Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Saturday, December 22, 2012

மகாகவி பாரதியாரின் இசைக்கோட்பாடுகள்


மகாகவி பாரதியாரின் இசைக்கோட்பாடுகள்

முன்னுரை:

மகாகவி பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற கவிஞர். தினந்தினம் 'உண்டு உறங்கி பிறருக்கு இடர்செயும் கலக மானுடப் பூச்சிகள்' போலன்றி அவன் தனித்துவங்களுடன் வாழ்ந்தவன். அவனுடைய சிந்தனைகள் மிகவும் உன்னதமான வைகள். தான் உயர்ந்த அளவுக்குப் பிறரும் உயரவேண்டும் எனும் கருத்துடையவன் பாரதி. அவன் எழுதிய ஒவ்வொரு எழுத்தும், அவனது கவிதைகள், கட்டுரைகள், கதைகள், பத்திரிகைக் குறிப்புகள் என அத்தனையும் அமரத்துவம் வாய்ந்தவை.

"தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"

என்று இறைவனிடம் எக்காளமிட்டவன். பொதுவாகக் கவிஞர்கள் ஏதேனுமொரு அமர காப்பியத்தைப் படைத்து அதனால் புகழ் பெறுவார்கள். ஆனால் பாரதியோ அவன் வாழ்ந்த காலத்தின் கண்ணாடியாக இருந்தான். அவன் வாழ்ந்த காலத்திய சமூகம் எப்படியிருந்தது; அரசியல் எப்படி இருந்தது; மனிதர்கள் எப்படி இருந்தார்கள்; அவர்தம் மனோபாவம் எப்படி இருந்தது என்பதையெல்லாம் இவன் படைப்புகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அதனால்தான் அவன் இன்றைக்கும் போற்றிப் புகழப்படுகிறான்.

மகாகவி பாரதிக்குப் பல துறைகளில் நல்ல புலமை இருந்தது. இசையும் கவிதையும் அவனது மூச்சுக் காற்றாக விளங்கியது. இசையின் நுணுக்கங்களை நன்குணர்ந்த இசை மேதை பாரதி. அவன் குரலைக் கேட்கும் பாக்கியம் நம் தலைமுறையினருக்குக் கிடைக்க வில்லையாயினும், வீரக்கனல் வ.வெ.சு.ஐயர் ஒரு நூலுக்கு எழுதிய முன்னுரையில் சொல்லு கிறார், "புதுச்சேரி கடற்கரையில் பாரதி தனது கவிதைகளைத் தேனினும் இனிய அவனது அற்புதக் குரலெடுத்து உரத்தக் குரலில் பாடுகின்றபோது கேட்கக் கொடுத்து வைத்தவர்கள் புண்ணியவான்கள்" என்கிறார் அவர். இனி மகாகவியின் இசைக் கோட்பாடுகள் குறித்த சில செய்திகளைப் பார்க்கலாம்.

குயிலின் இசை:

மகாகவி இயற்றிய முப்பெரும் காப்பியங்களில் "குயில் பாட்டும்" ஒன்று. இந்த குயில்பாட்டு அரிய பல செய்திகளை உள்ளடக்கியது. புதுவை கடற்கரையில் அலைகள் எழுப்பும் ஓசை கவிஞருக்கு இசையாக, அதிலும் வேதப் பொருளை எடுத்துரைக்கும் இசையாக வந்து காதில் கேட்கிறது. அருகேயுள்ள மாந்தோப்பிலிருந்து தேவகானம் இசைக்கும் குயிலின் இசை அவரது சிந்தைக்கு அரிய பொருளையெல்லாம் எடுத்து இயம்புகிறது. அப்படி அந்தக் குயிலின் இசை சொன்ன வரலாற்றைத்தான் குயில் பாட்டாக அவர் தந்திருக்கிறார்.

புதுவை கடற்கரையில் காலை இளம்பரிதியின் கதிர்வீச்சில் காணப்படும் விந்தைகளை யெல்லாம் அடுக்கடுக்காக இசையால் எடுத்தியம்புகிறார் பாரதியார். அவர் சொற்களைச் சிறிது செவி மடுப்போம் வாரீர்.

"காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்
தங்க முருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?"

எழுஞாயிறின் வண்ணக் கதிர்களும், அவைகளின் தங்க நிற காட்சிகளும் கவிஞர் நெஞ்சில் கவிதையாக மட்டுமல்ல இசை வெள்ளமாகவும் வந்து பாய்கிறது. குயிலின் இன்னிசைக் குரல் தேவலோகத்து அமுதமாக ருசிக்கிறது கவிஞருக்கு. அவர் சொல்கிறார்.

"இன்னமுதைக் காற்றினிடை எங்கும் கலந்ததுபோல்
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகைனிதாய் வந்து பரவுதல் போல்"

மின்னலுக்குச் சுவையுண்டா? அமுதத்தைக் காற்றில் கலந்துவிட்டால், அந்தக் காற்றிலெழும் ஓசையும் இனித்திடுமா? ஆம், பாரதிக்கு இனிக்கிறது அந்த இசை. இந்த இசைதான் எத்தனை வகை? அவற்றில் மயங்காதார் யார்? மனிதன் மட்டுமா இசைக்கு இணங்குகிறான், இல்லையில்லை. "காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும், பாட்டின் சுவையதனை பாம்பறியும் என்றுரைப்பார்" என்கிறார். இந்த மேற்கோள் ஒரு சம்ஸ்கிருத வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு. புதுவை நகர் மாந்தோப்பில் வேடர் வராத விருந்துத் திருநாளில் ஒருநாள், மரக்கிளை ஒன்றில் அமர்ந்திருந்த குயில் தன் இனிய குரலெடுத்துப் பாடுகிறது. மின்னலின் சுவை என்று முன்பு சொன்ன பாரதி இங்கு நெருப்புச்சுவை மிகுந்த பாடல் என்கிறார். காதல் அப்படி சுடுகிறதாம். அந்தக் குயில் எழுப்பும் நாதக் கனலிலே நம் உயிரைப் போக்கிடலாம் என்றுகூட எண்ணத் தலைப்படுகிறார் கவிஞர். இப்படி இசையின் இனிய பெட்டகமாகத் தன் குயில் பாட்டைப் பாடியிருக்கிறார் பாரதியார்.

இசையுணர்வு:

இந்த பூமியில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்குள், இசையின் மூலம் தனது மன உணர்வுகளை வெளிப்படுத்தும் இயல்பு மனிதனுக்கு மட்டும்தான் இருக்கிறது. பறவைகளும் அவைகளுக்குரித்தான குரலில் இனிய இசையை வெளிப்படுத்துகிறது. அவற்றின் குரல் களில்தான் எத்தனை எத்தனை உணர்வுகள். ஆடி மாதம் தொடங்கிய நேரத்தில் 'அக்கா'க் குருவிகள் "அக்கோ" என்று இனிய குரலெழுப்ப, மற்றொரு குரிவியும் அதற்கு பதிலளித்து அக்கோ குரல் எழுப்புவதைக் கேட்கதார் யார்? மிருகங்களுக்கு இல்லாத இந்த இசை ஞானம் பறவைகளுக்கு மட்டும் எப்படி ஏற்பட்டிருக்கும். இந்த பூமியிலிருந்து வெகு தூரம் மேலே மேலே சென்று பறந்து வரும்போது இவ்வுலகம் கனவுலகம் போலத் தெரிகின்றதோ? அந்த மகிழ்ச்சியில் விட்டுவிடுதலையாகி நிற்கும் உணர்வில்தான் இசை பிறக்கிறதோ? இருக்கலாம். வானம்பாடி, குயில் போன்ற பறவைகள் இயல்பில் வானவெளியில் பறக்க முடிகிறது. மனிதனுக்கு அப்படி பறக்க இயலாமல் போனாலும், உணர்வால், மனத்தால் வான வெளியில் பறந்து திரிகிறான். அதனால் அவன் மனத்திலும் இயல்பாக உணர்ச்சிகளை வெளிப் படுத்தும் விதமாக இசை வெளிவருகிறது.

மகாகவி பாரதி 'சங்கீத விஷயம்' என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் சங்கீதம் எனும் இசை பற்றி விரிவாக விவாதித்திருக்கிறார். இசையைப் பற்றி அறிந்த அனைவருமே படிக்க வேண்டிய அரிய கட்டுரை அது. அதில் 'நவரஸங்களை'ப் பற்றி விளக்கு கிறார். மனித உணர்வுகள் வெளிவரும்போது அதில் இந்த நவரஸங்களில் ஏதாவதொன்று இருந்தே ஆகவேண்டும். அவை:-

1. வீரம் 2. ரெளத்ரம் (கோபம்) 3. அத்புதம் (ஆச்சர்யம்) 4. சாந்தம் (அமைதி) 5. பயாநகம் (பயம்) 6. பீபத்ஸம் (வெறுப்பு) 7. ஹாஸ்யம் (நகைச்சுவை) 8. கருணை, சோகம் (துயரம் அல்லது அவலம்) நிறைவாக 9. சிருங்காரம் (காதல்)

இந்த ஒன்பது உணர்வுகளும் மனிதனின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் இசை வடிவில் பாடலாக அது வெளிவரும் போது அந்தந்த பாடலின் கருத்து மட்டுமல்ல, அந்தந்த ராகங்களேகூட இந்த ரஸங்களில் ஏதாவதொன்றைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

நல்ல கவிஞன் இந்த ரஸங்களை உணர்ந்தவனாக இருப்பான் என்கிறார் பாரதி. அவர் சொல்கிறார், பிறர் துன்பம் கண்டு பொறாத 'புண்ணியமூர்த்தி' ஒருவனையும், மற்றவர் உணர்வுகளை மதிக்காத ஒருவனையும் கவிதை எழுதச் சொன்னால், முதலவன் எழுதுவது கவிதையாக இருக்கும், மற்றவனுடையது சொற்களைப் பின்னிய எழுத்து வடிவங்களாக இருக்குமென்கிறார் பாரதி.

