Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Monday, July 25, 2011

"இந்தியா" பத்திரிகை.


"இந்தியா" பத்திரிகை.

எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் என்பவர் பாரதியார் காலத்திலேயே "சுதேசமித்திரனில்" துணை ஆசிரியராக இருந்தவர். சிறந்த எழுத்தாளர். தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட கால வரலாறு இவற்றைப் பற்றி பல நூல்களை எழுதியவர். அவர் "சுப்பிரமணிய பாரதியார்" என்று நூலொன்றை எழுதி 1955இல் வெளியிட்டார். அந்த நூலின் முன்னுரையில் அவர் எழுதிய முன்னுரையிலிருந்து:-

"கம்பனும் காளமேகமும் முன்னம் கவி மழை பொழிந்து நம்மைக் களிப்பித்தனர். அண்மையிலோ சுப்பிரமணிய பாரதியார் கவியமுதம் சொரிந்து நமக்குப் பரவசம் ஊட்டினார்.

பழம் புலவர்களின் கவிதையை உணர, அகராதியும் ஆசானும் வேண்டும். பாரதியாரின் பாடலை உணர நமக்கு மனமிருந்தால் போதும்; மகிழ்ச்சி எய்தலாம்; தெளிவும் கொள்ளலாம்."

பாரதியாரின் பாப்பா பாட்டும், முரசும், சிறுவர் சிறுமியருக்கே அன்றி முதியோருக்கும் முதுமொழி புகட்டும். புதிய ஆத்திசூடியோ புத்தியை வளர்க்கும்.

புதுயுகக் கவிஞர் பாரதியார். அவர் போன்ற கவிஞர் இன்றளவும் தோன்றவில்லை. உலக மகா கவிகளுள் அவர் ஒருவர். அவர் சரிதம் சுவை மிக்கது. இளைஞர் படித்து இன்புறலாம்."

மேற்படி நூலில் எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் பாரதியின் பல பரிமாணங்களை விரிவாக எடுத்துரைக்கிறார். அப்படி அவர் எழுதியவற்றுள் "இந்தியா" எனும் தலைப்பில் எழுதியுள்ள பகுதியை இப்போது பார்க்கலாம்.

"சுதேசமித்திரனில் பாரதியாருக்கு எழுத்துச் சுதந்திரம் இல்லை. அது பற்றியே சொந்தமான பத்திரிகை வேண்டுமென்று விரும்பி நின்றார் அவர். அச்சமயம் சென்னை நகரிலே வேதாந்தப் பத்திரிகை ஒன்று நடந்து வந்தது. அதன் பெயர் "பிரதிவாதி" என்பதாம்.

அழகிய சிங்கர் என்பார் அதனை நடத்தி வந்தார். அவர் உறவினரான திருமலாச்சாரியார் அப்பத்திரிகைக்கு ஆசிரியராய் இருந்து வந்தார். ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவது சிலர் வழக்கம். அப்போது நடந்து வந்த சுதேசிய இயக்கம் அவரை ஆட்கொண்டது.

ஆதலினால், தமிழகத்தைத் தட்டி எழுப்ப, ஒரு தமிழ்ப் பத்திரிகை நடத்த அவர் தயாரானார். அப் பத்திரிகைக்கு "இந்தியா" என்று பெயர் சூட்டப் பெற்றது. அதற்கு நம் பாரதியார் ஆசிரியராய் வாய்த்தார். 1907ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த வாரப் பத்திரிகை எழுந்தது.

பாரதியாரை ஆசிரியராகக் கொண்ட பத்திரிகையோ, அவரது உள்ளம், உணர்ச்சி, உயர்வு, உற்சாகம் முதலிய குணங்கள் அனைத்தையும் கொண்டு குலவியது. கட்டுரைகள் வீரக் கனல் தெறிக்கும்; தேசப்பற்று என்னும் நெருப்பைக் கக்கும்.

