மு நாயக்கரின் படையில் பல தரப்பட்ட பிரிவினர்களும் வீரர்களாகச் சேர்ந்தனர். அப்படிப் பட்ட வீரர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் இருந்தார்கள். அப்படிப்பட்ட வீரர்களில் சுந்தரலிங்கமும் ஒருவர். இவர் தன்னுடைய நேர்மையான உழைப்பு, வீரம், ராஜ விசுவாசம் இவற்றால் பாளையக் காரர்களின் பார்வையில் மிக உயர்வாகக் காட்சியளித்தார். இவருடைய நேர்மையான உழைப்பையும், வீரத்தையும் பலமுறை பாராட்டிய கட்டபொம்மு நாயக்கர் இவரைப் படைத் தளபதியாக பதவி உயர்த்தி கெளரவித்தார்.

ஏற்கனவே கட்டபொம்மு நாயக்கரிடம் வெள்ளையத்தேவன் எனும் துடிப்பான வீரம் மிகுந்த தளபதி ஒருவர் இருந்தார். அவருக்கு நிகராக சுந்தரலிங்கமும் வீரத் தளபதியாக விளங்கினார். 

ஒரு முறை ஆங்கில கும்பினியாரின் படைகள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டுவிட்டது. தளபதி வெள்ளையத்தேவன் அப்போது கோட்டையில் இல்லை. ஆகவே அவனை அழைத்துவரும்படி கட்டபொம்மன் சுந்தரலிங்கத்தை அனுப்பி வைத்தார். சுந்தரலிங்கம் வெள்ளையத் தேவனின் வீட்டை அடைகிறார். தளபதி வெள்ளையத் தேவன் மிகுந்த கோபக்காரன். தூக்கத்தில் இருக்கையில் யாராவது எழுப்பிவிட்டால் தாக்கிவிடும் குணமுடையவன். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக சுந்தரலிங்கம் வெள்ளையத் தேவனை எழுப்புகிறார். பின்னர் தளபதியிடம் எல்லா விவரங்களையும் சொல்லி, வெள்ளையர்கள் கோட்டையைச் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையை எடுத்துரைக்கிறார். உடனே இருவரும் அங்கிருந்து கிளம்பி கோட்டைக்குள் சென்று கட்டபொம்முவைச் சந்திக்கிறார்கள். 

கட்டபொம்மன் இவ்விரு தளபதிகளிடமும் தன் படைகளைக் கொடுத்து போர்க்களம் செல்லும்படி பணிக்கிறார். கோட்டைக்கு வெளியே உக்கிரமான போர் நடந்தது. அந்தப் போரில் வெள்ளையத் தேவன் வீரமரணம் அடைந்து விடுகிறான். எஞ்சியப் படைகளைக் கொண்டு சுந்தரலிங்கம் வேறு சில படைத் தளபதிகளான ஆதிவீரமல்லு சேர்வை, கந்தன்பகடை, கண்டகோடாலி என்பவர்களைக் கூட்டாகச் சேர்த்துக் கொண்டு ஆங்கிலேயர்களோடு மோதுகிறார். எட்டத்தில் கூடாரமடித்துத் தங்கியிருந்த வெள்ளையர்களின் முகாமைத் தாக்கி அங்கு காவல் இருந்த சிப்பாயைச் சுந்தரலிங்கம் குத்திக் கொன்றுவிடுகிறார். இந்தப் போரில் கந்தன்பகடை எனும் தளபதி கட்டபொம்மு பக்கத்தில் வீரமரணம் அடைந்து விடுகிறார். 

கோட்டைக்கு வெளியே முற்றுகை இட்டிருந்த வெள்ளைப் படைகளுக்கிடையே சுந்தரலிங்கமும், வீரமல்லு சேர்வையும் மாட்டிக் கொள்கிறார்கள். யுத்தகளம் முழுவதும் இரண்டு பக்கத்து வீரர்களின் இறந்த உடல்கள் வீழ்ந்து கிடக்கின்றன. மாட்டிக் கொண்ட சுந்தரலிங்கம் ஒரு தந்திரம் செய்தார். பிணத்தோடு பிணமாகக் கீழே விழுந்து புரண்டு சென்று செத்துக் கிடந்த வெள்ளைக்காரச் சிப்பாயின் உடையை எடுத்து மாட்டிக் கொண்டு அவர்களது துப்பாக்கியையும் பிடுங்கிக் கொண்டு, யுத்த களத்திலிருந்து இவ்விரு தளபதிகளும் தப்பி ஓடி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை அடைந்து விடுகிறார்கள்.

போர்க்களத்தில் நடந்த விவரங்களைச் சுந்தரலிங்கம் கட்டபொம்மு நாயக்கருக்கு எடுத்துச் சொன்னார். இவ்விரு தளபதிகளைன் சாகசங்களைப் பாராட்டி கட்டபொம்மு இவ்விருவருக்கும் பத்து வராகனில் தங்கப் பதக்கமும், முத்துக்கள் பதித்தக் கடுக்கன், அடுக்கு முத்து மோகன மாலை, ஹஸ்த கடகங்கள், முன்கை மூதாரிகள் என பலவகைப்பட்ட ஆபரணங்களைப் பரிசளித்து கெளரவித்தார். 

பாளையக்காரர் மட்டும் மாவீரனாக இருந்துவிட்டால் போதுமா, அவனுக்கு அமைந்த தளபதிகளும் அவனைப் போலவே வீரர்களாக இருக்க வேண்டாமா? அப்படி அமைந்ததால்தான் இன்றும் வீரபாண்டியன் கட்டபொம்மு நாயக்கர் என்று பலரும் வியந்து போற்றி பாராட்டுகிறார்கள். அந்தப் புகழுக்கெல்லாம் சுந்தரலிங்கம் போன்ற தளபதிகள்தான் காரணம் என்பதை நாம் மறக்கலாமா?

பின்னர் 1799ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 5ஆம் தேதி, வெள்ளைக்காரப் படைகளோடு வீரபாண்டியன் கட்டபொம்மன் நடத்திய இறுதிப் போரில் இந்த மாவீரன் சுந்தரலிங்கம் வீரமரணம் எய்தினார் என்பது வரலாறு. வாழ்க வீரன் சுந்தரலிங்கம் புகழ்!

Tuesday, November 8, 2011

நெல்லை ஜெபமணி



நெல்லை ஜெபமணி

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு குற்ற உணர்வு இருந்துகொண்டே இருந்தது. சுதந்திரப் போரில் பங்கு பெற்ற தியாகியும், சுதந்திரத்துக்குப் பிறகும் ஊழல், சர்வாதிகாரம், அரசியலில் நாணயமின்மை ஆகியவற்றை எதிர்த்து மேடைதோறும் முழங்கியவரும், இந்திரா காந்தியின் நெருக்கடிநிலை பிரகடனத்தை எதிர்த்து போராடியவரும், ஜனதா கட்சி தொடங்கியபோது அதில் பிரதானமான தலைவராக இருந்தவருமான நெல்லை ஜெபமணி பற்றி எழுதாமல் விட்டது ஒரு மனக்குறையாகவே இருந்து வந்தது.

"விஜயபாரதம்" இதழின் சுதந்திரப் பொன் விழா மலரில் அந்தத் தியாகத் திருமகனின் நேர்காணல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அவரது வாழ்க்கைக் குறிப்பை நாம் அறிந்து கொள்வதைக் காட்டிலும், சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகள் கழிந்தபின் அந்த பெரியவரின் மனநிலையை இந்த நேர்காணல் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இதோ அந்த நேர்காணல்:-- 

தேசியத்திலும், தெய்வீகத்திலும் பழுத்தபழம் என்று இவரைப் பற்றி "விஜயபாரதம்" பெருமைப் படுத்துகிறது. அவர் எதைப் பற்றி பேசினாலும் முடிவில் "உண்மையே வெல்லும்" என்றுதான் பேசுவார் என்று அந்த நேர்காணலின் முன்னுரையில் பேட்டி கண்டவர் எழுதுகிறார்.