ரஸஞானம்.

எந்தவொரு பாடலிலும் ரஸஞானம் இருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடு. அப்படி ரஸஞானமில்லாதபடி பாடல்களைப் பாடுவோர் யாராயினும், அவர்கள் சங்கீதத்தின் உயிரைநீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தை மட்டும் காட்டுகிறார்கள் என்று கடுமையாகச் சொல்கிறார். ஆகவே சங்கீதம் பாடுவோர் இந்த ரஸ உணர்வு படைத்த வர்களாக இருத்தல் வேண்டுமென்பது அவரது கூற்று.

பற்பல மகான்களுடைய பாடல்களைப் பாடுவதால் மட்டுமே ஒருவன் நல்ல சங்கீத வித்வானாக ஆவதில்லை. அந்தப் பாடல்களில் அவற்றை இயற்றிய மகான்கள் புகுத்தியிருக்கும் ரஸம் வெளிப்படும்படி பாடவேண்டுமென்பது பாரதியின் கட்சி. எந்த இசை நிகழ்ச்சிக்குப் போனாலும் குறிப்பிட்ட ஒருசில பாடல்களை மட்டும்தான் வித்வான்கள் பாடுகிறார்கள் என்று பாரதி குறைப்பட்டுக் கொள்கிறார். புதிய புதிய பாடல்களை உருவாக்க வேண்டும். அதற்காக பூர்வீக மகான்களின் பாடல்களை மறக்கச் சொல்லவில்லை. அவற்றையும் பொருள் புரிந்து பாட வேண்டும், அதோடு புதிய பாடல்களை இயற்ற முயற்சி செய்தல் வேண்டும் என்கிறார் பாரதி.

பூர்வ காலத்து மகான்களுக்குத் தெய்வ அனுக்கிரகம் இருந்தது, எங்களுக்கில்லையே என்று சாக்கு போக்கு சொல்வதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. நீயும் பக்தியாலும், ஜீவதயையாலும், நேர்மையாலும், உண்மையாலும் இடைவிடாத உழைப்பினாலும் அப்படி அமரத்துவம் வாய்ந்த ரஸம் மிகுந்த பாடல்களை இயற்ற முடியும் என்கிறார் பாரதி. முற்காலத்தில் அரசர்களும், செல்வந்தர்களும் இருந்தார்கள் பாடகர்களை ஆதரிக்க. இப்போது நம் நாட்டில் மக்கள்தான் ராஜாக்கள். அவர்கள் இசைக் கலைஞர்களை ஆதரிக்க வேண்டுமென்பது பாரதியின் கருத்து.

பாட்டும் பாடகர்களும்

ஒரு பாடலென்று எடுத்துக் கொண்டால், அந்தப் பாட்டுக்குத்தான் தாளம் அமைய வேண்டுமே தவிர தாளத்திற்கேற்ப பாடல் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் பாரதியார். திரைப்படங்களில் இப்போதெல்லாம் சொல்லும் வார்த்தைகள், 'மெட்டுக்குப் பாட்டு' என்பது. இது சுத்த அபத்தம் என்பது பாரதியாரின் எண்ணம். 'சக்கனி ராஜ மார்க்கமு' என்றொரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை. 'அகண்ட ராஜபாட்டைகள் இருக்கும்போது ராமா! என்னை சந்திலும் பொந்திலும் வரும்படி செய்யலாமா?' என்ற பொருளில் வரும் இந்தப் பாடலின் ராகத்தைப் பாடும்போது அந்த தொனி ராகத்தில் இருக்கும் என்கிறார் அவர்.

பாடகர்கள் தங்கள் குரல் வளத்தைப் பேணிக் காக்க வேண்டுமென்பது பாரதியாரின் அறிவுரை. அவர் சொல்கிறார்:--

"சுமார் 12 வருஷங்களுக்கு முன்பு (அவர் எழுதிய காலத்தில்) நான் இரண்டு மூன்று வருஷம் ஸ்ரீகாசியில் வாசஞ்செய்தேன். அங்கே, பாட்டுக் கச்சேரி செய்ய வரும் ஆண்களுக்கெல்லாம் நேர்த்தியான வெண்கலக் குரல் இருந்தது. பெண்களுக்கெல்லாம் தங்கக் குரல். அங்கிருந்து தென்னாட்டிற்கு வந்தேன். இங்கே ஓரிரண்டு பேரைத் தவிர மற்றபடி பொதுவாக வித்வான் களுக்கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வியப்பு உண்டாயிற்று. ஒன்றுபோல எல்லோருக்கும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும் நயம் குறைந்தும் இருப்பதன் காரணமென்ன? இதைப் பற்றி சில வித்வான்களிடம் கேட்டேன். 'வட நாட்டில் சர்க்கரை, பால், ரொட்டி, நெய் சாப்பிடுகிறார்கள். புளியும், மிளகாயும் சேர்ப்ப தில்லை. இங்கே புளி, மிளகாய் வைத்துத் தீட்டுகிறோம். அதனாலேதான் தொண்ட கெட்டுப் போகிறது' என்றனர். அது ஒரு சிறிது வாஸ்தவம்தான் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் அதுவே முழுக்காரணம் அன்று. நம்மவர் தொண்டையை நேரே பழக்குவதில்லை. காட்டு வெளிகளிலே போய், கர்ஜனை செய்ய வேண்டும். நதி தீரங்கள், ஏரிக்கரை, கடற்கரைகளிலே போய்த் தொண்டையைப் பழக்க வேண்டும். சாஸ்திரப்படி ஆகார சாதனம் செய்யும் வழக்கம் தென்னாட்டிலே குறைவு பட்டிருக்கிறது."

நல்ல சங்கீதம் பழக, உள்ளத்திலே வீரம் இருக்க வேண்டுமென்கிறார் பாரதி. "உள்ளத்தில் 'சத்து' இல்லாதவர்களுக்கு ஒரு தொழிலும் நேரே வராது. கலைகள் நேர்ப்படுவதைப் பற்றி பேசவேண்டியதில்லை" என்கிறார் அவர்.

பாட்டு வகைகள்:

தமிழ் நாட்டில் பெண்கள் பாடுவதற்கு பல வகையான பாடல்கள் உண்டு. அவை கும்மி, பல்லிப்பாட்டு, கிளிப்பாட்டு, நலுங்குப் பாட்டு, அம்மானை, தாலாட்டு முதலியன. தமிழ்ப் பெண்கள் பாடல்களுக்கு கையெடுத்துக் கும்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு, அவற்றில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் பல உண்டு என்கிறார் அவர்.

வாத்திய இசை கற்க விரும்பும் பெண்கள் வீணையைப் பழகவேண்டும் என்பது பாரதியின் விருப்பம். வீணை கற்பது சற்று சிரமம் என்றாலும் போகப் போக அது பழகிவிடும் என்கிறார். இந்தக் கருவியை வாசிக்கக் கற்றுவிட்டால் அதுதான் உண்மையான சங்கீத தேர்ச்சி என்கிறார் அவர்.

ஆணாயினும் பெண்ணாயினும் தங்களுக்கு அமைந்த தொண்ட குரல் வளத்தோடுதான் பாடவேண்டுமே தவிர பொய்த்தொண்டை எனும் குரல் மாற்றிப் பாடுவதை அவர் ஏற்கவில்லை. சங்கீதத்தில் ஆண்களுக்குப் பெண்களுக்கு என்று பல வசதியான பிரிவுகள் இருந்தபோதும், இருபாலரும் பாடத்தக்கப் பல பாடல்கள் உண்டு என்று பாரதி குறிக்கிறார். நமது வேதாந்தக் கருத்துக்களில் ஜீவாத்மா, பரமாத்மா கருத்துக்கள் உண்டு. அப்படி ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் பக்தி மார்க்கப் பாடல்கள் பல உண்டு என்று சொல்லி அவற்றை அவர் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

திருவாசகத்தில் எம்பாவை, அம்மானை, தும்பி, குயில், கிளி இவைகளின் தூது, தெள்ளேணம், சுண்ணம் இடித்தல், சாழல், உந்தி, பூவல்லி, தோணேக்கம், ஊசல், துயிலெழுப்புதல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். இவற்றில் தெள்ளேணம் என்பது நடுவில் ஒரு முரசை வைத்து பெண்கள் அதைச் சுற்றியிருந்து இரு கைகளிலும் கோல் வைத்துக் கொண்டு அதனைக் கொட்டி அந்தத் தாளத்துக் கேற்ப இசையமைத்துப் பாடுதல். பூவல்லி என்பது பூ தொடுத்துக் கொண்டே பாடுவது. தோணேக்கம் என்பது, பெண்கள் வட்டமாக நின்றுகொண்டு ஒருவர் தோள் மீது கைபோட்டுக் கொண்டு பாடுவது. இவையெல்லாம் காலவோட்டத்தில் இல்லாமலே போய்விட்டது வருந்துதற்குரியது. தோணேக்கம் என்பது இப்பொழுதும் வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் குறிப்பாக மேகாலயா, நாகாலாந்து போன்றவிடங்களில் ஆடப்படுகின்றன.

குழந்தைகளுக்குரிய தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பணி முதலிய பாடல்களையும் பாரதி குறிப்பிட்டுச் சொல்கிறார். குடும்பத்துப் பெண்கள் திருமணங்களில் நலுங்கு, பத்யம், ஊஞ்சல் போன்றவற்றையும், இளஞ்சிறார்கள் கும்மி, அம்மானை, தூது, மாலை, சோபனம் போன்றவற்றைப் பாடவேண்டுமென்கிறார்.

இசையை வளர்க்க பெண்கள் செய்ய வேண்டியவை.