"இந்தியா" பத்திரிகையை எல்லோரும் விரும்பி வாங்கினர். ஒரு மாதத்திற்குள் நாலாயிரம் சந்தாதாரர்கள் சேர்ந்தார்கள். அந்நாளில் பலருக்கும் "இந்தியா"வைப் படிப்பது ஒரு கடமையாய் இருந்தது. பத்திரிகையில் எழுதுவதுடன் பாரதியார் நிற்கவில்லை. திருவல்லிக்கேணி கடற்கரையில் கூட்டம் கூட்டிப் பேசுவார், பாடுவார்.
                                                        G.Subramania Iyer
சென்னை மாநகரிலும், சுதேசிய இயக்கம் தலை தூக்கியது. அதனை மேலும் வளர்க்க, வங்காளத்திலிருந்து விபின் சந்திரபாலர் வந்தார். திருவல்லிக்கேணிக் கடற்கரையில் சொல்மாரி பொழிந்தார். ஜி.சுப்பிரமணிய ஐயர் தலைமை தாங்கி நின்றார். பாலருடைய சொற்பொழிவுகள் தேச ஆவேசத்தை எழுப்பியது; புதிய உணர்ச்சியையும் ஊட்டியது.

பாலரின் சொல்மாரி ஆங்கிலத்தில் அமைந்தது. பாரதியார் அதனை "இந்தியா" பத்திரிகையில் சுவை கெடாமல் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். ஆங்கிலம் அறியாதாருக்கு அம்மொழி பெயர்ப்பு நல்லுதவி புரிந்தது. பாலரின் வாசகம் மணிவாசகமே யாகும்.

அப்போது வடக்கே கல்கத்தா நகரில், 'வந்தேமாதரம்' என்னும் ஆங்கில தினசரி நடந்து வந்தது. அதன் ஆசிரியர் பாபு அரவிந்த கோஷ். அரவிந்தரின் எழுத்தும் ஆவேசமாய் இருக்கும். அவர் திலகருக்கு வலக்கை போன்று இருந்தவர். சுதேச பக்தியைத் தூண்டியதில் தலை சிறந்தவர். சுயராஜ்யமே வேண்டுமென்று சாதித்தவர்.
                                                             Bala Gangadar Tilak
பால கங்காதர திலகர், விபின் சந்திர பாலர், லாலா லஜபதிராய், பாபு அரவிந்த கோஷ் இவர்கள் ஒரு கட்சி. அன்னிய ஆட்சி அகல வேண்டுமென்று வாதிடுபவர்கள். சுய ராஜ்யமே வேண்டும் என்று சுடச்சுடப் பேசுவார்கள். இவர்கள் 'தீவிரக் கட்சியார்' என அழைக்கப்பட்டார்கள்.
                                                                     Gokhale
கோபாலகிருஷ்ண கோகலே, சுரேந்திரநாத் பானர்ஜி, சென்னை வி.கிருஷ்ணசாமி அய்யர் ஆகியோர் 'மிதவாதக் கட்சியார்' எனப்படுபவர்கள். ஆங்கில அதிகாரிகளை அண்டி நின்று, நயந்து பேசி, நாளடைவில் சுயராஜ்யம் கொள்ளலாம் என்பதே இந்த மிதவாதக் கட்சியாரின் நோக்கம்.

தீவிரக் கட்சியார், மிதவாதக் கட்சியார், இருவரும் கொண்டது அன்றைய காங்கிரஸ் மகாசபை. ஆயினும் அச்சபையில் மிதவாதிகளே அதிகம். அவர்களுக்குச் செல்வாக்கு மிகுதி. தீவிரக் கட்சியாருக்கோ, அச்சபையில் புதிய உணர்ச்சியைப் புகுத்த வேண்டும் என்பதே கருத்து. அதிகாரிகளை அண்டி நிற்பதிலும் மனம் இல்லை.