கேள்வி:- சுதந்திரப் போராட்டத்தில் உங்கள் பங்கு என்னவென்று சொல்லுங்களேன்!

ஜெபமணி:- என் ஊரு தூத்துக்குடி ஜில்லாவில் குறுங்கனி என்கிற கிராமம். அங்கே சாமிநாதன் என்பவர் கதர்க்கடை வைத்திருந்தார். அவர் காந்தி படத்தை வைத்துக் கொண்டு, பாரதியார் பாடல்களைப் பாடிக் கொண்டு கிராமம் கிராமமாகப் போவார். அப்போது எனக்கு இளம் வயது. நானும் அவரோடு ஊர்வலத்தில் பாரதியார் பாட்டைப் பாடிக்கொண்டு போவேன். அதுவே காந்தியின் மேல் எனக்கு ஓர் ஈர்ப்பை உருவாக்கியது.

அதனால் திருப்பூர் வந்து காந்திஜியின் நிர்மாணத் திட்டத்தினைக் கற்க பஜாஜ் வித்யாலயத்தில் சேர்ந்தேன். இரண்டு வருடப் படிப்பு அது. அங்கிருந்து திருபத்தூர் கிறுஸ்துவ ஆசிரமத்திற்கு நூற்பு ஆசிரியராக அனுப்பி வைத்தார்கள். அந்த நேரத்தில் தீரர் சத்தியமூர்த்தி காலமாகிவிட்டார். அப்போது வித்யாலயத்தின் முதல்வராய் இருந்த சிவகுருநாதன் எங்களை 1943இல் நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ளச் சொன்னார். நானும் மற்ற மாணவர்களும் முதலில் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு போய் மறியலில் ஈடுபட்டோம். அடுத்த நாள் மாஜிஸ்டிரேட் கோர்ட்டின் முன்னால் மறியல் நடத்தினோம். போலீசார் எங்களைக் கைது செய்தார்கள். விசாரணை நடந்து முதல் நாள் மறியல் செய்தமைக்காக 18 மாதங்கள் சிறை தண்டனையும், இரண்டாம் நாள் மறியல் செய்தமைக்காக 10 மாதம் என 28 மாத சிறை தண்டனை கொடுத்தார்கள். தண்டனையை பெங்களூர் கண்டோன்மெண்ட் ஜெயிலில் அனுபவித்தேன்.

கேள்வி:- ஜெயிலிலிருந்து வந்த பிறகு என்ன செய்தீர்கள்?

ஜெபமணி:- திருப்பூர் கதர்க் கடையிலும், திருநெல்வேலி கதர்க் கடையிலும் வேலை பார்த்தேன். காங்கிரஸ் கூட்டத்திலே மகாத்மா காந்தி நிர்மாணப் பணிகளைப் பிரச்சாரம் செய்யும் வேலையை மேற்கொண்டேன். 1947இல் நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர்தான் எனக்குத் திருமணம் நடந்தது. அந்தத் திருமணம் கதர்த் திருமணம். என் மனைவிக்கு 15 ரூபாய் எட்டரை அணாவுக்கு கதர் புடவை, எனக்கு இரண்டு ரூபாய் முக்காலணாவுக்கு கதர் வேஷ்டி. அப்படி மிக எளிமையாக நடந்தத் திருமணம் அது.

கேள்வி:- சுதந்திரம் அடைந்த நாளில் உங்கள் மனம் எப்படி இருந்தது?

ஜெபமணி:- ரேடியோவில் சுதந்திர தினச் செய்திகளைக் கேட்டபோது மனம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது. நாங்கள் திருநெல்வேலியில் அதை விழாவாகக் கொண்டாடினோம். தியாகி சைலப் பிள்ளை கொடியேற்றி வைத்தார். பாரதியாரின் மகள் லலிதா பாரதி தேசிய கீதம் பாடினார். நான் அங்கு பேசினேன். அப்போது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன்.

பாரதி முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினானே, இப்போது நாம் நாற்பது கோடி மக்கள் இருக்கிறோமே என்று நினைத்தேன். ஆனால் பத்து கோடிப் பேர் பிரிந்து போய்விட்டார்கள். பாரதி கூறியது பலித்துவிட்டது என்று பேசினேன்.

கேள்வி:- சுதந்திரப் போரின் போது 'திராவிடம்' பேசியவர்கள் என்ன செய்தாங்க. அதைப் பற்றி சற்று சொல்லுங்களேன்.

ஜெபமணி:- அதை ஏன் இப்போது பேசவேண்டும். அவர்கள் போலியானவர்கள். கொள்கை கிடையாது. அவர்களுக்கென்று லட்சியம் எதுவும் கிடையாது. அவர்களைப் பற்றி பேசுவது 'வேஸ்ட்' என்பது என் எண்ணம். அண்ணாதுரை ஆங்கிலேயர்களிடம் மாதம் 800 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு யுத்த ஆதரவுப் பிரச்சாரம் பண்ணினார். 1944இல் நீதிக்கட்சிக் காரர்கள், காந்திஜியை எதிர்த்து பனியாக்கள் ஆள்வதைவிட பரங்கியர்கள் ஆண்டால் பிரச்சினையில்லை என்று தீர்மானம் போட்டார்கள். அவர்கள் செய்தது போலி அரசியல். சரக்கு இல்லாமல் கிடைத்ததை வாங்கி சந்தையில் வியாபாரம் பண்ணுகிற மாதிரி வியாபார அரசியல் நடத்தினார்கள். சரி! அதை விட்டுத் தள்ளுங்க.

கேள்வி:- சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லுங்களேன்.

ஜெபமணி:- புதுக்கோட்டையைச் சேர்ந்த நடேசன் என்பவர் வித்யாலயாவில் என்னோடு படித்துக் கொண்டு இருந்த காலத்தில் கோயம்புத்தூரில் நடந்த மறியலில் கலந்துகொண்டு கைதானார். அப்போது போலீசார் செய்த அட்டூழியம் கொடுமையானது. அவர் தாடி வைத்திருந்தார். போலீஸ் அவருடைய தாடி மயிரை ஒன்றொன்றாக பிடுங்கி என்றிந்தது. பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குக் கண்ணீர் பெருகியது. ஆனால், அவர் அழவே இல்லை. போலீசுக்கு எரிச்சல் தாங்கமுடியவில்லை. அவரைப் பார்த்து, "உனக்கு சொரணையே கிடையாதா?" என்றனர். அதற்கு அவர் கொஞ்சம் கூட பயப்படாமல், "நீ பிடுங்குகிற ஒவ்வொரு மயிரும் பக்கிங்காம் அரண்மனையின் செங்கல்லைப் பிடுங்குவதற்குச் சமம்" என்று பதில் சொன்னார். அந்த நிகழ்ச்சியையும், காட்சியையும் என்னால் மறக்க முடியவில்லை.

கேள்வி:- உங்க அரசியல் வாழ்க்கை பற்றி .....

ஜெபமணி:- மகாத்மா காந்திஜியின் பணிகளைச் செய்து கொண்டிருந்த என்னை கர்மவீரர் காமராஜ்தான் தீவிர அரசியலுக்கு இழுத்து வந்தார். காமராஜ் இருக்கும் வரை எல்லாம் நல்லபடியா நடந்து கொண்டிருந்தது. பின்னாளில் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்தேன். அரசியலில் எதுவும் சரியில்லாமல் இருந்ததால் ஜனதா கட்சியை தமிழகத்தில் ஆரம்பித்தேன்.

கேள்வி:- பொன்விழா காணும் சுதந்திர இந்தியா பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஜெபமணி:- சுதந்திர இந்தியாவில் வாழ்வதை நினைத்துப் பெருமைப் படுகிறேன். சுதந்திரப் போரில் இருந்த பல தியாகிகளை நான் பார்த்திருக்கிறேன். சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்து நாட்டின் சொத்தை சூறையாடியதையும் பார்த்திருக்கிறேன். ஏதோ ஜனாதிபதியும், நீதிமன்றமும் நல்லா இருக்குது.