பெண்கள் பொது இடங்களில் பாட நேரும்போது கூச்சப்பட்டுக் கொண்டு பாடாமல் இருந்துவிடக் கூடாது. இசை, நடனம் போன்ற வித்தைகளைக் கற்பதில் கூச்சத்திற்கு இடமில்லை. பெண்கள் கல்வியில் தேர்ச்சி அடைவதைப் போலவே நமது பாரம்பரியக் கலைகளிலும் தேர்ச்சியடைய வேண்டுமென்பது பாரதியின் விருப்பம். குறிப்பாக நம் தமிழ் நாட்டுப் பெண்களுக்காகவே அவர் ஒரு அறிவுரையைக் கூறியிருக்கிறார். அதனை பெண்கள் அனைவரும் தங்கள் மனங்களில் வாங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக அந்த அறிவுரையை அப்படியே தருகிறேன். அது:--

"தமிழ் நாட்டுப் பெண்கள், திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் ஆரத்தி எடுக்கும்போது பார்சி மெட்டில் பாடி ஆரத்தி எடுப்பது; இங்கிலீஷ் பாடி நலுங்கு நடத்துதல் முதலான கோரமான விவகாரங்களுக்குத் துணை செய்யக் கூடாது. நமது நாடக சாலைக்குள்ளே கல்வியறிவும், சாஸ்திரப் பழக்கமும், நாகரீகமும் நுழையும் காலம் வரை, நமது பெண்கள் நாடகப் பாட்டுகளை கவனியாமல் இருப்பது நன்று. வேதாந்தக் கொடுமையையும் கொஞ்சம் குறைத்துவிட்டால் பெரிய உபகாரம்".

இங்கு அவர் குறிப்பிடம் நாடகப் பாட்டுகள் என்பது அன்றைய தினம் திரைப்படம், தொலைக்காட்சி இவைகள் இல்லாத காரணத்தால்தான் இன்றைய சூழ்நிலையில் எவையெவையெல்லாம் இந்த வரையரையுள் வருகின்றன என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, பாரதியின் இசைக் கோட்பாடுகளைக் குறித்த சில உரத்த சிந்தனைகளை உங்கள் முன்பு வைக்கிறேன். நன்றி.












Saturday, December 31, 2011


நாள் காட்டியில் ஒவ்வொரு நாளும் ஒரு தேதியைக் கிழிக்கிறோம். மாதாந்திர நாள் காட்டியில் ஒவ்வொரு மாதமும், ஆண்டுக்கொரு முறை புதிய ஆங்கில ஆண்டு பிறக்கிறது. எந்த நாளும் நல்ல நாளாக இருக்க வேண்டும். அது போன்றே புதிதாய்ப் பிறக்கிற ஆண்டும் நமக்கு நல்லதைச் செய்ய வேண்டும். அதற்காக நமது புருனெய் தனுசு அவர்கள் எழுதியிருக்கும் இந்தக் கவிதை நமக்கெல்லாம் நன்மையைக் கொண்டு வந்து தரவேண்டும்.


       இனிய 2012 புதிய ஆண்டே வருக!





 விடியும் விடியலுக்கு வாழ்த்துக்கள் 
         +++++++++++++++++
புத்தாண்டின் விடியலிலே
புது பாதை தேடும்  என்தோழா- உனக்கான 
முகவரிகள்  செய்யும்  பொழுதினிலே ...

முட்டுக்கட்டை போடும்-எந்த 
முகம்தெரியா தடைகண்டும் 
மூச்சடைத்து நிற்காதே. உன் பார்வையை மாற்றாதே.

நித்தமும் தடைகள். 
மொத்தமும்  தோல்விகள் .  
எதிலும்   ஏமாற்றங்கள். 

இந்த வேதனை எனும் சோதனையை
 நீ சோதித்தால்
அவைசொல்லாமல் ஓடிவிடும்.

விடாமுயற்சி எனும் சூத்திரங்கள் 
தெரிந்து கொண்டால் 
பாதைகள் பணிந்துவிடும்.

 உன்னை சூழும் நெருப்பை-நீ 
 அள்ளிப் போட்டு தின்றால்  -அங்கோர்
 உலகம் உன்னைக் கண்டு உதித்துவிடும்    .

எண்ணித் துணிந்தால் கருமம் .
உன்னுள் தேவை  வன்மம்-இருந்தால் 
ஜெயமே  இந்த ஜென்மம்.

 - புருனெய் தனுசு-

Tuesday, December 6, 2011


தஞ்சையில் பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா

Besant Lodge, Venue of the Festival

தஞ்சையில் பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா

அகில இந்திய வானொலி, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையமும் திருவையாறு பாரதி இயக்கமும் இணைந்து தஞ்சையில் மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார். விழாவிற்கு வழக்கறிஞர் வீ.சு.இராமலிங்கம் தலைமை தாங்கினார். திருவையாறு கட்டளைத் விசாரணை முனைவர் குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் அருளாசி கூறி துவக்கி வைத்தார். அகில இந்திய வானொலியின் திருச்சிராப்பள்ளி நிலைய இயக்குனர் திரு வி.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
Dr.Umamaheswari, Dr.Kumarasamy Thambiran, Prof.Kaliaperumal & AIR Station Director V.Srinivasan

காலையில் நடைபெற்ற "வான்புகழ் கொண்ட பாரதி" எனும் தலைப்பிலான கருத்தரங்கத்திற்கு முனைவர் இரா.கலியபெருமாள் தலைமை வகித்தார். கருத்தரங்கில் 'பாரதியாரின் பாஞ்சாலி' எனும் தலைப்பில் வெ.கோபாலன், 'பாரதியார் விரும்பிய சமூகம்' என்ற தலைப்பில் குப்பு.வீரமணி, 'பாரதியாரும் இசையும்' எனும் தலைப்பில் முனைவர் ப.உமாமகேஸ்வரி, 'பாரதியின் தேசியம்' எனும் தலைப்பில் ந.விச்வநாதனும் உரையாற்றினர். தலைவர் இரா.கலியபெருமாள் 'தமிழிலக்கிய வழியில் பாரதி' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
Dr.Kumaraswamy Thambiran Swamigal

பிற்பகல் மூன்று மணிக்கு திருவையாறு அரசு இசைக்கல்லூரி முதல்வர் ப.உமாமகேஸ்வரி தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் பங்குகொண்ட இசை அரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. மகாகவி பாரதியாரின் பாடல்களை இசைக்கல்லூரி ஆசிரியர்களும் மாணவிகளும் இணைந்து பாடியது கேட்போர் மங்களை நெகிழ வைப்பதாக அமைந்திருந்தது.
V.Gopalan, Director, Bharathi Ilakkiya Payilagam speaks

தொடர்ந்து மாலை 4-30 மணிக்கு "பாரதியாரின் ஆன்மீகப் பாடல்களில் மேலோங்கியிருப்பது, வேண்டுதலா, விடுதலையா" எனும் தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறது. பட்டிமன்றத்துக்கு புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமை தாங்கினார். வேண்டுதல் எனும் தலைப்பில் பேராசிரியர் மாது, முனைவர் தமிழரசி, மற்றும் இராமநாதன் ஆகியோரும், விடுதலையே எனும் தலைப்பில் பாரதிநேசன், கவிஞர் சாமி.நிர்மலா, முனைவர் இரா.காமராசு ஆகியோர் உரையாற்றினர். பாரதியார் ஆன்மீகப் பாடல்களில் மேலோங்கியிருப்பது விடுதலையே என்று தீர்ப்பளித்து தலைவர் முத்துநிலவன் உரையாற்றினார்.
VGopalan speaks, Kuppu.Veeramani, Prof.Kaliyaperumal & Keezhappavoor Shanmugaiah of AIR watching

மாலை நடந்த நிறைவு விழாவுக்கு சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அவர் "பாரதியின் தத்துவப் பார்வை" எனும் தலைப்பில் ஒரு அருமையான சொற்பொழிவினை நிகழ்த்தினார். விழாவின் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த "அமுதசுரபி" பத்திரிகையின் ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் "எக்காலத்துக்கும் பாரதி" எனும்தலைப்பில் பேசினார். தமிழ் எழுத்துலகில் பாரதிக்கிருந்த சிறப்பிடத்தையும், பாரதி எந்த காலத்துக்கும் பொருந்துபவனாக பரந்த விசாலமான பார்வை கொண்டவன் என்றும் அவர் பேசினார். எந்தக் காலத்திலும் பாரதி தான் வறுமையில் இருப்பதாக உணர்ந்தவனுமில்லை, அதற்காக வருந்தியவனுமில்லை என்றார் அவர். ஆனால் இன்று பல சிறந்த எழுத்தாளர்களின் இறுதிக் காலம் வறுமையில் முடிவடைகிறது. தமிழ்கூறு நல்லுலகம் எழுத்தாளர்களை அந்த நிலைமைக்குத் தள்ளிவிடக்கூடாது என்பதை பல நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டி விளக்கிப் பேசினார்.
Sekkizhar Adippodu Dr.TNR & Tiruppur Krishnan

திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் கீழப்பாவூர் சண்முகையா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார். திருவையாறு பாரதி இயக்கத் தலைவர் நீ.சீனிவாசன் நன்றி கூறினார்.
Chief Guest Tiruppur Krishnan speaks

Monday, November 21, 2011

மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா

இந்திய ஒலிபரப்புக் கழகம்
அகில இந்திய வானொலி நிலையம், திருச்சிராப்பள்ளி
பாரதி சங்கம், தஞ்சாவூர், பாரதி இயக்கம், திருவையாறு
இணைந்து நடத்தும்

மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா
நாள்: 04-12-2011 ஞாயிறு காலை 10-00 மணி முதல்
இடம்: பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்.

அன்புடையீர்!
மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா தஞ்சை பெசண்ட் அரங்கில் 4-12-2011 ஞாயிற்றுக் கிழமை காலை 10-00 மணிக்குத் தொடங்கி நடைபெற விருக்கிறது. அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பாரதி அன்பர்களும், பொதுமக்களும் திரளாக வந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்

காலை 10-00 மணி: தொடக்க விழா.