அந்த நிலையில் 1907ஆம் வருஷத்தின் இறுதியில், சூரத் நகரத்தில் காங்கிரஸ் மகாசபை கூடியது. மிதவாதக் குழுவைச் சேர்ந்த ராஷ்பிகாரி கோஷ் என்பார் தலைவராய் இருந்தார். அதில் திலகரின் கோஷ்டிக்கு விருப்பம் இல்லை. நம் சென்னையிலிருந்து திலகரை ஆதரிக்கப் பலர் சென்றனர்.

அவ்விதம் சென்றவர்களுள் பாரதியாரும் ஒருவர். அரச வாழ்த்து முழங்க அந்த சூரத் நகரில் மகாசபை க்கூடியது. (அதாவது கூட்டம் துவங்குமுன் இங்கிலாந்து அரசருக்கு வாழ்த்துப்பா பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் காங்கிரசில்) ராஷ்பிகாரி கோஷ் தமது பிரசங்கத்தைப் படிக்க வாய் திறந்தார். உடனே சபையில் சந்தடி கிளம்பியது. தலைவரின் பேச்சைக் கேட்கப் பலருக்கு ஆவல் இல்லை. அது பற்றியே எழுந்தது சந்தடி.
                                                         Dada Bai Naoroji
பால கங்காதர திலகர் கம்பீரமான புருஷர். சிங்க நோக்கு உடையவர். அவர் பெருமிதமாக எழுந்தார். "இந்தத் தலைவர் வேண்டாம்" என்றார். மிதவாதக் குழுவினர் அது கேட்டு ஆத்திரம் அடைந்தனர். திலகரைப் பார்த்து, "நீர் பேசுவது ஒழுங்கு அன்று" என்று கோபமாகக் கத்தினர்.

"நான் ஒரு பிரதிநிதி. சபையில் பேச எனக்கு உரிமை உண்டு" என்று திலகர் கர்ஜித்தார். இதற்குள் செருப்பு ஒன்று பறந்து வந்து மேடை மீதிருந்த சுரேந்திரநாத் பானர்ஜியின் கன்னத்தைத் தடவிக்கொண்டு விழுந்தது. அவ்வளவுதான், சபையில் நாற்காலிகள் நொறுங்கின. வசவும் திட்டும் ஓங்கின. தடியடியும் உண்டாயிற்று. உடனே போலீசார் தோன்றி எல்லோரையும் வெளியே அனுப்பினர்.

சூரத் காங்கிரஸ் அவ்விதம் குலைந்து கலைந்தது. திலகர் கட்சியார், அரவிந்தரின் தலைமையில் கூடினர். சுதேசிய விரதத்தை வற்புறுத்தினர். அன்னிய ஆடை விலக்கையும் சபதமாகக் கொண்டனர். அச்சமயம் திலகரை நேரில் தரிசித்தார் பாரதியார். "வாழ்க திலகர் நாமம்" என்ற பாடலை ஆவேசமாகப் பாடினார்.

வாழ்க திலகன் நாமம் வாழ்க வாழ்கவே!
வீழ்க கொடுங் கோன்மை வீழ்க வீழ்கவே!!

நாலு திசையும் ஸ்வாதந்த்ரிய நாதம் எழுகவே
நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே
ஏலு மனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே
எந்த நாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே.

கல்வி யென்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் - நல்ல
கருத்தினால் அதனைச் சூழ்ந்தொர் அகழி வெட்டினான்
சொல் விளக்கம் என்று அதனிடைக் கோயிலாக்கினான்
ஸ்வாதந்த்ர்யம் என்றதன் மேற் கொடியைத் தூக்கினான்.

துன்பம் எனும் கடலைக் கடக்கும் தோணி அவன் பெயர்
சோர்வு எனும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர்
அன்பு எனும் தேன் ஊறித் ததும்பும் புதுமலர் அவன் பேர்
ஆண்மை எனும் பொருளைக் காட்டும் அறிகுறி அவன் பேர்."