ஆனால் நான் எதுக்கும் கவலைப் படவில்லை. உண்மை கண்டிப்பாக வெற்றி பெறும். "நல்லோர், பெரியோர் எனும் காலம் வரும். நயவஞ்சகம் நாசம் ஆகும்" என பாரதி பாடினான். அந்த நல்ல காலம் வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நன்றி: "விஜயபாரதம்" பொன்விழா மலர், சென்னை.

Monday, November 7, 2011

அருணகிரியார் பற்றி பாரதியார்


அருணகிரிநாதர்

(திருப்புகழ் இயற்றிய அருணகிரியார் பற்றி பாரதியார் எழுதிய கட்டுரையொன்றை ரா.அ.பத்மநாபன் அவர்கள் "பாரதி புதையலில்" வெளியிட்டுள்ளார். அதனைப் படியுங்கள்.)

ஞானியும், பக்தரும் வரகவியுமாகிய அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

இவருடைய 'திருப்புகழ்' என்ற நூல் சந்தக் கணக்குப் புகழ் பெற்றது. வடமொழிச் சொற்களை மிகுதியாக உடையது. மண், பெண், பொன் என்ற உலக இன்பங்களைப் பழிப்பதில் ஓய்வில்லாதது இது. "பெரிய திருப்புகழ்", "பஞ்சரத்னத் திருப்புகழ்" என்ற ஐந்து பாட்டுக்களும் தனியாக எழுதப்பட்டன. அவை வேறு நூல்.

இவரைப் பற்றிய பல கதைகளில் என்னென்ன பகுதி உண்மை என்பதை விசாரித்து நிச்சயிக்க இது சந்தர்ப்பமில்லை. "பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆரும் துறத்தல் அரிது" என்று தாயுமானவரால் வணங்கப்பட்ட மஹானாகிய பட்டினத்துப் பிள்ளைக்கு ஒரு தாசி வயிற்றில் இவர் பிறந்தவரென்ற விநோதமான கதையொன்று தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது.

இவருடைய கவிதையின் கனிவைப் பார்க்க வேண்டுமானால் "பஞ்சரத்னத் திருப்புகழ்", "கந்தரலங்காரம்", "வேல் வகுப்பு" மூன்றையும் படித்தால் போதும். சந்தக் கணக்கை வைத்துக் கொண்டு தெளிவாகவும் இயற்கையாகவும் சொல்லுதல் மிகவும் அருமை. காலிலும் கையிலும் தளைகளைப் பூட்டிக் கொண்டு கூத்தாட முடியாதென்று பழமொழி சொல்லுவார்கள். இந்த மஹானுடைய கவிதையோவென்றால், மிகவும் கடினமான தளைகளைப் பூட்டிக் கொண்டு தெய்வீகக் கூத்தாடுகிறது. பஞ்சரத்னத் திருப்புகழின் முதற்பாட்டில் இவர் தமக்கு அதிசயமான தமிழ் பாடும் திறமை வேண்டுமென்று முருகனிடம் கேட்கிற பொழுதே தெய்வ அருள் தோன்றி இவருடைய கவிதை அதிசயமாய் விடுகிறது.

மலடி வயிற்றிலே குழந்தை பிறந்தால் அவளுக்கு எப்படி ஆச்சரியமும் மகிழ்ச்சியுமுண்டாகுமோ, அவ்விதமான மனக் கிளர்ச்சி தமது பாட்டைப் படிக்கும்போது தோன்ற வேண்டுமென்கிறார்.

"மலடி வயிற்று மகன் போலே - ஒரு
புதைய லெடுத்த தனம் போலே - ஒளிர்
வயிர மடித்த களம்போலே - இள
................................................. மானார்
வலிய அணைத்த சுகம் போலே - கதி
ரொளி விடு ரத்ந படம் போலே - பரி
மளமிகு புட்ப வனம் போலே - சுர
ரதிபோலே"

கங்கா நதி வானத்திலிருந்து பொழிவது போலே தமது கவிதையும் ஞானலோகத்திலிருந்து நாவின் வழியே பொழிய வேண்டுமென்று கேட்கிறார். புதையலெடுத்த செல்வத்தைக் கண்டு ஏழை மகிழ்ச்சியடைவது போலே தமது கவிதை படிக்கும் போது மகிழ்ச்சியுண்டாக வேண்டுமென்கிறார். வயிரக் களம் போலே கவிதை முழுதும் ஒளிவீச வேண்டுமாம். இளம் பெண் வலியத் தழுவினாற் போன்ற இன்பம் தனது சொற்களிலே தோன்ற வேண்டுமாம். புஷ வனம் போலே கவிதையாம்! கவிதை.

மேலும், தேவர்கள் திருப்பாற் கடலை அமுதத்தின் பொருட்டாகக் கடைந்தார்கள். அப்போது எதிர்பார்க்காமல் லக்ஷ்மிதேவி தோன்றினாள். அப்போது அவர்கள் எப்படி வியப்படைந்திருப்பார்களோ அப்படிப்பட்ட வியப்பு தம்முடைய பாட்டிலே பிறக்க வேண்டுமென்று கேட்கிறார். தமது பாட்டில் பொருள் தெளிந்து மேலாகத் தெரிய வேண்டுமாம். படிப்போர் சிரமப்பட்டு மூச்சுமுட்டிப் பொருள் கண்டு பிடித்து அந்தப் பொருள் அதிஸாமான்யமாய் வியப்பின்றியிருக்கும் கவிதையைச் சிலர் கவிதையென்று மதிக்கிறார்கள். அது தமக்கு வேண்டியதில்லை யென்றும் கரையருகில் அடுத்த நீர் போலே எளிதில் மொண்டு செல்லத் தக்கதாகத் தமது பாட்டின் பொருள் ததும்பித் தெளிந்து கிடக்க வேண்டு மென்றும் இவர் விரும்புகிறார்.

"அலைகடல் பெற்றிடு பெண் போலே - வரு
புலவர் தமக்கிரு கண்போலே - கரை
யருகி லடுத்த ஜலம் போலே - நின
தழகா மோர்

அமுது புஜித்த ரஸம் போலே - திரை
கடல் மடை விட்ட ஜலம் போலே - தினம்
அதிசய முத்தமிழ் அன்பால் ஒகநின்
அருள் தாராய்!"

அழகு வேண்டுவோர் தெய்வத்தை வேண்டுகின்றார்கள். தெய்வமே அழகின் எல்லை. தெய்வத்தின் அழகை அனுபவித்த ரஸம் தமது கவிதையிலே காணவேண்டு மென்கிறார். மேற் காட்டிய வரிகளிலே அந்த ரஸம் இருக்கத்தான் செய்கிறது.

பின் வரும் பாட்டைக் கேளுங்கள்:

"கலியை யலைத்துத் தொலைத்து விட்டொரு
பிணியை யடித்துத் துரத்தி விட்டெழு
கவலை நெருப்பைத் தணித்து விட்டற
நெறியாலே.

கடின கசப்புக் கினிப்பு விட்டென
துயிரில் அழுந்தத் துடைத்து விட்டோர்
கருணை மழைக்குட் குளிக்க விட்டினி
யலையாதே.

அலையு மனத்தைப் பிடித்து வைத்ததில்
உறையும் இருட்டுக் கருக்கலுக்கு நின்
அழகு விளக்கைப் பதித்து வைத்த
கவியாதே.

அறிவை யுருட்டித் திரட்டி வைத்து நின்
அமுத குணத்தைத் துதிக்க வைத்தனை
அடிமை படைக்கக் கருத்து முற்றிலும்
நினையாயோ."