தலைமை: திரு வீ.சு.இராமலிங்கம்,
தலைவர், பாரதி சங்கம், தஞ்சாவூர்.
தொடக்க உரை:
திரு வெ. ஸ்ரீநிவாசன்,
நிலைய இயக்குனர், அகில இந்திய வானொலி, திருச்சிராப்பள்ளி.
சிறப்புரை
முனைவர் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள்
கட்டளை விசாரணை, திருவையாறு

கருத்தரங்கம்
பொருள்: "வான்புகழ் கொண்ட பாரதி"

தலைவர்: முனைவர் இரா.கலியபெருமாள்,
முதல்வர், ந.மு.வே.நாட்டார் கல்லூரி
பங்கேற்போர்:

திரு வெ.கோபாலன், பாரதியின் பாஞ்சாலி
திரு குப்பு. வீரமணி, பாரதி விரும்பிய சமுதாயம்
முனைவர் ப.உமாமகேஸ்வரி, பாரதியும் தமிழிசையும்
திரு ந.விச்வநாதன், பாரதியின் தேசியம்

பிற்பகல் 4-00 மணி
இசை அரங்கம்
திருமதி உமாமகேஸ்வரி, முதல்வர்
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு
தலைமையில்
பங்கேற்போர்: இசைக்கல்லூரி மாணவியர் & பேராசிரியர்கள்

பிற்பகல் 5-00 மணி
பட்டிமன்றம்
தலைப்பு: மகாகவியின் ஆன்மீகப் பாடல்களில் மேலோங்கியிருப்பது
வேண்டுதலா? விடுதலையா?

நடுவர்: கவிஞர் ந.முத்துநிலவன்,
புதுக்கோட்டை

வேண்டுதலே! விடுதலையே!
திரு இரா. மாது திரு பாரதிநேசன்
முனைவர் ந.தமிழரசி, கவிஞர் சாமி மல்லிகா,
திரு டி. இராமநாதன் முனைவர் இரா.காமராஜ்
.
மாலை 6-30 மணி
நிறைவு விழா

தலைவர்: சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர்
தி.ந.இராமச்சந்திரன் அவர்கள்

வரவேற்புரை: திரு சண்முகையா, நிகழ்ச்சி அமைப்பாளர்,
அகில இந்திய வானொலி, திருச்சி.

சிறப்புரை: திரு திருப்பூர் கிருஷ்ணன்,
ஆசிரியர், "அமுதசுரபி", சென்னை.
'எக்காலத்திற்கும் பாரதி'

போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசளித்து பாராட்டுபவர்
திரு சே.ப.அந்தோணிசாமி
தாளாளர், பரிசுத்தம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, தஞ்சாவூர்.

நன்றியுரை: திரு நீ.சீனிவாசன், தலைவர், பாரதி இயக்கம் திருவையாறு.

Friday, November 11, 2011

பாஞ்சாலங்குறிச்சி வீரன் சுந்தரலிங்கம்


வீரன் சுந்தரலிங்கம்

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கரைத் தெரியுமா? ஓகோ! வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொன்னால்தான் தெரியுமா. சரி. இந்தப் பெயரை சிலம்புச் செல்வர் அளித்தது. பாஞ்சாலாங்குறிச்சியின் பாளையக்காரர் பெயர் கட்டபொம்மு நாயக்கர் தான். இவருடைய தம்பி ஊமைத்துரை. இவ்விருவரும் மாபெரும் வீரர்கள். இவருக்கு ஒரு அமைச்சர் இருந்தார், அவர் பெயர் தானபதி பிள்ளை. இப்படிப்பட்ட தன்மானம் மிக்க ஒரு பாளையக்காரரிடம் அமைந்த தளபதிகள் எப்படி இருந்திருப்பார்கள். வெள்ளையத் தேவன் என்று ஒரு மாவீரன். சுந்தரலிங்கம் என்று மற்றொரு சூரன். இப்படிப்பட்ட வீரசிகாமணிகளைத் தன்னுடன் வைத்திருந்த கட்டபொம்மு நாயக்கர் வெள்ளையனை எதிர்த்து வீரமுழக்கம் செய்ததில் என்ன வியப்பு?

இந்த தளபதிகளில் சுந்தரலிங்கம் பற்றி சிறிது பார்ப்போம். இந்த சுந்தரலிங்கத்தின் முழுப்பெயர் என்ன தெரியுமா? கட்டக் கருப்பண்ணன் சுந்தரலிங்கம் என்பது அவன் முழுப் பெயர். சுந்தரலிங்கக் குடும்பனார் என்றும் அழைப்பது உண்டு. கட்டபொம்மு நாயக்கரின் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகிலுள்ள வெள்ளைவாரணம் எனும் கிராமத்தில் பிறந்தவர் இவர். 

கட்டபொம்மு நாயக்கர் பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டையைக் கட்டி, படை, குடிகளுடன் கம்பளத்தார் ஆட்சியை நிறுவிய காலத்தில் பலதரப்பட்ட வேலைகளுக்கு ஆட்களை நியமித்தார். அப்படி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளைக் கொண்டு சேர்க்கும் பணிக்கு நம்பகமான ஆட்களை நியமனம் செய்தார்கள். அப்படிப்பட்ட பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதாரண வீரனாகத்தான் சுந்தரலிங்கம் ஆரம்பத்தில் பணியைத் தொடங்கினார். 

கட்டபொம்மு நாயக்கரின் படையில் பல தரப்பட்ட பிரிவினர்களும் வீரர்களாகச் சேர்ந்தனர். அப்படிப் பட்ட வீரர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் இருந்தார்கள். அப்படிப்பட்ட வீரர்களில் சுந்தரலிங்கமும் ஒருவர். இவர் தன்னுடைய நேர்மையான உழைப்பு, வீரம், ராஜ விசுவாசம் இவற்றால் பாளையக் காரர்களின் பார்வையில் மிக உயர்வாகக் காட்சியளித்தார். இவருடைய நேர்மையான உழைப்பையும், வீரத்தையும் பலமுறை பாராட்டிய கட்டபொம்மு நாயக்கர் இவரைப் படைத் தளபதியாக பதவி உயர்த்தி கெளரவித்தார்.

ஏற்கனவே கட்டபொம்மு நாயக்கரிடம் வெள்ளையத்தேவன் எனும் துடிப்பான வீரம் மிகுந்த தளபதி ஒருவர் இருந்தார். அவருக்கு நிகராக சுந்தரலிங்கமும் வீரத் தளபதியாக விளங்கினார். 

ஒரு முறை ஆங்கில கும்பினியாரின் படைகள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டுவிட்டது. தளபதி வெள்ளையத்தேவன் அப்போது கோட்டையில் இல்லை. ஆகவே அவனை அழைத்துவரும்படி கட்டபொம்மன் சுந்தரலிங்கத்தை அனுப்பி வைத்தார். சுந்தரலிங்கம் வெள்ளையத் தேவனின் வீட்டை அடைகிறார். தளபதி வெள்ளையத் தேவன் மிகுந்த கோபக்காரன். தூக்கத்தில் இருக்கையில் யாராவது எழுப்பிவிட்டால் தாக்கிவிடும் குணமுடையவன். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக சுந்தரலிங்கம் வெள்ளையத் தேவனை எழுப்புகிறார். பின்னர் தளபதியிடம் எல்லா விவரங்களையும் சொல்லி, வெள்ளையர்கள் கோட்டையைச் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையை எடுத்துரைக்கிறார். உடனே இருவரும் அங்கிருந்து கிளம்பி கோட்டைக்குள் சென்று கட்டபொம்முவைச் சந்திக்கிறார்கள். 

கட்டபொம்மன் இவ்விரு தளபதிகளிடமும் தன் படைகளைக் கொடுத்து போர்க்களம் செல்லும்படி பணிக்கிறார். கோட்டைக்கு வெளியே உக்கிரமான போர் நடந்தது. அந்தப் போரில் வெள்ளையத் தேவன் வீரமரணம் அடைந்து விடுகிறான். எஞ்சியப் படைகளைக் கொண்டு சுந்தரலிங்கம் வேறு சில படைத் தளபதிகளான ஆதிவீரமல்லு சேர்வை, கந்தன்பகடை, கண்டகோடாலி என்பவர்களைக் கூட்டாகச் சேர்த்துக் கொண்டு ஆங்கிலேயர்களோடு மோதுகிறார். எட்டத்தில் கூடாரமடித்துத் தங்கியிருந்த வெள்ளையர்களின் முகாமைத் தாக்கி அங்கு காவல் இருந்த சிப்பாயைச் சுந்தரலிங்கம் குத்திக் கொன்றுவிடுகிறார். இந்தப் போரில் கந்தன்பகடை எனும் தளபதி கட்டபொம்மு பக்கத்தில் வீரமரணம் அடைந்து விடுகிறார். 

கோட்டைக்கு வெளியே முற்றுகை இட்டிருந்த வெள்ளைப் படைகளுக்கிடையே சுந்தரலிங்கமும், வீரமல்லு சேர்வையும் மாட்டிக் கொள்கிறார்கள். யுத்தகளம் முழுவதும் இரண்டு பக்கத்து வீரர்களின் இறந்த உடல்கள் வீழ்ந்து கிடக்கின்றன. மாட்டிக் கொண்ட சுந்தரலிங்கம் ஒரு தந்திரம் செய்தார். பிணத்தோடு பிணமாகக் கீழே விழுந்து புரண்டு சென்று செத்துக் கிடந்த வெள்ளைக்காரச் சிப்பாயின் உடையை எடுத்து மாட்டிக் கொண்டு அவர்களது துப்பாக்கியையும் பிடுங்கிக் கொண்டு, யுத்த களத்திலிருந்து இவ்விரு தளபதிகளும் தப்பி ஓடி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை அடைந்து விடுகிறார்கள்.