சூரத் நகரிலிருந்து திரும்பியதும் பாரதியார் சென்னை நகரிலே மேளதாளங்களுடன் பெரிய ஊர்வலம் நடத்தினார். மாபெரும் கூட்டமும் கூட்டினார். நகரிலே சுதேசியக் கிளர்ச்சி வலுத்தது. "பாரத் பந்தர்" என்னும் சுதேசியக் கடையொன்று ஏற்பட்டது. நாட்டுப் பொருள்களையே நம்மவர் வாங்க வேண்டும்; அன்னிய ஆடைகளை விலக்க வேண்டும் என்று பாரதியாரும், சிதம்பரம் பிள்ளையும் பிரசாரம் செய்தனர்.

புதிய தேசியக் கட்சிக்குப் பேரிகை போல ஆனார் பாரதியார். மிதவாதக் குழுவினை மிகவும் சுவையாக நையாண்டி செய்தார். ஆங்கில அதிகாரிகளோ, புதிய தேசியக் கட்சியின் மீது சீற்றம் மிகுந்தனர். அக்கட்சியாரில் பலரையும் அடக்கி ஒடுக்க முயன்றனர்.

வங்கத்திலே சுதேசிய வீரர் எழுவர் நாடு கடத்தப்பட்டனர். வந்தேமாதர கோஷம் கூடாது என்று அதிகாரிகள் ஆணையிட்டார்கள். அது கண்டு பாரதியார் பொறுக்கவில்லை. படபடப்பாக எழுதியும் பேசியும் வந்தார். அதனால் "இந்தியா" பத்திரிகையின் மீதும் அதிகார அம்பு பாய்ந்தது.

பாரதியாரின் மீதும் அந்த அம்பு வந்து பாயும் என்று நகர் எங்கும் பேச்சு எழுந்தது. அந்நாளிலே அதிகாரிகள் கோபத்துக்கு ஆளானால் கடும் சிறை கிட்டும். மனைவி மக்களைத் துறந்து அந்தமான் தீவில் சிறை கிடக்க வேண்டும். 'இதோ வாரண்ட் வந்துவிட்டது' என்று பாரதியாருக்கு அன்பர் உரைத்தனர். புதுச்சேரிக்குப் போய்விடவும் சொல்லினர்.

சிறை புகப் பாரதியாருக்கு மனமில்லை. ஏன்? சிறையில் கிடந்தால், எழுத்தினாலும், பேச்சினாலும் தேச ஊழியம் புரிய முடியாது. மக்களைத் தட்டி எழுப்ப இயலாது. பெட்டிப் பாம்பு போல பதுங்கி பயந்து சுருண்டு கிடக்க வேண்டும். மேலும் வரகவியாக உள்ளவர், கட்டுப்பட்டிருக்க ஒப்புவாரோ?

ஆதலினால், அதிகாரிகளின் கண்ணில் படாமலும், ஒற்றரின் நோக்கில் விழாமலும் புதுச்சேரிக்குப் போகத் துணிந்தார் அவர். புதுச்சேரி அன்று பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தம். கடன் தொல்லை தாங்காமல் பலர் புதுச்சேரியில் புகுந்து கொள்வர்.
                                                                         C.R.Das
அதிகாரிகளின் தொல்லைக்கு அஞ்சுவோரும் அங்கே புகுந்து வசிப்பதுண்டு. ஆங்கில அதிகாரிகள் அன்னாரைச் சிறை செய்ய அங்கே வரக்கூடாது என்று பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் ஓர் ஒப்பந்தம் உண்டு. அதனை அறிவார் பாரதியார்.

மாயமாக மறைந்து போல அவர் உறுதி கொண்டார். அவ்வாறு அவர் நடந்து கொண்டதை அடுத்த கட்டுரையில் விரித்து உரைப்போம்.

No comments:

Post a Comment

You can send your comments