கலியுகத்தை ஒழித்து, நோயைத் துரத்தி, கவலைத் தீயைத் தணித்துக் கசப்பை இனிப்பாக்கி உயிரை அழுக்கறுத்த கருணை மழையிலே குளிக்கவிட்டு அலைகின்ற மனதை நிறுத்தி அதிலுள்ள இருட்டைத் தொலைக்கும் பொருட்டு முருகனுடைய அழகாகிய விளக்கை அதில் நாட்டி அந்த விளக்கு நீடித் தெரியும்படி அறிவைத் திரட்டி முருகனுடைய அமிர்த குணங்களைப் புகழும்படித் தம்மை வரகவியாக்கச் சொல்லுகிறார். அந்த நிலைமை இவர் பெற்று விட்டனரெறு அந்தப் பாட்டிலேயே தெரிகிறது. அதை ஸங்கீதம் சேர்த்துப் பாடிப் பாருங்கள்.

பின்வரும் வரிகளிலே அக்நி சக்தியாகிய வள்ளியம்மையைப் புகழ்கின்றார்.

"குலவரை விட்டுத் திசை களிற்றினை
உடலை மிதித்துக் கிழித்ததிற் சொரி
குருதி குடித்து"

வள்ளியம்மையின் திருமார்பு புகுந்ததென்கிறார். வீரம், ரெள்த்ரம் என்ற ரஸங்கள் இவருடைய கவிதையில் செறிந்து கிடக்கின்றன. அவை பின்னொரு வியாஸத்தில் விளக்கப்படும். இவருடைய கவிதையின் முக்கியப் பொருள் தெய்வ பக்தியாகையால் தெய்வத்தைப் பற்றி இவருடைய கொள்கை எப்படிப்பட்ட தென்பதை விளக்கும் பொருட்டாகச் சில திருஷ்டாந்தங்கள் காட்டுகிறேன்.

பரமாத்மா எப்படியுள்ளது?

"ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத் துச்சியின் மேல்
அளியில் விளைந்ததொ ரானந்தத் தேன்."

(பூதரம் - மலை; அளி - கருணை)

"வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானென்ற சரீரியன்று (அ) சரீரியன்றே"

அப்படியானால் அது என்னது?

"சொல்லுகைக் கில்லையென் றெல்லாம்
இழந்து சும்மா இருக்கும் எல்லை"

இப்படிப்பட்ட பரம்பொருள் மனுஷ்ய ஜீவனைக் காப்பாற்றும் பொருட்டு, இஷ்ட தேவதா ரூபமாகத் தோன்றுகிறது. இவருக்கு அந்த இஷ்ட தேவதை தேவசேனாபதியாகி அசுரரை அழிக்கப் பரமசிவனுடைய நெற்றிக் கண்ணில் தோன்றிய அக்நி குமாரனாக வெளிப்பட்டது! தெய்வத்தின் அருள் பெறும் வழி சரணாகதி. அருள் பெற்றால் மரணத்தை வெல்லலாம்.

அதனாலே அருணகிரிநாதர் சொல்லுகிறார்:---

"மரண ப்ரமாதம் நமக்கில்லை" (ப்ரமாதம் - தவறு)

பின்வரும் பாட்டு எமனை நோக்கிச் சொல்லப்படுகிறது:--

"தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி யுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலனுக்குத்
தோண்டாகிய என் அவிரோத ஞானச்சுடர் வடிவாள்
கண்டாயடா அந்தகா வந்து பார் சற்றென்கைக் கெட்டலே!"

விதியை வெல்லும் முறை சொல்லுகிறார்:--

"வேல் பட்டழிந்தன வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டழிந்த திங்கென் தலைமேலயன் கையெழுத்தே"

பயன் சொல்லுகிறார்:--

அஞ்ஞானமாகிய சிறை

"விடுதலைப் பட்டது விட்டது பாசவினை விலங்கே"

Sunday, November 6, 2011

ஊழிக்கூத்து


ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம்பாடப் - பாட்டின்
அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண்டி, கங்காளீ!

அன்னை அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

ஐந்துறு பூதம் சிந்திப்போ யொன்றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறு மொளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய், அடு தீ சொரிவாய்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

பாழாம் வெளியும் பதறிப் போய் மெய் குலையச் - சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
ஊழாம் பேய்தான் "ஓஹோ ஹோ" வென்றலைய - வெறித்
துறுமித் திரிவாய், செறுவெங் கூத்தே புரிவாய்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

சத்திப் பேய்தாந் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங் கொட்டி - அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போயெட்டித் - தானே
எரியுங் கோலங் கண்டே சாகுங் காலம்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

காலத் தொடு நிர்மூலம் படுமூ வுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய், ஆநந்தக் கூத்திடுவாய்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

இதுதான் பாரதியாரின் "ஊழிக்கூத்து" பாடல். இந்தப் பாடல் குறித்து பிரபல பொதுவுடைமை வாதியும், இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளர் ஜெயகாந்தனால் மதிக்கப்பட்டவருமான ஆர்.கே.கண்ணன் தான் எழுதியுள்ள "புது நெறி காட்டிய பாரதி" எனும் நியு செஞ்சுரி புத்தக நிலையத்தார் வெளியிட்டிருக்கும் நூலில் ஊழிக்கூத்து பாடல் பற்றித் தனது கருத்துக்களைக் கூறியிருக்கிறார். ஒரு பொதுவுடைமை வாதியின் நோக்கில் அமைந்துள்ள அவரது கட்டுரையின் உட்கருத்தை இப்போது பார்க்கலாமா?

"நாதப் பிரம்மத்தி9 சூட்சும நிலைக்குள் கலந்து வெளிப்பட்ட ஒரு ஒலிச் சித்திரம் ஊழிக்கூத்து.

பரணியை ஜெயம்கொண்ட ஜெயங்கொண்டாரையும் ஜெயங்கொண்டு விட்டிருக்கிறான் பாரதி.

பாரதி வேறு கவிதை யொன்றும் எழுதாமல் இந்த ஒன்றை மட்டும் எழுதிவிட்டு மறைந்திருந்தாலும் இந்த ஒரு கவிதையே அவர் மகாகவி என்று உலகுக்குப் பறை சாற்றும்.

ஏனெனில் தமிழ்க் கவிதைச் சமூகத்துக்கு, உலகக் கவிதைச் சமூஊகத்துக்கு, இது தேவை. அவற்றில் இதுகாறும் காணக்கிடைக்காத தொன்று. தமிழ் மொழியின் வெற்றி இது - பொதுவாகவே மனித மொழியின் மகத்தான வெற்றி இது.

காட்சியின் பல அழகுகளை சிந்தனையின் பல நுட்பமான நெகிழ்ச்சிகளை, ஒலியின் உள்ளிசைவுகளை, முடிந்தவரைக்கும் வர்ணித்துப் பார்த்துவிட்டு மகாகவிகள் கூட ஒரு நிலையை எட்டியதும் "இது சொல்லில் அகப்படுமா?" என்று பெரு மூச்சுவிட்டு நிறுத்திக் கொள்வதை நாம் அறிவோம். புற அக அனுபவங்கள் அசல்; அவை பெரிது; மனித மொழி எத்துணை வளர்ச்சி கண்டிருந்தாலும் அது ஒரு செயற்கை சாதனம்; நிறைவை நோக்கித் தாவித் தாவிச் சென்று கொண்டேயிருக்க வேண்டியது. இந்த நிலையில், உலகத்தில் எந்த ஒரு கவிஞனாவது அதுவரை சாதிக்காத சாதனையாக ஒரு புதிய ஒலி உலகத்தை, காட்சி உலகத்தை, அனுபவத்தை, கவிதையிலே படைத்துத் தந்தால் அவனுக்கு உலகம் கோவில் கட்டிக் கும்பிடும்; மனித மொழியின் மாபெரும் வெற்றி என்று ஏற்றிப் போற்றும்.

பாரதியின் 'ஊழிக்கூத்து' அவ்வகைப்பட்டது. அது தமிழ்மொழிக்கு மட்டும் உரியதல்ல.

அதுபோல் பிறிதொரு கவிதை உலகக் கவிதையில் இல்லை.

கவிதையிலே எடுத்தாளும் பொருளுக்குப் பொருத்தமாக இசைவாக நாதசுகம் தருகிற சில கவிதைகள் இங்கு என் நினைவுக்கு வருகின்றன.