போர்க்களத்தில் நடந்த விவரங்களைச் சுந்தரலிங்கம் கட்டபொம்மு நாயக்கருக்கு எடுத்துச் சொன்னார். இவ்விரு தளபதிகளைன் சாகசங்களைப் பாராட்டி கட்டபொம்மு இவ்விருவருக்கும் பத்து வராகனில் தங்கப் பதக்கமும், முத்துக்கள் பதித்தக் கடுக்கன், அடுக்கு முத்து மோகன மாலை, ஹஸ்த கடகங்கள், முன்கை மூதாரிகள் என பலவகைப்பட்ட ஆபரணங்களைப் பரிசளித்து கெளரவித்தார். 

பாளையக்காரர் மட்டும் மாவீரனாக இருந்துவிட்டால் போதுமா, அவனுக்கு அமைந்த தளபதிகளும் அவனைப் போலவே வீரர்களாக இருக்க வேண்டாமா? அப்படி அமைந்ததால்தான் இன்றும் வீரபாண்டியன் கட்டபொம்மு நாயக்கர் என்று பலரும் வியந்து போற்றி பாராட்டுகிறார்கள். அந்தப் புகழுக்கெல்லாம் சுந்தரலிங்கம் போன்ற தளபதிகள்தான் காரணம் என்பதை நாம் மறக்கலாமா?

பின்னர் 1799ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 5ஆம் தேதி, வெள்ளைக்காரப் படைகளோடு வீரபாண்டியன் கட்டபொம்மன் நடத்திய இறுதிப் போரில் இந்த மாவீரன் சுந்தரலிங்கம் வீரமரணம் எய்தினார் என்பது வரலாறு. வாழ்க வீரன் சுந்தரலிங்கம் புகழ்!

Tuesday, November 8, 2011

நெல்லை ஜெபமணி



நெல்லை ஜெபமணி

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு குற்ற உணர்வு இருந்துகொண்டே இருந்தது. சுதந்திரப் போரில் பங்கு பெற்ற தியாகியும், சுதந்திரத்துக்குப் பிறகும் ஊழல், சர்வாதிகாரம், அரசியலில் நாணயமின்மை ஆகியவற்றை எதிர்த்து மேடைதோறும் முழங்கியவரும், இந்திரா காந்தியின் நெருக்கடிநிலை பிரகடனத்தை எதிர்த்து போராடியவரும், ஜனதா கட்சி தொடங்கியபோது அதில் பிரதானமான தலைவராக இருந்தவருமான நெல்லை ஜெபமணி பற்றி எழுதாமல் விட்டது ஒரு மனக்குறையாகவே இருந்து வந்தது.

"விஜயபாரதம்" இதழின் சுதந்திரப் பொன் விழா மலரில் அந்தத் தியாகத் திருமகனின் நேர்காணல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அவரது வாழ்க்கைக் குறிப்பை நாம் அறிந்து கொள்வதைக் காட்டிலும், சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகள் கழிந்தபின் அந்த பெரியவரின் மனநிலையை இந்த நேர்காணல் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இதோ அந்த நேர்காணல்:-- 

தேசியத்திலும், தெய்வீகத்திலும் பழுத்தபழம் என்று இவரைப் பற்றி "விஜயபாரதம்" பெருமைப் படுத்துகிறது. அவர் எதைப் பற்றி பேசினாலும் முடிவில் "உண்மையே வெல்லும்" என்றுதான் பேசுவார் என்று அந்த நேர்காணலின் முன்னுரையில் பேட்டி கண்டவர் எழுதுகிறார்.

கேள்வி:- சுதந்திரப் போராட்டத்தில் உங்கள் பங்கு என்னவென்று சொல்லுங்களேன்!

ஜெபமணி:- என் ஊரு தூத்துக்குடி ஜில்லாவில் குறுங்கனி என்கிற கிராமம். அங்கே சாமிநாதன் என்பவர் கதர்க்கடை வைத்திருந்தார். அவர் காந்தி படத்தை வைத்துக் கொண்டு, பாரதியார் பாடல்களைப் பாடிக் கொண்டு கிராமம் கிராமமாகப் போவார். அப்போது எனக்கு இளம் வயது. நானும் அவரோடு ஊர்வலத்தில் பாரதியார் பாட்டைப் பாடிக்கொண்டு போவேன். அதுவே காந்தியின் மேல் எனக்கு ஓர் ஈர்ப்பை உருவாக்கியது.

அதனால் திருப்பூர் வந்து காந்திஜியின் நிர்மாணத் திட்டத்தினைக் கற்க பஜாஜ் வித்யாலயத்தில் சேர்ந்தேன். இரண்டு வருடப் படிப்பு அது. அங்கிருந்து திருபத்தூர் கிறுஸ்துவ ஆசிரமத்திற்கு நூற்பு ஆசிரியராக அனுப்பி வைத்தார்கள். அந்த நேரத்தில் தீரர் சத்தியமூர்த்தி காலமாகிவிட்டார். அப்போது வித்யாலயத்தின் முதல்வராய் இருந்த சிவகுருநாதன் எங்களை 1943இல் நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ளச் சொன்னார். நானும் மற்ற மாணவர்களும் முதலில் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு போய் மறியலில் ஈடுபட்டோம். அடுத்த நாள் மாஜிஸ்டிரேட் கோர்ட்டின் முன்னால் மறியல் நடத்தினோம். போலீசார் எங்களைக் கைது செய்தார்கள். விசாரணை நடந்து முதல் நாள் மறியல் செய்தமைக்காக 18 மாதங்கள் சிறை தண்டனையும், இரண்டாம் நாள் மறியல் செய்தமைக்காக 10 மாதம் என 28 மாத சிறை தண்டனை கொடுத்தார்கள். தண்டனையை பெங்களூர் கண்டோன்மெண்ட் ஜெயிலில் அனுபவித்தேன்.

கேள்வி:- ஜெயிலிலிருந்து வந்த பிறகு என்ன செய்தீர்கள்?

ஜெபமணி:- திருப்பூர் கதர்க் கடையிலும், திருநெல்வேலி கதர்க் கடையிலும் வேலை பார்த்தேன். காங்கிரஸ் கூட்டத்திலே மகாத்மா காந்தி நிர்மாணப் பணிகளைப் பிரச்சாரம் செய்யும் வேலையை மேற்கொண்டேன். 1947இல் நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர்தான் எனக்குத் திருமணம் நடந்தது. அந்தத் திருமணம் கதர்த் திருமணம். என் மனைவிக்கு 15 ரூபாய் எட்டரை அணாவுக்கு கதர் புடவை, எனக்கு இரண்டு ரூபாய் முக்காலணாவுக்கு கதர் வேஷ்டி. அப்படி மிக எளிமையாக நடந்தத் திருமணம் அது.

கேள்வி:- சுதந்திரம் அடைந்த நாளில் உங்கள் மனம் எப்படி இருந்தது?

ஜெபமணி:- ரேடியோவில் சுதந்திர தினச் செய்திகளைக் கேட்டபோது மனம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது. நாங்கள் திருநெல்வேலியில் அதை விழாவாகக் கொண்டாடினோம். தியாகி சைலப் பிள்ளை கொடியேற்றி வைத்தார். பாரதியாரின் மகள் லலிதா பாரதி தேசிய கீதம் பாடினார். நான் அங்கு பேசினேன். அப்போது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன்.

பாரதி முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினானே, இப்போது நாம் நாற்பது கோடி மக்கள் இருக்கிறோமே என்று நினைத்தேன். ஆனால் பத்து கோடிப் பேர் பிரிந்து போய்விட்டார்கள். பாரதி கூறியது பலித்துவிட்டது என்று பேசினேன்.

கேள்வி:- சுதந்திரப் போரின் போது 'திராவிடம்' பேசியவர்கள் என்ன செய்தாங்க. அதைப் பற்றி சற்று சொல்லுங்களேன்.

ஜெபமணி:- அதை ஏன் இப்போது பேசவேண்டும். அவர்கள் போலியானவர்கள். கொள்கை கிடையாது. அவர்களுக்கென்று லட்சியம் எதுவும் கிடையாது. அவர்களைப் பற்றி பேசுவது 'வேஸ்ட்' என்பது என் எண்ணம். அண்ணாதுரை ஆங்கிலேயர்களிடம் மாதம் 800 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு யுத்த ஆதரவுப் பிரச்சாரம் பண்ணினார். 1944இல் நீதிக்கட்சிக் காரர்கள், காந்திஜியை எதிர்த்து பனியாக்கள் ஆள்வதைவிட பரங்கியர்கள் ஆண்டால் பிரச்சினையில்லை என்று தீர்மானம் போட்டார்கள். அவர்கள் செய்தது போலி அரசியல். சரக்கு இல்லாமல் கிடைத்ததை வாங்கி சந்தையில் வியாபாரம் பண்ணுகிற மாதிரி வியாபார அரசியல் நடத்தினார்கள். சரி! அதை விட்டுத் தள்ளுங்க.

கேள்வி:- சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லுங்களேன்.

ஜெபமணி:- புதுக்கோட்டையைச் சேர்ந்த நடேசன் என்பவர் வித்யாலயாவில் என்னோடு படித்துக் கொண்டு இருந்த காலத்தில் கோயம்புத்தூரில் நடந்த மறியலில் கலந்துகொண்டு கைதானார். அப்போது போலீசார் செய்த அட்டூழியம் கொடுமையானது. அவர் தாடி வைத்திருந்தார். போலீஸ் அவருடைய தாடி மயிரை ஒன்றொன்றாக பிடுங்கி என்றிந்தது. பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குக் கண்ணீர் பெருகியது. ஆனால், அவர் அழவே இல்லை. போலீசுக்கு எரிச்சல் தாங்கமுடியவில்லை. அவரைப் பார்த்து, "உனக்கு சொரணையே கிடையாதா?" என்றனர். அதற்கு அவர் கொஞ்சம் கூட பயப்படாமல், "நீ பிடுங்குகிற ஒவ்வொரு மயிரும் பக்கிங்காம் அரண்மனையின் செங்கல்லைப் பிடுங்குவதற்குச் சமம்" என்று பதில் சொன்னார். அந்த நிகழ்ச்சியையும், காட்சியையும் என்னால் மறக்க முடியவில்லை.