கடல்மீது தோனியிலே சென்று அனுபவிக்கும் அனுபவத்தை வைத்து கடல் ஜுரம் (Sea Fever) என்கிற ஒரு கவிதையை ஆங்கிலக் கவிஞன் ஜான் மேஸ்பீல்ட் (John Masefield) எழுதியிருக்கிறான். "கட்டு மரங்கள்" என்று தலைப்பிட்டு மீனவர்களின் அனுபவத்தைச் சித்தரித்து இந்தியக் கவிக்குயில் சரோஜினி தேவியார் ஆங்கிலக் கவிதையொன்று புனைந்திருக்கிறார். அவை இனிமை சொட்டும் கவிதைகளே; எனினும் பாரதியின் ஊழிக்கூத்துடன் ஒப்பிடுகையில், அவற்றைப் பொதியமலைத் தென்றலாகத்தான் கொள்ள முடியும்.

வரப்போகும் ருஷ்யப்புரட்சியை (1905) உருவகமாகக் கொண்டு லெனின் கட்சியினரை ஒரு பயமறியாத கடற்பறவைக்கு உவமையாக்கி, "கடற்பறவையின் கீதம்" (Song of the stormy petrel) என்று மாக்ஸிம் கார்க்கி ஒரு எழுச்சி மிக்க கவிதை பாடியுள்ளார். புயல் வீசத் தொடங்கினால் மற்ற பறவைகள் அனைத்தும் தரை நோக்கிப் பறந்தோடிவிடும். ஆனால் கடற் பறவையோ, புயலின் வேகம் அதிகமாக அதிகமாக, கடலின் நடுவே சென்று உறுமிக் கவ்வும் வானத்துக்கும் சீறிப் பாயும் அலைகளுக்கும் நடுவே அச்சமின்றிச் சுழன்று சுழன்று பறக்கும். போல்ஷெவிக்குகளைப் பற்றிய ருஷ்யப் புரட்சியைப் பற்றிய இந்தக் கவிதை மனித மொழிக்கு ஒரு அற்புதமான வெற்றியாகும்.

எனினும், அது ஒரு கடற் புயல்தான்.

பாரதியினுடையதோ அசல் ஊழிக்கூத்து!

"வெடிபடு மண்டத் திடிபல தாளம்போட ...."

என்று பாடத் தொடங்கியதும் தரைமேலிருந்த கால்கள் அப்படியே தலைகீழாக வாரிவிடப்பட்டு ஊழிக்கூத்திலே நாம் விழுந்து சுழலத் தொடங்கி விடுகிறோம்.

சங்கீதம் ஒன்றுதான் பாரதியின் "ஊழிக்கூத்து"க்கு இணையாக -- ஊழிக்கூத்தையும் விஞ்சி -- சாதனை புரிந்திருக்கிறது என்பது என் கருத்து. அதுவும் நம் சங்கீதமல்ல, ஐரோப்பிய சங்கீதம் என்பது என் கருத்து. ஊழிக்கூத்தின் நாத உலகில் நுழையும் போது ஜெர்மன் நாட்டு இசை மேதைகளாகிய பீதோவனுடைய (Beethoven) வாக்னருடைய (Wagner) சில சங்கீதப் படைப்புகளுக்குள் கலந்து விடுகிறேன். "ஐந்துறு பூதம் சிந்திப் போயொன்றாகப் பின்னர் அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப்போக" வுமான ஒலிச்சித்திரங்களை அவர்கள் படைத்திருக்கிறார்கள். பாரதியின் ஊழிக் கூத்துக்காக இந்த ஐரோப்பிய சங்கீதத்தை ஒரு தடவை கேட்டுப் பாருங்கள். பீதோவனுடைய மூன்றாவது, ஐந்தாவது அல்லது ஒன்பதாவது சிம்பொனி (symphony) யையோ, வாக்னரின் Seigfried Tannhauser, opera (இசை நாடகம்) வையோ கேட்டுப் பாருங்கள்.

சங்கீதம் கவிதையை விஞ்சுகிறது; பாரதியைப் பீதோவன் விஞ்சுகிறார் என்றால் மோசமில்லை. யாரும் தாபமடையத் தேவையில்லை. சங்கீதம் எல்லாக் கலைகளுக்கும் ராணி; மொழியைவிட ஏழிசை ஆற்றல் நிறந்தது. பிறப்பிலும் ஒலி முந்தி, மொழி பிந்தி. எனவே இசை என்றும் கவிதையை முந்திக் கொண்டு வளரும். இசையும் லயமும் (கூத்தும்) குரலோடு உடலோடு இயல்பாக ஒட்டிக்கொண்டு வருவன. மற்ற கலைகள் அனைத்தும் செயற்கையாக மனிதன் ஓரளவுக்கு அறிவுநிலை எய்தியபின் வருவன. குழந்தைகள் இதற்குச் சாட்சி; முதன்முதலாகக் குழந்தைகள் தன்னியல்பாக வெளியிடும் கலை இசைக்கலைதான். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே அமைந்த இயல்பான முதல் பந்தம் உழைப்பும் இசையும்தான். மொழி, கவிதை, இலக்கியம், சிற்பம், ஓவியம், சாத்திரம் முதலான பிற யாவும் பின்னர் வருபவையே.

இந்தச் சங்கீதத்தையும், "ஊழிக்கூத்தை"யும் அனுபவிக்கிறபோது, "பேய்ப் பயங்கரத்தின் மடியிலே துஞ்சும் அழகுத் தெய்வம்" (Beauty lying on the lap of Terror) என்று வால்டர் ஸ்காட் பயின்ற ஒரு சொற்றொடரும், அதனையொட்டிய காட்சியும் நினைவுக்கு வருகின்றன. "பெர்த் நகரின் அழகி" (Fair Maid of Perth) என்கிற நாவலில் ஸ்காட்லாந்து நாட்டு மலைகளின் அடர்ந்த காடுகளின் பயங்கரமான - அதே நேரத்தில் அழகான - காட்சிகளைப் பக்கம் பக்கமாக வர்ணித்தும் திருப்தி கொள்ள முடியாமற்போய் அவர் பயின்ற சொற்றொடர் இது.

பயங்கரமே ஒரு அழகுதான். பயங்கரமும் அழகும் நம்முள் பிரிக்க முடியாத ஒரு தோற்றம்; ஒரு அனுபவம். உண்மையின் ஒரு நிலை, அழகின் ஒரு சுவை - பயங்கரம் என்பது.

விண்வெளியிற் சுழன்ற ககாரினும், விண்வெளியில் நீந்திய போபாவிச்சும் ஒப்புக் கொள்வார்கள்.

சிவபெருமானைச் சுடலையிலும், கயிலையிலும் வைத்துக் காட்டும் காட்சித் தத்துவம் (பிற தத்துவங்கள் ஒரு புறமிருக்க) இனியது அல்லவா?

"ஆம்" என்று தலையாட்டுகிறீர்களா? புரிந்து கொண்டு தலையாட்டுங்கள்.

பாரதியின் ஊழிக்கூத்து பிரபஞ்சத்தின் அழிவை "காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகின்" காட்சியைச் சித்தரிக்கிறது என்று நினைக்கிறிர்களா?

உங்கள் நினைப்பு முழு உண்மையல்ல! அது அரை உண்மையே!

அரையுண்மை என்றால் அது பொய் ஆகும்!

பயங்கரத்துக்குள்ளே அழகு ஊடுருவி நிற்கிறது. அழிவுக்குள்ளே சிருஷ்டி ஊடுருவி நிற்கிறது. இரண்டையும் ஒரே நிலையில் பார்ப்பதுதான் முழுமெய் ஆகும். ஏனெனில் இயக்கம்தான் நிரந்தரமானது; உண்மையானது; அழிவு பிறப்பு என்பதெல்லாம் பருப்பொருளின் உணர்வின் பல வடிவ மாற்றங்களே, நிலை மாற்றங்களே. எதுவும் பிறப்பதில்லை, எதுவும் இறப்பதில்லை. இயக்க மாற்றங்கள் வழியே மேல் நிலைக்குச் சென்ற வண்ணம் இருக்கின்றன.