கேள்வி:- உங்க அரசியல் வாழ்க்கை பற்றி .....

ஜெபமணி:- மகாத்மா காந்திஜியின் பணிகளைச் செய்து கொண்டிருந்த என்னை கர்மவீரர் காமராஜ்தான் தீவிர அரசியலுக்கு இழுத்து வந்தார். காமராஜ் இருக்கும் வரை எல்லாம் நல்லபடியா நடந்து கொண்டிருந்தது. பின்னாளில் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்தேன். அரசியலில் எதுவும் சரியில்லாமல் இருந்ததால் ஜனதா கட்சியை தமிழகத்தில் ஆரம்பித்தேன்.

கேள்வி:- பொன்விழா காணும் சுதந்திர இந்தியா பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஜெபமணி:- சுதந்திர இந்தியாவில் வாழ்வதை நினைத்துப் பெருமைப் படுகிறேன். சுதந்திரப் போரில் இருந்த பல தியாகிகளை நான் பார்த்திருக்கிறேன். சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்து நாட்டின் சொத்தை சூறையாடியதையும் பார்த்திருக்கிறேன். ஏதோ ஜனாதிபதியும், நீதிமன்றமும் நல்லா இருக்குது.

ஆனால் நான் எதுக்கும் கவலைப் படவில்லை. உண்மை கண்டிப்பாக வெற்றி பெறும். "நல்லோர், பெரியோர் எனும் காலம் வரும். நயவஞ்சகம் நாசம் ஆகும்" என பாரதி பாடினான். அந்த நல்ல காலம் வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நன்றி: "விஜயபாரதம்" பொன்விழா மலர், சென்னை.

Monday, November 7, 2011

அருணகிரியார் பற்றி பாரதியார்


அருணகிரிநாதர்

(திருப்புகழ் இயற்றிய அருணகிரியார் பற்றி பாரதியார் எழுதிய கட்டுரையொன்றை ரா.அ.பத்மநாபன் அவர்கள் "பாரதி புதையலில்" வெளியிட்டுள்ளார். அதனைப் படியுங்கள்.)

ஞானியும், பக்தரும் வரகவியுமாகிய அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

இவருடைய 'திருப்புகழ்' என்ற நூல் சந்தக் கணக்குப் புகழ் பெற்றது. வடமொழிச் சொற்களை மிகுதியாக உடையது. மண், பெண், பொன் என்ற உலக இன்பங்களைப் பழிப்பதில் ஓய்வில்லாதது இது. "பெரிய திருப்புகழ்", "பஞ்சரத்னத் திருப்புகழ்" என்ற ஐந்து பாட்டுக்களும் தனியாக எழுதப்பட்டன. அவை வேறு நூல்.

இவரைப் பற்றிய பல கதைகளில் என்னென்ன பகுதி உண்மை என்பதை விசாரித்து நிச்சயிக்க இது சந்தர்ப்பமில்லை. "பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆரும் துறத்தல் அரிது" என்று தாயுமானவரால் வணங்கப்பட்ட மஹானாகிய பட்டினத்துப் பிள்ளைக்கு ஒரு தாசி வயிற்றில் இவர் பிறந்தவரென்ற விநோதமான கதையொன்று தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது.

இவருடைய கவிதையின் கனிவைப் பார்க்க வேண்டுமானால் "பஞ்சரத்னத் திருப்புகழ்", "கந்தரலங்காரம்", "வேல் வகுப்பு" மூன்றையும் படித்தால் போதும். சந்தக் கணக்கை வைத்துக் கொண்டு தெளிவாகவும் இயற்கையாகவும் சொல்லுதல் மிகவும் அருமை. காலிலும் கையிலும் தளைகளைப் பூட்டிக் கொண்டு கூத்தாட முடியாதென்று பழமொழி சொல்லுவார்கள். இந்த மஹானுடைய கவிதையோவென்றால், மிகவும் கடினமான தளைகளைப் பூட்டிக் கொண்டு தெய்வீகக் கூத்தாடுகிறது. பஞ்சரத்னத் திருப்புகழின் முதற்பாட்டில் இவர் தமக்கு அதிசயமான தமிழ் பாடும் திறமை வேண்டுமென்று முருகனிடம் கேட்கிற பொழுதே தெய்வ அருள் தோன்றி இவருடைய கவிதை அதிசயமாய் விடுகிறது.

மலடி வயிற்றிலே குழந்தை பிறந்தால் அவளுக்கு எப்படி ஆச்சரியமும் மகிழ்ச்சியுமுண்டாகுமோ, அவ்விதமான மனக் கிளர்ச்சி தமது பாட்டைப் படிக்கும்போது தோன்ற வேண்டுமென்கிறார்.

"மலடி வயிற்று மகன் போலே - ஒரு
புதைய லெடுத்த தனம் போலே - ஒளிர்
வயிர மடித்த களம்போலே - இள
................................................. மானார்
வலிய அணைத்த சுகம் போலே - கதி
ரொளி விடு ரத்ந படம் போலே - பரி
மளமிகு புட்ப வனம் போலே - சுர
ரதிபோலே"

கங்கா நதி வானத்திலிருந்து பொழிவது போலே தமது கவிதையும் ஞானலோகத்திலிருந்து நாவின் வழியே பொழிய வேண்டுமென்று கேட்கிறார். புதையலெடுத்த செல்வத்தைக் கண்டு ஏழை மகிழ்ச்சியடைவது போலே தமது கவிதை படிக்கும் போது மகிழ்ச்சியுண்டாக வேண்டுமென்கிறார். வயிரக் களம் போலே கவிதை முழுதும் ஒளிவீச வேண்டுமாம். இளம் பெண் வலியத் தழுவினாற் போன்ற இன்பம் தனது சொற்களிலே தோன்ற வேண்டுமாம். புஷ வனம் போலே கவிதையாம்! கவிதை.

மேலும், தேவர்கள் திருப்பாற் கடலை அமுதத்தின் பொருட்டாகக் கடைந்தார்கள். அப்போது எதிர்பார்க்காமல் லக்ஷ்மிதேவி தோன்றினாள். அப்போது அவர்கள் எப்படி வியப்படைந்திருப்பார்களோ அப்படிப்பட்ட வியப்பு தம்முடைய பாட்டிலே பிறக்க வேண்டுமென்று கேட்கிறார். தமது பாட்டில் பொருள் தெளிந்து மேலாகத் தெரிய வேண்டுமாம். படிப்போர் சிரமப்பட்டு மூச்சுமுட்டிப் பொருள் கண்டு பிடித்து அந்தப் பொருள் அதிஸாமான்யமாய் வியப்பின்றியிருக்கும் கவிதையைச் சிலர் கவிதையென்று மதிக்கிறார்கள். அது தமக்கு வேண்டியதில்லை யென்றும் கரையருகில் அடுத்த நீர் போலே எளிதில் மொண்டு செல்லத் தக்கதாகத் தமது பாட்டின் பொருள் ததும்பித் தெளிந்து கிடக்க வேண்டு மென்றும் இவர் விரும்புகிறார்.

"அலைகடல் பெற்றிடு பெண் போலே - வரு
புலவர் தமக்கிரு கண்போலே - கரை
யருகி லடுத்த ஜலம் போலே - நின
தழகா மோர்

அமுது புஜித்த ரஸம் போலே - திரை
கடல் மடை விட்ட ஜலம் போலே - தினம்
அதிசய முத்தமிழ் அன்பால் ஒகநின்
அருள் தாராய்!"

அழகு வேண்டுவோர் தெய்வத்தை வேண்டுகின்றார்கள். தெய்வமே அழகின் எல்லை. தெய்வத்தின் அழகை அனுபவித்த ரஸம் தமது கவிதையிலே காணவேண்டு மென்கிறார். மேற் காட்டிய வரிகளிலே அந்த ரஸம் இருக்கத்தான் செய்கிறது.

பின் வரும் பாட்டைக் கேளுங்கள்:

"கலியை யலைத்துத் தொலைத்து விட்டொரு
பிணியை யடித்துத் துரத்தி விட்டெழு
கவலை நெருப்பைத் தணித்து விட்டற
நெறியாலே.

கடின கசப்புக் கினிப்பு விட்டென
துயிரில் அழுந்தத் துடைத்து விட்டோர்
கருணை மழைக்குட் குளிக்க விட்டினி
யலையாதே.

அலையு மனத்தைப் பிடித்து வைத்ததில்
உறையும் இருட்டுக் கருக்கலுக்கு நின்
அழகு விளக்கைப் பதித்து வைத்த
கவியாதே.

அறிவை யுருட்டித் திரட்டி வைத்து நின்
அமுத குணத்தைத் துதிக்க வைத்தனை
அடிமை படைக்கக் கருத்து முற்றிலும்
நினையாயோ."

கலியுகத்தை ஒழித்து, நோயைத் துரத்தி, கவலைத் தீயைத் தணித்துக் கசப்பை இனிப்பாக்கி உயிரை அழுக்கறுத்த கருணை மழையிலே குளிக்கவிட்டு அலைகின்ற மனதை நிறுத்தி அதிலுள்ள இருட்டைத் தொலைக்கும் பொருட்டு முருகனுடைய அழகாகிய விளக்கை அதில் நாட்டி அந்த விளக்கு நீடித் தெரியும்படி அறிவைத் திரட்டி முருகனுடைய அமிர்த குணங்களைப் புகழும்படித் தம்மை வரகவியாக்கச் சொல்லுகிறார். அந்த நிலைமை இவர் பெற்று விட்டனரெறு அந்தப் பாட்டிலேயே தெரிகிறது. அதை ஸங்கீதம் சேர்த்துப் பாடிப் பாருங்கள்.

பின்வரும் வரிகளிலே அக்நி சக்தியாகிய வள்ளியம்மையைப் புகழ்கின்றார்.

"குலவரை விட்டுத் திசை களிற்றினை
உடலை மிதித்துக் கிழித்ததிற் சொரி
குருதி குடித்து"

வள்ளியம்மையின் திருமார்பு புகுந்ததென்கிறார். வீரம், ரெள்த்ரம் என்ற ரஸங்கள் இவருடைய கவிதையில் செறிந்து கிடக்கின்றன. அவை பின்னொரு வியாஸத்தில் விளக்கப்படும். இவருடைய கவிதையின் முக்கியப் பொருள் தெய்வ பக்தியாகையால் தெய்வத்தைப் பற்றி இவருடைய கொள்கை எப்படிப்பட்ட தென்பதை விளக்கும் பொருட்டாகச் சில திருஷ்டாந்தங்கள் காட்டுகிறேன்.

பரமாத்மா எப்படியுள்ளது?

"ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத் துச்சியின் மேல்
அளியில் விளைந்ததொ ரானந்தத் தேன்."

(பூதரம் - மலை; அளி - கருணை)

"வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானென்ற சரீரியன்று (அ) சரீரியன்றே"

அப்படியானால் அது என்னது?

"சொல்லுகைக் கில்லையென் றெல்லாம்
இழந்து சும்மா இருக்கும் எல்லை"

இப்படிப்பட்ட பரம்பொருள் மனுஷ்ய ஜீவனைக் காப்பாற்றும் பொருட்டு, இஷ்ட தேவதா ரூபமாகத் தோன்றுகிறது. இவருக்கு அந்த இஷ்ட தேவதை தேவசேனாபதியாகி அசுரரை அழிக்கப் பரமசிவனுடைய நெற்றிக் கண்ணில் தோன்றிய அக்நி குமாரனாக வெளிப்பட்டது! தெய்வத்தின் அருள் பெறும் வழி சரணாகதி. அருள் பெற்றால் மரணத்தை வெல்லலாம்.

அதனாலே அருணகிரிநாதர் சொல்லுகிறார்:---

"மரண ப்ரமாதம் நமக்கில்லை" (ப்ரமாதம் - தவறு)

பின்வரும் பாட்டு எமனை நோக்கிச் சொல்லப்படுகிறது:--

"தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி யுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலனுக்குத்
தோண்டாகிய என் அவிரோத ஞானச்சுடர் வடிவாள்
கண்டாயடா அந்தகா வந்து பார் சற்றென்கைக் கெட்டலே!"

விதியை வெல்லும் முறை சொல்லுகிறார்:--

"வேல் பட்டழிந்தன வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டழிந்த திங்கென் தலைமேலயன் கையெழுத்தே"

பயன் சொல்லுகிறார்:--

அஞ்ஞானமாகிய சிறை

"விடுதலைப் பட்டது விட்டது பாசவினை விலங்கே"

Sunday, November 6, 2011

ஊழிக்கூத்து


ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம்பாடப் - பாட்டின்
அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண்டி, கங்காளீ!

அன்னை அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

ஐந்துறு பூதம் சிந்திப்போ யொன்றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறு மொளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய், அடு தீ சொரிவாய்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

பாழாம் வெளியும் பதறிப் போய் மெய் குலையச் - சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
ஊழாம் பேய்தான் "ஓஹோ ஹோ" வென்றலைய - வெறித்
துறுமித் திரிவாய், செறுவெங் கூத்தே புரிவாய்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

சத்திப் பேய்தாந் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங் கொட்டி - அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போயெட்டித் - தானே
எரியுங் கோலங் கண்டே சாகுங் காலம்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

காலத் தொடு நிர்மூலம் படுமூ வுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய், ஆநந்தக் கூத்திடுவாய்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

இதுதான் பாரதியாரின் "ஊழிக்கூத்து" பாடல். இந்தப் பாடல் குறித்து பிரபல பொதுவுடைமை வாதியும், இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளர் ஜெயகாந்தனால் மதிக்கப்பட்டவருமான ஆர்.கே.கண்ணன் தான் எழுதியுள்ள "புது நெறி காட்டிய பாரதி" எனும் நியு செஞ்சுரி புத்தக நிலையத்தார் வெளியிட்டிருக்கும் நூலில் ஊழிக்கூத்து பாடல் பற்றித் தனது கருத்துக்களைக் கூறியிருக்கிறார். ஒரு பொதுவுடைமை வாதியின் நோக்கில் அமைந்துள்ள அவரது கட்டுரையின் உட்கருத்தை இப்போது பார்க்கலாமா?

"நாதப் பிரம்மத்தி9 சூட்சும நிலைக்குள் கலந்து வெளிப்பட்ட ஒரு ஒலிச் சித்திரம் ஊழிக்கூத்து.

பரணியை ஜெயம்கொண்ட ஜெயங்கொண்டாரையும் ஜெயங்கொண்டு விட்டிருக்கிறான் பாரதி.

பாரதி வேறு கவிதை யொன்றும் எழுதாமல் இந்த ஒன்றை மட்டும் எழுதிவிட்டு மறைந்திருந்தாலும் இந்த ஒரு கவிதையே அவர் மகாகவி என்று உலகுக்குப் பறை சாற்றும்.

ஏனெனில் தமிழ்க் கவிதைச் சமூகத்துக்கு, உலகக் கவிதைச் சமூஊகத்துக்கு, இது தேவை. அவற்றில் இதுகாறும் காணக்கிடைக்காத தொன்று. தமிழ் மொழியின் வெற்றி இது - பொதுவாகவே மனித மொழியின் மகத்தான வெற்றி இது.

காட்சியின் பல அழகுகளை சிந்தனையின் பல நுட்பமான நெகிழ்ச்சிகளை, ஒலியின் உள்ளிசைவுகளை, முடிந்தவரைக்கும் வர்ணித்துப் பார்த்துவிட்டு மகாகவிகள் கூட ஒரு நிலையை எட்டியதும் "இது சொல்லில் அகப்படுமா?" என்று பெரு மூச்சுவிட்டு நிறுத்திக் கொள்வதை நாம் அறிவோம். புற அக அனுபவங்கள் அசல்; அவை பெரிது; மனித மொழி எத்துணை வளர்ச்சி கண்டிருந்தாலும் அது ஒரு செயற்கை சாதனம்; நிறைவை நோக்கித் தாவித் தாவிச் சென்று கொண்டேயிருக்க வேண்டியது. இந்த நிலையில், உலகத்தில் எந்த ஒரு கவிஞனாவது அதுவரை சாதிக்காத சாதனையாக ஒரு புதிய ஒலி உலகத்தை, காட்சி உலகத்தை, அனுபவத்தை, கவிதையிலே படைத்துத் தந்தால் அவனுக்கு உலகம் கோவில் கட்டிக் கும்பிடும்; மனித மொழியின் மாபெரும் வெற்றி என்று ஏற்றிப் போற்றும்.

பாரதியின் 'ஊழிக்கூத்து' அவ்வகைப்பட்டது. அது தமிழ்மொழிக்கு மட்டும் உரியதல்ல.

அதுபோல் பிறிதொரு கவிதை உலகக் கவிதையில் இல்லை.

கவிதையிலே எடுத்தாளும் பொருளுக்குப் பொருத்தமாக இசைவாக நாதசுகம் தருகிற சில கவிதைகள் இங்கு என் நினைவுக்கு வருகின்றன.

கடல்மீது தோனியிலே சென்று அனுபவிக்கும் அனுபவத்தை வைத்து கடல் ஜுரம் (Sea Fever) என்கிற ஒரு கவிதையை ஆங்கிலக் கவிஞன் ஜான் மேஸ்பீல்ட் (John Masefield) எழுதியிருக்கிறான். "கட்டு மரங்கள்" என்று தலைப்பிட்டு மீனவர்களின் அனுபவத்தைச் சித்தரித்து இந்தியக் கவிக்குயில் சரோஜினி தேவியார் ஆங்கிலக் கவிதையொன்று புனைந்திருக்கிறார். அவை இனிமை சொட்டும் கவிதைகளே; எனினும் பாரதியின் ஊழிக்கூத்துடன் ஒப்பிடுகையில், அவற்றைப் பொதியமலைத் தென்றலாகத்தான் கொள்ள முடியும்.

வரப்போகும் ருஷ்யப்புரட்சியை (1905) உருவகமாகக் கொண்டு லெனின் கட்சியினரை ஒரு பயமறியாத கடற்பறவைக்கு உவமையாக்கி, "கடற்பறவையின் கீதம்" (Song of the stormy petrel) என்று மாக்ஸிம் கார்க்கி ஒரு எழுச்சி மிக்க கவிதை பாடியுள்ளார். புயல் வீசத் தொடங்கினால் மற்ற பறவைகள் அனைத்தும் தரை நோக்கிப் பறந்தோடிவிடும். ஆனால் கடற் பறவையோ, புயலின் வேகம் அதிகமாக அதிகமாக, கடலின் நடுவே சென்று உறுமிக் கவ்வும் வானத்துக்கும் சீறிப் பாயும் அலைகளுக்கும் நடுவே அச்சமின்றிச் சுழன்று சுழன்று பறக்கும். போல்ஷெவிக்குகளைப் பற்றிய ருஷ்யப் புரட்சியைப் பற்றிய இந்தக் கவிதை மனித மொழிக்கு ஒரு அற்புதமான வெற்றியாகும்.

எனினும், அது ஒரு கடற் புயல்தான்.

பாரதியினுடையதோ அசல் ஊழிக்கூத்து!

"வெடிபடு மண்டத் திடிபல தாளம்போட ...."

என்று பாடத் தொடங்கியதும் தரைமேலிருந்த கால்கள் அப்படியே தலைகீழாக வாரிவிடப்பட்டு ஊழிக்கூத்திலே நாம் விழுந்து சுழலத் தொடங்கி விடுகிறோம்.