"காலத் தொடு நிர்மூலம் படு மூவுலகும்" என்று சிந்திக்கிறீர்களா? அதோ, பாருங்கள்! அடுத்த வரியில் வரும் காட்சியை.

".............................. அங்கே கடவுள் மோனத் தொளியே தனியா யிலரும் - சிவன்
கோலங் கண்டுன் கனல் செய் சினமும் விலகும்"

அழிவுக்கிடையே, ஊழிக்கூத்துக்கு நடுவே, காளியின் சினம் விலகுகிறது! பிறகு நடப்பதென்ன?

"............................. சிவன் கோலங் கண்டுன் கனல் செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக் கூத்திடுவாய்!"

சும்மா தொடவில்லையாம்! சிவனைச் சக்தி கொஞ்சித் தொடுகிறாளாம்! தொட்டுவிட்டு ஆனந்தக் கூத்தாடுகிறாளாம்! இன்னொரு பிரபஞ்சம் அங்கே "பிறந்து" விட்டது - என்று இதற்குப் பொருள். அழிவின் நடுவே, ஊழிக் கூத்தின் நடுவே, சிவனும் சக்தியும் தொட்டு ஒரு புதிய பிரபஞ்சம் உருவெடுக்கிறது. அழிவிலிருந்து புத்துயிர் பெற்றெழும் புதிய பிரபஞ்சம்!

எனவே, "ஊழிக்கூத்து" எனும் பாரதி சித்திரம் உலகின் முடிவா? அல்லது உலகின் முதலா? என்கிற கேள்வி எழுப்பி மயங்காதீர்கள்.

அது அழிவு எனும் இயக்கத்தின் வடிவமா? அல்லது படைப்பு எனும் இயக்கத்தின் வடிவமா? என்று வினா எழுப்பி வியப்பில் ஆழ்ந்து போகாதீர்கள். 

சூரியனின் ஒளி மையத்தில் அடுதீ சொரியும் (Cosmic Radiation) கருவுக்குள் நின்ற கிரேக்க புராண புருஷன் பிராமதேயசின் முயற்சி இது! இக்கவிதையை நீங்கள் பாடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சூரியனின் எரி சுழற்சியில் ஒரு பகுதி சரிந்து பிரிந்து விண்வெளியில் எறியப்பட்டு அது பல கோளங்களுடன் முட்டி மோதிச் சிதறி பஞ்ச பூதங்களின் ஒரு கூத்துக்கு (என்ன வலிவான விஞ்ஞானச் சொல்) உட்பட்டு பிறகு மெல்ல மெல்லக் குளிர்ந்து பூமி என்று சொல்லும் இந்த மண்ணுலகம் பல கோடி ஆண்டுகள் கழித்து உருவாகிறதாகச் சிந்தித்துப் பாருங்கள். அப்பொழுது ஊழிக்கூத்து என்பது அழிவு படைப்பு என்கிற இரு போக்கும் ஊடுருவி உட்கலந்து தம்முள் மோதிக் கொள்ளும் இயக்கத்தின் வடிவத்தையே சித்திரமாகக் காட்டுவதாக ஒப்புக் கொள்வீர்கள்.

இந்த உண்மையான நிலையிலே நின்று (அல்லது சில வாசகர்கள் நான் சொல்வதை ஏற்காவிட்டால் இந்தப் பிரமையிலே, பாவனையிலே நின்று) ஊழிக்கூத்தைப் பாடிப் பாருங்கள். உள்ளத்திற்கும், கற்பனைக்கும் அளக்கவொண்ணா விவரிக்கவொண்ணா வலிமை சேருவதை உணர்வீர்கள். 

மனிதனின் சிந்தைக்கும், கற்பனைக்கும், தோளுக்கும் வலிமை சேர்க்கப் பாடியவன் பாரதி என்பதையும் மறக்காதீர்கள். அழிவின் காட்சி அவன் குறியாக இருக்க முடியாது. அழிவிலே உருவாகி வரும் படைப்பின் சித்திரமே அவன் குறியாக இருக்க முடியும்.

எனவேதான் ஊழிக்கூத்தை நாம் முற்றாகப் பாடிவிட்டு,

"அன்னை, அன்னை, ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை!" என்று பாரதியோடு நாமும் ஆர்ப்பரித்தெழுகிறோம். ஒரு சக்தி மயமான உலகிலே புகுந்து கூத்து நடத்திவிட்டு உள்ளம் நிறைந்த சக்தியின் தேசுடன் வெளிவருகிறோம். (நன்றி: ஆர்.கே.கண்ணன், நியு செஞ்சுரி புக் ஹவுஸ்)

Sunday, October 16, 2011

"புது நெறி காட்டிய பாரதி"


"அச்சம் தவிர்!"
("புது நெறி காட்டிய பாரதி" எனும் நூலில் தோழர் ஆர்.கே.கண்ணன் எழுதியது)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்ளுக்குள்ளே குமுறலும் புகைச்சலுமாக இருந்த போதிலும் -- 1857ஆம் ஆண்டில் துவங்கிய இந்திய விடுதலைப் போர் (சிப்பாய் கலகம் என்று ஏகாதிபத்தியச் சார்புள்ள வரலாற்றாசிரியர்கள் இதனைக் குறிப்பிடுவர்) தோற்றுப்போன பின்னணி இங்கு நினைவுகூரத்தக்கது -- வெளியே மொத்தத்தில் அடிமை இந்தியா மனமொடிந்து, செயல் திறனிழந்து, சிந்தனை சாம்பிப் போய், அந்நிய ஆட்சிக்குப் பயந்து வாழ்ந்து வந்தது. பழமைப் புலம்பலுக்கோ, போலி விருப்புக்கோ இடந்தராமல், உள்ளது உள்ளபடியே இந்நிலைமையை "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்கிற பாட்டில் பாரதி கச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறான். புண்ணைக் கீறிக் கிளறிப் பார்த்த பிறகன்றோ நோயின் தன்மை தெரியும், மருத்துவம் செய்ய முடியும்? "இந்த நிலைகெட்ட மனிதரை" பாரதி எவ்வாறு வர்ணிக்கிறான் என்று பாருங்கள்.

"அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே"

என்று அச்சப் பேயை முதலில், எடுத்த எடுப்பிலே குறிக்கிறான். இந்த அச்சத்தின் மிக முக்கியமான, மிகப் பரவலான வெளியீடு எது?

"தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்"

என்ற அரசுபால் மக்கள் காட்டும் பயத்தை முதலில் சுட்டுகிறான். கேவலம் மக்கள் தரும் வரிப்பணத்தை நம்பி இயங்குகின்ற ஒரு அரசைக் கண்டு அதே மக்கள் பயங்கொள்வதா? இதைக் காட்டிலும் அபத்தமான, பைத்தியக்காரத்தனமான அச்சம் வேறொன்று இருக்க முடியுமா என்பது கவிஞனின் மிகமிக எளிமையான, ஆனால் மிகமிக முக்கியமான கேள்வி.

அடுத்து, இந்த அச்சத்திற்குப் பிறப்பிடம், மூலகாரணம் எது என்று எடுத்துக் காட்டுகிறான் பாரதி.

"கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடி என்றால் அது பெரிதாமோ?"

என்று ஓகாரத்தில் கவிஞனின் திகைப்பு முற்றளவாக வெளிப்படுகிறது. ஒற்றுமையின்மையை இரண்டாவதாக இவ்வாறு வைத்த பாரதி அதன் காரணத்தை இனி விளக்க முற்படுகிறான்.

"சாத்திரங்கள் ஒன்றுங் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத் திகழ்வார்;
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூது செய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்."

என்று தத்துவப் பார்வை பிழையை, கேட்டை, மூன்றாவதாக வைக்கிறான். விழி கெட்டால் வழிகெடும் அல்லவா?

இந்தத் தத்துவப் பார்வைக் கேடு பிரிவினைகளை வளர்த்தது மட்டுமின்றி மற்றொரு தீங்கும் விளைத்தது என்று அடுத்து வரும் வரிகளில் சுட்டிக் காட்டுகிறான்.

"கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்"

என்று பிரிவினைகள் வளர்ந்தது மட்டுமின்றி, தீது சூதுவாதுகளின் காரணங்களைக் காணும் அறிவும் அற்றுப் போயினர். ஜனக்கட்டு நலிய அறிவுக்கண் மங்கியது என்று இதை நான்காவதாக வைக்கிறான். சமுதாயத்தின் ஒன்ற்றுமை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அந்தச் சமுதாயத்தின் அறிவும் ஆற்றலும் வெளிப்பட்டு இயங்கும் என்று அவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பாரதி சுட்டிக்காட்டுவது ஒரு மாபெரும் உண்மையாகும். கல்லணை கட்டிய அந்தக் காலமாயினும் சரி, எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மையல்லவா இது? "ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம் - ஒரு பெரும் செயல் செய்வாய், வா! வா! வா!" என்ற வரியின் ஆழமும் விரிவும் சிந்தித்து அறியத்தக்கன.

இவற்றின் விளைவென்ன?

"கண்ணில்லாக் குழந்தைகள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்"

என்று மிக எளிமையாக விளக்கி விடுகிறான் பாரதி. குழந்தைகளின் இயல்பான பேதைமையோடு பாரதி ஒப்பிடவில்லை. எந்தக் குழந்தையும் பிறர் காட்டிய வழியிற் சென்று முதலில் பார்க்கத்தான் செய்யும்; எனினும் வெகு தூரம் சென்று மாட்டிக் கொள்ளாது; தனக்குப் பழக்கமில்லாத பாதையில் போகத் தயங்கும். சுற்றுமுற்றும் பார்க்கும், நின்று அழும். ஆனால் அந்தக் குழந்தைக்குக் கண்ணும் இல்லை என்றால்? அந்தப் பேதைக் குழந்தைக்குத் தனக்குப் பழக்கப்பட்ட பாதை எது பழக்கப்படாத பாதை எது என்று கண்டறியக் கண்ணும் இல்லாத ஒரு நிலையிலே 'பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்ளும்'. எளிய உவமை "கண்ணில்லாக் குழந்தைகள்" நல்ல வழி சொன்னாலும், அதிலே நேராக நடக்க இயலாத குழந்தைகள். நல்லவழி காட்டுகிறவனும் குழந்தையைக் கையோடு கூட்டிக் கொண்டு வழி நடந்தால்தான் உண்டு முன்னேற்றம்.

இந்தக் குழந்தைகள் ஒரு காலத்தில் இருந்த உச்சநிலை எங்கே? வீழ்ந்துள்ள பள்ளம் எங்கே? என்பதைக் கடைசியிலே ஐந்தாஅகச் சுட்டிக்காட்டிச் சித்திரத்தின் பயங்கரமான சோகத்தை வெளியிடுகிறான்.

"நண்ணிய பெருங் கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகல் போல வாழ்வார்."

கடைசி வரியிலே கடைசிச் சொல்லிலே சித்திரத்தின் கசப்பு அத்தனையும் கொட்டி விடுகிறான் பாரதி. "பொறியற்ற விலங்குகள்" என்று வருணித்து விட்டதோடல்லாமல் அவற்றைப் போல் இவர்கள் "வாழ்வார்களாம்!". இது வாழ்வா? மனிதனுக்குரிய வாழ்வா? இந்தப் புண்ணிய நாட்டினிலே இதுவும் ஒரு வாழ்வா? என்கிற பொருட் தொனிகள், உணர்ச்சித் தொனிகள், நெஞ்சிலே சிந்தியவாறு முடிகிறது இந்த நொண்டிச் சிந்து.

உணர்ச்சிப் பிழம்பான இந்தப் பாடலில், கருத்துக்கள் எவ்வளவு ஒழுங்காக, சீராக வைக்கப்படுகின்றன. கவனியுங்கள். "ஞானமும் பொய்க்க நசிக்கு மோர் சாதி" என்று தத்துவப் பார்வையின் இன்றியமையாத் தன்மையை உணர்ந்த கவிஞன் பாடலில் அதை முதன்மைப்படுத்தவில்லை. அச்சத்தையே முதலில் வைத்தான். காரணம்? அலிக்கு இன்பம் இல்லை; கோழைக்குத் தர்மம் இல்லை. கோழைக்குத் தர்மம் கோழைத்தனம் ஒன்றுதான்! கோழைத்தனம் குடிகொண்டுவிட்ட நாட்டில் ஞானம் இருந்தென்ன போயென்ன? இரண்டும் ஒன்றுதான்! எனவெதான் "அச்சம் தவிர்" என்று புதிய ஆத்திசூடியில் துவக்கிச் சமயம் வரும் போதெல்லாமே பாடல்களிலும், கட்டுரைகளிலும் அச்சம் என்கிற முதற் பகைமையை, மூலப் பகையை, உட்பகையை முதலில் வேரறுக்கச் சொல்கிறான். புரட்சி செய்வதற்கு முதல் தேவையாக "நெஞ்சத்துணிவு வேண்டும்"; மேலும் துணிவு வேண்டும்; மேலும் மேலும் துணிவு வேண்டும்" என்று பிரெஞ்சுப் புரட்சியின் கலையைப் பயின்ற டாண்டன் (Danton) போதிக்கிற சொற்கள் இங்கு நினைவுக்கு வருகின்றன.

இவ்வாறு கருத்துக்களை ஆய்ந்து தேர்ந்து அளந்து வரிசைப்படுத்தி ஒவ்வொரு பாட்டிலும் கோவையாக அழகு தமிழிலே அமைப்பது பாரதியின் கவிதைக்குரிய முக்கிய இலக்கணங்களில் ஒன்றாகும். பாரதி சீரிய சிந்தனையாளன்; வெறும் வார்த்தை ஜாலங்கள் செய்யும் கவிஞனும் அல்ல; நல்ல முற்போக்கான கருத்துக்கள் இருந்தாலும் அவற்றை முழு வடிவத்திலே கண்டு தேர்ந்து ஒழுங்குபடுத்திச் சொல்ல இயலாமல் உள் சமநிலையற்ற உள்ளடக்கத்தோடு பாட்டிசைக்கும் கவிஞனும் அல்ல.

பாரதியின் பாப்பா பாட்டைப் பாருங்கள். பாப்பாவுக்குப் பழக்கமான எளிய சொற்களை மட்டுமே கையாள்வதிலே எத்துணை அக்கறையும் விழிப்பும் காட்டினானோ அதே போல் எந்தெந்தக் கருத்துக்களை -- ஆதாரக் கருத்துக்களை -- எப்படிச் சொல்வது என்பதிலும் மிகுந்த விழிப்பும் அக்கறையும் பாரதி காட்டி இருக்கிறான். உயர்திரு ரா.அ.பத்மநாபன் அவர்களின் "சித்திர பாரதி"யிலே இதற்குச் சான்று கிடைத்திருக்கிறது.

பாப்பா பாட்டை முதலில் பாடியபோது பாரதி எழுதிய சில வரிகள் பின்வருமாறு:

"சாதிப் பெருமையில்லை பாப்பா - அதில்
தாழ்ச்சி யுயர்ச்சி செய்தல் பாவம்
நீதி, தெளிந்த மதி, அன்பு - இவை
நிறைய உடையவர்கள் மேலோர்."

இதைத்தானே மறுபடியும் சிந்தித்துப் பார்த்துவிட்டு பாரதி தன்னைத்தானே திருத்திக் கொள்கிறான்! சுயவிமர்சனம் தன்னியல்பாக வருகிறது - எந்தப் பாப்பாவும் கேட்காமலே, எந்தத் தாத்தாவும் கேட்காமலே!

"சாதிப் பெருமையில்லை பாப்பா" என்பதை "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று மாற்றுகிறான்.