சங்கீதம் ஒன்றுதான் பாரதியின் "ஊழிக்கூத்து"க்கு இணையாக -- ஊழிக்கூத்தையும் விஞ்சி -- சாதனை புரிந்திருக்கிறது என்பது என் கருத்து. அதுவும் நம் சங்கீதமல்ல, ஐரோப்பிய சங்கீதம் என்பது என் கருத்து. ஊழிக்கூத்தின் நாத உலகில் நுழையும் போது ஜெர்மன் நாட்டு இசை மேதைகளாகிய பீதோவனுடைய (Beethoven) வாக்னருடைய (Wagner) சில சங்கீதப் படைப்புகளுக்குள் கலந்து விடுகிறேன். "ஐந்துறு பூதம் சிந்திப் போயொன்றாகப் பின்னர் அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப்போக" வுமான ஒலிச்சித்திரங்களை அவர்கள் படைத்திருக்கிறார்கள். பாரதியின் ஊழிக் கூத்துக்காக இந்த ஐரோப்பிய சங்கீதத்தை ஒரு தடவை கேட்டுப் பாருங்கள். பீதோவனுடைய மூன்றாவது, ஐந்தாவது அல்லது ஒன்பதாவது சிம்பொனி (symphony) யையோ, வாக்னரின் Seigfried Tannhauser, opera (இசை நாடகம்) வையோ கேட்டுப் பாருங்கள்.

சங்கீதம் கவிதையை விஞ்சுகிறது; பாரதியைப் பீதோவன் விஞ்சுகிறார் என்றால் மோசமில்லை. யாரும் தாபமடையத் தேவையில்லை. சங்கீதம் எல்லாக் கலைகளுக்கும் ராணி; மொழியைவிட ஏழிசை ஆற்றல் நிறந்தது. பிறப்பிலும் ஒலி முந்தி, மொழி பிந்தி. எனவே இசை என்றும் கவிதையை முந்திக் கொண்டு வளரும். இசையும் லயமும் (கூத்தும்) குரலோடு உடலோடு இயல்பாக ஒட்டிக்கொண்டு வருவன. மற்ற கலைகள் அனைத்தும் செயற்கையாக மனிதன் ஓரளவுக்கு அறிவுநிலை எய்தியபின் வருவன. குழந்தைகள் இதற்குச் சாட்சி; முதன்முதலாகக் குழந்தைகள் தன்னியல்பாக வெளியிடும் கலை இசைக்கலைதான். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே அமைந்த இயல்பான முதல் பந்தம் உழைப்பும் இசையும்தான். மொழி, கவிதை, இலக்கியம், சிற்பம், ஓவியம், சாத்திரம் முதலான பிற யாவும் பின்னர் வருபவையே.

இந்தச் சங்கீதத்தையும், "ஊழிக்கூத்தை"யும் அனுபவிக்கிறபோது, "பேய்ப் பயங்கரத்தின் மடியிலே துஞ்சும் அழகுத் தெய்வம்" (Beauty lying on the lap of Terror) என்று வால்டர் ஸ்காட் பயின்ற ஒரு சொற்றொடரும், அதனையொட்டிய காட்சியும் நினைவுக்கு வருகின்றன. "பெர்த் நகரின் அழகி" (Fair Maid of Perth) என்கிற நாவலில் ஸ்காட்லாந்து நாட்டு மலைகளின் அடர்ந்த காடுகளின் பயங்கரமான - அதே நேரத்தில் அழகான - காட்சிகளைப் பக்கம் பக்கமாக வர்ணித்தும் திருப்தி கொள்ள முடியாமற்போய் அவர் பயின்ற சொற்றொடர் இது.

பயங்கரமே ஒரு அழகுதான். பயங்கரமும் அழகும் நம்முள் பிரிக்க முடியாத ஒரு தோற்றம்; ஒரு அனுபவம். உண்மையின் ஒரு நிலை, அழகின் ஒரு சுவை - பயங்கரம் என்பது.

விண்வெளியிற் சுழன்ற ககாரினும், விண்வெளியில் நீந்திய போபாவிச்சும் ஒப்புக் கொள்வார்கள்.

சிவபெருமானைச் சுடலையிலும், கயிலையிலும் வைத்துக் காட்டும் காட்சித் தத்துவம் (பிற தத்துவங்கள் ஒரு புறமிருக்க) இனியது அல்லவா?

"ஆம்" என்று தலையாட்டுகிறீர்களா? புரிந்து கொண்டு தலையாட்டுங்கள்.

பாரதியின் ஊழிக்கூத்து பிரபஞ்சத்தின் அழிவை "காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகின்" காட்சியைச் சித்தரிக்கிறது என்று நினைக்கிறிர்களா?

உங்கள் நினைப்பு முழு உண்மையல்ல! அது அரை உண்மையே!

அரையுண்மை என்றால் அது பொய் ஆகும்!

பயங்கரத்துக்குள்ளே அழகு ஊடுருவி நிற்கிறது. அழிவுக்குள்ளே சிருஷ்டி ஊடுருவி நிற்கிறது. இரண்டையும் ஒரே நிலையில் பார்ப்பதுதான் முழுமெய் ஆகும். ஏனெனில் இயக்கம்தான் நிரந்தரமானது; உண்மையானது; அழிவு பிறப்பு என்பதெல்லாம் பருப்பொருளின் உணர்வின் பல வடிவ மாற்றங்களே, நிலை மாற்றங்களே. எதுவும் பிறப்பதில்லை, எதுவும் இறப்பதில்லை. இயக்க மாற்றங்கள் வழியே மேல் நிலைக்குச் சென்ற வண்ணம் இருக்கின்றன.

"காலத் தொடு நிர்மூலம் படு மூவுலகும்" என்று சிந்திக்கிறீர்களா? அதோ, பாருங்கள்! அடுத்த வரியில் வரும் காட்சியை.

".............................. அங்கே கடவுள் மோனத் தொளியே தனியா யிலரும் - சிவன்
கோலங் கண்டுன் கனல் செய் சினமும் விலகும்"

அழிவுக்கிடையே, ஊழிக்கூத்துக்கு நடுவே, காளியின் சினம் விலகுகிறது! பிறகு நடப்பதென்ன?

"............................. சிவன் கோலங் கண்டுன் கனல் செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக் கூத்திடுவாய்!"

சும்மா தொடவில்லையாம்! சிவனைச் சக்தி கொஞ்சித் தொடுகிறாளாம்! தொட்டுவிட்டு ஆனந்தக் கூத்தாடுகிறாளாம்! இன்னொரு பிரபஞ்சம் அங்கே "பிறந்து" விட்டது - என்று இதற்குப் பொருள். அழிவின் நடுவே, ஊழிக் கூத்தின் நடுவே, சிவனும் சக்தியும் தொட்டு ஒரு புதிய பிரபஞ்சம் உருவெடுக்கிறது. அழிவிலிருந்து புத்துயிர் பெற்றெழும் புதிய பிரபஞ்சம்!

எனவே, "ஊழிக்கூத்து" எனும் பாரதி சித்திரம் உலகின் முடிவா? அல்லது உலகின் முதலா? என்கிற கேள்வி எழுப்பி மயங்காதீர்கள்.

அது அழிவு எனும் இயக்கத்தின் வடிவமா? அல்லது படைப்பு எனும் இயக்கத்தின் வடிவமா? என்று வினா எழுப்பி வியப்பில் ஆழ்ந்து போகாதீர்கள். 

சூரியனின் ஒளி மையத்தில் அடுதீ சொரியும் (Cosmic Radiation) கருவுக்குள் நின்ற கிரேக்க புராண புருஷன் பிராமதேயசின் முயற்சி இது! இக்கவிதையை நீங்கள் பாடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சூரியனின் எரி சுழற்சியில் ஒரு பகுதி சரிந்து பிரிந்து விண்வெளியில் எறியப்பட்டு அது பல கோளங்களுடன் முட்டி மோதிச் சிதறி பஞ்ச பூதங்களின் ஒரு கூத்துக்கு (என்ன வலிவான விஞ்ஞானச் சொல்) உட்பட்டு பிறகு மெல்ல மெல்லக் குளிர்ந்து பூமி என்று சொல்லும் இந்த மண்ணுலகம் பல கோடி ஆண்டுகள் கழித்து உருவாகிறதாகச் சிந்தித்துப் பாருங்கள். அப்பொழுது ஊழிக்கூத்து என்பது அழிவு படைப்பு என்கிற இரு போக்கும் ஊடுருவி உட்கலந்து தம்முள் மோதிக் கொள்ளும் இயக்கத்தின் வடிவத்தையே சித்திரமாகக் காட்டுவதாக ஒப்புக் கொள்வீர்கள்.

இந்த உண்மையான நிலையிலே நின்று (அல்லது சில வாசகர்கள் நான் சொல்வதை ஏற்காவிட்டால் இந்தப் பிரமையிலே, பாவனையிலே நின்று) ஊழிக்கூத்தைப் பாடிப் பாருங்கள். உள்ளத்திற்கும், கற்பனைக்கும் அளக்கவொண்ணா விவரிக்கவொண்ணா வலிமை சேருவதை உணர்வீர்கள். 

மனிதனின் சிந்தைக்கும், கற்பனைக்கும், தோளுக்கும் வலிமை சேர்க்கப் பாடியவன் பாரதி என்பதையும் மறக்காதீர்கள். அழிவின் காட்சி அவன் குறியாக இருக்க முடியாது. அழிவிலே உருவாகி வரும் படைப்பின் சித்திரமே அவன் குறியாக இருக்க முடியும்.

எனவேதான் ஊழிக்கூத்தை நாம் முற்றாகப் பாடிவிட்டு,

"அன்னை, அன்னை, ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை!" என்று பாரதியோடு நாமும் ஆர்ப்பரித்தெழுகிறோம். ஒரு சக்தி மயமான உலகிலே புகுந்து கூத்து நடத்திவிட்டு உள்ளம் நிறைந்த சக்தியின் தேசுடன் வெளிவருகிறோம். (நன்றி: ஆர்.கே.கண்ணன், நியு செஞ்சுரி புக் ஹவுஸ்)