எவ்வளவு பொருள் நிறைந்த மாற்றம்? சாதிகள் இருக்கலாம், ஆனால் அவை பற்றிப் பெருமை பாராட்டி நடக்காதே என்பது முதல் வரிகள். இப்போது, அந்தக் கருத்தும் தவறு என்று தீர்மானித்து "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று சாதிப்பேயின் மண்டையில் ஓங்கியடித்து விடுகிறான்.

அடுத்து ..........

"அதில் தாழ்ச்சி யுயர்ச்சி செய்தல் பாவம்" என்கிற வரியை "குலத் தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்" என்று திருத்துகிறான். முன்னே வந்த திருத்தத்தை யொட்டி இங்கே வினையின் தன்மையையும் நேராக்குகிறான். முன்பு "சாதிகள் இருந்தாலும் சாதியிலே பெருமையில்லை, எனவே தாழ்ச்சி யுயர்ச்சி செய்யாதே என்றான்; இப்போது சாதிகளே இல்லை என்று ஓர்ந்ததினாலே தாழ்ச்சியுயர்ச்சி சொல்வதே பாவம் என்று திருத்தத்தின் மூலம் கருத்துக்கு வலுவேற்றுகிறான்.

"நீதி, தெளிந்த மதி, அன்பு - இவை
நிறைய உடையவர்கள் மேலோர்"

என்கிற வரையைப் பார்க்கிறான். "தெளிந்த மதி" என்பதை விட "உயர்ந்த மதி" எனக் குறித்தல் சிறப்பு என்று உணர்கிறான். "உயர்ந்த மதி" என்று சொல்வதிலேயே தெளிவும் தொக்கி நிற்கிறது என்று காண்கிறான். பிறகு பாப்பாவுக்காகப் பாட்டுப் பாடப்படுகிறது என்பதைத் தனக்குத்தானே நினைவூட்டிக் கொள்கிறான். பாப்பாவுக்கு இந்த நீதி, மதி எல்லாம் எப்படிக் கிடைக்கும்? கல்வியை மறந்து விட்டது எவ்வளவு பெரிய தவறு? என்று உணர்கிறான். குழந்தைக்குக் கல்வி இன்றியமையாததாயிற்றே! அதைப் பாட்டிலே செருகி விடுகிறான். எத்துணை விழிப்போடு, பொறுப்பு உணர்ச்சியோடு, பாப்பாக்களிடம் இந்த மகாகவி நடந்து கொள்கிறான்! வரிகள் பின்வருமாறு திருத்தப் பெறுகின்றன.

"நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்"

இப்போது பாரதிக்கு "உடம்பு நேராச்சு; பாட்டும் நேராச்சு!"

இவை மட்டுமா? இந்தச் செய்யுளுக்கு முன் சென்ற இரு செய்யுளிலும் முக்கியமான திருத்தங்கள் செய்திருக்கிறான் பாரதி.

"அமிழ்தில் இனியதடி பாப்பா - எங்கள்
ஆரிய தேசமடி பாப்பா"

என்கிற, தான் முதலில் எழுதிப் பதிப்பித்த வரிகளை மறுபடியும் ஆராய்கிறான். குற்றம் கண்ணுக்குப் புலப்படுகிறது! குழந்தைக்கு ஆரியன், திராவிடன் என்றால் என்ன தெரியும். எது விளங்கும்? பிறர் ஒரு அர்த்தத்தில் அவற்றைப் பயில, இரண்டுக்கும் நடுவே பாப்பா சிக்கிக்கொண்டு இடர்ப்பட இடம் வைக்கலாமோ? கூடாது என்று தீர்மானிக்கிறான் பாரதி. பாப்பாவுக்குச் சங்கடமில்லாதவாறு வரியைத் திருத்த முற்படுகிறான். இதோ:--

"அமிழ்தில் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா"

இப்போது விஷயம் நேராகி விட்டது; உயர்வாகவும் அமைந்துவிட்டது. அதிலே பாரதிக்கு மனப்பூரிப்புத் தாங்கவில்லை -- குழந்தைகளோடு ஒட்டிக் கொள்கிறான். "எங்கள்" என்ற சொல்லுக்குப் பதிலாக குழந்தைகளோடு தானும் ஒரு குழந்தையாகச் சேர்ந்து கொண்டு "நம்" ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! என்று திருத்துகிறான்.

அதே போல்: "செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்
தெய்வமென்று கொண்டாடு பாப்பா!"

என்பதில் கடைசி வரியை "தினமும் புகழ்ந்திடடி பாப்பா" என்று திருத்துகிறான். திருத்திய பிறகு குழந்தைக்கு இந்த விளக்கத்தின் பயனைத் தரவேண்டிப் புதிதாக இரண்டு செய்யுட்களைப் பாப்பா பாட்டில் சேர்க்கிறான். அவை:

"வடக்கில் இயமமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!
வேதமுடைய திந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேத மில்லாத ஹிந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!"

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானத்தைத் "தெய்வம்" என்று கொண்டாடு பாப்பா என்று சொல்வது பாரதிக்குச் சரியென்று படவில்லை. அதைத் "தினமும் புகழ்ந்திடடி" என்று திருத்திவிட்டான். பின் எதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா" என்று சொல்கிறான்? வேதமுடைய நாட்டை; வீரர் உள்ள நாட்டை! - இதைத் தெய்வமென்று கொண்டாடு என்கிறான்.

சொற்திருத்தங்கள் சிறியவையாயினும் பொருள் நிறைந்த திருத்தங்கள் அல்லவா? சொல்லின்பத்தைத் தெய்வமாகப் போற்றிய பாரதி கருத்து விஷயத்தில் - உள்ளடக்கத்தின் விஷயத்தில் - எவ்வளவு பிரமிக்கத்தக்க பொறுப்புணர்ச்சியும், ஆழ்ந்த சிந்தனையும் காட்டியிருக்கிறான்.

பாரதி மகாகவி என்பதற்கு இதுவும் ஒரு ஆணித்தரமான சான்றாகும்.

அகண்டாகாரமாக விரிந்து உயர்ந்து நிற்கும் வாழ்விலே ஏற்கனவே மனிதகுலம் சாதித்த சமுதாயச் சமன நிலைக்குரிய கருத்துக்களையும், பண்புகளையும், அவற்றிற்கிடையே இருக்கும் பரஸ்பர, ஆதார - இணைப்புக்களையும் பழுதறக் காக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி. அதோடு நில்லாமல் அந்த அகண்டாகாரமான வாழ்விலே இன்று காணவேண்டியிருக்கிற புதிய சமன நிலைக்கு அடிகோலக்கூடிய புதிய கருத்துக்களையும், பண்புகளையும், அவற்றிற்குரிய பரஸ்பர ஆதார இணைப்புக்களையும் ஒரே முழுமையாக (தத்துவமாகவும், செயல் திட்டமாகவும், செயலாகவும், கலையாகவும்) படைக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி; இவ்விரண்டு பொறுப்புணர்ச்சிகளும் மகாகவிகளின் சாதனையிலே வெளிப்படுவதைக் காண்கிறோம்.

உலக மகாகவி கத்தே தனது FAUST படைப்புக்கு இருபத்தைந்து ஆண்டுகள் செலவிட்டார். "போரும் அமைதியும்" என்கிற நவீன காலத்திய இதிகாசத்தை எழுத டால்ஸ்டாய் எட்டு ஆண்டுகள் செலவிட்டார் என்கிற பல செய்திகளின் அடியில் காணக்கிடக்கும் உண்மை இதுவன்றி வேறென்ன?

எனவேதான் அவர்களின் இலக்கியங்களை வெறும் இலக்கியங்கள் என்று மக்கள் கொள்வதில்லை; மனிதகுலத் தொன்மையின் தொடக்கப் புள்ளியிலிருந்து முன்னே தோன்றும் அடிவானம் வரைக்கும் ஓங்கி வளைந்த வானப் பாலங்கள், வான வளைவுகள், அவை என்று போற்றிக் கொண்டாடுகிறார்கள்.

நன்றி: ஆர்.கே.கண்ணன் "புது நெறி காட்டிய பாரதி. நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.